Saturday, April 18, 2009

சிவராமகரந்தின் "அழிந்த பிறகு" - கன்னட மொழிபெயர்ப்பு

கன்னட இலக்கியத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் எழுத்துக்களை தீவிரமாய் வாசித்ததுண்டு.பாவண்ணனின் "நூறு சுற்று கோட்டை" தொகுப்பின் மூலம் கன்னடத்தின் மிக சிறந்த எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம் கிடைத்தது.இந்நாவல் படித்த முடித்த பின் அந்த தேசத்தின் இலக்கியம் மீதான தேடலும்,ஆர்வமும் அதிகரித்து.சிவராமகரந்த் குறித்து இணையத்தில் தேடிய பொழுது கிடைத்த தகவல்கள் எண்ணற்றவை.எழுத்தோடு இசையும்,ஓவியமும் இவரின் தனி சிறப்புக்கள்.மேலும் மிகச்சிறந்த சமூக போராளியாய் இருந்துள்ளார்.



உங்கள் கடைசி ரயில் பயணத்தில் சந்தித்த நபர்களை குறித்து கேட்டால் சட்டென சொல்ல இயலுமா?பொதுவாய் நம்மிடையே முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களோடு பயணத்தின் பொழுதோ,எதிர்பாரா சந்திப்புகளிலோ பேசுவது என்பது அரிதான ஒன்று.அபூர்வமாய் கிடைக்கும் சில சிநேகங்கள் இறுதிவரை தவிர்க்க முடியாததாகி விடுவதுண்டு. சிவராமகரந்தின் இந்நாவல் பயணிப்பது ரயில் பயணத்தின் பொழுது அறிமுகமான தனது தன் நண்பனின் கடந்த கால நினைவுகளை தேடி..அவனின் மரணத்திற்கு பிறகு!!

மரணத்திற்கு பிறகான மனிதனின் வாழ்கை நிறைவு பெறுவது அவன் விட்டு சென்ற நினைவுகள் அர்த்தம் பெரும்பொழுது.ரயில் பயணத்தில் அறிமுகமான நண்பரின் மரணத்தை தொடர்ந்து தனிமையில் தங்கி இருந்த யசுவந்தரின் மும்பை வீட்டுக்கு செல்கின்றார்.யசுவந்தரின் ஓவிய குறிப்புகளும் தொடர்ந்து அவர் பணம் அனுப்பி வந்த சிலரின் முகவரிகலுமே மிஞ்சி இருக்க...அம்முகவரி மனிதர்களை தேடி கர்நாடக கிராமம் ஒன்றிற்கு செல்கிறார்.இவ்விருவருக்கும் இடையே வெகு சில சந்திப்புகளே நிகழ்த்திருந்த பொழுதும் இருவரின் நட்பின் ஆழம் ஒருவரின் மரணத்திற்கு பின் கூடுகின்றது.

சிவராமகரந்தின் பயணம் நினைத்ததை போல அவ்வளவு சுலுவாய் இல்லை.யசுவந்தர் குறித்து வைத்திருந்த அனைவருமே அவரின் நெருங்கிய உறவினர்கள்.யசுவந்தரின் வளர்ப்பு தாய்,அவரின் மகள்,மகன்,இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என விட்டு பிரிந்து வந்த தனது சொந்தங்களுக்கு தனிமையை தேடி வந்த பொழுதும் மறக்காது பணம் அனுப்பி அவர்களின் நினைவுகளில் நிரந்தர இடம்பிடித்துள்ள நண்பரை எண்ணி பெருமிதம் கொள்வதோடு அவர்களின் ஒவ்வொருவரின் ஆசைகளையும்,தேவைகளையும் அறிந்து உதவி செய்து திரும்பிகின்றார்.மற்றொரு சிறப்பான விஷயம் யசுவந்தர் தமது உறவுகளை குறித்து வரைந்து வைத்து சென்ற ஓவிய குறியீடுகள்.மனிதர்களை பறவைகளோடு,மிருகங்களோடு,மரம் செடிகளோடு ஒப்பிட்டு அவர்களின் இயல்பினை விளக்குவதை உள்ளன அவ்வோவியங்கள்.

