நெரிக்கட்டு,வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியேறிய நாயகன் புலம் பெயர்ந்த ஊரில் மணமான பெண்ணொருத்தியுடன் கொள்ளும் காதலும் அதன் காரணமாய் சந்திக்கும் மரணமும் பற்றிய கதை.இக்கதையில் தெளிவாய் சொல்லபடாதது நாயகனின் வயது,அதன் காரணமாய் புரிதலில் சிறிது குழப்பம் உள்ளது. "திசையெட்டும் சுவர்கள் கொண்ட கிராமம்",மேல்குடியினருக்கு எதிரான தலித் இளைஞர்களின் போராட்டத்தை பற்றிய கதை.தலைமுறை தலைமுறையாய் தொடரும் தீண்டாமை,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் என தீராத கொடுமைகளை மையபடுத்தி பின்னப்பட்டுள்ள இக்கதை அழுத்தமாய் வலியுறுத்துவது தலித் இளைஞர்களுக்கு/பெண்களுக்கு இவற்றை எதிர்த்து போராட வேண்டிய மன தைரியத்தையும் உறுதியையும்.

"இறகு பிய்த்தல்",உயிர்களின் மீது பேரன்பு கொண்டவனும்,தான் சார்ந்துள்ள சமூகத்தை குறித்த நுண்ணறிவு பெற்றவனாகவும் உள்ள பிச்சைகாரனை பற்றிய கதை.அவனின் தெரிவிக்கப்படாத தொடக்க காலங்களை காட்சிகளின் விவரிப்பில் மறைமுகமாய் தெரிவிக்கின்றார்."உயிரிடம்",சொந்தமாய் வீடு இல்லாதவர்களுக்கு அது குறித்த கனவுகளும்,ஏக்கமும்,கற்பனையும் இருப்பது போலவே வீடு உள்ளவர்களுக்கு அது குறித்த நினைவுகளும்,பெருமைகளும் இருப்பது இயல்பு.பிறந்த வீடும்,புகுந்த வீடும் ஒரு பெண்ணிற்கு நெருக்கமாய் அமைவதை உருக்கமாய் விவரிக்கும் கதை.
"நீர்பரப்பு",இக்கதையில் மிக சிக்கலான மன போராட்டத்தை எழுத்தில் கொணர்ந்து உள்ளார் அழகிய பெரியவன்.கரகாட்டகாரியான தனது காதலியின் தாய்,அவன் ஊருக்கே ஆட வரும் சமயத்தில் நாயகனுக்கு ஏற்படும் மன போராட்டமே கதை.தர்மசங்கட நிலையில் தத்தளிக்கும் அவனின் ஒவ்வொரு கனங்களும் விவரிக்கப்பட்டுள்ள விதம் மிகையில்லாதது."கண்காணிக்கும் மரணம்",மரணத்தின் பிடியில் இருக்கும் மனைவியை உயிராய் கவனித்து கொள்ளும் கணவன் அவளோடு கூடிய கடந்த கால வாழ்கையை நினைவு கொள்வதை சில பூடகங்களோடு சொல்லும் கதை.
இவை தவிர்த்து "பால் மறதி","யாரும் யாரையும்" ஆகிய கதைகளும் குறிப்பிட்டு சொல்லபடவேண்டியவை.ஆழமான வாசிப்பு இக்கதைகள் நன்கு உணர செய்யும்.அழகிய பெரியவனின் கதைகள் மனித உறவுகளுக்குள்ளான மிக மிக மென்மையான உணர்ச்சி போராட்டங்களை தொட்டு செல்பவை.
வெளியீடு - United Writers
விலை - 50 ரூபாய்.