
சற்று சிக்கலான கதை களத்தை வெகு இயல்பாய் எடுத்தாளுகின்றது இத்திரைப்படம்.குழந்தை பெற்று கொள்ள இயலாத லேலா தனது கணவனுக்கு தானே பெண் பார்த்து மறுமணம் முடித்து வைக்க எடுக்கும் முயற்சிகளும்,அதை தொடர்ந்து உள்ளாகும் மன உளைச்சல்களும் நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது.ஈரான் போன்ற கட்டுகோப்பான சமூக அமைப்பில் குடும்பங்களுக்குள்ளான நிகழ்வுகள்,பெண்களின் நிலை போன்றவை நம்மில் இருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கவில்லை.
மகிழ்ச்சியாய் செல்லும் திருமண நாட்கள்,லேலாவிற்கு துன்பம் தர தொடங்குவது குழந்தை குறித்தான ஏக்கம் மேலிடும் பொழுது.கணவனின் எதிர்ப்பை மீறி அவனிற்கு பெண் பார்க்க சம்மதிக்கிறாள்.விளையாட்டாய் தொடங்கும் பெண் பார்க்கும் படலம் லைலாவிற்கும் அவள் கணவனிற்கும் கேலியாய் தெரிகின்றது.பார்த்து வந்த பெண்களை குறித்து கிண்டலாய் அவன் சொல்வதை கேட்டு புன்னகை செய்யும் லேலா,இறுதியில் ஒரு பெண்ணை தனக்கு மிக பிடித்திருப்பதாய் அவன் கூறும் தருணத்தில் தனிமையை உணர தொடங்குகிறாள்.மெல்ல மெல்ல தனக்கு நேர போகும் பிரிவை நினைத்து லேலாவின் உடல்நிலை மோசமாகிறது.
லேலாவின் மீது மிகுந்த காதல் கொண்ட அவளின் கணவன் வற்புறுத்துதலின் பேரால் செய்யும் மறுமணம் நீடித்ததா,கணவனை விட்டு பிரிந்த லேலாவின் நிலை என்ன என்பதை மெல்லிய அதிர்வுகள் கொண்டு சொல்லி முடிகின்றது கதை.லேலா வாக நடித்துள்ள நடிகை மெல்லிய புன்னகையும்,சோகத்தை கூட்டும் இறுக்கத்தையும் வெகு இயல்பாய் வெளிக்காட்டுகின்றார்.காட்சிகளின் வேகத்தை கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம்,விருது படங்களுக்கே உரிய நிரந்தர குறைபாடு இது.எனினும் நல்ல திரைஅனுபவம்.தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் என்பதே பெரும் ஆறுதல்.




