Monday, September 14, 2009

புனைவுகளே வரலாறாய் ஆனது அல்லது வரலாறு புனைவுகளால் ஆனது

பதிவுலகம் குறித்த இந்த தொடர் பதிவிற்கு அழைத்த அய்யனாருக்கு நன்றி..

இலக்கியம்...இங்கே தொடர்ந்து இயங்கி கொண்டிருக்க எனக்கான ஒரே காரணம்.பள்ளி,கல்லூரி காலங்களில் வாசித்ததை பகிர்ந்து கொள்ள ஆள் இருக்காது..சினிமா காரியங்கள் தவிர்த்து சக தோழர்கள் ஆர்வமாய் பேசிக்கொள்ளும் விஷயங்கள் மிகக்குறைவு.வாசிப்பவைகளை பகிர்ந்து கொண்டது முதலில் ஆர்குட் தளத்தில்..அங்கே உலக தமிழ் மக்கள் இயக்கம் என்னும் குழுமத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும்.இணையத்தில் தமிழ் விவாதம் நடைபெறுவதை கண்ட பொழுது கொண்ட மகிழ்ச்சியை சொல்லிமீளாது.

அக்குழும நண்பர்களே "தமிழ் இலக்கிய அரங்கம்" என ஒன்றை துவக்கி அங்கே இலக்கியம்,உலக சினிமா குறித்த விவாதங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.ஆர்குட் நண்பர் ஒருவர் தந்த அறிமுகத்திற்கு பின் பதிவுலகம் குறித்து எதுவும் அறியாமல் விளையாட்டாய் எழுத துவங்கினேன்.உலக வாசகர்களை இது சென்றடையும் என்கின்றன விவரங்கள் எல்லாம் தெரியாது ஏனோதானோவென இருக்கும் எனது ஆரம்ப கால கட்டுரைகளை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாய் உள்ளது.எனினும் அக்கட்டுரைகளை நீக்கிவிட மனமில்லை.

வாசித்த புத்தகங்களை குறித்து மட்டுமே எழுத வேண்டும் என்கிற நோக்கம் ஏதுமில்லை.என் பொழுதுகள் அதிகமாய் வாசிப்பிலேயே செல்வதால் அதை தவிர்த்து வேறேதும் எழுத தோன்றவுமில்லை.எழுத்தாளனுக்கும்,வாசகனுக்குமாய் உள்ள தொடர்பு கடிதத்தோடு முடிந்து விடுவதாய் இருந்த காலங்கள் மாறி,இணையத்தின் அறிமுகம் மூலம்..தொடர்ந்து விவாதிக்கவும்,இலக்கிய கூட்டங்களில் சந்தித்து உரையாடவும் பதிவுலகம் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.சுஜாதா,எஸ்.ரா,சாரு என விரும்பி வாசித்த எழுத்தாளர்களை எளிதில் சென்றடைய உதவியது இப்பதிவுலகம் தான்.




இங்கு ஆண்,பெண் பேதங்கள் ஏதுமில்லை,சாதி சண்டைகள் இல்லை,தொழில் முறை வேறுபாடுகள் இல்லை,தமிழ் என்னும் ஒற்றை வார்த்தையால் நண்பர்களோடு இணைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.பதிவுலகில் எழுத தொடங்கி ஓராண்டுக்கு மேலாகின்றது...கசப்பான அனுபவம் ஏதுமின்றி தெளிந்த நீரோடையாய் போய்கொண்டிருக்கின்றது.நல்லவேளை பதிவெழுத வந்தேன்.ஏதோ ஒரு நிறைவு..இல்லாவிட்டால் சென்னை வாழ்க்கை அலுவலகம் - விடுதி - வாசிப்பு என இயந்திரத்தனமாய் தான் இருந்திருக்கும்.

பதிவுலகம் தந்த நண்பர்களை குறித்து அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.அய்யனார்,நர்சிம்,ஜக்ஸ் என சந்தித்து பேசிய நண்பர்கள் தவிர்த்து,சிவராமன்,அஜய்,ராம்ஜி,கிருஷ்ணன்,கார்த்திக்,வடகரை வேலன்,செய்யது என முகம் அறியா நண்பர்கள் பலர்..ஆரோக்கியமான சூழலில் உரையாடல்கள்,விவாதங்கள், புதிய காரியங்கள் குறித்த அறிமுகங்கள் என யாவற்றிலும் நேரடி பங்களிப்பு செய்ய முடிவதால் வெகுஜன பத்திரிக்கைகளில் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது என்பது உண்மை.

பதிவுலகம் அதிசய குகை போல...எத்தைனையோ வேர்கள் விட்டு படர்ந்திருக்கும் அதனுள் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவருது அவ்வளவு சுலபம் இல்லை..வெளி வரவேண்டிய ஆவசியமும் இல்லை..இனிதாய் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க காரணங்கள் பல இங்குண்டு....கனவாய் இருந்த பலவும் சாத்தியப்பட்டு கொண்டிருப்பது இங்கே தான்.

