Thursday, April 22, 2010

தென்னக பண்பாட்டு மையம் - இயல் இசை நாடக மன்றம் :கவிதைப் பட்டறை

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.

மற்றும்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

இணைந்து நடத்தும்

POETRY WORKSHOP

கவிதைப் பட்டறை



நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com

இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.


மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

------------------------------------------------------------------------------------

அன்புடையீர்,

வணக்கம். தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை (Poetry Workshop) நடத்தவிருக்கிறார்கள். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் அமையும் இந்நிகழ்வைப் பற்றிய அறிவிப்பினை இத்துடன் இணைத்துள்ளோம். உங்களின் வலைப்பக்கத்தில் இதனை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க நன்றி

தமிழ்ச்சங்கமம் குழுவினர்

Saturday, April 17, 2010

மஜித் மஜிதியின் "பாரான்"...........மண் சேரா மழைத்துளி!!

"பாரான்".......மென்மையான என்பதிற்கு மேலாக ஏதேனும் வார்த்தை இருந்தால் அத்தகைய காதல் கதை.கட்டி பிடித்தும்,கை கோர்த்து திரிந்தும்,கண்களால் ஜாடை பேசி திரியாத மென் காதல்!!கட்டிட கட்டுமான பணி நடைபெறும் இடத்தில பணி செய்யும் லத்தீப்பின் உற்சாகமான காலை பொழுதோடு விரிகின்றன காட்சிகள்.இரானில் குடியேறியுள்ள ஆப்கன் அகதிகள் முகாமில் இருந்து வெகு தூரம் பயணித்து குறைந்த கூலிக்கு அக்கட்டிடத்தில் பணி செய்கின்றனர்.அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அரசு அதிகாரிகளுக்கு பயந்து வேலை செய்யும் சூழ்நிலை.கட்டிட பணி நடக்கும் இடம் குறித்தான காட்சிகள் வெகு நேர்த்தி.




பணியிடத்தில் சாப்பாடு மற்றும் டீ தயார் செய்து கொண்டு நாட்களை மகிழ்ச்சியாய் கழிக்கும் துடுக்கான நாயகன் கதாபாத்திரம் படம் முழுக்க உற்சாகம் குறைவின்றி சித்தரிக்கபட்டுள்ளது.அங்குள்ளவர்களிடம் வம்பிழுத்து கொண்டு,தன சம்பாத்திய பணத்தை வெகு கவனமாய் சேர்ந்து வைத்து தினமும் எண்ணி பார்த்து கொள்ளும் லத்தீப் கட்டிட மேலாளர் மேமாருடன் கொள்ளும் உரையாடல்கள் அவனை குறித்து சுலபமாய் அறிந்து கொள்ள போதுமானவை.கட்டிட பணியின் பொழுது கீழே விழுந்து காயமுறும் நஜாப் என்னும் தொழிலாளி தனக்கு பதில் வேலை செய்ய தன மகன் ரஹ்மத்தை அனுப்புகின்றார். பலகீனமான ரஹ்மத்தால் கடுமையான கட்டிட பணிகளை செய்ய முடியாத காரணத்தினால் லத்தீப்பின் பணி அவனுக்கு தரப்படுகின்றது.தனது சுதந்திரம் மொத்தமாய் பறிபோனதினால் ரஹ்மத்தை வெறுக்க தொடங்கும் லத்தீப்பின் மனநிலை மாற்றம் காண்பது ரஹ்மத் ஒரு பெண் என்று அறியும் பொழுது.

அவனையும் அறியாது அப்பெண்ணின் மீது ஏற்படும் பிரிய கனங்கள் கவிதைகள்!!திரை சீலையில் அவளின் கூந்தல் விரித்த உருவத்தை பார்த்து பெண்ணென கண்டு கொள்ளும் காட்சி...சக தொழிலாளர்களிடம் இருந்து அவளை பாதுகாக்க எண்ணி தடுமாறும் பொழுதுகள் ஆகட்டும்...அவளின் பொருட்டு தலை சீவி,பளிச்சென ஆடை உடுத்தி உற்சாகமாய் வலம் வருவதாகட்டும்..அடையாள அட்டை குறித்து அதிகாரிகள் சோதனையிட வரும் சமயம் அவளை தப்பிக்க வைக்க பெரும் முயற்சி எடுத்து வெல்வதாகட்டும்...முழுக்க முழுக்க நாயகனின் ஆக்கிரமிப்பு தான்!!



