Monday, September 27, 2010

அகிராவின் 'DREAMS'

கனவுகளில் மட்டுமே எல்லாமும் சாத்தியம்.சமீபத்தில் ஒரு கனவு,கலைந்த மேகங்களுக்குள் ராட்சச பரமபத கட்டங்கள்,அதன் உள்ளிருந்து மெதுவாய் வெளி வரும் நிலா...பொதுவாய் கனவுகள் வருவது அரிது,அப்படியே வந்தாலும் சட்டென நினைவை விட்டு உதிர்ந்து விடும்.இது அப்படி அல்ல நீண்ட நேரம் கனவை குறித்து யோசித்து கொண்டிருந்தேன்.கனவுகள் தோற்றுவிற்கும் புதிர்களை விடுவிக்க எல்லா சமயமும் முடிவதில்லை.

இத்திரைப்படத்தை அகிரா தனது கனவுகளின் தொகுப்பாய் குறிப்பிடுகிறார்.எட்டு கனவுகளுக்கு(கதைகளுக்கு) வெகு நேர்த்தியாக வண்ணம் தீட்டி உள்ளார் அதே சமயம் அதிக பொறுப்புடனும்.உலகம் முழுதும் அங்கீகரிக்கபட்ட ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய பொறுப்பை மிக சரியாய் இத்திரைப்படத்தில் அகிரா வெளிகாட்டி உள்ளார் என தோன்றியது.அழிந்து வரும் இயற்கை வளங்களை குறித்தும்,போரினால் ஏற்படக்கூடும் விபரீதங்கள் குறித்தும்,அணுசக்தியின் அபாயம் குறித்தும் பேசும் கதைகள் இவை.

வண்ண சிதறல்களாய் பெரும்பாலான காட்சிகள்.பூக்களும்,மரங்களும்,ஓவியங்களும் கூட நம்முடன் உரையாடுவது போன்ற தோற்றம். பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அர்த்தம் கூட்டுகின்றது.



"Sunshine Through The Rain ",வெயிலோடு மழை பெய்தால் நரிக்கு கல்யாணம் என்னும் நாடோடிக்கதை கதை இங்கும் உள்ளதே.அப்படி ஒரு மழை நாளோடு தொடங்குகின்றது இக்கதை..மழையை வேடிக்கை பார்க்கும் சிறுவனை அவனது தாய், வெளியே சென்று நரியின் கண்ணில் அகப்பட்டால் அது கோவம் கொண்டு கொன்று விடும் என எச்சரித்து செல்கின்றாள்.அவள் பேச்சை கேளாமல் காட்டுக்குள் சென்று ஒளிந்திருந்து நரியின் திருமண கொண்டாட்டத்தை பார்க்கின்றான் சிறுவன்.பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் நரிகள் திருமண கோலாகலம் படமாக்கபட்டுள்ள விதம் அருமை.அவன் எதிர்பாரா சமயம் அவை அவனை கண்டு கொள்ள வீட்டிற்கு ஓடி வரும் சிறுவனிடம்.நரிகள் கோபம் கொண்டு அவனை தேடி வந்ததாகவும்,அவனை அவனே கொன்று கொள்ள கத்தியை கொடுத்து சென்றதாகவும் சொல்லி..மேலும் அவற்றின் கோபத்தை தணிக்க நேரில் சென்று மன்னிப்பு கோரி வருமாறு அவனை திருப்பி அனுப்புகிறாள் தாய்.....நரிகள் இருப்பிடம் தேடி ,அடர்ந்த மலர் தோட்டத்தில் வானவில்லிற்கு கீழ் அச்சிறுவன் நிற்பதோடு கனவு முடிகின்றது.