மொழிபெயர்ப்பு என்கின்றன நெருடல் ஏதும் இன்றி வெகு நேர்த்தியாய் உள்ளது இந்நாவல்.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
மொழிபெயர்ப்பு - சித்தலிங்கையா

Wednesday, April 15, 2009

கி.ரா மற்றும் கழனியூரனின் "மறைவாய் சொன்ன கதைகள்"

இந்த வலைத்தளத்தில் அதிகமாய் உச்சரிக்கப்பட்டிருக்கும் சில பெயர்களில் முக்கியமான பெயர் கி.ராஜநாராயணன்.தவிர்க்க இயலாத பெயரும் கூட.தமிழ் இலக்கியம் என்றவுடன் சட்டென நினைவிற்கு வருவது கி.ராவின் எழுத்து.கை பிடித்தி நடத்தி செல்வது போல கரிசல் பூமியின் மக்களை,பழக்க வழக்கங்களை,தொடர்ந்து வரும் பெருமைகளை நம்பிக்கைகளை தெளிவாய் எடுத்துரைப்பவை கி.ராவின் எழுத்துக்கள். நல்ல கதை,கெட்ட கதை என எந்த பாகுபாடின்றி எல்லா வகை கதைகளும் கூறுபவரே தேர்ந்த கதைசொல்லி கி.ராவை போல.



கணையாழியின் கடைசி பக்கங்களில் தமிழில் சிறந்த போர்னோ இலக்கியம் இல்லை என்று சுஜாதா குறிப்பிட்டு இருப்பார். பின் சாருவின் "எஸ்டன்சியலிசமும் பேன்சி பனியனும்" மற்றும் கி.ரா வின் "வயது வந்தோர்க்கு மட்டும்" ஆகிய நூல்களின் அறிமுகம் தமிழில் போர்னோ வகை எழுத்துக்களுக்கு முன்னோடி எனவும் சொல்லி இருந்தது இந்நூல் படிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.கரிசல் எழுத்தாளர் கழனியூரனோடு இணைந்து நாட்டுப்புறங்களில் உலவி வரும் பாலியல் கதைகளை தொகுத்துள்ளார் கி.ரா.அவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் கெட்ட வார்த்தை கதைகள் இவை.

100 பாலியல் கதைகள் கொண்ட தொகுப்பு இது.அனைத்துமே ஒரு பக்க அல்லது இரண்டு பக்க கதைகள்.அய்யோ..சீய்!! என ஒரேடியாய் ஒதுக்கி தள்ளும் படி ஒன்றும் இல்லை.பாலியல் குறித்த ஆரோக்கிய விவாதங்கள்/அறிவுரைகள்/விழிப்புணர்வு அனேக தளங்களில் சிறப்பாய் நடந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்நூல் மிகுந்த தேவையே.கிராமங்களில் உலவும் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது அதிலும் பாலியல் கதைகள் மற்றும் அதை முன்வைத்த கேலியும் கிண்டலும் கரிசல் மண்ணிற்கே உரித்தான ஒன்று.

இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் எடுத்தாள்பவை கணவன் மனைவிக்குள் நிகழும் பாலியல் சிக்கல்கள்,கணவனை விடுத்து வேறு ஆணோடு பழகும் பெண்கள் நடத்தும் நாடகங்கள்,வேசியர் தந்திரங்கள் என நீள்கின்றது.மதுரை வந்திருந்த பொழுதொன்றில் கவிஞர் விக்ரமாதித்யன் தன்னிடம்"அப்பச்சி கெட்ட வார்த்தை கதை ஒன்னு சொல்லுங்க' என கேட்டதை கி.ரா ஓரிடத்தில் நினைவு கூறுகிறார்.கி.ராவிடம் நேரடியாய் கதை கேட்கும் வாய்ப்பு கிடைக்காவிடினும் அவர் நாவல்களில்,கடிதங்களில்,கட்டுரைகளில் கொட்டி கிடக்கும் கதைகளை படித்து பெரும் இன்பம் அலாதியானது.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 230 ரூபாய்

