Wednesday, February 12, 2014

அடூரின் எலிப்பத்தாயம் (1981)

கேளிக்கைகளும்,கொண்டாட்டங்களும் கொண்ட வாழ்க்கையை கனவிலும் கண்டிராத ஒரு குடும்பத்து மனிதர்களை குறித்த பதிவு.அதன் பொருட்டு அழுது,அரற்றி சோகத்தை பிழியும் திரைப்படம் இல்லை இது.மாறாக சூழ்நிலை கைதியாகிப் போன பெண்ணொருத்தியை மையமாகக் கொண்டு ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளை நுட்பமாய் விவரிக்கின்றது.

குடும்பத்தின் வீழ்ச்சியை சட்டை செய்யாத,தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள இயலாத உன்னி,கல்லூரி காலத்திற்கே உரிய கனவுகளோடு கற்பனை உலகில் மயங்கிக் கிடக்கும் ஸ்ரீதேவி, வீட்டுச் சுமையோடு,எந்நேரமும் அடுப்பங்கரையில் உழன்று கொண்டிருந்தாலும் மாறாத அன்போடு மற்ற இருவரையும் கவனித்துக் கொள்ளும் முதிர்கன்னி ராஜம்மா - இவர்களை சுற்றி நடக்கும் கதை.ராஜம்மாவாக வரும் சாரதாவின் நடிப்பு அசாத்தியம்.நேர்த்தியாக விவரிக்கப்படும் ராஜம்மாவின் பொழுதுகள் அவள் குறித்து அறிந்து கொள்ள போதுமானவை.நாலு பெண்ணுகள் திரைப்படத்தில் வரும் நந்திதாவின் கதாப்பாத்திரம் ராஜம்மாவின் சாயலை கொண்டதே.தன் திருமணத்தை தட்டிக் கழிக்கும் அண்ணன் உன்னியின் மீது அவளுக்கு எந்த வருத்தங்களும் இல்லை,வீட்டு வேலைகளில் உதவாது,அலங்கார மோகம் கொண்டு திரியும் ஸ்ரீதேவியின் மீதும் அவளுக்கு பிரியமே.





தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மட்டுமே உன்னி தன் உறவுகளை பயன்படுத்திக் கொள்கின்றான். அவனிடமிருந்து பெறுவதற்கு எதுவுமில்லை.பிறர் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே ராஜம்மாவின் வேலை,பரஸ்பர அன்பை பகிர்ந்து கொள்ள அவளுக்கு எவருமில்லை.ஊரில் இருந்து தனித்துவிடப்பட்ட அப்பெரிய வீட்டில்,ஒட்டுதல் இல்லாது இயங்கும் மூவர்.

எந்தவித மாற்றங்களும் காணாமல் தொடரும் அவர்களின் நாட்கள் எதிர்பாராத நாளொன்றில் அஸ்தமிக்கத் தொடங்குகின்றது.அவர்கள் வீட்டிலேயே ஒரு பெரிய எலிப்பத்தாயம் உண்டு.ஒவ்வொரு முறை அதில் சிக்கும் எலியை ஸ்ரீதேவி தூரத்தில் உள்ள குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரில் விடுகிறாள்.உன்னிக்கும்,ராஜம்மாவிற்கும் தெரியாத பிணியில் இருந்து தப்பிக்கும் கலையை அவள் நன்கு அறிந்து வைத்திருக்கிறாள், பின்னாளில் அதுவே அவளை அவ்வீட்டை விட்டு தூரம் போக செய்கின்றது.தீராத நோயின் காரணமாய் ராஜம்மாவும் உருகுலைந்துபோக நேரிடுகிறது.ஸ்ரீ தேவியும்,ராஜம்மாவும் இல்லாது போன வீட்டில் உன்னி எலிப்பத்தாயதிற்குள் சிக்கிய எலியைப் போல செய்வதறியாது திகைந்து வீட்டிற்குள் ஓடி ஒழிவதாக படம் முடிகின்றது.

மழை எந்தவொரு சூழ்நிலைக்கும் கணம் கூட்ட கூடியது. இப்படத்தின் இறுதிக் காட்சிகள் யாவும் மழையின் பின்னணியில் நிகழ்கின்றன.இப்பட கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வண்ணத்தில் உடை அமைத்ததில் உள்ள குறியீட்டை அடூர் தன் நேர்காணல் ஒன்றில் விளக்கியுள்ளார்(நன்றி விக்கி).ராஜம்மாவின் நீல நிற ஆடைகள் அவளின் தனிமையை,உன்னதத் தன்மையை விளக்குவதாக சொல்லியுள்ளார்,Blue Is The Warmest Color அல்லவா

கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் அடூரின் திரைப்படங்கள் தரும் நிறைவு அலாதியானது.தொடர்ந்து அவர் திரைப்படங்களை தேடிப் பார்க்க காரணமும் அதுவே.

2 comments:

நட்சத்திரா said...

எனக்கு பிடித்த படம். உங்கள் பதிவு ரசிக்க செய்கிறது.

நட்சத்திரா said...

எனக்கு மிகவும் பிடித்த படம். உங்கள் பதிவு ரசிக்க செய்கிறது.