"The Peach Orchad ",பீச் மரங்கள் பூத்து குலுங்கும் பருவத்தில் கொண்டாடப்படும் பொம்மை திருவிழா நாளில்,சிறுவன் ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியேறி ஓடும் அறிமுகமற்ற சிறுமியை பின்தொடர்ந்து செல்கின்றான்..அவனுக்காக அங்கு காத்திருப்பவர்கள் பீச் மரணத்தின் ஆத்மாக்கள், அவன் வீட்டு பொம்மைகளின் சாயலில்..அப்பகுதியின் பீச் மரங்கள் அழிந்ததிற்கு அவன் குடும்பமே பிரதான காரணம் எனக் கூறி அவனை தண்டிக்க போவதாய் அவை சொல்ல..சிறுவன் அழுது கொண்டே பீச் மரங்களின் மீதான தனது பிரியத்தை கூறுகின்றான்.அதில் நெகிழ்ந்து போய் அந்த ஆத்மாக்கள் அற்புத நடனத்தோடு பூத்து குலுங்கும் பீச் மரங்களை கடைசியாய் பார்க்க வாய்ப்பளிக்கின்றன...அழிந்து வரும் இயற்கை வளங்கள் குறித்து மரங்களின் மூலமே உணர்துவதான இக்கனவு நேர்த்தியான வர்ணங்களினால் அற்புதமாக காட்சியமைக்கபட்டுள்ளது.இக்கனவிற்கான வண்ணம் பீச்.

"The Blizzard ",இக்கனவிற்கான வண்ணம் வெள்ளை.அடர் பணியில் சிக்கி தவிக்கும் நான்கு மலையேற்ற வீரர்கள் பணி புயலில் சிக்கி இருப்பிடம் கண்டு கொள்ள முடியாது கொஞ்ச கொஞ்சமாய் தங்களின் நம்பிக்கையை இழந்து,மரணத்திற்கு தயாராகும் பொழுதில் அக்குழுவின் தலைவன் எங்கிருந்தோ வரும் தேவதையின் வதையில் சிக்கி பின்பு மயக்கத்தில் இருந்து தெளிவடைந்து பின் தங்களின் இருப்பிடம் மிக அருகில் இருப்பதை கண்டு கொள்வதான இக்கனவு கொஞ்சம் குழப்பம் ஏற்படுத்தியது."The Tunnel ", போரில் இறந்த ராணுவ வீரர்கள் உயிர்பெற்று வந்தால்..அவர்களின் கேள்விகளுக்கு விடை தேட முயலும் கனவு..தங்களின் குடும்பம் குறித்த நிறைத்த கவலையும்,மேலும் தங்களின் மரணம் போலியானது என்றும் நம்பி கொண்டிருக்கும் தனது படைவீரர்களின் ஆத்மாக்களோடு உரையாடும் படைத்தளபதி..அவற்றை சமாதானம் செய்து,போரின் மரணம் ஏற்பட்டதிற்கு மன்னிப்பும் கேட்டு விடைபெறுகின்றான்.இக்கனவிற்கான வண்ணம் நீலம்.



"The Crow",ஓவியங்கள் காட்சியாய் மாறுவதும்,காட்சிகள் ஓவியமாய் உருப்பெறுவதும்...நாயகன் ஓவியங்களுக்குள்ளாகவே நடமாடுவதும் என இக்கனவு தோற்றுவித்த மாய வலையில் இருந்து வெளிவர நேரம் பிடித்தது.Visual Treat என்பதற்கு முழுமையான அர்த்தத்தை இதில் உணரலாம்.வண்ணங்கள் கொண்டு கண்ணிறை காட்சிகளை சாத்தியபடுத்தி இருக்கின்றார் இயக்குனர்.வளர்ந்து வரும் ஓவியன் தனது அபிமான ஓவியரை ஓவியத்திலே தேடத் தொடங்கும் பயணம் வண்ணங்களின் உதவியுடன் அதி சுவாரசியமாகின்றது."Mount Fuji In Red" ,மிகப்பெரும் அணுசக்தி கூடம் ஒன்று வெடித்து சிதறினால் ஏற்படும் விளைவுகள் எத்தனை கொடூரமானது என்பதை ஓங்கிய குரலில் முன்வைக்கும் கனவிது.மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அவனுக்கே எதிரியாய் திரும்பும் அபாயம் குறித்த எச்சரிக்கையை முன்வைக்கும் இக்கனவிற்கான வண்ணம் சிகப்பு.

