Wednesday, August 18, 2010

சூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு

"எந்த கழிவிரக்கத்தையும் கோராமல்,படித்து முடித்த பின் ஒரு பெண் மருத்துவரின் அறைக்குறிப்புகள் போலல்லாமல் நிதர்சனமாக முழுச் சுதந்திரதோடும் மேன்மையாகவும் வாழ ஆசை படும் பெண்களில் இரண்டு சதவிகித பேர் தவிர மீதமிருக்கும் பெண்களின் நிலை தான் மீராவின் கதாபாத்திரங்கள்"

- ஷைலஜா


மலையாள எழுத்தாளர் மீராவின் பெண்ணிய சிறுகதைகளின் தொகுப்பிது.பெண்ணியம் பேசி புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்கள் குறித்தான கதைகள் அல்ல இவை.அன்றாட சிக்கல்களில் இருந்து வெளிவர முயன்று தோற்கும் எதார்த்த பெண்கள் குறித்தான பதிவுகள்.பெண்களின் அகவுலகை வெகு நேர்த்தியாய் பகிரும் இக்கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாய் உணர செய்தன.



"செய்திகளின் நாற்றம்",பரவலாய் கவனம் பெற்ற இச்சிறுகதையை ஏற்கனவே படித்த ஞாபகம்.பத்திரிக்கை ஒன்றில் மரண செய்தி பிரிவில் எடிட்டராய் இருப்பவளின் அன்றாடம் அச்செய்திகளை போலவே சோகம் திணிக்கப்பட்டு நகர்வதை சொல்லும் சிறுகதை.எத்தனை அலுப்பு தரும் வேலை அது.இரவும் பகலும் மரண செய்திகளுக்காய் காத்திருக்கும் நாயகி மரணத்தின் நாற்றத்திற்கு தன்னை பழக்கப்படுத்தி கொண்டு முழுதுமாய் அதில் தோய்ந்து போகின்றாள்.மரண செய்திகளின் ஊடாய் கழியும் அவளின் தின பொழுதுகள் கணவனையும்,குழந்தையையும் கூட இரண்டாம் பட்சமாக்கி அவளை ஆட்டுவிக்கின்றது.உயிரற்ற அம்மனிதர்களும்,கல்லறை தோட்டத்து வசனங்களுமே அவளுக்கு நித்ய துணையாகி போகின்றன.அழுத்தம் நிறைந்த அவளின் மன உணர்வுகளுக்கு வெகு அருகில் சென்று வந்தது போன்ற அனுபவம் தேர்ந்த மொழிபெயர்ப்பினால் சாத்தியமாகின்றது.


"இருப்பினும் வேட்டைகாரனும்,பறவையும் ஒரே வலையில் மாட்டி கொள்வதுதான் திருமணம் என்பதை அவர்கள் சீக்கிரமே புரிந்து கொண்டார்கள்"

"அர்த்த ராத்திரிகளின் அலறல்" மற்றும் "இதயம் நம்மை ஆதரிக்கின்றது" ஆகிய சிறுகதைகள் நவீன வாழ்க்கை முறையில் பொருந்தி போக இயலாமல் அலைபாயும் நடுத்தர குடும்பத்து பெண்களை பகடி செய்யும் கதைகள்.குடும்ப பெண்களுக்கே உண்டான பொதுவான சாபங்களை தாண்டி வர இயலாத இயலாமையை நகைச்சுவை சாயம் பூசி பகிர்கின்றன இக்கதைகள்."இறந்தவளின் கல்யாணம்",கைகூடா காதலும்,மறுக்கபடும் வாழ்கையும் ஆதிவாசி பெண்ணொருத்தியை தற்கொலைக்கு இட்டு செல்லும் அவலத்தை,அதன் தொடர்ச்சியாய் நிகழும் ஆதிவாசிகளின் சடங்குகளையும் அவள் விரும்பியவனின் நினைவுகள் கொண்டு பகிர்கின்றது.அவள் தோற்றம் குறித்த விவரிப்புகள் அவளின் இலக்கிய ரசனையின் முன்பு யாதுமற்று போகின்றன. காதலின் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் இக்கதை நாயகி ஒடுக்கப்படும் சமூக பெண்களின் மற்றுமொரு குறியீடு.

இத்தொகுப்பில் மற்றொரு குறிப்பிட தகுந்த கதை "மோக மஞ்சள்".மருத்துவமனையில் சந்திக்க நேரும் திருமணமான நடுத்தர வயது ஆணிற்கும்,விதவை பெண்ணிற்குமான ஒரு நாள் உறவை கற்பு,புனிதம் இத்யாதிகள் கொண்டு பூசி மொழுகாது எதார்த்த நிலை கொண்டு புரிய வைக்கும் கதை.சந்தோஷத்திற்கான எல்லா சாத்தியங்களும் மறுத்தளிக்கபட்ட நிலையில் அவள் கொள்ளும் அந்த நேசமும் மரணத்தின் துணை கொண்டு கரைந்து போவது பெரும் சோகம்.தொடரும் வீழ்ச்சிகளின் இருந்து விடுபட பிரியத்தை எதிர்நோக்கி காத்திருந்து தோற்கும் சராசரி பெண்களை குறித்த கதைகள் இவை.பளிச்சிடும் பல வரிகள்..அத்தனை எளிதாய் கடந்து போகவிடாது செய்கின்றன,நேர்த்தியான மொழிபெயர்ப்பு.முன்னுரையில் பகிரப்படும் இந்த கவிதையில் எல்லாமும் சொல்லபடுகின்றது.

