Monday, September 8, 2008

ஜெயகாந்தனின் "உன்னை போல் ஒருவன்" - விளிம்பு நிலை வாழ்கையின் பதிவு

ஒருபுறம் அறிவியல்,விஞ்ஞான வளர்ச்சி,கேளிக்கை விடுதிகள்,நவநாகரிக ஷாப்பிங் மால்கள் என பட்டணங்கள் பல்லிளித்தாலும் விளும்பு நிலை மக்களின் வாழ்கை தரமும் நிலையும் மாறாது நீடிப்பவை.அடித்தட்டு மக்களின் வாழ்வை கதையாக கையாண்டவர்கள் மிகச்சிலரே.அவர்களுள் மறுக்க முடியாத எழுத்தாளர் ஜெயகாந்தன்.அவரின் பல்வேறு சிறுகதைகளும்,நாவல்களும் சென்னையின் மாய முகமூடியை விலக்கி பாசாங்கு அற்ற பகட்டில்லாத நிஜ மனிதர்களை சுற்றி சுழல்பவை.

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய நூல்களுள் முக்கியமானது என கருதுவது ஜெயகாந்தனின் "உன்னை போல் ஒருவன்" நாவல்.இதை சிறுவர்களுக்கான நாவல் எனவும் வகைபடுத்தலாம்.குணத்தால்,அனுபவத்தால், செய்கைகளால் முதிர்ச்சி பெற்ற சிறுவர்கள் அவர்கள். ஊட்டசத்து உணவு,ஆங்கில பள்ளி கல்வி,விடுமுறை நாட்களின் கேளிக்கை கொண்டாட்டம்,கணினி,வீடியோ கேம் என வளரும் நடுத்தர/மேல்தட்டு குழந்தைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இச்சிறுவர்கள் வாழ்கையின் கரடு முரடான பாதைகளில் தொடர்ந்து பயணிப்பவர்கள்..அப்படி பட்ட சிறுவன் ஒருவனை பற்றியது இக்கதை.



தந்தை முகம் அறியாத பத்து வயது சிட்டி சித்தாள் வேலைக்கு செல்லும் தாய் தங்கத்திற்கு உதவியாய் பகலில் ஐஸ் விற்றும் இரவில் பாலகர் பள்ளி சென்று படித்தும் அவள் மனம் குளிர செய்கிறான்.இந்நிலையில் தங்கத்திற்கு கிளி ஜோசியம் பார்க்கும் மாணிக்கம் மீது பிரியம் வந்து அவனோடு தன் மீதி நாட்களை கழிக்க எண்ணுகிறாள்.சிறுவனான சிட்டியிடம் இது குறித்து கூறி அவன் சம்மதம் பெற காத்திருக்கும் தங்கத்திற்கு சிட்டியின் எதிர்ப்பும்,அவள் சற்றும் எதிர்பாராத அவன் கூறிய தடித்த வார்த்தைகளும் நிலை குலைய செய்கின்றன.சதேன புது உறவுகளை நம்மால் ஏற்று கொள்ள இயலாது அதிலும் தாய்க்கும்,தந்தைக்கும் மாற்று என்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று.தன் வெறுப்பை மௌனமாக காட்டி வெளியேறும் சிட்டியின் செய்கை சிறுவனுக்கானது அல்ல,அதற்கு ஜெயகாந்தன் கூறும் விளக்கம் மெய்யானது சிட்டி சுக வாழ்வு வாழும் மேல்தட்டு வர்க்கமோ,பணக்காரர்களாக துடிக்கும் நடுத்தர வர்க்கமோ அல்ல ஏழ்மையின் பிடியில் உள்ள இச்சிறுவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர் கூறுவது முற்றிலும் சரியே.

ஒருவகையில் இந்நாவலும் "ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்" போல எல்லா கதைமாந்தர்களும் அவர் அவர் போக்கில் நல்லவர்களாய்,பிறர் மீது பிரியம் கொண்டவர்களாக உள்ளனர்.தங்கத்தின் இரண்டாவது கணவன் மாணிக்கம் மிக சாதுவாய்,அவள் மீதும்,சிட்டி மீது அன்பு கொண்டவனாய் இருக்கின்றான். தன்னால் சிட்டி தாயை பிரிய வேண்டாம் என எண்ணி தங்கத்திடம் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறுகிறான்.கர்பிணியான தங்கம் சித்தியையும்,கணவனையும் பிரிந்து அல்லல் கொண்டு பிரசவத்தின் பொழுது உயிர் நீக்கிறாள்.தாயின் அருமையை தன் முதலாளியின் மூலம் அறிந்து சிட்டி தன் தங்கையுடன் புதுவாழ்வை தொடங்குவதை கதை முடிகிறது.

