சமீபத்தில்,தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் தமக்கு பிடித்த சிறுகதைகளை தொகுத்து அசோகமித்திரன் வெளியிட்டுள்ள தொகுதி படிக்க கிடைத்தது.1980'களில் வெளிவந்த இத்தொகுப்பு மிகச சிறந்தவை என வகைப்படுத்த படும் தமிழ் சிறுகதைகளை கொண்டது.வண்ணநிலவன்,வண்ணதாசன்,ஜெயகாந்தன்,ராஜநாராயணன்,சுஜாதா,ஆதவன்,நீலபத்மநாபன்,அழகிரிசாமி,கிருஷ்ணன் நம்பி ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் அடங்கும்.சக எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருப்பதால் அச்சிறுகதைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.
வண்ணநிலவனின் "எஸ்தர்"வண்ணநிலவன் சிறுகதைகளுள் பெரும் வரவேற்பை பெற்ற சிறுகதை "எஸ்தர்" - மழை பொய்த்தால் விவசாயம் கேட்டு உணவின்றி வாழ்வே கேள்விக்குறியாகி போன குடும்பம்பதை பற்றிய கதை.அவ்வீட்டின் மூத்தவளான விதவை எஸ்தர்,பெரும்பஞ்ச காலத்தில் யாவரையும் அரவணைத்து குடும்பத்தை வழி நடத்தி செல்வதே இச்சிறுகதை.ஆரவாரமின்றி நகரும் இக்கதையில் நிலவும் ஒரு அமானிஷ்ய அமைதியானது பஞ்ச காலத்தில் விவசாயிகளின் நிலையை சொல்லுகின்றது.மேலும் பெரும்பாலான நிகழ்வுகள் சிம்மினி வெளிச்சத்தில் இரவின் துணையோடு நகர்வது மேலும் வேதனை மூட்டுவதாய் உள்ளது.துயர பிடியில் சிக்கிய ஒரு குடும்பத்தின் வழி மிகுந்த கதை..
வண்ணதாசனின் "தனுமை"
வண்ணதாசன் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தனுமை.அழகிய காதல் கதை.நாயகன் நாயகியோடு பேசாமலே.. பார்வையால்,எண்ணகளால்,உணர்வால் பிரியம் கொள்வதை அமைந்துள்ளது.மழை பெய்து ஓய்ந்த ஒரு நாளில் நாயகி தாணு சாலையில் நடத்து வருவதாய் வண்ணதாசன் அமைத்துள்ள காட்சி அழகிய கவிதை. நாயகன் தனுவின் நினைவாக தனிமையில் அமர்த்து இருக்கும் ஒரு காட்சியை"தனியாகி…தனுவாகி.." என வர்ணிக்கும் பொழுது கல்யாண்ஜி வெளிபடுகிறார்.கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பின்பாதி கதை மழையோடு பயணிக்கிறது.எழுத்தாளர் பாவண்ணன் பல்வேறு எழுத்தாளர்களில் சிறந்த கதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்..அதில் வண்ணதாசன் சிறுகதைகளில் அவர் தேர்ந்து எடுத்தது தனுமையே ..
கி.ராஜநாராயணனின் "நாற்காலி"
கி.ராஜநாராயணனின் "வெட்டி" சிறுகதை தொகுப்பில் முன்பொருமுறை இக்கதை படித்து இருக்கின்றேன்.பொதுவாகவே கிராமத்து மக்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.கரிசல் இலக்கியத்தில் நகைச்சுவை புகுத்தி எழுதுவதில் வல்ல கி.ராவின் மற்றுமொரு நகைச்சுவை புனைவு இது.முக்காலிக்கு விடை கொடுத்து நாற்காலி பயன்படுத்த ஆசைப்பட்டு தேர்ந்த மரத்தினால் நாற்காலி ஒன்றினை செய்து வீட்டில் வைக்கின்றனர்.அந்த நாற்காலியோ ஊரில் எழவு வீடுகளில் சவத்தினை சார்த்தி வைக்க பயன்பட தொடங்குகிறது...மிகுந்த ஹாசியம் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கதை கிராமத்து பேச்சு வழக்கு,மாமன் மச்சான் உறவுகளில் நிலவும் கேலி,கிண்டல் என இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது.
ஜெயந்தனின் "பகல் உறவுகள்"
ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு தம்பதியினர் வெளி உலகுக்கு ஆதர்ச தம்பதியினராகவும்,யாவரும் வியந்து பார்ப்பவர்களாகவும் தெரிந்தாலும் வீட்டினுள் இருவருக்குள்ளும் நிகழும் சண்டை,வார்த்தை போர், விருப்பமின்மை என தினமும் நகரும் நாட்களோடு பகலில் அலுவலகத்திலும்,வெளியிலும் கொண்டிருக்கும் உறவினை பற்றிய இறுக்கம் மிகுந்த கதை.எஸ்.ராவின் எழுது நடையை போன்றதொரு உணர்வை குடுக்கின்றது..வெகு வித்தியாச நடை.