அதிகாரிகளுக்கு பயந்து தப்பி செல்லும் நாயகியின் பிரிவை அவன் கடக்கும் நாட்கள் இன்னும் அழுத்தமாய் காதலை பதிவு செய்கின்றன.இதுநாள் வரையில் அவன் வெறுக்கும் புறாக்கள் காதலின்/காதலியின் நிமித்தம் அவனுக்கு நெருக்கமாய் ஆகின்றன.பெயர் தெரியா காதலியை தேடி லத்தீப் தொடங்கும் பயணம் இன்னும் சுவாரஸ்யமானது.தேடலின் நிமித்தம் காதல் என்னும் பொழுது சுவாரஸ்யத்தை மீறிய அழகொன்று சேர்ந்து கொள்கின்றது. எங்கெங்கோ தேடியலைந்து அவளின் இருப்பிடத்தை அடையும் அவன் ஏழ்மையின் பொருட்டு அவளின் கஷ்ட ஜீவனை பார்த்து வெறுமையோடு திரும்புகின்றான்..இது நாள் வரையில் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் மேமாரிடம் பொய் சொல்லி பெற்று கொண்டு நண்பர் ஒருவரின் மூலம் அவளின் தந்தையிடம் கொடுக்க சொல்கின்றான்.பரிதாபமாக அந்த முதியவரோ அப்பணத்தை கொண்டு ஆப்கான் சென்றுவிடுகிறார்.

அந்த அதிர்வை வெகு இயல்பாய் ஏற்று கொள்ளும் லத்தீப்..அவளுக்கு உதவும் பொருட்டு தனது அடையாள அட்டையை அடகு வைத்து பணம் மீட்டுகிறான்.இம்முறை பணத்தை தான் நேரில் சென்று கொடுக்கின்றான்.அச்சமயமே அவளின் பெயர் பாரான் என அறிகிறான்.மேலும் ஆப்கான் செல்ல அவளின் தந்தை செய்து வரும் ஏற்பாடுகள் குறித்த செய்தியை தாங்கி திரும்புகின்றான்.இறுதி காட்சியில் அவர்கள் பயணத்திற்கு சாமன்களை வண்டியில் வைக்க உதவும் பொழுது சிதறிய பொருட்களை இருவரும் எடுக்கும் இறுக்கமான சூழ்நிலையில் காதல் வெளிப்படுகின்றது ஒற்றை பார்வையில்.தனக்கான ஒரே அடையாளத்தையும்,சம்பாதித்த மொத்த பணத்தையும் காதலுக்காய் இழந்து..தனித்து நிற்கும் லதீப்பிற்கு துணையாய் மழை வருவதோடு முடிகின்றது..பாரான் என்பதிற்கு பொருள் மழை என்னும் வகையில் இக்காட்சி உணர்ந்துவது ஏராளம்.


பார்வையாளனை எந்தவித அதிர்விற்கும் உட்படுத்தாமல், மிக மென்மையான காதலை ஆப்கன் அகதிகளின் அவல வாழ்க்கையோடு பகிர்கின்றது இத்திரைப்படம்.மெல்லிய புன்னகையோடு கடந்த காட்சிகள் பல..மழை கிளறிவிடும் மண்வாசனைக்கு ஒப்பான அனுபவம்!!

Monday, April 5, 2010

ராஜேந்திரசோழன் கதைகள்

இதுவரை வாசித்திடாமல் போனதற்கு வருத்தம் அடைய செய்த தொகுப்பிது.மனித மனங்களின் சலனங்களை எதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை கொண்டு விவரிக்கின்றன இக்கதைகள்.எல்லா கதைகளிலும் ஒரு பேரமைதி..அது கதைமாந்தர்களின் மன குமுறல்களின் சத்தத்திற்கு மீறி வாசகனை கட்டி போடுகின்றது.அமுங்கிய குரலில் இத்தனை காத்திரமான கதைகளை மிக நேர்த்தியாய் புனைந்துள்ளார் ராஜேந்திரசோழன்.இங்கு கதைமாந்தர்களே பிரதானம்.....வர்ணனைகள்,பூச்சு வேலைகள் யாதும் அற்ற வாழ்வின் நுட்பமான தருணங்களின் சாட்சியமாய் இக்கதைகள்.