கனத்த சோகத்தை தந்து முடியும் இந்நாவல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு செய்தியை சொல்லுகிறது.என் வரையிலும் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல்களில் இது ஒன்று .

வெளியீடு : மீனாட்சி பதிபகத்தார்
விலை : 60 ரூபாய்

Wednesday, September 3, 2008

புதுமைபித்தனின் "விநாயக சதுர்த்தி" அனுபவ சிறுகதை

புதுமைபித்தனின் ஒவ்வொரு சிறுகதையும் எதோ ஒரு ஆச்சர்யத்தை தருவதாய் உள்ளது.விநாயகசதுர்த்தி எனும் அவரின் இச்சிறுகதை எழுதப்பட்ட ஆண்டு 1936.இன்று வாசிக்கும் பொழுது எந்த சமூக மாற்றமும்/இடரளும் வெளிபடா வண்ணம் கதை நகர்கிறது.இதில் மேலும் குறிப்பிடவேண்டிய ஒன்று,ஒரே கதையில் இரு வேறு நிகழ்வுகளை பதிவு செய்திருப்பது.

நாத்திகனான புதுமைப்பித்தனின் ஒரு விநாயக சதுர்த்தி நாளில் வீட்டில் நடக்கும் பூஜை ஏற்பாடுகளையும் முன்னொரு முறை தம் ஊரில் விநாயக சதுர்த்தி அன்று நடந்த நிகழ்ச்சியையும் குழப்பம் இன்றி ஒன்று சேர கூறும் இக்கதை,இறந்தகாலம்,நிகழ்காலம் என இருவேறு காலங்களில் நிகழ்கிறது.




விநாயகசதுர்த்திக்கென வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவதை பற்றி குறிப்பிடும் பொழுது,நம்புங்கள் காசு கொடுத்து வாங்கியது இம்மாவிலைகள் என குறிப்பிடுகிறார்.70 ஆண்டுகளுக்கு முன்னும் பட்டணங்களில் இதே நிலை..இதற்கு அவரே கொடுக்கும் நகைச்சுவை விளக்கம் "நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, "டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா!" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள்"

பூஜை காரியங்களில் தம் மனைவிக்கு உதவிக்கொண்டே தன் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினை பற்றியும் கூறுகிறார்..நெல்லை குறித்த புதுமைபித்தனின் வர்ணனை பின் வருமாறு "அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின"

துடுக்கான இளைஞன் ஒருவன் தான் செய்து வைத்த விநாயகர் சிலையை கும்பினியர் (ஆங்கிலேயர்) தூக்கி செல்ல அவர்களின் இடம் புகுந்து அச்சிலையை கைப்பற்றி பின் தப்பிக்க வழியின்றி கிணற்றில் விழுந்த கதையை நகைச்சுவை கலந்து விவரிக்கிறார்.நாத்திக கொள்கை கொண்டிருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்ட தம்மனைவியை கேலியோ,கிண்டலோ செய்யாது உற்சாகமாய் இறை பூசையில் அவர்களுக்கு உதவும் மனநிலை கொண்ட இந்த எழுத்தாளன் கதைகளில் மட்டும் இன்றி நிஜத்திலும் வித்தியாசமானவரே!!

Sunday, August 31, 2008

தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு "சிலிர்ப்பு"

தி,ஜானகிராமனின் "மோகமுள்" "அம்மா வந்தால்" "மரபசு" "கமலம்""நளபாகம்" நாவல்களை போல அவரது சிறுகதைகள் பிரபலமடையவில்லை.தி.ஜாவின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து காலச்சுவடு வெளியிட்டுள்ள "சிலிர்ப்பு" சிறுகதை தொகுதி படிக்க கிடைத்தது. ஜானகிராமனின் பிரபல சிறுகதைகள் "அக்பர் சாஸ்திரி" , "சிகப்பு ரிக்சா","சிலிர்ப்பு","கடன் தீர்ந்தது" ஆகிய சிறுகதைகள் அடங்கிய இத்தொகுதி சுவாரசியமானது.ஜானகிராமன் கதைகளில் வர்ணனைகளுக்கும்,விவரிப்புகளுக்கும் முக்கியத்துவம் இன்றி கதா பாத்திரங்களின் உரையாடல் மூலம் அவர் மனநிலையும்,இயல்பும் வெளிப்படும்.இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் யாவும் அவ்வண்ணமே சொல்லப்பட்டுள்ளது.