அளவாய் செதுக்கப்பட்ட
கண்ணாடி தொட்டிக்குள்
கம்பீரமாய் நீந்தி விளையாடுகிறேன்
தினம் தினம் அக்கறையோடு
சுத்தம் செய்யபடும் தண்ணீர்.
பதப்படுத்தப்பட்ட செடி கொடிகள்
தேடி அலையாமல் வாய்க்குள்
வந்து விழும் உணவு
தேவையை சரியாய் புரிந்து கொண்டு
அளிக்கப்படும் பொழுதுபோக்குகள்
என் இருத்தல் பார்ப்பவர்களுக்கு
நான் கொடுக்கும் சந்தோசம்
அழகாய் வளைந்து நெளிந்து
பொன்னிறத்தில் மின்னி
வாலசைத்து தலையசைத்து
சந்தோசம் காட்டுவதாய்
எல்லா சுதந்திரங்களோடும்
எவ்வித சுதந்திரமுமின்றி


ஆசிரியர் - கெ.ஆர்.மீரா
தமிழில் - கே.வி.ஷைலஜா
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்

Monday, August 9, 2010

வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்" - சிறுகதை

"அவரது படைப்புலகம் கருணையும் சௌந்தர்யமும் கலந்தது"

- வண்ணநிலவன்

அன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம்."கடைசியாய் தெரிந்தவர்",மருத்துவமனையில் நண்பனின் குழந்தைக்காக உடன் இருக்கும் நாயகனின் பார்வையில்,அந்நாட்கள் பகிரப்படுவதான கதை.மருத்துவமனையில் இரவு தங்கலும்,அந்த அசாதாரண சூழ்நிலை தரும் தயக்கங்களும், அச்சமும்,நோயாளி சமநிலை வரும்வரை கொள்ளும் மன உளைச்சலும் வார்த்தைகளில் அடக்கிட முடியாதவை.பிரியத்திற்குரிய உறவுகளுக்காக மருத்துவமனையில் செலவிட்ட நாட்கள்,நினைவேட்டில் நிரந்தரமாய் மறைத்து வைக்க வேண்டியவை.அதிலும் முக்கியமாய் மருத்துவமனை இரவு தங்கள்,அமானுஷ்ய உணர்வை தந்து இம்சிக்கும் அனுபவம் அது.ஏதோ ஒரு நம்பிக்கை அந்த கணங்களை கடக்க அவசியம் ஆகின்றது.

"இந்த தைரியம் தான் மறுபடி மறுபடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரியை நோக்கி யாருடனாவது என்னை செலுத்தி கொண்டிருக்கின்றது"





குறுகலான அந்த பாலி கிளினிக்கின் காட்சிகளை விவரிப்பதோடு தொடங்கும் சிறுகதை.மெல்ல மெல்ல மருத்துவமனையின் அன்றாட காட்சிகளை விரிவாய் பகிர்கின்றது.நோயுற்று இருப்பவரின் உடன் இருப்பவர்கள் நோயாளி தேறியவுடன் கொள்ளும் மனநிலையை கீழ் உள்ள வரிகள் சிறப்பாய் விவரிக்கின்றன,

"பக்கத்துக்கு அரைப் படுக்கைகாரரிடம் வழிய போய் பேசுவார்கள்.அனுதாபம் கொள்வார்கள்.."டூட்டி முடிந்து விட்டதா சிஸ்டர்?" என நர்சிடம் விசாபார்கள்"............"நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கவனித்திருந்த நோயாளியின் உடல்நலம் தேறிவிட்டது என்று"

நண்பனின் குழந்தைக்காய் இரவும் பகலும் அத்தம்பதியினருடன் உடனிருக்கும் நாயகன்,குழந்தையின் உடல் நிலை தேறியதும் நண்பனின் மனைவி கொள்ளும் மாற்றத்தை உணர்ந்து கொள்ளும் தருணம் நெகிழ்ச்சியானது.நண்பன் மற்றும் அவனது மனைவியின் அசாதாரண சூழலுக்குள் தன்னையும் பொருத்தி கொண்டு மருத்துவமனையில் உலாவரும் நாயகனின் பார்வையில் விரியும் இச்சிறுகதை ஒழுங்கற்ற அந்நாட்களை நுட்பமாய் பகிர்கின்றது.