Wednesday, April 1, 2009

யுவன் சந்திரசேகரின் "ஒளி விலகல்" - சிறுகதை தொகுப்பு

சராசரி கதை சொல்லும் பாணியில் இருந்து முற்றிலுமாய் வேறுபட்டு பயணிப்பவை யுவனின் கதைகள்.கவிதை உலகில் எம்.யுவனாகவும் கதையுலகில் யுவன் சந்திரசேகராகவும் அறியப்படும் யுவனின் "குள்ளசித்தன் சரித்திரம்" நாவல் தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இவரின் முதல் சிறுகதை தொகுப்பு இது.இத்தொகுப்பு முழுதும் கதைகள் தொடர் சங்கிலியாய் உள்ளது. கி.ராவின் கதைகளுக்கு பிறகு யுவனின் கதைகள் மிக பிடித்தமானதாய் போனது.தேர்ந்த கதை சொல்லிக்கு தெரியும் கேட்பவனை நேர்கோட்டில் பயணிக்க செய்யும் வித்தை.மிகையான நிகழ்வுகளை கதையின் ஊடே இயல்பாய் புகுத்தி தன் வசப்படுத்தும் ஜாலம் யுவனுக்கு தெரிந்திருக்கின்றது.



"நச்சு பொய்கை" சிறுகதை, கதைக்குள் கதை சொல்லும் கதையாடல்.சமூகத்தால் ஒதுக்கப்படும் திருநங்கை ஒருத்தியின் சோகத்தில் தொடங்கி அவள் சந்திக்கும் சாமியார்,அவர் சொல்லும் தமது பயண அனுபவங்கள்,அந்த அனுபவத்தின் வாயிலாய் கிட்டும் ஆண்,பெண் என இரு நண்பர்கள்,அவர்களின் நட்பு தொடங்கிய அனுபவம் என ஒரு நிகழ்வின் முடிவு மற்றொன்றின் தொடக்கமாய் கதையை வழிநடத்துகின்றது."ஒளி விலகல்" சிறுகதை,மனபிறழ்வு நோயாளியின் விசித்திர கனவுகளும் அதை அவன் மருத்துவரிடம் விவரிக்கும் சமயம் தொடரும் உரையாடலுமே இக்கதை.

சொந்த அனுபவங்களின் வாயிலாய் புனையப்பட்டுள்ள சில கதைகள் சுவாரஸ்யம் சேர்ப்பவை.டெல்லி நகரின் வீதிகளை வர்ணித்தபடி தொடங்கும் "ஊர் சுற்றி கலைஞன்" சிறுகதை அங்கிருந்து காசி பயணிக்கின்றது.தினப்படி சுமைகளை மறந்து செல்லும் நீண்ட தூர பயணங்கள்,சந்திக்கும் மனிதர்கள்,கடந்து செல்லும் கிராமங்கள்,நதிகள்,வயல் வெளிகள் இன்னும் எவ்வளவோ பயணத்திற்கு அர்த்தம் கூட்டுபவை.இந்த சிறுகதையும் அது போலவே நண்பர்களுடன் சென்ற வட இந்திய பயணத்தின் பொழுது சந்தித்த புல்லாங்குழல் கலைஞன் ஒருவனை பற்றியது.இதிலும் கதைக்குள் கதைகள் அவை போடும் புதிர்கள் என சற்று மிகைபடுத்தி ரசிக்கும் படி சொல்லபட்டுள்ளது.