அக்பர் சாஸ்திரி:



நோயும் பிணியும் மனிதனை துரத்தும் அழையா விருந்தாளிகள்.ஒரு ரயில் பயணித்தின் பொழுது நோயால் அல்லால் படும் சக பயணிகளிடம் கை வைத்யம் கூறி உற்சாகமாய் பேசி வரும் சாஸ்திரி ஒருவரின் பேச்சால் யாவரும் பேரு ஆவல் கொண்டு அவரிடம் தங்களின் நோய் கூறுகளை கூறி,வைத்தியருக்கு செலவு செய்யும் வேதனையை பகிர்கின்றனர்.உடன் வரும் ஒரு குடுபத்தின் தாய்,குழந்தைகள்,தந்தை என யாவருக்கும் வீட்டு வைத்திய முறைகளை சொல்லி இதுவரை வைத்தியர் வீட்டு செல்லாத தன் நிலை குறித்து பெருமையாய் பேசி கொண்டே இருக்க,சட்டென மார்வலி வந்து உயிர் நீக்கிறார்.இறுதிவரை மருத்துவரை நாடி செல்லாது தன் பெருமையை இளைனாடிய அவரை கண்டு அங்குள்ளோர் யாவரும் வியக்கின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது சராசரிக்கும் கீழான கதையாக தோன்றும்,சற்றே ஆழ்ந்து வாசித்தால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியும்.


சிகப்பு ரிக்சா



இச்சிறுகதை வெளிவந்தது 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும். அன்று ட்ராம்(சாலை வலி தண்டவாளத்தில் செல்லும் ரயில்) எனபடுவதை இன்றைய மின்சார ரயிலாக எடுத்து கொள்ளலாம்.நெருக்கடி மிகுந்த ட்ராம் பயணத்தில் பெண்கள் படும் உளைச்சலே இக்கதை கரு.பத்திரிக்கை ஆசிரியர் பார்வையில் பயணிக்கும் இக்கதை. தன் உடன் தினமும் ட்ராமில் பயணம் செய்யும் கெட்டிகார யுவதியின் ஒருத்தியின் அன்றாட அவஸ்தைகளை கவனித்து வருகிறார். எல்லா சந்தர்ப்பங்களிலும் துடுக்காய் பேசி புத்திசாலியாய் வெளிப்படும் அப்பெனின் தைரியத்தை எண்ணி வியக்கிறார்.அப்படி பட்ட பெண்ணே ஒரு நாள் கூட்ட நெரிசலாலும்,உடன் வரும் ஆடவர்களின் தொல்லையாலும் ட்ராம் பயணத்தை விடுத்து தனக்கென தனியானதொரு சிகப்பு நிற ரிக்சாவை அமர்த்தி கொள்கிறாள்.இக்கதை எல்லா காலகட்டத்திற்கும் பொருந்திவருவது.


சிலிர்ப்பு :




குழந்தை தொழிலாளர்கள் நிலையை விவரிக்கும் இக்கதை நிகழும் இடமும் ரயிலே..
தன் மகனோடான ரயில் பயணத்தில் தூர நகரம் ஒன்றிற்கு வீட்டு வேலை செய்ய அழைத்து போகும் சிறுமியை காண்கிறான் நாயகன்.தன் மகனை காட்டிலும் இரண்டு மூன்று வயதே பெரியவளான அச்சிறுமி ஏழ்மையின் காரணமாய் வீட்டுவேலைக்கு அழைத்து செல்லப்படும் கொடுமையை எண்ணி வருந்தும் நாயகன் தன் நடுத்தர வர்க்க சுமையை கருதாது அச்சிறுமி கையில் சிறுது பணம் தந்து வலி அனுப்புகிறான்.நம்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலுமாய் ஒழிக்கபடவில்லை.உணவகங்களிலும்,ஜவுளி கடைகளிலும்,லாட்ஜ்களிலும் இன்றும் சிறுவகள் பணியில் உள்ளனர்.அதிலும் ஏழை சிறுமிகள் வீட்டு வேலை செய்து பிழைக்க வெளிநாடிகளுக்கும்,வேறு மொழி அறிய ஊர்களுக்கும் அழைத்து செல்லப்படும் கொடும் இன்றளவும் உள்ளது!!வண்ணதாசனின் "நிலை" சிறுகதை போல இதுவும் ஏக்கம் மிகுந்த சிறுமியின் உள்ள வெளிப்பாடே.