இச்சிறுகதையின் கடைசி பகுதி இன்னும் அழுத்தமானது.முன்பின் அறிமுகம் அற்ற நபர்களிடம் வேறு ஒரு பெயர் கொண்டு நிற்பது சுவாரஸ்யத்தை மீறிய ஒரு சங்கடம்.பக்கத்துக்கு அறையில் இருக்கும் கபீர் என்னும் நோயாளி தன்னை வேறொரு சங்கரலிங்கம் என கருதி நலம் விசாரித்து யாரோ ஒரு பெண்ணை குறித்து "வசந்தா இப்போ எங்கே இருக்கா?" என ஆர்வமாய் கேட்கின்றான்,அந்த கேள்வியின் துரத்தலின் பொருட்டே அவன் தன்னை அணுகி இருக்கின்றான் என அறிந்து "ஜபல்பூரிலே.." சொல்லி வெளியேறுகிறான் நாயகன்.

"எனக்கு ஜபல்பூர் தெரியாது.வாய்க்காலடி வீட்டுச் சங்கரலிங்கம் தெரியாது.......சில மனுஷர்களோடு இப்போது கடைசியாய் இந்த கபீரையும் தெரியும்" என முடிகின்றது இச்சிறுகதை.

திடிரென யாவும் கலைந்து போனதாய் மாறிவிடும் சூழலில்,அன்றாடங்களை ஒதுக்கி விட்டு மொத்தமாய் நோயாளியின் மீது கவனத்தை குவித்து..இரவும் பகலும் அலுக்காமல் உடன் இருந்து கவனிக்க செய்வது எது?அன்பு ஆச்சர்யங்கள் நிறைந்தது,இயல்புலகம் மாறி போகும் தருணத்தில் அது அதிகமாய் உணரப்படுகின்றது.மனித உறவுகள் அற்புதமானவை என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் எழுத்து வண்ணதாசனுடையது.

இவ்வேளையில் எஸ்.ராவின் "பி.விஜயலக்ஷ்மியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை குறிப்பிட வேண்டும்.வண்ணதாசனின் சிறுகதை எத்தனை மென்மையாய் மருத்துவமனை நாட்களை பகிர்கின்றதோ அதற்கு நேரெதிராய் எஸ்.ரா தன சிறுகதையில் உறவுகளால் கைவிட பட்ட ஒரு பெண்ணின் மோசமான மருத்துவமனை நாட்கள் குறித்து பகிர்கின்றார்.மனநடுக்கம் கொள்ள செய்யும் விஜயலக்ஷ்மியின் கடந்த கால குறிப்புக்கள் தரும் அதிர்ச்சியில் இருந்து எளிதில் மீள முடியாது.இவ்விரு கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் என்னை வெகுவாய் பாதித்தவை,பிரியமானவர்களுக்காய் மருத்துவமனை நாட்களை கடந்து வந்த எவர்க்கும்.

வண்ணதாசன் கதைகள்
வெளியீடு - புதுமைப்பித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

Saturday, August 7, 2010

கவிஞர் மீரா நினைவஞ்சலி கவிதை கண்காட்சி

Sunday, August 1, 2010

மஜித் மஜிதியின் "பெடார்"



துரோகங்கள் தான் எத்தனை வகை..ஒரு சிறுவனின் உலகினுக்குள் அது நிகழும் பொழுது எழும் சொல்லவியலா மனப் போராட்டத்தை நேர்த்தியாய் வடித்திருக்கும் படம் "பெடார்"(Father).சாலை விபத்தொன்றில் தந்தையை இழக்கும் சிறுவன் மெஹருல்லா தன் தாயையும்,தங்கைகளையும் காப்பாற்ற கிராமத்தை விட்டு பெருநகர் ஒன்றிற்கு பணிக்கு செல்கின்றான்.திரும்பி வரும் ஒரு நாளில்,நண்பன் லத்தீப்பின் மூலம் தனது தாய் மறுமணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்கின்றான்.பணத்தின் பொருட்டே தாய் அவ்வாறு செய்திருக்க கூடும் என எண்ணி அவள் மீதும்,அவள் மணம் புரிந்துள்ள போலீஸ் அதிகாரியான புதிய தகப்பனின் மீதும் கோவமும்..வன்மமும் கொள்ளும் மெஹருல்லா நண்பன் லத்தீப்பின் துணை கொண்டு சிறுபிள்ளைதனத்தோடு தனது எதிர்ப்பினை காட்டுகின்றான்.

மெஹருல்லா மற்றும் லத்தீப்பாக நடித்துள்ள சிறுவர்களின் நடிப்பு அபாரம்.முக்கியமாய் மெஹருல்லாவாக நடித்துள்ள ஹசன் சதேகி,இறுக்கமான முகத்தோடு..துரோகத்தின் வலியை வெளிக்காட்டாது,பிடிவாதாமான மனநிலையை ஒரு காட்சியிலும் தவறவிடாது நடித்துள்ளது வெகுநேர்த்தி.இச்சிறுவனின் நடிப்பிற்காகவே படத்தை மறுமுறை பார்க்கலாம். லத்தீப்பாக "பாரான்" திரைப்படத்தின் நாயகன்.அதே வெகுளி சிரிப்போடு ஒரு கிராமத்து சிறுவனை கண் முன் நிறுத்துகின்றான்.நண்பனுக்காய் ஓடி ஓடி உதவுவதாகட்டும்,பின்பு பயந்து பதறுவதாகட்டும் மறக்கவியலா நடிப்பு.சில முகங்கள் காரணம் அற்று பிடித்து போய்விடுவதுண்டு இவனது போல.