நாம் குழந்தை பருவத்தில் கேட்ட கதைகள் இன்று வெவ்வேறு மாற்றம் கொண்டு புதுவிதமாய்,நவீனமாய் உலவுகின்றன எனினும் பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை."அப்பா சொன்ன கதை" சிறுகதை விக்ரமாதியன்,வேதாளம் புதிர்கதைகள் இருந்து புனைய பட்டது."சாதுவன் கதை ஒரு முன்விவாதம்" ஒரு நண்பரை குறித்த சிறுகதை தோன்றுவதற்கு முன்பான உரையாடல்களை,ஒரு நபர் குறித்த இருவரின் பார்வையை முன்வைத்து வருகின்றது.

இவை தவிர்த்து "1999 இன் மிக சிறந்த கதை","தாயம்மா பாட்டி சொன்ன 23 காதல் கதைகள்","மேஷ புராணம்" ஆகிய சிறுகதைகளும் குறிப்பிடதக்கவை.மாறுபட்ட கதையாடல் மட்டும் இன்றி யுவனின் கதைகளில் நம்மை ஈர்ப்பது கதையோடு இயைந்து வரும் நகைச்சுவை.வாய் விட்டு சிரிக்க செய்யும் பத்திகள் அதிகம்.வித்தியாசமான வாசிப்பனுபவம் வேண்டுபவர்களுக்கு தாராளமாய் இந்நூலை பரிந்துரைக்கலாம்.

நூல் வெளியீடு - காலச்சுவடு (முதல் பதிப்பு)
விலை - 90 ரூபாய்

Wednesday, March 25, 2009

சம்பத்தின் ‘இடைவெளி’

மரணத்தின் மீதான பயத்தை,கேள்விகளை அதிகரிக்க செய்யும் நாவல் சம்பத்தின் "இடைவெளி".எஸ்.ரா வின் தமிழின் சிறந்த 100 நூல்களை பட்டியலில் இந்நாவலும் உள்ளது. நீண்ட தேடலுக்கு பிறகு படித்த கிடைத்தது.மேலோட்டமாக படித்தால் பெரும் குழப்பம் விளைவிக்கும் கருத்துக்களாக தெரியலாம்.சற்றே தீவிரமான வாசிப்பு தேவை படுகின்றது இதன் சாரத்தை புரிந்து கொள்ள.

நடுத்தர வயதினரான தினகரன் மரணம் குறித்தான அடிப்படை தத்துவத்தை அடைய எடுக்கும் முயற்சிகள் சம்பவங்களின் கோர்வையாக சொல்லப்படுகின்றது.சந்திக்கும் மனிதர்களிடத்தில் மரணத்தின் தத்துவம் குறித்து பேசி,அறிய முயன்று தோற்று போய் தாமே சுய பரிசோதனைகளில் இறங்குகிறார்.30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் இக்கதைகளம் பெரும் அளவில் தற்பொழுதைய நடைமுறைகளோடு மாறி வருகின்றது. வீட்டிலும்,அலுவலகத்திலும்,காபி பாரிலும் விடாது சாவு குறித்த எண்ணங்களோடு உலாவரும் தினகரன் மன நோயாளி என யாவராலும் கேலிக்கு ஆளாகிறார்.

தனது தூரத்து உறவினர் ஒருவரின் மரணத்தினாலும்,விடாது துரத்தும் கனவுகளாலும்,தூக்கு கயிற்றில் சாவை அருகில் கண்டு உணர்ந்து அதை முரண்பாட்டின் இடைவெளி என கண்டடைகிறார்.மரணம் - முரண்பாட்டின் இடைவெளி என்பதை நிருபிக்க சொல்லும் விளக்கங்கள் சற்றே தலை சுற்ற செய்பவை.இடைவெளிகளின் வேறுபாட்டால் வெவ்வேறு வித மரணங்கள் நிகழ்கின்றன.இடைவெளியை அல்லது சாவை வெல்ல முடியுமா?? நிச்சயமாக முடியாது.எனவே முரண்பட்ட இடைவெளியே மரணம் என முடிகின்றது நாவல்.சற்றே குழப்பம் விளைவிக்கும் கருத்துக்கள் நாவல் முழுதும் விரவி இருந்தாலும் ஏதேனும் ஒரு இடத்தில் மரணம் குறித்து நம்மால் ஒரு முடிவிற்கு வர முடிகின்றது.