"The Weeping Demon ",ஆள்அரவம் அற்ற தரித்திர பூமி ஒன்றில் உலவும் நாயகன்,தலையில் ஒற்றை கொம்புடைய விசித்திர மனிதனை சந்திக்கின்றான்.அணுசக்தி பயன்பாட்டால் மரங்களும்,பூக்களும் முற்றிலுமாய் அழிந்து தங்களின் இனமும் பசியால் ஓலமிட்டு அலைவதை அழுகையுடன் பகிர்ந்து கொள்ளும் அம்மனிதனின் அழுகுரல் மோசமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் மனித குலத்திற்கான அழுத்தமான எச்சரிக்கை.இக்கனவிற்கான வண்ணம் கருப்பு.

"Village Of The Water Mills ",அழிந்து வரும் வளங்கள் குறித்த ஏக்கங்களையும்,அறிவியலின் பிடியில் சிக்கி அல்லலுரும் சமூகத்தின் மீதான கோபத்தையும் தாங்கி வந்த பிற கனவுகளை போலல்லாமல்,முற்றிலுமாய் இயற்கையை சார்ந்து இருக்கும் மாதிரி கிராமம் ஒன்றை பற்றியது இக்கனவு. பச்சை தாவரங்களும்..தண்ணீர் சலசலக்கும் ஓடையும்..நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்களும்,சின்ன சின்ன நம்பிக்கைகளும் என அந்த கிராமம் குறித்த செய்திகள் யாவும் ஒரு வயதானவரின் வாக்குமூலமாக வருகின்றது.(வயோதிக)மரணத்தை கூட அம்மக்கள் துக்கம் இன்றி நல்ல முடிவென்று எண்ணி கொண்டாடும் மனநிலை கொண்டிருப்பதாக காட்டி இருப்பது நேர்த்தி.பிற கனவுகளில் முன்னிறுத்தப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் இக்கனவில் விடை உள்ளது.

Monday, September 6, 2010

அகிராவின் "RASHOMON"

"Japan does not understand very well that one of its proudest cultural achievements is in film" - Akira Kurosawa


எந்த திரைப்படத்தையும் இத்தனை நுணுக்கமாய் இதற்கு முன்னர் நான் அணுகியதில்லை.பார்வையாளனுக்கு நேரடியாவும்,மறைமுகமாகவும் தன் படங்களின்
மூலம் முழுமையான சினிமாவை குறித்த அத்தனை நேர்த்திகளையும் அகிரோ கற்பிப்பதாகவே தோன்றியது.ஒரு கொலையை பல்வேறு கோணங்களில் அணுகி இருக்கும் இத்திரைப்படம் முடிவை பார்வையாளன் வசம் விட்டுவிடுகின்றது.சூழ்நிலையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சுயநலமாய் மாறிப்போக தயங்காதது மனித மனங்கள் என உணர்த்துவதான கதை.இசையும்,ஒளிப்பதிவும்,காமிரா கோணங்களும் காட்சிகளுக்கு மேலும் அர்த்தம் கூட்டுகின்றன.

பெருமழை நேரத்தில்,சிதைந்த கட்டிடம் ஒன்றில் ஒரு துறவியும் விறகுவெட்டியும் தாம் நீதிமன்றத்திற்கு சாட்சியாய் போன ஒரு கொலை குறித்து அதிக மன அழுத்தத்தோடு புலம்பி கொண்டிருக்கும் காட்சியோடு படம் தொடங்குகின்றது.அவ்விடம் வரும் மூன்றாவது மனிதனிடம் தாங்கள் கூறிய சாட்சியத்தையும்,கேட்ட சாட்சியங்களையும் கூறுகின்றனர்.
மழையினால் காட்சிகளுக்கு இத்தனை அழுத்தம் கூட்ட முடியும் என முதல் முறை உணர செய்த படம் இது.