தாயோடு சேராது,தனது பூர்வீக வீட்டை லத்தீப்பின் உதவி கொண்டு புதுப்பித்து அதில் தங்கைகளை கடத்தி வந்து வைத்து கொள்ளும் மெஹருல்லா,அவர்களை தேடி வரும் தந்தையிடம் பேசாது தன் கோபத்தை மௌனத்தால் வெளிக்காட்டுவது,மறுமணம் செய்து கொண்டது,பணத்திற்காக தானே எனக்கூறி தாயிடம் பணத்தை வீசி எறிந்து வாதிட்டு அடிவாங்குவது,தங்கைகளை மடியில் அமர்த்தி கொஞ்சுவது,பெருமழைநாளில் அவர்கள் வீட்டில் கல்லெறிந்து,தோட்டத்தை நாசம் செய்வது என முன்பாதி காட்சிகள் யாவும் மெஹருல்லா அவன் குடும்பத்தின் மீதி கொண்டிருக்கும் அளவற்ற பிரியத்தை,இறந்த தன் தந்தையின் இடத்தை வேறொருவர் இட்டு நிரப்ப இயலும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத மனநிலையை உணர்ந்திட போதுமானாதாய் இருக்கின்றன.



மெஹருல்லா தனது புது தந்தையிடம் கொண்டிருக்கும் கோவமும்,வன்மமும் அர்த்தமற்றது என்பது அவரை அறிமுகம் செய்யும் (லத்தீப்பின் தங்கைகளை மடியில் அமர்த்தி உணவு உண்ணும் காட்சி) முதல் காட்சியிலேயே உணர்த்தபடுகின்றது.அந்த முரட்டு சிறுவனின் கோவத்திற்கு ஈடு கொடுக்க இயலாது மன உளைச்சல் கொள்ளும் தருணங்களை,உணர்ச்சி குவியலாய் வெகு நேர்த்தியாய் வெளிக்கொணர்ந்திருக்கின்றார் தந்தையாய் நடித்துள்ள முஹமத் கசெப்.மேஹருல்லாவின் தாயை அவர் மணம் முடித்து,அவளின் குழந்தைகள் குறித்தும்,அவர்களின் எதிர்காலம் குறித்தும் மகிழ்ச்சியோடு அவர் உரையாடும் ப்ளாஷ் பேக் காட்சி நெகிழ்ச்சியானது.போலீஸ் அதிகாரியான இவரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து கொண்டு மீண்டும் நகரத்திற்கு ஓடிவிடும் மெஹருல்லாவை தேடி இவர் மேற்கொள்ளும் பயணத்துக்கு பிறகான காட்சிகள் முக்கியமானவை.

மோட்டார் சைக்கிளிலே நகரத்திற்கு சென்று அங்கு மெஹருல்லாவை தேடி பிடித்து,விலங்கிட்டு தம்மோடு கிராமத்திற்கு அழைத்து வருகின்றார்..சுட்டெரிக்கும் வெயிலில்,நேர் எதிர் மனநிலைகொண்ட இருவர் முகம் பார்த்து பேச விருப்பமின்றி மேற்கொள்ளும் பயணம்.....எதிர்பாரா விதமாய் மோட்டார் சைக்கிள் கோளாறினால் ஆள் இல்லா பாலைவனத்தில் இருவரையும் தனிமைபடுத்தி அவர்களுக்குள்ளான இறுக்கத்தை மெல்ல மெல்ல விடுவிக்கின்றது.சேருமிடம் தெரியாது பாலைவனம் எங்கும் இருவரும் அலைந்து திரியும் சமயம் அதீத உடல் சோர்வினால் மெஹருல்லாவை தன்னை விட்டுவிட்டு போகும்படி நிற்பந்திக்கும் தந்தையை விட்டு விலகாது நீர்நிலை கண்டடைந்து அவரை இழுத்து சென்று நீர் அருந்த செய்யும் மெஹருல்லா,அவர் மீதான நேசத்தை உணரும் அற்புத கணத்தோடு முடிகின்றது திரைப்படம்!!

தாய்,தந்தை இருவருக்குமான பிரியங்கள் எவரோடும் பகிர்ந்து கொள்ள கூடியதில்லை.......அவர்களுக்கு மட்டுமேயானது ..!!அவ்வகை பிரியத்தை வேறொருவரோடு பகிரும்படியான சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகும் ஒரு சிறுவன் கொள்ளும் உணர்ச்சி போராட்டத்தை நுட்பமாய் பகிர்கின்றது இத்திரைப்படம்.

