
கதைகள் கற்பனா திறனை கூட்டுபவை.இரவு பொழுதுகளில் என் கழுத்தை கட்டி கொண்டு கதை கேட்கும் குட்டி தங்கைக்கென கதைகளை சேகரித்து கொண்டிருப்பேன்.கதைகளின் தோழி என்ற வார்த்தை அவளை ஞாபகபடுத்தியது.சூரியனும்,சந்திரனும்,நட்சத்திரங்களும் தோன்றிய கதை இரவும் பகலும்,கடலும் நிலமும் பிரிந்த கதைகள் தேசத்திற்கு தேசம் வேறுபடினும் பொதுவாய் முன்னிறுத்துவது கடவுளின் படைப்பின் மகிமையை.வானவில்லின் வண்ணங்கள் கொண்டு பூக்கள் நிறம் பெற்றதும்,சாபம் பெற்ற காதலனும்,காதலியும் பூவும்,வண்டுமாய் மாறியதும்,கன்னி பெண்கள் பனைமரமாய் மாறியதும்,பாம்புகள் தென்னை மரமாய் மாறியதுமாகிய நாடோடி கதைகள் அவற்றின் மீதான பார்வையை மாற்றி அமைப்பவை.
50 திற்கும் மேற்பட்ட நாடோடி கதைகள் கொண்ட இத்தொகுப்பில் நான் ரசித்த கதைகள் உப்பு மற்றும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு உருவானத்திற்கு சொல்லப்படும் நாடோடி கதைகள்.வியாபாரி ஒருவனின் பேராசையால் உப்பு தருவிக்கும் எந்திரம் கடலில் மூழ்கி அதை நிறுத்தம் மந்திரம் தெரியாததால் இன்றும் கடல் உப்பு தன்மை கொண்டுள்ளதாய் சொல்லுகின்றது குஜராத் பழங்குடியின கதை.ஒரே பெண்ணின் மீது ஆசை கொண்ட இரட்டையர்கள் அவள் மீதுள்ள காதலின் காரணமாய் எப்பொழுதும் இணைபிரியாதிருக்க வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பாக பிறவி எடுத்தாய் சொல்லுகின்றது வியட்நாம் தேசத்து கதை.நாள்முழுதும் பறவைகளுக்கும்,மிருகங்களுக்கும் வர்ணங்களை தீட்டிய கடவுள் இறுதியாய் வந்த குயிலை வர்ணம் ஏதுமின்றி அனுப்பியதால் அது சோகத்தோடு பாடி திரிவதாய் பிகார் பழங்குடியினர் நம்பிக்கை.
மேல சொன்ன கதைகள் இத்தொகுபிற்கான சிறிய அறிமுகம்.இதுபோன்ற எண்ணற்ற நாடோடி கதைகள் இதில் அடக்கம்.சர்ப்பம் நதியாகவும்,நதிகள் மரமாகவும்,மரங்கள் கடவுளாகவும் மாறியதாய் இருக்கும் நம்பிக்கைகள் ஆச்சர்யமூட்டுபவை.கதைகளை தருவிக்கும் ரகசிய குகையின் வாயில் எப்பொழுதும் திறந்தே இருக்கின்றது.அதை தேடி செல்வதும்,தேடாதிருப்பதும் அவரவர் விருப்பம்.எது எப்படியாயினும் கதைகளின் தோழியாய் இருப்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சி!!
வெளியீடு - உயிர்மெய்
விலை - 100 ரூபாய்