ராணுவ பணியில் இருந்து விடுபட தங்களை தாங்களே காயம்படுத்தி கொண்டதாக குற்றம் சாட்டப்படும் ஐந்து வீரர்களை குறித்த அறிமுகத்தோடு தொடங்குகின்றது திரைப்படம்.அந்த ஐவரில் மெதில்டாவின் காதலன் மெனக்கும் ஒருவன்.யுத்த களத்தில் இருந்து வெளியேற்றபடும் அந்த வீரர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களில் இறந்துவிட்டதாக நம்பபடுகின்றது.மெதில்டாவின் இதயம் எப்போதும் தனது கைகளில் துடித்து கொண்டிருப்பதாக சொல்லும் மெனக்,மரணத்தின் சமீபத்திலும் கூட அவர்கள் இருவருகும்மான ரகசிய குறியீடான "MMM"(Metilda Marry Menach)யை கருகிய மரம் ஒன்றில் செதுக்குவது என குறைந்த அளவிலான காட்சிகளில் நாயகனின் காதலின் தீவிரம் அழகாய் உணர்த்தபடுகின்றது.

திரைப்படம் முழுவதும் நாயகி மெதில்டாவின் ஆதிக்கம் தான்.இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு போலியோவினால் பாதிக்க பட்ட மேதில்டாவிடம் "நடப்பதற்கு சிரமமாக இல்லையா" என சிறுவன் மெனக் கேட்பதோடு தொடங்குகின்றது.அழகிய அக்கடற்கரை கிராமத்தின் கலங்கரை விளக்கத்தின் மீதேறி விளையாடும் அவர்களின் பால்ய காலங்கள்,கடற்கரை பாறைகளில் முதல் முதலாய் "MMM" என்பதை செதுக்கி கூச்சலிடும் மெனக்,தேவாலைய ராட்சச மணிகளில் மீண்டும் தங்களின் காதல் குறியீட்டை பதிப்பதுமான அவர்களின் சந்தோஷ தருணங்கள் மெல்லிய புன்னகையோடு ரசிக்கும்படியானவை.
மெனக் குறித்த செய்திகளை சேகரிக்க பாரிஸ் நகரம் செல்லும் மெதில்டா,துப்பறிவாளர் ஒருவரின் உதவியுடனும்,தனது கார்டியனான பெரியவருடனும் மெனக்கை யுத்த களத்தில் கடைசியாய் பார்த்தவர்களிடம் ஏதேனும் நல்ல செய்தி கிடைக்குமென நம்பிக்கை தேம்பிய விழிகளோடு பார்த்திருப்பது,சின்ன சின்ன நிகழ்வுகளின் சாத்தியத்தை கொண்டு மெனக் உயிரோடிருப்பதாய் சமாதானம் கொள்ளுவதுமான காட்சிகளில் ஆட்ரேயின் நடிப்பு அபாரம்.இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று,நாயகியின் உடல் குறையை வைத்து எந்த காட்சியிலும் சென்டிமென்டல் பேத்தல் பண்ணாமல்,அது குறையாய் கவனிக்கபடாமல் இருப்பதில் கவனம் மேற்கொண்டுள்ளனர்.பார்வையாளனுக்கு அழுத்தமாய் முன்னிறுத்தபடுவது அவளின் தளராத மனஉறுதி மட்டுமே.
மெனக்கை தேடி தொடங்கும் மெதில்டாவின் பயணத்தில் கிடைக்கும், உடன் குற்றம் சாற்றப்பட்ட மற்ற வீரர்கள் குறித்த குறிப்புகள் ஒவ்வொரு ராணுவ வீரனும் ஏதோ ஒன்றை இழந்தோ,இழந்த ஒன்றை கண்டேடுக்கவோ தான் போர்களத்திற்கு செல்கின்றான் என்பதை உணர்த்துவதாய் உள்ளது.மெனக்கின் மரணம் நிகழ்திருக்க கூடிய சாத்தியங்கள் அதிகப்படும் பொழுதுகள்,அதன் தொடர்ச்சியாய் நம்பிக்கை முழுதுமாய் நீர்த்து போன மனநிலையில் மெனக்கின் கல்லறையில் மெதில்டா பேசும் உருக்கமான காட்சி....என செல்லும் திரைக்கதையில் எதிர்பாரா திருப்பம் இறுதி காட்சி..!!
அமேலி திரைப்பட இயக்குனரின் மற்றொரு படைப்பான இதில் குறிப்பிடும்படியான விஷயங்கள் பல......சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட தங்கள் பகுதியை நிறைவாய் செய்திருப்பது,கடற்கரை கிராமத்தின் அழகை நேர்த்தியாய் கொணர்ந்திருக்கும் ஒளிப்பதிவு,ஆடை வடிவமைப்பு மற்றும் 1900களின் தொடக்கத்திலான பாரிஸ் நகரை கண்முன் நிறுத்தும் சிறப்பான கலை இயக்கம் என......காதலும்,தேடலுமான மேதில்டாவின் இப்பயணத்தின் சில உன்னத தருணங்கள் காதல் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதலுக்கு அர்த்தம் கூட்டுபவை!!