Sunday, March 22, 2009

தகழியின் "இரண்டு படி" மலையாள மொழிபெயர்ப்பு

எழுத்தாளர் தகழிக்கு அறிமுகம் தேவை இல்லை.மலையாள இலக்கிய உலகில் மிக சிறந்த படைப்புகளை வரிசைப்படுத்தினால் தகழியின் படைப்புகளுள் முதல் பத்து இடத்தில இடம் உண்டு.விளிம்பின் குரலாய் ஒலிப்பது இவரின் படைப்புகள்.செம்மீன்,தோட்டியின் மகனை தொடர்ந்து இவரின் "இரண்டு படி" நாவல் சமீபத்தில் படிக்க கிடைத்தது.குட்ட நாடு என அழைக்கப்படும் கேரள தேசத்தின் சோறு பகுதியின் விவசாய பண்ணை கூலிகளை பற்றிய கதை.தகழியின் எழுத்தில் மிகபிடித்தது பட்டவர்த்தனம்.இந்நாவலும் அது போலவே விவசாய கூலிகளின் சுதந்திரத்திற்கு முந்தைய நிலையின் கொடூரங்களை,பண்ணையார்களின் அதிகார மேம்போக்குதனத்தை விரிவாய் விவரித்து செல்கின்றது.




வயல் வேலையில் கெட்டிக்காரியான சிருதையை பெண் பார்க்கும் படலத்தை விவரித்து தொடங்கும் கதை,நாட்டுபுறங்களின் அழகும்,அறிவும் கடந்து உடல் உழைப்பில் ஆண்களுக்கு சலிக்காத பெண்களுக்கு உள்ள பெருமையை மறைமுகமாய் சொல்லுகின்றது.சிறுத்தையை மணக்கும் பொருட்டு அவளின் தந்தை கேட்கும் பணமும் நெல்லும் தரும் பொருட்டு பண்ணை கூலியாய் பணி சேர்கிறான்.அப்பகுதியின் விவசாயமுறை படிப்பதிற்கே அதிர்ச்சியாய் உள்ளது.நீர் நிறைந்த ஏரிகளில் வரப்பு கட்டி உள்ளுள்ள நீரை வெளியேற்றி விவசாயம் செய்ய தயார் செய்து பின் நெற்பயிர் விளைவிக்க பறை கூலிகள் மெனக்கிடும் காட்சிகளின் விவரிப்புகள் கற்பனையிலும் நினைத்து பார்க்க இயலாதது.

கோரன் தனது பண்ணையாரின் நிலத்தில் இரவு பகல் பாராது உழைத்தும் இறுதியில் கிடைக்கும் கூலியை கண்டி அதிர்ச்சி அடைகின்றான்.எதிர்த்து கேட்க வழியின்றி மருகும் கோரன் முடிவாக விவசாய கூலிகளின் நலன் காக்கும் சங்கத்தில் இணைத்து புரட்சி இயக்கத்தில் பங்கு கொள்கின்றான்.நாவலின் பின்பகுதி பெரும்பாலும் அக்காலகட்டத்தின் விவசாய புரட்சி,அரசியல் நிலைப்பாடு,அரசின் ஒடுக்குமுறை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

பறை பல்ல கூலிகளின் வாழ்கை நிலையை துணிகரமாய் சொல்லுவதோடு மட்டும் இல்லாது இந்நாவல் அழுத்தமாய் பதிவு செய்யும் மற்றொன்று கோரன்-சிருதை இவர்களின் மெய் காதல்.துன்பத்தின் பிடியில் இருக்கும் கணங்களிலும் இருவரின் அன்பும்,பிரியமும் குறையாது எதிர்காலம் குறித்த கனவுகள் சுமந்து தொடர்கின்றது இவர்களின் நாட்கள்.டி.ராமலிங்கத்தின் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாதமியால் வெளியிடபட்டுள்ள இந்நாவல் வாசிக்க பட வேண்டிய ஒன்று.

