Tuesday, June 3, 2014

KG ஜார்ஜ் மற்றும் பத்மராஜனின் கதையுலகம்

மிகச் சமீபத்தில் இவ்விரு மலையாள இயக்குனர்களின் படங்கள் அறிமுகம் ஆகின.இது வரை தவறவிட்டதற்கு வருந்தும்படியான படங்கள் இவை.

கே ஜி ஜார்ஜின் யவனிகா (1982) திரைப்படம் நேர்த்தியான த்ரில்லர்.இவரின் மற்றொரு படமான லேகேயுட மரணம் ஒரு ப்ளாஷ் பேக் (1983) தந்த அனுபவத்தில் இருந்து மீண்டு வருவதற்கும் இந்தப் படம்.

எளிய மனிதர்கள்,அவர்களை சுற்றிய உலகம்,தினசரி வாழ்வின் சிடுக்குகள் இவற்றை முடிந்த வரை விஸ்தாரமாய் பேசிச் செல்கின்றன இப்படங்கள். யவனிகா,நாடக கம்பெனி பின்னணியில் நிகழும் கதை.நாம் அறிந்திராத உலகம் இப்படித் தான் இருக்கும் என நம்பும்படியான காட்சியமைப்புகள். மேலும் திலகன்,பரத்கோபி, மம்மூட்டி, ஜகபதி,நெடுமுடி வேணு என மொத்த ராட்சச கூடமும் ஓரிடத்தில்.முரடன் - குடிகாரன் - யாருக்கும் கட்டுப்படாத ஐயப்பன் என்னும் கதாபாத்திரத்தில் பரத் கோபி.இவரின் அறிமுக காட்சி ஒன்று போதும் அசாத்திய நடிகன் எனக் கூற.கொலையை துப்பறியும் சாதாரணக் கதை அல்ல இது,ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் நுட்பமாய் விளக்கிச் செல்லும் திரைக்கதை முக்கியமானது.போலவே பின்னணி இசையும்.



ஜார்ஜின் மற்றொரு படமான லேகேயுட மரணம் ஒரு ப்ளாஷ்பேக் (1983),ஒரு நடிகையின் கதை.உண்மையில் இப்படம் ஒரு ஆவணம்.இதற்கு பின்னணியாய் அமைந்த கதை குறித்து பேச விருப்பமில்லை. அவசியமுமில்லை.ஏனெனில் இக்கதை முழுக்க முழுக்க ஒரு நடிகையின் தொடக்க நாட்கள் தொடங்கி விரிவாய் பேசிச் செல்கிறது.ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டது போல.நளினியின் நடிப்பு பெரிய ஆச்சர்யம்.இந்தளவு அவரை இதற்கு முன் ரசித்ததில்லை.கிராமத்து வெகுளிப் பெண்,நகர சாக்கடையில் மெல்ல மெல்ல அமிழ்ந்து போவதை கச்சிதமாய் தம் உடல்மொழியாலும், முகபாவனைகளாலும் வெளிக்கொணர்ந்துள்ளார்.நடிகைகள் குறித்து நமது நாளிதழ்கள் எழுதித் தீர்த்த கதைகளில் ஒன்றை மிக அருகில் சென்று பார்த்த உணர்வு.

குடிகாரர்கள்/ ஸ்த்ரீலோலர்களிடம் காதல் வேண்டி நிற்கும் பெண்கள். உறவுகளை விட்டு தப்பியோட முயலும் மனிதர்களென...பத்மராஜனின் கதையுலகம் தனித்துவமானதாய் இருக்கிறது.ரசித்து பார்த்த இவரின் படங்கள் இரண்டும் காதல் கதைகள்.காதல் என்றால் திஜாவின் கதைகளில் வரும் காதல்.அவர்கள் மட்டுமே உணர்ந்தறிந்த தெய்வீகம்.

பத்மராஜனின் தூவானதும்பிகள்(1987) லால்,பார்வதி,சுமலதா நடித்திருக்கும் முக்கோண காதல் கதை.கிளாரா என்னும் தேவதையாக சுமலதா. ஆரவாரமில்லாத அந்த அழகும்,நடிப்பும் அட்டகாசம்.இத்திரைப்படத்தில் மழையும் ஒரு கதாபாத்திரம்.கிளாராவின் வருகையை அறிவிக்கும் பெருமழைக் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை!மீண்டும் மீண்டும் கேட்டு மயங்கிடச் செய்யும் "ஒன்னாம் ராகம் பாடி.." என்ற பாடலில் முகத்தில் கை வைத்து ஆச்சர்யமாய் பார்வதியைப் பார்த்துச் சிரிக்கும் லால்....அசல் நடிகன்!மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லாத காதல் கணங்கள்..நினைவின் ரணங்கள் என்பதைச முடிந்த வரை கவிதை மொழியில் சொல்லும் கதை.



பத்மராஜனின் கதைகளை தேடி வாசிக்கவேண்டும் என்கிற ஆவலைத் தந்த படம் நமக்கு பார்க்காம் முந்திரி தோப்புகள்(1986).நினைவுகளை கிளறி விட்டு நம்மை மொத்தமாய் உள்ளிழுத்துக் கொள்ளும் படமிது.காதலர்களின் தேசம்..தேவதைகளின் தேசம்!சாலமன் என்னும் பெயர் கொண்ட நாயகர்கள் அன்பைத் தாங்கி வரும் தேவகுமாரர்கள் போல.ஆமெனில் பஹத்..இதில் லால்.வேதாகமத்தில் இருந்து மேற்கோள் காட்டப்படும் இவ்வரிகள். காதல்..காதல்..திகட்டச் செய்யும் காதல்.

Song Of Solomon 7:12 : "Let us rise early and go to the vineyards; Let us see whether the vine has budded And its blossoms have opened.And whether the pomegranates have bloomed. There I will give you my love"

இவ்வரிகளை மெய்ப்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் தான் கதை.கதையின் முடிவில் ஒரு திருப்பம் உண்டு,நிச்சயமாய் அது அதிர்ச்சி வைத்தியதிற்காய் வைக்கப்பட்டதில்லை.அவர்கள் காதலின் வலிமையை மீண்டுமொருமுறை அங்குள்ளவர்களுக்கு எடுத்துச்சொல்ல..

இரண்டு படங்களிலும் மிகப் பிடித்த பொதுவான விஷயங்கள் இரண்டு.ஒன்று காதல் மற்றொன்று லாலின் அசத்தல் நடிப்பு..One Devil Of An Actor!

--மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் யாவும்Youtube'ல் இருக்கின்றன--