Tuesday, July 27, 2010

அந்தோன் சேகவ் கதைகள் - ரஷ்ய மொழிபெயர்ப்பு

உலக இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமான பெயர் அந்தோன் சேகவ்.ரஷ்ய எழுத்தாளரான சேகவின் சிறுகதைகளும்,குறுங்கதைகளும் அடங்கிய தொகுப்பிது.சேகவ் விவரிக்கும் கதைகள் ஊடாக தொன்மையான ரஷ்யாவின் அன்றாட காட்சிகள்..குடும்ப சூழல்..சமூக கட்டமைப்பு போன்றவை மிக தெளிவாக புலப்படுகின்றன.அதிகார வர்க்கத்தின் மேட்டிமைத்தனத்தை, மெலிந்தோரின் அடிமை புத்தியை பெரும்பாலான கதைகள் வாசகனுக்கு முன்னிறுத்துகின்றன.எள்ளல் மிகுந்து,சோகம் தோய்ந்து,சலனம் அற்று,காத்திரம் நிறைந்து என கலவையான எழுத்து...தேர்ந்த மொழிபெயர்ப்பினால் நல்லதொரு வாசிப்பனுபவமாய் அமைந்தது.




பச்சோந்தி(1884 ),எல்லா கால கட்டத்திற்கும் பொருந்தும் கதை.கடை வீதியில் ஒருவனை நாய் கடித்துவிட்டதாய் கேள்விப்படும் காவல்துறை அதிகாரி முதலில் நாய்க்கு உரியவனை திட்டி தீர்ப்பதும்,பின்பு அது ஜெனரல் உடையதாக இருக்கக்கூடும் என அறிந்து சட்டென பேச்சை மாற்றுவதும் என சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் சராசரி அரசு அதிகாரியின் புத்தியை நகையாடுகிறது.முகமூடி(1884 ),சமூக மன்றம் ஒன்றின் காட்சிகளை எள்ளல் தொனிக்க விவரிக்கும் இக்கதை மோசமானதொரு சமூக சூழலை மறைமுகமாய் வாசகனுக்கு உணர்த்துகின்றது.வருடங்கள் எத்தனை கடந்தாலும் பணபலம் பொருந்திய மேல் வர்க்கத்திற்கு சலாம் போடும் மனநிலை,மனித சமுதாயத்தில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரும் அவலத்தை மீண்டும் நினைவுறுத்துவதான கதை.


வான்கா(1886 ),இத்தொகுப்பில் என்னை மிக கவர்ந்த கதை.வேலை பயில முதலாளியின் வீட்டில் தங்கி இருக்கும் ஏழை சிறுவன் வான்கா,தூரத்து கிராமத்தில் இருக்கும் தன் தாத்தாவிற்கு எழுதும் கடிதத்தை சிறுவனின் மனநிலையில் இருந்து வாசித்ததால் அதில் விரவி இருக்கும் பிரியத்தை சோகம் தாண்டி ரசிக்க முடிந்தது.முதலாளியின் கொடுமை தாங்காத சிறுவன் வான்கா மீண்டும் வீடு சேர ஆவல் மேலிட,தன் வருத்தங்களை,தாத்தாவிற்கான தனது பிரியங்களை நிறைந்த கனவுகளோடு எழுதும் இக்கடிதம் மனதை கனக்க செய்வது..


"என் அன்பிற்கு உரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை.எனக்கு உயிர் போகின்றது.இங்கிருந்து ஓடி விடலாம்.நடந்தே கிராமத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்...நான் பெரியவன் ஆனதும் உன்னை கருத்துடன் கவனித்து கொள்வேன்.உன்னை யாரும் துன்புறுத்த விடமாட்டேன்..."



"கூட்டில் அடைந்த மனிதர்" (1898) ,மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணாதிசியங்களை நாம் பெரிதும் பொருட்படுத்துவதில்லை அது இயல்பை மீறும் வரை.எதார்த்த வாழ்கையை விட்டு முற்றிலும் தம்மை துண்டித்து கொண்டு உலவுவோர் நம்மிலும் உண்டு.அத்தகைய மனிதர் ஒருவரை பற்றிய சுவாரஸ்ய கதையே இது.பேலிக்கவ்,கிரேக்க மொழி பேராசிரியரான இவரின் அன்றாடங்கள் சராசரி மனிதர்களிடம் இருந்து வேறுபடுவதோடு பெரும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது..எப்போதும் புதைமிதி கால்மிதிகள் அணிந்து,மடித்துவிட்ட முழுக்கை சட்டை மற்றும் குடையுடம் தோன்றும் பேலிக்கவ் கடந்த காலத்தை மட்டுமே புகழ்ந்து பேசி நிகழ்காலந்தின் மீது தீரா வெறுப்பு கொண்டு யாவரும் வெறுக்கும் மனிதராய் இருக்கின்றார்.அவருக்கு ஏற்படும் எதிர்பாரா காதல்,அதன் ஊடாய் கொள்ளும் மாற்றங்களும் தொடர்ச்சியாய் நிகழும் மரணமும் என நேர்த்தியாய் அம்மனிதனின் வாழ்க்கையை விவரிக்கின்றது இக்கதை.