வெளியீடு - சாகித்திய அகாதமி

Friday, March 13, 2009

லேலா - ஈரானிய திரைப்படம்.

குத்து பாட்டு,மொக்கை திரைப்படங்கள்,இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.......என அனேக தமிழ் தொலைக்காட்சிகள் விடாது இம்சித்து கொண்டிருக்க மிக சிறப்பான பல நிகழ்ச்சிகளை சத்தமின்றி கொடுத்து வருகின்றது மக்கள் தொலைக்காட்சி.கிராமப்புற நிகழ்வுகள்,தெரு கூத்து,எழுத்தாளர்களுடன் உரையாடல்,இலக்கியசந்திப்புகள்,உலக சினிமா என பெரிதும் தனித்துவம் கொண்டு விளங்குகின்றது.இவற்றுள் ரோட்டோர சிறார்களின் விருப்பத்தை நிறைவும் செய்யும் நிகழ்ச்சி மிகுந்த மனநிறைவை தருவதாய் இருக்கும்.சமீபத்தில் இத்தொலைக்காட்சியில் ஈரான் நாட்டு திரைப்படமான "லேலா" பார்க்க நேர்ந்தது.



சற்று சிக்கலான கதை களத்தை வெகு இயல்பாய் எடுத்தாளுகின்றது இத்திரைப்படம்.குழந்தை பெற்று கொள்ள இயலாத லேலா தனது கணவனுக்கு தானே பெண் பார்த்து மறுமணம் முடித்து வைக்க எடுக்கும் முயற்சிகளும்,அதை தொடர்ந்து உள்ளாகும் மன உளைச்சல்களும் நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது.ஈரான் போன்ற கட்டுகோப்பான சமூக அமைப்பில் குடும்பங்களுக்குள்ளான நிகழ்வுகள்,பெண்களின் நிலை போன்றவை நம்மில் இருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கவில்லை.

மகிழ்ச்சியாய் செல்லும் திருமண நாட்கள்,லேலாவிற்கு துன்பம் தர தொடங்குவது குழந்தை குறித்தான ஏக்கம் மேலிடும் பொழுது.கணவனின் எதிர்ப்பை மீறி அவனிற்கு பெண் பார்க்க சம்மதிக்கிறாள்.விளையாட்டாய் தொடங்கும் பெண் பார்க்கும் படலம் லைலாவிற்கும் அவள் கணவனிற்கும் கேலியாய் தெரிகின்றது.பார்த்து வந்த பெண்களை குறித்து கிண்டலாய் அவன் சொல்வதை கேட்டு புன்னகை செய்யும் லேலா,இறுதியில் ஒரு பெண்ணை தனக்கு மிக பிடித்திருப்பதாய் அவன் கூறும் தருணத்தில் தனிமையை உணர தொடங்குகிறாள்.மெல்ல மெல்ல தனக்கு நேர போகும் பிரிவை நினைத்து லேலாவின் உடல்நிலை மோசமாகிறது.

லேலாவின் மீது மிகுந்த காதல் கொண்ட அவளின் கணவன் வற்புறுத்துதலின் பேரால் செய்யும் மறுமணம் நீடித்ததா,கணவனை விட்டு பிரிந்த லேலாவின் நிலை என்ன என்பதை மெல்லிய அதிர்வுகள் கொண்டு சொல்லி முடிகின்றது கதை.லேலா வாக நடித்துள்ள நடிகை மெல்லிய புன்னகையும்,சோகத்தை கூட்டும் இறுக்கத்தையும் வெகு இயல்பாய் வெளிக்காட்டுகின்றார்.காட்சிகளின் வேகத்தை கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம்,விருது படங்களுக்கே உரிய நிரந்தர குறைபாடு இது.எனினும் நல்ல திரைஅனுபவம்.தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் என்பதே பெரும் ஆறுதல்.