கடன் தீர்ந்தது



நம்பிக்கை துரோகத்தின் விலை மரணம் என்பதை சொல்லும் இக்கதை கிராமத்து பின்னனிகொண்டது.யாவராலும் மதிக்கப்படும் ஊரின் பெரியவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் விலை நிலம் வாங்க ஏமாற்றுக்காரன் ஒருவனிடம் கொடுத்து விட்டு துன்புறுகிறார்,இறுதியில் போலீசின் வசம் சிக்கும் அவன் அவரிடம் பணம் பெறவில்லை என கூறி தப்பிக்க,சிறிது நாட்களில் பெரு நோய் கண்டு படுத்த படுக்கை ஆகிறான்.அந்நிலையில் அவனை காணசெல்லும் பெரியவர் அவனிடம் ஒரு ரூபாய் பெற்று கொண்டு கடன் தீர்ந்தது என கூறி விடைபெறுகிறார்.அந்த குற்ற உணர்ச்சி அவனை மேலும் வியாதிகுள்ளாக்குகிறது.கதையின் ஒரு இடத்தில் அக்கிராமத்தின் காலை பொழுதினை விவரிக்கும் இடம் அழகு,படித்ததும் சட்டென நினைவிற்கு வந்தது மோகமுள் திரைப்பட பாடல் வரிகள்..

"ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் கரிந்து புலர்கின்ற பொழுதில்
நெல் மூட்டை சுமந்து வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை மயக்கும் இதமான
இளங்காலை இசை வந்து மனதோடு மயக்க..."


வெளியீட்டார் - காலச்சுவடு பதிப்பகத்தார்
விலை - 150 ரூபாய்

Thursday, August 28, 2008

புதுமைபித்தனின் "காஞ்சனை"- வேற்று வெளி அனுபவங்கள்!!

நாம் அறியா,அறிய விழைந்திடாத நிகழ்வுகள்/சம்பவங்கள் குறித்த சம்பாஷனைகள் எப்பொழுதும் சுவாரஸ்யம் கொண்டவை.ஆவி,பேய்,பிசாசு குறித்த நம்பிக்கையும்,செய்திகளும் நகர வாழ்வில் மிகக்குறைவு,அதுவே கிராமபுறங்களில் நாள் ஒரு ஆவியும் பொழுதொரு பேயுமாக மக்கள் பேசுவதற்கு குறைவின்றி பொழுதுகள் செல்லும்.ஒவ்வொரு முறை கிராமத்திற்கு செல்லும் பொழுது ஏதேனும் ஒரு கதை கேட்க கிடைக்கும்,நகரத்தில் ஆவி பேய்களின் தாக்கம் இல்லாதது ஏன் என்பது எப்போதும் எழும் கேள்வி!

கடந்த ஒருவாரமாக,எங்கள் அறையில் இரவு எதோ கொலுசொலி கேட்பதாகவும்,இரவில் யாரோ புலம்புவதாகவும் தெரிவதாக உணர்ந்து(??!!) அது குறித்து பேசி கொண்டிருக்கையில்..எங்கோ எப்போதோ கேட்ட கதைகள்,அமானிஷிய உலகம் குறித்த திரைப்படங்கள்,நம்பிக்கைகள் என விவாதம் எங்கெங்கோ சென்றது.இறுதியில் அப்பெண் யாராக இருப்பினும் பார்த்தால் பேசி கேட்டுக்கொள்ளலாம் என முடிவாகிற்று...எங்கள் அதிக பட்ச கிண்டல் தாளாமல் அப்பெண் கோபித்து கொண்டால் போலும், அதன் பின்னான இரவுகள் அமைதியாக செல்கிறது.




அவ்விவாததிற்கு பிறகு எனக்கு புதுமைபித்தனின் "காஞ்சனை" சிறுகதை மீண்டும் படிக்க வேண்டுமென தோன்றியது.அவரின் மற்றுமொரு அற்புத படைப்பு.வார்த்தைகளால் பயம் உண்டு பண்ண முடியும் என்பதிற்கொரு உதாரணம்.எழுத்தாளனான நாயகனுக்கு ஓர்
இரவில் உணரும் பிண வாடையும்,ஊதுபத்தி வாசனையும் பயம் தர,அப்பயம் மறையும் முன்னர் வேலைகாரியாக காஞ்சனை என்னும் பேய் ஒருத்தி வீட்டிற்க்கு வந்து சேர்கிறாள்.அவளின் விசித்திர குணாதிசயங்களும்,நித்திய மர்ம புன்னகையும்,பயம் காட்டும் உருவங்களும் எழுத்தாளனை தொடர்ந்து வர,ஒரு இரவு பொழுது மாயமாய் மறைந்து போகிறாள் காஞ்சனை..புதுமைபித்தனின் படைப்புகள் பல்வேலு தளங்களில் பயணிப்பவை.
அவரது "பொன்னகரம்" "செல்லம்மாள்" "ஒரு நாள் நாள் கழிந்தது" வரிசையில் எனக்கு பிடித்த மற்றொரு கதை "காஞ்சனை".