"பள்ளத்து முடுக்கில்"(1900),வாழ்ந்து ஒழிந்த குடும்பத்தை பற்றிய கதை என மேலோட்டமாக கொண்டாலும்..மறைமுகமாய் இக்கதை அக்காலகட்டத்தில் ரஷ்ய அதிகார வர்க்கங்களிடையே பெருகி கிடந்த போலித்தனங்களும்,அதை மூடி மறைக்க மேற்கொண்ட வழிமுறைகளும்.. தெரிந்தும் எதிர்த்து கேட்கவியலா பொதுஜன நிலையையும் கடுமையாகவே சாடுவதாக உள்ளது."தத்துக்கிளி"(1892 ),அசல் மேல்குடி பெண்ணான ஒல்கா இவானவ்னா,கேளிக்கைகளிலும்..இசை,நடனம்,ஓவியம்,இலக்கியம் மீதான ஆர்வத்தினால் கூடா நட்பு கொண்டு தனது இனிய காதல் கணவனை இழந்து நிற்கும் பரிதாப நிலையை விரிவாய் சொல்லும் இக்கதை,இல்லறம் தாண்டும் பெண்களின் முடிவை ஓர் கணவனின் உண்மை காதலோடு சொல்லும் சோக காவியம்!!

சேகவ், சித்தரித்துள்ள ரஷ்யா மறைந்து புது ரஷ்யா தோன்றிவிட்டது...அவர் கதைகளில் சாடிய அதிபர்களும்,வர்த்தகர்களும் கடந்த காலத்திற்கு உரியவர்களாகி போனார்கள்..இருப்பினும் ஒவ்வொரு கதையில் அவர் முன்னிறுத்திய உண்மை மறுக்கவியலாதது.காலம் கடந்து இன்றும் இவ்விலக்கியங்கள் பேசபடுவதற்கும் அதுவே காரணம்.

மொழிபெயர்ப்பாளர் - ரா.கிருஷ்ணையா
வெளியீடு - முன்னேற்ற பதிப்பகம் (1975 )

Wednesday, May 19, 2010

பதின் வயது நினைவுகள்...

பதின் வயது நினைவுகளை மீட்டெடுக்கும் இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழர் ஜெயமார்த்தாண்டனுக்கு நன்றி.

பதின் வயது என்றெண்ணும் பொழுது....... அம்மாச்சி வீட்டில் கழித்த விடுமுறை நாட்கள்,பள்ளி நட்புகள்,சந்திரகாந்தா /மோக்லியுடனான ஞாயிறு காலைகள்,பல்லாங்குழி/ஆட்டம்,கல்லா-மண்ணா/தாயம்/கொக்கோ,அம்புலிமாமா-ராணி மிக்ஸ்,ஒலியும் ஒளியும்,பள்ளிக்கு தினமும் சென்று வந்த ரிக்சா பயணம்,பங்கு கொண்ட பேச்சு - கட்டுரை போட்டிகள்,பரிட்சைக்கு பயந்து தூங்காது கழித்த இரவுகள்,பிரியத்திற்குரிய ஆசிரியைகள்,ஏக்கமாய் இருந்த ரயில்பயணம்,கடலை காணும் பேராவல்,கிராமத்தில் கமலை கிணற்று குளியல்கள்,பட்டாசலை வாசலில் அமர்ந்து தாத்தாவிடம் பழங்கதைகள் பேசிய பொழுதுகள் என கலவையாக பலவும் நினைவிற்கு வந்து போகின்றன...மீண்டும் மீண்டும் பேசினாலும்/நினைத்தாலும் தீராத நாட்கள் அவை!!

படித்த பள்ளி..அம்மையும்,அம்மாச்சியும் படித்ததும் அங்கே தான்..முதல் நாளில் அதன் பிரம்மாண்ட தோற்றம் தந்த ஆச்சர்யம் விலக பல நாட்கள் பிடித்தது.ஆங்கிலேய காலத்து கட்டிடங்கள்,ஓங்கி வளர்ந்த மரங்கள்,பரந்த மைதானங்கள்,கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்கள்,சேல்ஸ் டே என வீட்டு பாடம்,கண்டிப்பான ஆசிரியைகள் தாண்டி பள்ளி நாட்கள் பிடித்து போக அனேக காரணங்கள் இருந்தன.பள்ளி தந்த நட்புகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன....மழை ஓய்ந்த ஒரு மாலையில் கூடை பந்து மைதானத்தில் சைக்கிளில் வட்டமடித்தபடி பிரிவை குறித்து பேசிகொண்டிருந்தேன் தோழிகள் இருவரோடு ....ஆச்சர்யமாய் இப்போது மூவருமே ஒரே பணியிடத்தில்.இப்பொழுதும் மழை நாட்களில் என் பள்ளியை நினைத்து கொள்வேன்,சில இடங்களை மழையோடு பொருத்தி பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை!!