இல்லறம் தாண்டிய உறவுகள் தேடும் ஆண் பெண் இருவருக்குமான புத்தியின் எதார்த்த விவரிப்பாய் "கோணல் வடிவங்கள்" மற்றும் "புற்றிலுறையும் பாம்புகள்" கதைகள்."புற்றிலுறையும் பாம்புகள்",இக்கதையில் எதிர் வீட்டு இளைஞன் குறித்து பகல் முழுதும் சடசடத்து திரியும் மனைவியின் அலட்டல்களுக்கு...பொறுமை காத்து விட்டு கடைசியாய் அவன் "சும்மா பொண பொணன்னிக்னு........இப்பதான் ஒரேடியா காட்டிக்கறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்" என கூறும் ஒற்றை வரியில் எத்தனை அர்த்தம்!!கோணல் வடிவங்கள் சிறுகதை வெளிவந்த சமயம் எதிர்கொண்ட இலக்கிய விமர்சனங்களை தனது பின்னுரையில் விரிவாய் எழுதி உள்ளார் ராஜேந்திரசோழன்.ஆண் பெண் உறவின் பொருட்டு தொடரும் பகடை ஆட்டங்கள் தான் எத்தனை வகை என எண்ணும் படியான கதைகள் இத்தொகுப்பில் அதிகம்.



வண்ணதாசன் சிறுகதை ஒன்று,காதலிக்கு கொலுசு வாங்க சென்ற கடையில் தனது பரிசு கோப்பையை விற்று பணம் பெற கெஞ்சி கொண்டிருக்கும் சிறுவனை கண்ட நாயகன் கொள்ளும் மனநிலை..சங்கடம்,மாறு படும் தேவைகளின் பொருட்டு தனது காரியம் அற்பம் என உணரும் தருணம்.இங்கும் அதே போன்றதொரு மனநிலைக்கு தள்ளபடும் நாயகன்,"ரோமியோ ஜூலியட்"திரைப்படம் காண கால் கடுக்க திரைஅரங்கின் முன் பகல் பொழுதொன்றில் நின்றிருக்கும் நாயகனை,சாலையில் வித்தை காட்டும் சிறுமிகள் இருவர்,அம்மை தழும்பு முதியவர் ஆகிய மூவரின் உணர்ச்சியற்ற யாசகம் "ரோமியோவாது ஜூலியட்டாவது..." என அவ்விடம் இருந்து வெளியேற்றுகின்றது.

தொழில் செய்யும் இடத்தில தனதிடத்தை வேறொருவன் ஆக்கிரமித்து கொள்ளும் சமயம் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏமாற்றமும்,பொறாமையுமாய் "எதிரி" சிறுகதை வெகு இயல்பாய் சொல்லி செல்கின்றது.நினைவுகளின் நீட்சியாய் கனவுகள் தொடர்வதை காரிருள் தரும் இறுக்கமான மனநிலையை போல விரியும் கதை "இச்சை". "எதிர்பார்ப்புகள்" மற்றும் "சிதைவுகள்" இரண்டுமே ஒரே வகையான கதை களங்கள்.அடலசன்ட் பருவத்தில் ஏற்படும் ஈர்ப்புகள்..இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் இடையில் சிக்கி திணறும் வாலிப மனங்கள் குறித்தான இக்கதைகள் மிக மிக நுட்பமாய் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை தாமே வகை பிரித்துள்ளார் ராஜேந்திரசோழன்.இவ்வளவு வெளிப்படையாக தமது படைப்புகள் குறித்த விமர்சனங்களை ஒரு எழுத்தாளர் முன்வைப்பது ஆச்சர்யமாய் உள்ளது.இலக்கியம் குறித்து பின்வருமாறு தனது உரையில் குறிப்பிடுகின்றார்,


"இலக்கியம் என்பது இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு அனுபவ வெளியீடாகவே இருக்கிறது.ஒரு படைப்பின் வாசகன் தன சொந்த அனுபவத்திற்கும் படைப்பாளனின் வெளிப்பாட்டு அனுபவத்திற்கும் ஊடேயே படைப்பினால் விளையும் அல்லது படைப்பை உற்பத்தி செய்யும் அனுபவத்தை அடைகின்றான்".



இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஆகசிறந்தவையே!!"டெய்லர் கந்தசாமி",கடன்","கைக்கிளை" ஆகியவை குறிபிடத்தக்கவை.கொஞ்சம் மிகுதியாய் போய் இருந்தால் கூட வக்கிர தொனியிலான கதைகளாக மாறி இருக்க கூடியிருக்கும்..மாறாக முழுக்க முழுக்க கதை மாந்தர்களின் நேரடி உரையாடல்களில் வாசகனுக்கு யாவும் நேர்த்தியாய் தெரிவிக்கபட்டுள்ளது.தவிர்க்க கூடா வாசிப்பு!!


வெளியீடு - தமிழினி
விலை - 250ரூபாய்