ஆவி உலகம் குறித்த தமிழ் திரை வர்ணனைகளும் காட்சிகளும் பயத்திற்கு பதில் சிரிப்பு மூட்டுவதாகவே இருக்கும்,எதார்த்தம் என்பது துளியும் இல்லாது வெள்ளை சேலை மங்கைகளின் உலா வெளியாக சித்தரிக்கபற்றிருகின்றது இதுவரை!!அந்தவிதத்தில் ஆங்கில திரைப்படங்கள் பல எதார்த்த வகை திகில் அனுபவங்கள் தரவல்லவை.சில உதாரணங்கள் "Halloween" "Emilie Rose" "The Grudge" "The village""Sixth sense" "Ring",Rosemary's baby,"Exorcist".

புதுமைபித்தனின் "பொன்னகரம்" "செல்லம்மாள்" "ஒரு நாள் நாள் கழிந்தது" வரிசையில் மற்றொமொரு அற்புத முயற்சி "காஞ்சனை". "காஞ்சனை" போன்றதொரு அனுபவத்தை தரவல்லது சாருவின் "ரங்கையன் கோட்டை",அவரின் நேநோ சிறுகதை தொகுதியில் படித்த நியாபகம்.இவ்வகை தமிழ் படைப்புகள் வேறு இருப்பின் பரிந்துரைக்கவும்.

Monday, August 25, 2008

அசோகமித்ரனின் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள் தொகுப்பு

சமீபத்தில்,தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் தமக்கு பிடித்த சிறுகதைகளை தொகுத்து அசோகமித்திரன் வெளியிட்டுள்ள தொகுதி படிக்க கிடைத்தது.1980'களில் வெளிவந்த இத்தொகுப்பு மிகச சிறந்தவை என வகைப்படுத்த படும் தமிழ் சிறுகதைகளை கொண்டது.வண்ணநிலவன்,வண்ணதாசன்,ஜெயகாந்தன்,ராஜநாராயணன்,சுஜாதா,ஆதவன்,நீலபத்மநாபன்,அழகிரிசாமி,கிருஷ்ணன் நம்பி ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் அடங்கும்.சக எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருப்பதால் அச்சிறுகதைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.




வண்ணநிலவனின் "எஸ்தர்"

வண்ணநிலவன் சிறுகதைகளுள் பெரும் வரவேற்பை பெற்ற சிறுகதை "எஸ்தர்" - மழை பொய்த்தால் விவசாயம் கேட்டு உணவின்றி வாழ்வே கேள்விக்குறியாகி போன குடும்பம்பதை பற்றிய கதை.அவ்வீட்டின் மூத்தவளான விதவை எஸ்தர்,பெரும்பஞ்ச காலத்தில் யாவரையும் அரவணைத்து குடும்பத்தை வழி நடத்தி செல்வதே இச்சிறுகதை.ஆரவாரமின்றி நகரும் இக்கதையில் நிலவும் ஒரு அமானிஷ்ய அமைதியானது பஞ்ச காலத்தில் விவசாயிகளின் நிலையை சொல்லுகின்றது.மேலும் பெரும்பாலான நிகழ்வுகள் சிம்மினி வெளிச்சத்தில் இரவின் துணையோடு நகர்வது மேலும் வேதனை மூட்டுவதாய் உள்ளது.துயர பிடியில் சிக்கிய ஒரு குடும்பத்தின் வழி மிகுந்த கதை..

வண்ணதாசனின் "தனுமை"



வண்ணதாசன் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தனுமை.அழகிய காதல் கதை.நாயகன் நாயகியோடு பேசாமலே.. பார்வையால்,எண்ணகளால்,உணர்வால் பிரியம் கொள்வதை அமைந்துள்ளது.மழை பெய்து ஓய்ந்த ஒரு நாளில் நாயகி தாணு சாலையில் நடத்து வருவதாய் வண்ணதாசன் அமைத்துள்ள காட்சி அழகிய கவிதை. நாயகன் தனுவின் நினைவாக தனிமையில் அமர்த்து இருக்கும் ஒரு காட்சியை"தனியாகி…தனுவாகி.." என வர்ணிக்கும் பொழுது கல்யாண்ஜி வெளிபடுகிறார்.கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பின்பாதி கதை மழையோடு பயணிக்கிறது.எழுத்தாளர் பாவண்ணன் பல்வேறு எழுத்தாளர்களில் சிறந்த கதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்..அதில் வண்ணதாசன் சிறுகதைகளில் அவர் தேர்ந்து எடுத்தது தனுமையே ..

