Monday, January 26, 2009

அ.முத்துலிங்கத்தின் "கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது"

தேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் தங்களுக்கு மிக பிடித்த நூல் ஒன்றினை குறித்து விவரித்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு.இத்தொகுப்பினை சாத்தியமாக்கிய முத்துலிங்கத்தின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்,சாரு நிவேதிதா, நாஞ்சில் நாடன்,அசோகமித்திரன், சுஜாதா,அம்பை,மனுஷ்யபுத்திரன்,பாவண்ணன் உட்பட 20 எழுத்தாளர்களின் விருப்ப நூல் குறித்த கட்டுரைகள் இதில் அடக்கம்.



ஜோ.டி.குரோஸ் இன் "ஆழி சூழ் உலகு" குறித்த நாஞ்சில் நாடனின் கட்டுரை கடல்-கடலோடி- கடலோடியின் வாழ்வு குறித்து தமிழில் வெளிவந்த முதல் சிறந்த நாவல் என்பதாய் உள்ளது.இவ்வாண்டு புத்தக சந்தையில் வாங்கிய இந்த புத்தகத்தை விரைவில் தொடங்கும் ஆர்வம் மேலிட்டது.மனுஷ்யபுத்திரன் தமக்கு பிடித்த நூல் என ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" நாவலை குறிபிட்டுள்ளார்.முழுக்க முழுக்க பிச்சைகாரர்களின் வாழ்வை குறித்த இந்நாவலை தமிழின் மற்றுமொரு சிறந்த விளிம்புநிலை இலக்கியம் என கூறுகிறார்.

இதற்கு முன் நான் கேட்டிராத பெயர் கால பைரவன்,இவரின் "புலிப்பாணி ஜோதிடம்" சிறுகதை தொகுப்பை குறித்தது பாவண்ணனின் கட்டுரை.மதுரை நகரம் குறித்த முழு ஆராய்ச்சி நூலை படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.எஸ்.ரா பரிந்துரைத்துள்ள "எண்படுங்குன்றம்" தொகுதி மதுரையை சுற்றி உள்ள சமண குகைகள் குறித்த முனைவர் வேதாச்சலத்தின் ஆராய்ச்சி கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.நிச்சயம் தேடி வாசிக்க வேண்டிய நூல்.

குறிப்பிட்டு எந்த நூலை குறித்தும் சொல்லாது பொதுவாய் தமது வாசிப்பு அனுபவம் குறித்து சுஜாதா எழுதியுள்ள "படிப்பின் பயணம்" கட்டுரை அதிகமாய் புதுமைப்பித்தனின் முதல் தற்பொழுதைய ஆங்கில இலக்கியம் வரை அலசுகிறது.சா.கந்தசாமியின் "மாயவலி" நாவல் மற்றும் அம்ஷன்குமாரின் "ஒருத்தி"(திரைப்படமாய் வந்தது) திரைக்கதை நூலும் அசோகமித்ரனின் விருப்ப பட்டியலில் உள்ளவை.

பள்ளி ஆசிரியராய் வாழ்வை தொடங்கி எழுத்தாளராய் ஆனா Mc.Court இன் சுயசரிதை நூலான "Teacher Man" பற்றிய முத்துலிங்கத்தின் விரிவான கட்டுரை Mc.Court இன் பேட்டியின் சிறு பகுதியோடு சுவாரஸ்யம் கூட்டுகின்றது.சாருவின் கலகம்,இசை,காதல் மற்றும் வரம்பு மீறிய பிரதிகள் இரண்டு நூல்களில் இருந்த அயல் இசை மற்றும் இலக்கிய கட்டுரைகள் பரிந்துரைத்த எழுத்தாளர்கள் பட்டியல் மிக நீளம்.படித்து வியந்த தொகுப்புகள் அவை.அதில் ஒரு சிறு பகுதி என "சம கால அரபு இலக்கியம்" கட்டுரை அமைந்துள்ளது.

வெளியீடு - உயிர்மெய்
விலை - 85 ரூபாய்

6 comments:

குப்பன்.யாஹூ said...

அருமை லேகா. மிக நல்ல கட்டுரை தொகுப்பு இது.

