Showing posts with label கவிதை நூல்கள். Show all posts
Showing posts with label கவிதை நூல்கள். Show all posts

Thursday, January 21, 2010

அய்யனாரின் "நானிலும் நுழையும் வெளிச்சம்" கவிதை தொகுதி

பூக்களாலும்,தேவதைகளாலும், பூனைகளாலும்,முத்தங்களாலும் நிறைந்த சௌந்தர்யம் கொண்டது அய்யனாரின் கவிதையுலகம் !! எனக்கு கவிதைகள் மீதான ஆர்வம் கூடிட முக்கிய காரணம் இவரின் கவிதைகள்..அய்யனாரின் மொத்த கவிதைகளையும் மின்னூலில் ஒரே நாளில் படித்து முடித்த பின் உண்டான ஏகாந்த மனநிலையை விவரிக்க இயலாது!!!!அய்யனாரின் கவிதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்ட எனது முன்னுரை அவசியப் படாது.எப்போதும் நெருக்கமாய் உணர செய்யும் மென்கவிதைகள் சில இந்த தொகுதியில் இருந்து....



மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல் குட்டியையே
நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லை என

-------------------------

தோட்டத்து நாகலிங்க பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்த கிளர்வில்
இருளை கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழ புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக்
கொள்ளலாம்.

---------------------------

கூடுகளை விரும்பிடாத
பறவையின் பின்
தொடர்ச்சியாய் பயணித்துக்
கொண்டிருக்கின்றேன்
இளைபாரல்களில் மிகுந்த ஆர்வம்
கொண்டவனேனினும்
இளைப்பாரல்களை
தொலைத்துவிடச் செய்தது
இதுவரை கடந்திடாத
தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்து
கொண்டிருக்கிறேன்
-----------------


நீளத்தின் கடலும்
கடலின் ஆகாயமும்
ஒன்றென்றேன்
எப்படி யென்றால்
இதழ்களை கவ்வியபடி
முணுமுணுத்தேன்
"முத்தமிடுகையில்"

-------------------------------

புத்தகங்களாலும் அழுக்குத்
துணிகளாலும்
நிரம்பி கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடி தொட்டிக்குள்
உலவுகின்றன
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசி கொள்வதாய்
சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கின்றேன்
ஒரு முறை வந்து
பார்த்துவிட்டுபோயேன்.

* * *

புத்தக கண்காட்சியில் இம்முறை பெரிதாய் எதிர்பார்த்தது அய்யனாரின் நூல்களே, எதிர்பார்த்தது பொய்க்கவில்லை..தேர்ந்தெடுத்த காதல் கவிதைகளை அழகிய நூல் வடிவில் வெளியிட்டுள்ள வம்சிக்கு நன்றிகள்..வாழ்த்துக்கள் அயிஸ்!!

ஆசிரியர் - அய்யனார்
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்

Wednesday, January 13, 2010

கல்யாண்ஜியின் "இன்னொரு கேலி சித்திரம்" - கவிதை தொகுதி

கொஞ்ச நாட்களாய் கவிதைகள் வாசிக்க ஆர்வம் வந்துள்ளது.இலக்கிய இதழ்களிலும்,பதிவர்களின் கவிதைகள் மட்டுமே அறிமுகம் இதுவரையில்.இந்தாண்டு புத்தகசந்தையில் சில கவிதை தொகுதிகளும் வாங்கினேன்.வண்ணதாசனின் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இங்கு அதிகமாகவே பகிர்ந்துள்ளேன் ..மீண்டும் கவிதைகளில் அதே உணர்வை பகிர்ந்துள்ளார் கல்யாண்ஜியாய்.இவரின் "இன்னொரு கேலி சித்திரம்" தொகுதியின் கவிதைகள் சில...



ஓவிய போட்டியில் பரிசு வாங்க
வந்த சிறுவன் அவசரமாக
ஒன்றுக்கு இருக்க உட்காந்த
இடத்தில
உதிர்ந்து கிடந்தன இருட்டுக்குள்
பன்னீர் பூக்கள்
பார்த்தவுடனே எழுந்து போய்
தூரத்து மரத்தடியில்
அமர்ந்தவனை
பார்த்து சிலிர்த்தது வாசனை
அனுப்பி பன்னீர் மரம்.

----------------------------------------------------------

பார்த்து கொண்டிருக்கும் பொழுதே
காணாமல் போய்விட்டது வானவில்
தட்டான் பிடிக்க தும்பைச்செடி
மிதித்தொடும் குழந்தைகள் முகத்தில்
படர்ந்திருந்தன ஏழு நிறங்கள்

----------------------------------------------------------
.... நேரடி வானத்தில்
தெரிவதைவிட
நிலா அழகாக இருப்பது
கிளைகளின் இடையில்..

----------------------------------------------------------

மழை இதுவரை உங்களிடம் ஏதேனும் புகார்
சொல்லி இருக்கிறதா.....
ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக.....
ஒரு வானவில் மீன்கொத்தி சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டு சிறுவனை
நனைய கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பார்க்காமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக....
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து இவ்வளவு புகார்களை
வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே
சொல்லி கொண்டு இருக்கின்றீர்கள்?



வெளியீடு - சந்தியா பதிப்பகம்

Saturday, January 17, 2009

கல்யாண்ஜியின் தேர்ந்தெடுத்த கவிதைகள்

கல்யாண்ஜியின்(கதை உலகில் வண்ணதாசன்) தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு நான் விரும்பி வாசித்த முதல் கவிதை நூல்.வண்ணதாசனின் சிறுகதைகளோடு இருந்த பரிட்சயம் அவரின் கவிதைகளோடு இருந்ததில்லை.இத்தொகுதியின் கவிதைகள் யாவும் நம்மை சுற்றி தொடரும் தினசரி நிகழ்வுகளை,எந்திர வாழ்கை ஓட்டத்தில் கவனிக்க மறந்தவற்றை நினைவூட்டுபவை.மிகபிடித்த சில வரிகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன்..



நிலா பார்த்தல்

ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.
-------------------------------------
மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
---------------------------------------------------
தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.

- கல்யாண்ஜி

தொலைந்த வெளிச்சம்

கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்து திரும்பும் முன்
அணைந்துவிடுகின்றது
முதல் விளக்குகளுள் ஒன்று
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைத்த பிறகு தான்
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம்
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைத்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.

- கல்யாண்ஜி

வெளியீடு - ஆழி பதிப்பகம்
விலை - 45 ரூபாய்