கி.ராஜநாராயணனின் "நாற்காலி"



கி.ராஜநாராயணனின் "வெட்டி" சிறுகதை தொகுப்பில் முன்பொருமுறை இக்கதை படித்து இருக்கின்றேன்.பொதுவாகவே கிராமத்து மக்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.கரிசல் இலக்கியத்தில் நகைச்சுவை புகுத்தி எழுதுவதில் வல்ல கி.ராவின் மற்றுமொரு நகைச்சுவை புனைவு இது.முக்காலிக்கு விடை கொடுத்து நாற்காலி பயன்படுத்த ஆசைப்பட்டு தேர்ந்த மரத்தினால் நாற்காலி ஒன்றினை செய்து வீட்டில் வைக்கின்றனர்.அந்த நாற்காலியோ ஊரில் எழவு வீடுகளில் சவத்தினை சார்த்தி வைக்க பயன்பட தொடங்குகிறது...மிகுந்த ஹாசியம் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கதை கிராமத்து பேச்சு வழக்கு,மாமன் மச்சான் உறவுகளில் நிலவும் கேலி,கிண்டல் என இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது.


ஜெயந்தனின் "பகல் உறவுகள்"





ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு தம்பதியினர் வெளி உலகுக்கு ஆதர்ச தம்பதியினராகவும்,யாவரும் வியந்து பார்ப்பவர்களாகவும் தெரிந்தாலும் வீட்டினுள் இருவருக்குள்ளும் நிகழும் சண்டை,வார்த்தை போர், விருப்பமின்மை என தினமும் நகரும் நாட்களோடு பகலில் அலுவலகத்திலும்,வெளியிலும் கொண்டிருக்கும் உறவினை பற்றிய இறுக்கம் மிகுந்த கதை.எஸ்.ராவின் எழுது நடையை போன்றதொரு உணர்வை குடுக்கின்றது..வெகு வித்தியாச நடை.

நாஞ்சில் நாடனின் "ஒரு "இந்நாட்டு மன்னர்"

நான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடனின் கதை.முற்றிலும் வட்டார பேச்சு நடையுடன் படிக்க சுவாரசியமாய் உள்ளது.சு.ரா வின் ஒரு புளிய மரத்தின் கதை நாவலில்,தேர்தலின் பொழுது ஏழை கிழவருக்கு புத்தாடை குடுத்து காரில் அழைத்து சென்று ஓட்டு போட வைப்பார். அது நாவலின் ஒரு சிறு பகுதி. ஒரு இந்நாட்டு மன்னர் சிறுகதை அப்படி அலைந்து செல்லபடும் வைத்தியன் என்னும் கிழவரின் தேர்தல் சமய அனுபவங்களே..சற்றே நகைச்சுவை கலந்து தேர்ந்தால் கால நிகழ்வுகளை கூறி இருக்கும் விதம் நன்று.

"கிருஷ்ணன் நம்பியின் "மருமகள் வாக்கு"



1960 களில் வெளிவந்துள்ள இச்சிறுகதை மாமியார் மருமகளுகுள்ளான உறவினை பற்றியது.ஆதிக்க மனநிலை கொண்ட மாமியார்,எதையும் எதிர்த்து கேட்க துணியாத மருமகள் என இக்காலத்திற்கு சிறிதும் பொருந்தாத கதை நடை படிக்க வியப்பாக உள்ளது.தனிச்சையான முடிவு எடுக்க தைரியமில்லாத பெண்கள் இன்றும் உண்டு என்ற போதிலும் சார்பு நிலை அக்காலதினை போல இன்றில்லை.மாமியாரின் மீது கொண்ட பயமோ,பக்தியோ,சொல்ல முடியாத அன்போ எதுவோ ஒன்று தனக்கு பிடித்த கட்சிக்கு கூட வாக்களிக்க முடியாமல் செய்து விடுகிறது அவளை..திடமான மனநிலையும்,தைரியமும் பெண்களுக்கு மிகுந்த தேவை என சொல்லாமல் சொல்லும் கதை.

இந்திரா பார்த்தசாரதியின் "தொலைவு"

டெல்லியில் நடைபெறுவதாய் வரும் இக்கதை நடுதரமக்களின் பொருளாதார சிக்கலை முன்னிறுத்தி சொல்லப்பட்டது.ஒரு தந்தையும் மகளும் மாலை பொழுதில் வீட்டிற்கு செல்ல ஆட்டோ பிடிக்க அலைவதே கதை..ஜன நெருக்கடி மிகுந்த மாலை பொழுதுகளில் பேருந்துகளும்,ஆட்டோக்களும் தன் இருப்பை பெருமை படித்தி கொள்ளும் வண்ணம் ஆட்களை திணித்து கொண்டு செல்லும் காட்சிகள் நாம் தினமும் காண்பதே.டாக்சியில் செல்வதை தவிர்த்து மகளுடன் நடந்தே பல தூரம் சென்று ஆட்டோவை தேடி அலையும் சராசரி அரசு ஊழியனான நாயகன் புலம்பும் இடங்கள் எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி வருவதே!!