Tuesday, March 10, 2009

பாவண்ணனின் "நூறு சுற்றுக்கோட்டை" - கன்னட மொழிபெயர்ப்பு

மொழி,இனம்,பிரதேசங்கள் கடந்து உலவும் கதைகள் தலைமுறை தலைமுறையாய் மாற்றங்கள் பல கண்டும் இன்றும் நிலைத்திருப்பது பகிர்தலின் பொருட்டே.கதைகளின் பகிர்தல் குறித்து நீண்டதொரு முன்னுரையோடு பாவண்ணன் மொழிபெயர்த்திருக்கும் கன்னட கதைகளின் தொகுப்பிது.கன்னட இலக்கிய உலகில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளின் மொழியாக்கம்,மறைந்த பிரபல கன்னட எழுத்தாளர்களை குறித்தும்,மிக சிறந்த நாவல்களின் சிறு பகுதியும் வெகு நேர்த்தியாய் தொகுக்கப்பட்டுள்ளன.

கன்னட எழுத்தாளர்களில் யு.ஆர்.அனந்தமூர்த்தி மட்டுமே எனக்கு நன்கு பரிட்சயம்.இவரின் சம்ஸ்காரா,அவஸ்தை,கடஷ்ரதா நாவல்கள் முன்வைக்கும் முற்போக்கு சிந்தனைகள் முக்கியமானவை. இவரின் "சூரியனின் குதிரை" சிறுகதை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.பால்ய கால நண்பனை சற்றும் எதிர்பாரா நிலையில் சந்திக்க நேர்ந்த தனது அனுபவங்களை காட்சிகளாய் விவரித்துள்ளார்.ஏழ்மையை பொருட்படுத்தாது,வெகுளியாய் தினப்படி பொழுதை கதைகளோடும்,கற்பனைகளோடும் கடக்கும் நண்பனின் கதாபாத்திரம் அரிதாய் காணமுடிவது.யஷ்வந்த் சித்தாளின் "பயணம்" நவீன பாணி கதையாடல்.விற்பனை பிரதிநிதி ஒருவனின் மரணத்திற்கு முந்தைய பொழுதின் காட்சிகள் நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை மொகள்ளி கணேஷின் "காளி",தலித் இலக்கிய வகை சார்ந்த இக்கதை எனக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்று,இந்தியாவின் எல்லா பகுதியிலும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையும்,அவர்களின் வாழ்க்கை முறையும்,தலித் குழந்தைகளுக்கான நிறைவேற கனவுகளும் ஒன்றே என்று.இந்த ஒரு சிறுகதை மொழிபெயர்ப்பு என்பதை முற்றிலுமாய் மறக்கடிக்க செய்தது.இவை தவிர்த்து சிந்தாமணி கொட்லகெரே வின் "வசிட்டர் குகை" மற்றும் வெங்கடேஷின் 'சின்ன சிறு விஷயம்" சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.

அணையாத சுடர்கள் என்னும் தலைப்பின் கீழ் வாழ்ந்து மறைந்த கன்னட எழுத்தாளர்கள் மூவரை குறித்து விவரித்துள்ளார் ஆசிரியர்.கொள்கைகளின் பொருட்டு விருதுகளை திருப்பி அனுப்பிய சிவராம கரந்த் கன்னட எழுத்துலகில் கொண்டிருந்த மதிப்பு படிப்பதற்கே பிரம்மிப்பாய் உள்ளது. இலக்கியம்,சினிமா,நாடகம்,பத்திரிகை,அரசியல் ஆய்வாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய லங்கேஷ் மற்றும் தி.ஆர்.நாகராஜ் பற்றிய குறிப்புகளும் சுவாரஸ்யம் கூட்டுபவை.ஆறுகளின் தடம் என்னும் தலைப்பின் கீழ் சிவராம கரந்த் மற்றும் லங்கேஷின் நாவல்களில் இருந்து சிறு பகுதிகளை மொழிபெயர்த்தும் தொகுத்துள்ளார்.

வெளியீடு - அன்னம்
விலை - 110 ரூபாய்