காட்டு வழி பயணம் மேற்கொள்ளும் சாமுராயை கொலை செய்து அவன் மனைவியை கற்பழித்து விட்டதாக பாண்டிட்(வழிப்பறி கொள்ளையன்) மீது நீதி மன்றத்தில் புகார் சொல்லபடுகின்றது.கொலைக்கான சாட்சியங்களான பாண்டிட்,சாமுராயின் மனைவி,சாமுராய்(ஆவி ஊடகம் மூலம் பெண்ணொருத்தியின் உடலில் புகுந்து சாட்சியம் சொல்லுகின்றான்) மற்றும் விறகுவெட்டி ஆகியோர் நீதி மன்றத்தில் தங்களின் சாட்சியத்தை சொல்லுகின்றனர்...ஒவ்வொருவரும் ஒரு விதமாய்.எதிலும் நம்பத்தன்மை இல்லை.இதில் பாண்டிட் அவள் மனமுவந்து தன்னோடு வர சம்மதித்து கணவனை கொலை செய்ய தூண்டியதாய் கூறுகின்றான்.அப்பெண்ணோ கணவனின் நிலையை பொறுக்க முடியாமல்,குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி பாண்டிட்டுடன் அவனை வாள் சண்டை இட சொன்னதாய் கூறுகிறாள்.சாமுராயின் ஆவி மனைவி மீது பலி சுமத்துகின்றது.கொலையை நேரில் கண்டதாக சொல்லும் விறகுவெட்டி நீதி மன்றத்தில் அதை முற்றிலுமாய் மறைக்கின்றான்.



சாட்சியங்களும் யாவும் பார்வையாளனிடம் நேரடியாக பேசுகின்றன. விறகுவெட்டியும்,துறவியும் பிற சாட்சியங்களின் பொழுது பார்வையாளர்களாய் வீற்றிருக்கின்றனர்.எல்லா காட்சிகளும் திறந்த வானத்தின் கீழ் நடப்பதாகவே உள்ளன.நீதிமன்ற மற்றும் சாமுராயின் கொலை சம்பவ கடந்த கால காட்சிகள் வெயிலிலும்,இது குறித்து விறகுவெட்டியும்,துறவியும் வேதனையோடு உரையாடும் நிகழ கால காட்சிகள் மழையிலும் நிகழ்கின்றன.படத்தின் ஓட்டத்தில் இயற்கையும் பெரும்பங்கு வகிக்கின்றது.வன்மமும்,சுயநலமும்,பொய்யும்,பேராசையும் நிறைந்ததான கடந்த கால காட்சிகள் வெயிலின் உக்கிரம் கொண்டு உணர்த்தபடுகின்றன.அதற்கு முற்றிலும் எதிர்மறையாய் நிகழ கால காட்சிகள்,அன்பு நிறைந்த வாழ்க்கை குறித்து அதிக அக்கறை கொள்ளும் துறவி மற்றும் விறகு வெட்டியின் மனங்களை மழையினால் உணர்ந்துகின்றன.

சாமுராயின் கொலை குறித்தான மர்மம் கடைசி வரைக்கும் நீடிக்கின்றது.ஒவ்வொரு சாட்சியத்தின் கதையிலும் மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க முயன்று பார்வையாளன் தோற்கின்றான்,அதுவே அகிராவின் வெற்றி என தோன்றுகின்றது.அன்பு நிலைத்திருக்க சுயநலமும்,நேர்மையற்றதனமும் முற்றிலும் நீங்க வேண்டும் என்பதை கலை நேர்த்தியோடு சொல்லும் இத்திரைப்படம் தந்த பிரம்மிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. முழுமையானதொரு திரைப்படத்தை பார்த்த திருப்தி.