அசோகமித்ரனின் "காலமும் ஐந்து குழந்தைகளும்"



நேர்முக தேர்விற்கு செல்ல ரயிலை பிடிக்க ஓடும் ஒரு இளைஞனின் சில நிமிட மனோட்டமே இச்சிறுகதை.நவீன இலக்கிய வகையை சேர்ந்த இக்கதை, இயந்திர ஓட்டத்தில் யாருக்காகவும் காத்திராத ரயிலினை கனவுகளோடும்,கடந்த காலங்களின் வேதனையோடும்,பெரும் நம்பிக்கையோடும் நெருங்கும் வேலை இல்லா இளைஞனின் அந்நேர மனவோட்டங்களை இயல்பாய் கூறி இருக்கும் விதம் நன்று.யாரையும் பொருட்படுத்தாது வேகமாய் செல்லும் அவன் கண்ணில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஐந்து குழந்தைகள் தென்பட அவர்கள் குறித்த சிந்தனையும் வந்து மறைகிறது..நம்மில் பலருக்கு இந்த அனுபவம் உண்டு,அடித்து செல்லும் இயந்திர வாழ்வில் நின்று நிதானித்து பிற மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்ள யாருக்கும் விருப்பமும் இல்லை நேரமும் இல்லை.


நூல் வெளியீட்டார் -நேஷனல் புக் டிரஸ்ட்
விலை - 18 ரூபாய்

Thursday, August 21, 2008

வண்ணநிலவனின் "கம்பா நதி"

எப்பொழுதும் எனக்கு எண்பதுகளின் மீது ஒரு பிரியம் உண்டு,இளையராஜாவின் இசையை தவிர்த்து மற்றும் ஒரு காரணம் வண்ணதாசன்,வண்ணநிலவனின் கதைகளும் அதன் மாந்தர்களும் அக்காலகட்டதினரே..இக்கதைகளில் விவரிக்கப்படும் புன்னை,வாதாம்,நாகலிங்க மரங்கள் ,மலை,அருவி,சாலை,தெருக்கள்,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லாவற்றோடும் மிக நெருக்கமாய் உணர்வேன்.வண்ணநிலவனின்/வண்ணதாசன் கதை மாந்தர்கள் மிக இயல்பானவர்கள்,பகட்டான பெண்களோ,சாகசம் புரியும் ஆண்களோ அல்லாமல் நம்மில் ஒருவராய் நுண்ணறிவு கொண்டவர்களாய் நடமாடுபவர்கள்.



வண்ணநிலவன் படைப்புகளில் குறிப்பிடதக்கவை "எஸ்தர்" ,"ரைநீஸ் ஐயர் தெரு" ,"தாமிரபரணி கதைகள்"(சிறுகதை தொகுப்பு) மற்றும் "கம்பா நதி". திருநெல்வேலி வட்டார மொழியாடளோடு தாமிரபரணி நதி சார்ந்த பகுதிகளின் நிகழ்வாய் இக்கதைகள் சொல்லபட்டிருக்கும்.கம்பா நதி ஒரு நடுத்தர குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளோடு அவர்களுக்குள்ளான விருப்பங்கள்,தேவைகள்,சிக்கல்கள்,பிரியம்,காதல்,ஏக்கம் என சகல உணர்வுகளின் பிரதிபலிப்பு.

வேலை தேடும் பாப்பையாவின் தந்தைக்கு இரு மனைவிகள்,அக்கா சிவகாமி,விருப்பம் கொண்ட காதலி கோமதி - இவர்களுக்குள்ளான பிரியம்,உறவு,சம்பாஷனைகள் என நாவல் முழுவதும் உறவுகளின் ஊடே பயணிக்கிறது.நெருக்கடி மிகுந்த நடுத்தர குடும்ப வாழ்கையின் அன்றாட நிகழ்வுகளை மிகுந்த கற்பனை இன்றி அதன் போக்கில் வெகு இயல்பாய் விவரித்துள்ள பாங்கு நன்று.




நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இடம் படித்து முடித்து வேலை தேடும் படலத்தில் ஈடுபடும் காலங்கள்,அப்போதைய நமது மனநிலை.ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்தித்த பிறகும் வெற்றிக்கான தேடல் நீங்காது தொடரும் அந்நாட்கள் எளிதில் மறக்கக்கூடியது அல்ல.பாப்பையா வேலை தேடும் நாட்களில் கொள்ளும் கசப்பான மனநிலை,வேலை பெற்று வெளி ஊரில் இருக்கும் நண்பர்கள் குறித்த ஏக்கம்,பிரியத்திற்குரிய பெண்ணிடம் பழக அஞ்சி ஒதுங்கும் நிலை ஆகியவை சொல்லப்பட்டுள்ள விதம் நன்று.

தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது.கம்ப நதி நாவலிலும் ரைநீஸ் ஐயர் தெரு குறித்து வருகிறது.எப்பொழுதும் மழை நனைத்த சுவடோடு தோன்றுவதாய் அத்தெருவை குறிப்பிட்டு இருப்பது மிகசரியே!!அத்தெருவும்,அதன் மனிதர்களும் அதுபோலவே.

வண்ணநிலவனின் ஆரம்பகால எழுத்துக்கள் வாசிப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை தரவல்லவை,மழையோடு கொண்ட நெருக்கத்தை போல!! கம்பா நதியும் அது போலவே..

நாவல் வெளியீடு - அன்னம் பதிப்பகம்
விலை - 22 ரூபாய்

கீழ் கண்ட இணையத்தளத்தில் இந்நூலை பெறலாம்

http://www.anyindian.com/index.php?cPath=1_40&osCsid=2d94af152a0d96cf0bf5456e76fc1dc4

Tuesday, August 19, 2008

சுஜாதாவின் "எதையும் ஒரு முறை" -மாறுபட்ட கணேஷ் வசந்த த்ரில்லர்!!

தீவிரமான வாசிபிற்கு பிறகு வேகத்தடை வேண்டுமென நினைத்தால் சட்டென என் நினைவிற்கு வருவது சுஜாதாவின் படைப்புகள்!!தீவிரமான மனவோட்டம் தேவை இன்றி அதன் கதை செல்லும் போக்கில் உடன் சென்று படித்து ரசிக்கலாம்.
இம்முறை "புயலிலே ஒரு தோணி" மற்றும் "கடலுக்கு அப்பால்" என்கிற இரு பெரும் நாவல்களை படித்த பிறகு சுஜாதாவின் கணேஷ்-வசந்த் படிக்க வேண்டும் என தோன்றியது.சட்டென நினைவிற்கு வந்த நாவல் "எதையும் ஒருமுறை".



கணேஷ் - வசந்த் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "எதையும் ஒரு முறை".மற்றும் ஒரு சுஜாதாவின் கணேஷ் - வசந்த நாவல் என எளிதாய் ஒதுக்கி விடலாம் இதனை,இருப்பினும் சுஜாதா எடுத்துக்கொண்ட கதைக்கரு சற்று சிந்திக்க வைக்க கூடியது.பணம் படைத்தவர்களின் உலகமாய் தற்போதைய சமூக நிலை மாறி வருவதும்,விளிம்புநிலை மக்கள் அதற்கு இரையாவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை ஒரு கொலையின் மூலமாய் எடுத்துரைக்கின்றது இந்நாவல்.

கூவம் நதிக்கரையோரம் ஒதுங்கிய பெண் பிணம் ஒன்றை தாங்கள் போகும் வழியில் காணும் கணேஷ் - வசந்த உடன் இருக்கும் சட்டகல்லூரி மாணவி ஒருத்தியின் நச்சரிப்பால் அம்மரணத்தை குறித்து துப்பறிய ஒத்துகொள்கின்றனர்.ஆர்வமும்,ஈடுபாடும் இல்லாமல் தொடங்கும் அவர்களின் தேடல் கொஞ்சம் கொஞ்சமாய் விறுவிறுப்பு அடைவது அப்பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து அதனுள் இருந்த "பறவைகள் உலகம்" என்னும் புத்தகத்தை கண்டெடுக்கும் பொழுது தான்.

இறந்த அப்பெண் விளிம்பு நிலை வேசி,படிப்பறிவு இல்லாதவள் என கணக்கிட்டு அந்நூலின் உரிமையாளரை தேடி இவர்கள் பயணம் தொடர்கிறது!!அவர்கள் கண்டு பிடிக்கும் ஆள் பெரும் பணக்காரனாய்,விசித்திர பழக்கங்கள் கொண்டவனாய் தெரிகிறான்.எதையும் ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும் என்னும் அவனின் ஆர்வத்தை கொண்டு அவனே கொலையாளி என அறிந்திருந்தும் தண்டனை வாங்கி தர இயலாது திரும்புகின்றனர்.

இந்நாவலின் கிளைமாக்ஸ் வாசிப்பவர் போக்கிற்கு விடப்படுகின்றது.இது போல நிஜ நிகழ்வுகள் இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை என்னும் படியாக தற்போதைய
சூழல் உள்ளது!!முடிவை குறித்த ஆர்வம் மேலிட விறுவிறுப்பாய் செல்லும் இந்நாவல் கணேஷ் - வசந்த் நாவல்களில் குறிப்பிடத்தக்கது.