Saturday, September 5, 2009

கண்மணி குணசேகரனின் "ஆதண்டார் கோவில் குதிரை"

"இந்த மண்ணை,மக்களை,மொழியை,முந்திரிகளை விட்டு விட்டு எங்கேயோ ஒரு நகர காட்டுக்குள் அடைபட்டு,உயிரற்றவர்களை எழுத நேர்த்திடாதவாறு ஓர் எதிர்காலம் எனக்கு வாய்க்குமானால்,அது போதும் எனக்கு."

-- கண்மணி குணசேகரன்

முந்திரி காடுகளும் அதன் புழுதியில் தோய்ந்த மனிதர்களுமே கண்மணி குணசேகரனின் கதைகளில் பிரதானம்.சமீபத்தில் வாசித்த மிக சிறந்த புத்தகம் இது.மண்ணோடு கலந்த கதைகள் நெருக்கமானதொரு உணர்வை தரவல்லவை.ஒவ்வொரு கதையிலும் ஒரு கதாபாத்திரம் நம் மனதை தொட்டு செல்வதாய் உள்ளது..பெண்கள்,காதல்,தொழில் நிர்பந்தங்கள்,தலைமுறை இடைவெளி,கடவுள் நம்பிக்கை என பொதுவான விஷயங்களை முற்றிலும் புதிதாய் சொல்லி செல்கின்றன இக்கதைகள்.முந்திரி காடுகள் குறித்து அறிமுகம் எனக்கு இருந்ததில்லை,சேலம் - தருமபுரி இடையே உள்ள கிராமங்கள் பல இந்த முந்திரி காடுகளை கொண்டே பிழைக்கின்றன என அப்பா சொல்லி அறிந்தேன்.

"பால் நரம்பு",குழந்தை பேறில்லாத சோலைச்சி பைத்தியம் ஆனா கதையை கனமான சோகத்தோடு விவரிக்கும் கதை.மனநிலை பாதிக்க பெற்றவர்கள் காணும் பொழுது மனம் இனம் புரியாத ஒரு கனத்தை கொண்டுவிடும்..கோபியின் 'உள்ளே இருந்து சில குரல்கள்" படித்த பின் இவர்களின் மீதான பார்வை முற்றிலும் மாறி போனது."நினைப்பும் பிழைப்பும்",அடுத்த வீட்டு நிகழ்வுகளில் மூக்கை நுழைக்கும் வழக்கம் அநேகருக்கு அதிலும் முக்கியமாய் பெண்களுக்கு.



"ராசபாட்டை",கூத்து கலைஞர்கள் குறித்த பதிவுகள் மிக குறைவு.இந்த சிறுகதை எனக்கு எஸ்.ராவின் "கர்ண மோட்சம்" குறும்படத்தை நினைவூட்டியது.கூத்து நடத்திட கிராமம் ஒன்றிற்கு செல்லும் கூத்து கோஷ்டியினரின் சோக அனுபவங்களே இக்கதை."முறிவு",எலும்பு முறிவிற்கு நாட்டு வைத்தியம் செய்யும் முதியவர்,தலைமுறை இடைவெளியின் காரணமாய் உழலுவதை சொல்லும் கதை.

கூத்து,நாட்டு வைத்தியம் வரிசையில் இந்த தலைமுறையினர் அறியாத மற்றொரு தொழில் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவது.ஒடுக்கு எடுக்க,ஈயம் பூச ஊர் ஊராய் திரியும் ஒரு தொழிலாளி நிரந்தரமாய் தங்கிட வீடு இன்றி தவிப்பதை வெகு இயல்பாய் சொல்லும் கதை 'தாய் வீடுகள்".சொந்த வீடு குறித்த ஏக்கத்தை அழகாய் பதிவு செய்கின்றது இக்கதை.மருதாணி வாசம் விரும்பாதவர்கள் யாரும் இல்லை.மருதாணி வாசம் முகர்ந்திட துடிக்கும் பண்ணை கூலி சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை சொல்லுவது "வாசம்".

கண்மணி குணசேகரனின் கதைகளில் அழிந்து வரும் கலைகள்,தொழில்கள் குறித்த கவலை அதிகம் தெரிகின்றது.அழிந்து வருவது கலைகள் மட்டும் அல்ல அந்த கலைஞர்களின் வாழ்கையும் தான்.தலைமுறை தலைமுறையாய் கூத்து கட்டியவர்கள் இன்று சினிமா பாட்டுக்கு நடனம் ஆடும் நிலைக்கு ஆளானது சமூகத்தின் அக்கறையின்மையாலேயே..எதையும் ஒதுக்கி விடமுடியாதபடி இத்தொகுப்பில் எல்லா சிறுகதைகளும் அர்த்தம் மிகுந்து ஏதோ ஒரு செய்தியை சொல்லுவதாகவே உள்ளது .

வெளியீடு - தமிழினி
விலை - 50 ரூபாய்