
வாதாம் மரங்கள் குறித்த முதல் அறிமுகம் வண்ணதாசனின் கதைகள் மூலமே எனக்கு கிடைத்தது.வாதாம் மரம் குறித்து ஆச்சர்யத்துடன் வீட்டில் விசாரித்தது நினைவிற்கு வருகின்றது.சில வர்ணிப்புகள் பார்த்திடா பொருட்களின் மீதான ஆவலை அதிகரிக்க செய்பவை."ஒரு வாதாம் இலை ஒரு நீலச்சிறகு" சிறுகதை கணவன் மனைவிக்கு இடையேயான அன்யோனியத்தை அழகாய் சித்தரிக்கின்றது.குற்றாலம் - அருவிகளின் இரைச்சலும்,மனதை வருடும் சாரலும்,குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும் கலந்து ஒருவித சௌதர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர்."ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்" - சிறுகதை குற்றால அருவி ஒன்றின் அருகில் எண்ணெய் கடை வைத்திருப்பவரை பற்றிய கதை.நித்தம் கடையில் முகம் சுளித்து வியாபாரம் செய்யும் அவர் சிறு நஷ்டத்திற்கு பிறகு அருவியில் குளிக்கும் சுகத்தை உணர்ந்து கடையை சாத்திவிட்டு புறப்படுவதை நகைச்சுவை கூட்டி சொல்லும் கதை.
"சொர்க்கத்திற்கு வெளியே கொஞ்சம் நரகம்",அலுவலகத்திலும்,நண்பர்களிடத்திலும் பகட்டாய் சுகவாசி போல பேசி திரியும் சிலரின் வீட்டு நிலை மோசமாய் இருப்பதை பேச்சில் அறிய முடியாது.இக்கதை நாயகன் தாஸ் அதுபோலவே பகட்டு பேர்வழி.அலுவலகத்தில் எப்போதும் சுத்தம் குறித்து பேசிக்கொண்டும்,மின்சாரம் இல்லாத நேரங்களில் அலுத்து கொள்ளும் தாஸ் இரவில் வீட்டில் ஆடு,மாடுகளுக்கு மத்தியில் உறங்கி போகும் காட்சிகளின் விவரிப்புகள் சிரிப்பை வரவைப்பவை."பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக",கதையின் சாரத்தை வெகு அழகாய் சொல்லும் தலைப்பு.வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனின் மனநிலை பண்டிகை நாளில் எப்படி இருக்கும்?தாழ்வு மனப்பான்மையும்,கொஞ்ச குற்ற உணர்ச்சியும் சேர்ந்து இயல்பை மாற்றி பண்டிகை குதூகுலத்தில் இருந்து தனித்து விட செய்வதை வெகு அழகாய் சொல்லி இருக்கும் கதை.
"சில பழைய பாடல்கள்", இந்த சிறுகதை கோபியின் இடாகினி பேய்கள் தொகுப்பில் ஒரு பகுதியை நினைவுபடுத்தியது.கோபி தான் நட்பு கொண்டிருந்த அலுவலக தோழி குறித்து விரிவாய் எழுதி இருப்பார்,அத்தொகுப்பில். ஆண் பெண் நட்புறவு இன்றைய அலுவலக சூழலில் வெகு இயல்பான ஒன்று.80 களில் இது சாத்தியம் இல்லை.விதவையான அலுவலக தோழியுடனான நாயகனின் நட்பை சொல்லும் கதை இது.."அவனுடைய நதி அவளுடைய ஓடை",சின்ன சின்ன காரியங்களில் கூட அழகை புகுத்தி சிறுகதையாய் நீட்டிக்கும் திறன் வண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு.முன்பெல்லாம் சாயுங்காலத்தில் பெண்கள் கூடி பேச அமர்ந்து விடுவார்கள்,அதை மையபடுத்திய கதை.தொலைக்காட்சியின் வரவால் அந்த காட்சிகள் இன்றைய சூழலில் சாத்தியம் இல்லை.
இந்த தொகுப்பில் வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளும் அடக்கம். இங்கு குறிப்பிட்டுள்ள சிறுகதைகளில் என்னை கவர்ந்தது அவற்றின் தலைப்புகள்.தலைப்புகள் தேர்வில் கல்யாண்ஜி தெரிகிறார்.வண்ணதாசனின் எழுத்து குறித்து பொதுவான சில எதிர்வினைகள் உண்டு.என்பதுகளிலேயே பின் தங்கிய எழுத்து என்றும்,ஒரு கட்டத்திற்கு மேல் அயர்ச்சி தருபவை என்றும்.ஏனோ அதை நான் எப்பொழுதும் உணர்ததில்லை. சொல்ல போனால் 80 களில் மீதான ஏக்கமும்,பிரியமும் அதிகரிக்க செய்தது ராஜாவின் இசையும்,வண்ணதாசனின் கதைகளுமே!!
வண்ணதாசன் சிறுகதைகள் குறித்த எனது முந்தைய பதிவு
வெளியீடு - புதுமைபித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்