மனோகரன் அண்ணா,தல்லாகுள வீதிகளில் எங்கே இடர்பட்டாலும் பெரிதாய் புன்னகைப்பார்..சட்டென,ரிக்சா 8:௦௦ மணிக்கு என பரபரத்த காலை பொழுதுகள் நினைவிற்கு வந்து மறையும்.ஒவ்வொரு வருடமும் நோட்டு/புத்தகங்களுக்கு அட்டை போட்டு லேபிளில் எழுதும் பொழுது, அப்பா "ம்ம்ம்..சார் பெரிய கிளாஸ் போறிங்களா" என சொல்லி கொண்டே தன் அழகிய கையெழுத்தில் பெயர்,வகுப்பு எழுதி தந்தது நேற்றைய நிகழ்வு போல உள்ளது...





விடுமுறை நாட்களை கழிக்க எப்போதும் எனக்கு இரண்டு சாய்ஸ் உண்டு.அம்மாச்சி வீடு அல்லது அப்பாவின் கிராமம்...அம்மாச்சி.பெரியம்மாக்கள் எல்லாரும் ஆசிரியர்கள் என்பதாலோ ஒரு வித மிலிட்டரி தனமான ஒழுங்கு முறை விடுமுறை நாட்களிலும்...நேரத்திற்கு சாப்பாடு,குளியல்,நிழலில் மட்டுமே விளையாட வேண்டும் என்று..இதற்கு தலைகீழாய் எங்கள் கிராமத்தில் தாத்தா பாட்டி உடன் கழித்த பொழுதுகள்,பேருந்து வசதியற்ற அன்றைய நாட்களில் பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து நடந்தே எங்கள் ஊருக்கு செல்வோம்..வீட்டை சென்றடைய எந்நேரம் ஆனாலும் பாட்டியை தேடி வயற்காட்டிற்கு ஓடி விடுவேன்..வாழை தோட்டத்திலோ,கடலை காட்டிலோ,தென்னந்தோப்பிலோ.....தேடி சென்று கட்டிக்கொள்வதில் ஒரு அலாதி பிரியம்!!

அங்கு தங்குதடைகள் எதுவும் இல்லை..புழுதி காட்டில் ஆடி திரியலாம்..பம்ப் செட்டில் குளித்து மகிழலாம்..மாலையானால் மந்தையில் பிள்ளைகளோடு விளையாடலாம்..... வளையல் வியாபாரிகள்,குச்சிஐஸ் வண்டிக்காரர்,பருத்திப்பால் வியாபாரிகள் என சில்லறை செலவு செய்ய காரணமானவர்கள் நிறைய..!!மாலை நேரங்களில் ஆட்கள் நிரம்பி சலசலவென இருக்கும் பட்டாசலையில்,அமைதியான பகல் பொழுதுகளில் அமர்ந்து தெருவை..அரிதாய் வரும் இரண்டொரு வியாபாரிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் கூட அன்றைய பொழுதுகளில் சுவாரஸ்யமே!!

தொலைகாட்சியின் ஆதிக்கம் இப்போது போல 90களில் இல்லாத காரணத்தினால் இயல்பாய் கவனம் வாசிப்பின் பக்கம் சென்றதில் வியப்பில்லை.சிறுவர்மலர்,அம்புலி மாமா,ராணி காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி,சிந்துபாத் கதைகள்,அரேபியன் நைட்ஸ்,ஈசாப் நீதி கதைகள்,தெனாலி ராமன்,பீர்பால் என விடுமுறை நேர பகல் பொழுதுகள் கற்பனைகள் நிறைந்ததாகவே கழிந்தன.வெள்ளி இரவு ஒலியும் ஒளியும்,ஞாயிறு காலை மோக்லி,சந்திரகாந்தா ..மற்றும் இரவு தந்தூரி நைட்ஸ்,ஓஷின்(வெகுவாய் ரசித்த தொடர் இது..),ஸ்ட்ரீட் ஹாக் என குழப்பிக்கொள்ள அதிகம் இல்லாது தொலைகாட்சியோடு கழிந்த பொழுதுகள்..தீவிர வாசிப்பும்,ராஜாவின் இசை மீதான கிறுக்கும் தொற்றிகொண்டது பதின்மங்களில் இறுதியில்.

பதின்மன் காலம் குறித்து யோசிக்க யோசிக்க மீண்டும் அதனுள் புகுந்து விடமுடியாதா என ஏக்கமே மிஞ்சுகின்றது..சுழட்டி அடிக்கும் எந்திர வாழ்க்கைக்குள் புகுந்தாகி விட்டது. இப்பெருநகர சிடுக்கில் தொடர்ந்து இயங்க நினைவுகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.அவ்வகையில் கீழ் உள்ள வண்ணதாசனின் வரிகள் அர்த்தம் மிகுந்ததாய் படுகின்றன.

"இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது"

-- வண்ணதாசன்


பதின்மன் கால நினைவுகளை தொடர நர்சிம்மை அழைக்கின்றேன்

Wednesday, May 5, 2010

ரைநீஸ் ஐயர் தெருவில்.......!!