முத்துலிங்கத்தின் சிறுகதைகள் கூட (பெரும்பாலும் உயிர்மை, இந்தியா டுடே) போன்றவற்றில் வரும் .

ஆனால் இழையோடிய ஒரு சோகம் இருக்கும். புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் பலரிடமும் இந்த சோகம் இருக்கும்.

மகுடேஸ்வரன் கவிதைகள கட்டுரைகள் படித்து பதிவு இடவும்.

குப்பன்_யாஹூ

கதிர் said...

பத்தாயிரம் புத்தகம் படித்த அபூர்வ சிந்தாமணி என்று பழமொழியவே மாத்திடலாம்னு தோணுது.

சுஜாதாவுக்கு யார் யாரோ வாரிசுன்னு அவர் இறந்த பிறகு போட்டி போடறாங்க. தமிழ்நாட்ல பிறந்திருந்தார்னா முத்துலிங்கம் மட்டுமே அதுக்கு தகுதியானவர்னு எல்லாரும் ஒத்துகிடுவாங்க. என்னளவில் சுஜாதாவின் எழுத்துக்கள ரசிச்சதவிட அ.முத்துலிங்கத்தை ரசித்திருக்கிறேன். புத்தக சந்தையில் "பூமியின் பாதி வயது" மற்றுமொரு அ. முவின் நூலை (அலாமாரியில் தேடணும்) வாங்கினேன். பூ.பா.வ படித்தேன். என்னோட எதிர்பார்ப்புகளைவிட அதிகமாகவே என்னை ஈர்த்திருந்தார்.

எந்த எழுத்தாளரின் பெயரையோ, நூலையோ இணையத்தில் தேடுகையில் யாழிசை முதல் பத்து இடங்களில் வந்துவிடுகிறது. நேரமிருப்பின் நூல்களின் பார்வையினை முழுமையாக அறிய தாருங்கள்.

KARTHIK said...

கண்டிப்பாக பாராரட்டடவேன்டியே தொகுப்புங்க இது
எனக்கு இதுல எனக்கு பிடித்த கதைன்னு சொன்ன (வாஸந்தி அவங்கன்னு நெனக்குறேன் சரியா நினைவில்லை).அந்த ஹங்கேரி நாட்டு கதை இன்னும் நினைவில் இருக்கு.

சுஜாதா சொல்லிருப்பாரு வயசுக்கேத்தமாதிரி ரசனை மாறும்னு அது உண்மையும் கூட.

// மதுரையை சுற்றி உள்ள சமண குகைகள் குறித்த முனைவர் வேதாச்சலத்தின் ஆராய்ச்சி கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.//

இதுல,யாமம்,நெடுங்குருதி,இப்படி எல்லா இடத்துலயும் இவர் சமணர்கள சொல்லிகிட்டே போறாரு அது ஏன்னு தெரியல.

வழக்கம் போல இந்த புத்தகமும் ஓசில போச்சு 2.5 வருஷம் ஆச்சு இன்னும் திரும்ப வரல.எங்க இருக்குன்னு பாத்து வாங்கி வைக்கணும்.

லேகா said...

நன்றி ராம்ஜி.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் இலக்கிய இதழ்களில் படித்து தான் அவரின் எழுத்துக்கள் அறிமுகம் ஆயின.

//புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் பலரிடமும் இந்த சோகம் இருக்கும்.//

உண்மை தான்.

லேகா said...

@கதிர்

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி கதிர்.
பூமியின் பாதி வயது இவரின் சமீபத்திய நூல் என நினைக்கின்றேன்.
நன்றி.

லேகா said...

@ கார்த்திக்
நன்றி கார்த்திக்.

சுஜாதாவின் கூற்று மிக்க சரியே.எப்போதோ ரசித்து படித்த புத்தகம் இப்பொழுது நகைபிற்குரியதாய் தோன்றும் இல்லையா??

எஸ்.ரா எப்பொழுதும் மதுரை குறித்து ரசித்து எழுதுவார்.ரகசியங்கள் பொதிந்த நகரம் என மதுரையை ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட ஞாபகம்.