Tuesday, April 3, 2018

சோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )

"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லை!இது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் தாண்டி போய் சௌராஷ்டிரத்தின் எல்லையில் நின்று கொண்டு நீங்கள் பார்த்தால் எத்தைகைய வாழ்க்கை முறை உங்கள் பார்வையில் படுமோ அந்த வாழ்க்கையோட்டத்தை இந்த நாவலில் காணலாம்" 

- ஜவேர்சந்த் மேகாணீ (ஆசிரியர்)

 ஜவேர்சந்த் மேகாணீயின் இந்நாவல் இலக்கிய உன்னதங்களில் ஒன்று.எழுத்தாளர்,பாடகன்,நாடோடி இலக்கிய ஆய்வாளர் என பன்முகம் கொண்ட ஜவேர்சந்தின் மொழி ஆளுமை வியக்க வைப்பது.ரசிக்கும்படியான வர்ணனைகளும், வியக்க வைக்கும் உவமைகளுமென தொடரும் இந்நாவல் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய வரலாற்றின் ஒரு பகுதியை நேர்த்தியாக பதிவுசெய்கிறது.1937ம் ஆண்டு வெளிவந்துள்ள இந்நூலை முக்கிய வரலாற்று ஆவணமாக கருத வேண்டியதின் காரணமும் அதுவே.சௌராஷ்டிர தேசத்தில் (குஜராத்) நிகழும் இக்கதை முழுக்க அம்மக்களின் சமூக அரசியல் வரலாறைப் பேசிக் செல்கிறது.சௌராஷ்டிர நகரங்கள் மற்றும் கிராமங்களில் பயணித்து சேகரித்த ஆசிரியரின் ஒப்பற்ற அனுபவங்களை நாவலின் போக்கில் அறிந்து கொள்ள முடிகிறது.கால சக்கரத்தில் பின்னோக்கி பயணித்து விக்ரம்பூர்,ராஜ்கோட் நகரங்களின் தெருக்களோடும் மனிதர்களோடும் நாம் பரிட்சயம் கொள்வது இயல்பாக சாத்தியப்படுகிறது.

ஒரு சிறந்த நாவல் என்பது துவங்கிய சில பக்கங்களில் இருந்தே வாசகனை தன் பால் ஈர்த்துக் கொள்வது.கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலின் துவக்கத்தில் கோட்டை வீட்டார் நமக்கு அறிமுகமாவது அதற்கோர் உதாரணம்.சோரட்..உனது பெருகும் வெள்ளம் நாவலும் அப்படியான துவக்கத்தை கொண்டே பிரதான கதாபாத்திரங்களான மகீபத்ராமையும்,அவரது பேரன் பான்ஜாவையும் அறிமுகம் செய்கிறது. ஆங்கில ஆட்சியில் பிரபுத்துவ அதிகாரத்தின் கீழ் பணிபுரியும்போலீஸ் ஜமாதார் மகீபத்ராமின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இடையே நிகழும் இக்கதையின் மாந்தர்கள் பெரும்பாலும் சுய ஒழுக்கமும்,போராட்ட குணமும்,தீவிர உழைப்பின் மீது நம்பிக்கையும் கொண்டவர்கள்.

பான்ஜாவின் பார்வையில் நகரும் பெரும்பாலான கதைப் பகுதி ஒரு சிறுவனின் நோக்கில் அன்றைய சமூகம் குறித்த மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது.உலகயுத்தத்தின் பொருட்டு இங்கிருந்து அனுப்பப்பட்ட சிப்பாய்கள் எவ்விதம் ஏமாற்றப்பட்டார்கள் என்பதன் விவரணைகள் சகிக்க முடியாதவை.1920களில் ஆங்கிலேயருக்கு எதிராக கிளம்பிய சிறு பொறி மக்கள் மனங்களில் எவ்வித மாற்றங்களை தோற்றுவித்தது என்பதை நாவல் கச்சிதமாக பதிவு செய்துள்ளது.காந்தியின் வருகை எழுப்பிய புயல் பரவலாக அங்கீகரிக்கப்பட துவங்கிய பொழுதுகள் அவை. ஆங்கிலேயருக்கு தம் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்த பிரபுக்களின் வருகை என அந்த சூழல் மாபெரும் போராட்டத்தை எதிர்நோக்கி இருந்துள்ளதை ஒருவித நெகிழ்ச்சியின்றி கடக்க இயலாது.

நாவலில் கவனிக்கப்பட வேண்டியவற்றுள் ஒன்று பெண்களின் அன்றைய நிலை குறித்த விஸ்தரிப்புகள். அழகு பதுமையாக,கணவனுக்கோ குடும்பத்திற்கோ கட்டுப்பட்டு வெளியுலகம் அறிந்திராத அபலைகள்,யுத்தத்திற்கு சென்ற கணவனை எதிர்பார்த்து காத்திருக்கும் பாவப்பட்டவர்கள்,ஆங்கிலேய அதிகாரிகளின் வன்புணர்வுக்கு ஆளானஅப்பாவிகள் என அச்சமூகம் பலதரப்பட்ட பெண்களை கொண்டுள்ளது. இதில் நாம் எதிர்பார்த்திராத சித்தரிப்பு ரூட்கட்டின் விதவையும் மாமி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவளுமான போராளியினுடையது.அவள் அதிகார அமைப்பை எதிர்த்து நிற்பவள்.பணக்காரர்களிடமிருந்து அபகரித்து ஏழைகளுக்கு உதவுபவள்.ஆண்களை நடுங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவள்.இறுதி வரை தன் சத்தியத்தில் உறுதியாய் இருந்து தனித்துவம் பெற்றவளாக திகழ்பவள். எந்தவொரு பெண்ணும் தன் ஆதர்சமாகக் கொள்ள தகுதி பெற்றவள்.

மகீபத்ராம்,பான்ஜா,தேவுபா,மாமி,தேவேந்திரநாத்,லக்ஷ்மன்பாய்,ரூட்கட் சேட் என இந்நாவலில் எதிர்ப்படும் கதாபாத்திரங்களோடு நாம் கொள்ளும் பிணைப்பு இயல்பாய் உண்டாவது.அது ஜவேர்சந்தின்எழுத்தாளுமையின் சிறப்பு.தன் வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களை இந்நாவலில் வியத்தகு புனைவாக்கியுள்ளார். எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பின் தெளிவும்,நேர்த்தியும் இந்நாவலின் மீதான பிரமிப்பை இரட்டிப்பாக உதவுபவை.முன் வைக்கப்படும் சௌராஷ்டிர சமூகத்தின் நீண்ட நெடிய வரலாற்றை புரிந்து கொண்டு, அதன் அரசியல் சூழலை,மக்களின் நிலைப்பாட்டை ஆராயத் தூண்டும் இந்நாவல் இந்திய இலக்கியத்தின் மதிப்புமிக்க பொக்கிஷம்.