வாசிப்பின் இடையே இடர்படும் ஏதேனும் இடம் குறித்த சிறுகுறிப்பும் ஈர்த்திடும்.. முடிந்தால் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் சட்டென தோன்றி மறையும்.பள்ளி நாட்களில் படித்த சரோஜினி நாய்டுவின் "Bazaars Of Hydrabad " கவிதை அப்பெரு நகரின் ஜன நடமாட்டம் நிறைந்த சந்தை காட்சிகளை வெகு அழகாய் விவரிக்கும்.அந்த நகரம் குறித்த அழகிய பிம்பத்தை தோற்றுவித்த அவ்வர்ணிப்புகள் இன்றும் நினைவில் உண்டு.



மதுரைக்கு அடுத்தபடியாய் மனதிற்கு நெருக்கமாய் உணரும் நகரம் நெல்லை.நேரில் சென்று பார்க்கும் முன்னரே அத்தகைய உணர்வை தோற்றுவித்தவை வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் கதைகள்.வேனிற் காலத்து நீண்ட பகல்கள்......ராஜாவின் இசை..வண்ணதாசன் சிறுகதைகள் - மூன்றும் சேர்ந்த பொழுதுகள் ஊடே,அந்நகரம் சார்ந்த வாசிப்பு கூட என் ஆர்வத்தை கூட்டிட காரணமாய் இருக்கலாம்.இவர்களின் கதைகளில் வரும் நெல்லை குறித்த வர்ணிப்புகளை பெரும்பாலும் மதுரையோடு குழப்பி கொள்வேன்.வண்ணதாசனின் "ஆறு" சிறுகதையில் சுலோச்சன முதலியார் பாலம் - அரவிந்த் கண் மருத்துவமனை குறித்து வாசித்துவிட்டு மதுரையில் அந்த பாலம் எங்குள்ளது என அப்பாவிடம் விசாரித்தது நினைவில் உள்ளது.

வண்ணநிலவனின் "கம்பா நதி" குறித்த பதிவில்....

"தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது...."


கதைகளில் வாசித்து,காட்சிபடுத்தியிருந்த இடங்களை நேரில் தேடி சென்றது இதுவே முதல் முறை..வாசிப்புதேடல் ஒரு வகை சுவாரஸ்யம் என்றால் இது ஒருவகை,சொல்ல தெரியவில்லை.அதிகப்படியான கிறுக்காய் கூட தோன்றலாம்..மதுரையில் இருந்து சாத்தூர்,கோவில்பட்டி,இடைச்செவல், கயத்தாறு வழி சென்ற மரங்கள் அற்ற நெடுஞ்சாலை பயணம் தந்த அயர்ச்சி நெல்லையை அடைந்ததும் சட்டென மறைந்துவிட்டது.மல்டி ப்ளெக்ஸ்,காபி டேக்களின் பிடியில் சிக்காது அதன் இயல்போடு மிளிரும் சிறு நகரம்!!வார்த்தைகளின் கண்டிருந்த சுலோச்சன முதலியார் பாலம்,தாமிரபரணி ஆறு,ரத்னா டாக்கீஸ் தொடங்கி கோவில் ரத வீதிகள்,தெப்பம்,சென்ட்ரல் டாக்கீஸ் என பல இடங்களை பார்த்து வந்தது இனம் புரியா மகிழ்ச்சி!!



வண்ணநிலவனின் "ரைநீஸ் ஐயர் தெரு"- டாரத்தி,அன்னமேரி,இருதயம்,தியோடர்,சாம்சன், பிலோமி,ஆசிர்வாதம் பிள்ளை,எபன் என வண்ணநிலவன் அந்நாவலில் உலவ விட்ட கதை மாந்தர்களை எளிதில் மறப்பதற்கில்லை.எப்போதும் மழை நனைத்த தெருவாகவே அதை உருவகப்படுத்தி வைத்திருப்பேன்.மழைக்கும் அத்தெருவிற்குமான உறவு நாவலில் வெகு நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.பாளையங்கோட்டையில் சிறு தேடலுக்கு பிறகு ரைநீஸ் ஐயர் தெருவை கண்டுகொண்டதும் சிறு பிள்ளைக்கான உற்சாகம் தோன்றி மறைந்தது!!


நகரின் எளிமை,நெல்லையப்பர் கோவிலின் அழகிய சிற்பங்கள்(சாமி சன்னதிக்கு முன்பான தூண்கள் ஏற்படுத்திய பிரமிப்பு),நேர்த்தியான தேர் வீதிகள்,அழகு தமிழ்,தெப்பக்குளம்,தாமிரபரணி..அதன் கரையோர கல் மண்டபங்கள்,பரபரப்பான கடை வீதிகள்,எந்திரதனம் அற்ற மனிதர்கள்...என அச்சிறு நகரத்தை பிடித்து போனதிற்கு காரணங்கள் பலவுண்டு!!பெருமழை காலத்தில் மீண்டும் நெல்லை சென்று வர வேண்டும் தாமிரபரணியில் வெள்ளம் பார்க்கவேணும் !!