நாஞ்சில் நாடனின் "ஒரு "இந்நாட்டு மன்னர்"நான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடனின் கதை.முற்றிலும் வட்டார பேச்சு நடையுடன் படிக்க சுவாரசியமாய் உள்ளது.சு.ரா வின் ஒரு புளிய மரத்தின் கதை நாவலில்,தேர்தலின் பொழுது ஏழை கிழவருக்கு புத்தாடை குடுத்து காரில் அழைத்து சென்று ஓட்டு போட வைப்பார். அது நாவலின் ஒரு சிறு பகுதி. ஒரு இந்நாட்டு மன்னர் சிறுகதை அப்படி அலைந்து செல்லபடும் வைத்தியன் என்னும் கிழவரின் தேர்தல் சமய அனுபவங்களே..சற்றே நகைச்சுவை கலந்து தேர்ந்தால் கால நிகழ்வுகளை கூறி இருக்கும் விதம் நன்று.
"கிருஷ்ணன் நம்பியின் "மருமகள் வாக்கு"
1960 களில் வெளிவந்துள்ள இச்சிறுகதை மாமியார் மருமகளுகுள்ளான உறவினை பற்றியது.ஆதிக்க மனநிலை கொண்ட மாமியார்,எதையும் எதிர்த்து கேட்க துணியாத மருமகள் என இக்காலத்திற்கு சிறிதும் பொருந்தாத கதை நடை படிக்க வியப்பாக உள்ளது.தனிச்சையான முடிவு எடுக்க தைரியமில்லாத பெண்கள் இன்றும் உண்டு என்ற போதிலும் சார்பு நிலை அக்காலதினை போல இன்றில்லை.மாமியாரின் மீது கொண்ட பயமோ,பக்தியோ,சொல்ல முடியாத அன்போ எதுவோ ஒன்று தனக்கு பிடித்த கட்சிக்கு கூட வாக்களிக்க முடியாமல் செய்து விடுகிறது அவளை..திடமான மனநிலையும்,தைரியமும் பெண்களுக்கு மிகுந்த தேவை என சொல்லாமல் சொல்லும் கதை.
இந்திரா பார்த்தசாரதியின் "தொலைவு"டெல்லியில் நடைபெறுவதாய் வரும் இக்கதை நடுதரமக்களின் பொருளாதார சிக்கலை முன்னிறுத்தி சொல்லப்பட்டது.ஒரு தந்தையும் மகளும் மாலை பொழுதில் வீட்டிற்கு செல்ல ஆட்டோ பிடிக்க அலைவதே கதை..ஜன நெருக்கடி மிகுந்த மாலை பொழுதுகளில் பேருந்துகளும்,ஆட்டோக்களும் தன் இருப்பை பெருமை படித்தி கொள்ளும் வண்ணம் ஆட்களை திணித்து கொண்டு செல்லும் காட்சிகள் நாம் தினமும் காண்பதே.டாக்சியில் செல்வதை தவிர்த்து மகளுடன் நடந்தே பல தூரம் சென்று ஆட்டோவை தேடி அலையும் சராசரி அரசு ஊழியனான நாயகன் புலம்பும் இடங்கள் எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி வருவதே!!
அசோகமித்ரனின் "காலமும் ஐந்து குழந்தைகளும்" 
நேர்முக தேர்விற்கு செல்ல ரயிலை பிடிக்க ஓடும் ஒரு இளைஞனின் சில நிமிட மனோட்டமே இச்சிறுகதை.நவீன இலக்கிய வகையை சேர்ந்த இக்கதை, இயந்திர ஓட்டத்தில் யாருக்காகவும் காத்திராத ரயிலினை கனவுகளோடும்,கடந்த காலங்களின் வேதனையோடும்,பெரும் நம்பிக்கையோடும் நெருங்கும் வேலை இல்லா இளைஞனின் அந்நேர மனவோட்டங்களை இயல்பாய் கூறி இருக்கும் விதம் நன்று.யாரையும் பொருட்படுத்தாது வேகமாய் செல்லும் அவன் கண்ணில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஐந்து குழந்தைகள் தென்பட அவர்கள் குறித்த சிந்தனையும் வந்து மறைகிறது..நம்மில் பலருக்கு இந்த அனுபவம் உண்டு,அடித்து செல்லும் இயந்திர வாழ்வில் நின்று நிதானித்து பிற மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்ள யாருக்கும் விருப்பமும் இல்லை நேரமும் இல்லை.
நூல் வெளியீட்டார் -நேஷனல் புக் டிரஸ்ட்
விலை - 18 ரூபாய்