Sunday, December 12, 2010

நிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள்

ஜெயந்தனின் அறிமுகம் கிடைத்தது அசோகமித்ரனின் "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்" (நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு)தொகுப்பில்.ஜெயந்தனின் "பகல் உறவுகள்" சிறுகதை அதில் இடம்பெற்றிருந்தது.அத்தனை எளிதில் கடந்து விட முடியாத கதை அது.வெளியுலகத்திற்கு ஆதர்சமாய் தெரியும் தம்பதிகளின் நிஜ உலகம் பழிவாங்கலும்,வன்மமும் பீடித்து அலங்கோலமாய் இருப்பதைச் சொல்லும் கதை.புரிதலின் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் விபரீதங்கள் அழுத்தமாய் முன்வைக்கப்படுகின்றன இக்கதையில்.எதிரியின் பலவீனம் அறிந்து வீழ்த்துவது புத்திசாலித்தனம்,இதுவே கணவன் மனைவிக்கிடையே நிகழுமாயின்?!அவர்கள் படித்தவர்கள். நாகரிகம் கற்றவர்கள்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்க படவேண்டியவை.தமிழில் முக்கியமான சிறுகதை இது.

அதற்கு பிறகு ஜெயந்தனின் கதைகள் எங்கும் வாசிக்க கிடைக்கவில்லை.தொடர்ந்து அந்த எழுத்தாளனை நினைவில் நிறுத்திக்கொள்ள இச்சிறுகதையே போதுமானதாய் இருந்தது.தமிழில் கவனம் பெறாமல் போன எழுத்தாளர்களுள் ஜெயந்தனும் ஒருவர்.வம்சி வெளியிட்டுள்ள ஜெயந்தனின் மொத்த சிறுகதைகளின் இத்தொகுப்பு நீண்ட தேடலுக்கு பிறகு வாசிக்க கிடைத்தது.நிதானமாய் வாசித்து,ரசிக்கப்பட வேண்டியவர்கள் ஜெயந்தனின் கதை மாந்தர்கள்.தன் இயல்போடு இருந்து நம்மை பதற்றம் கொள்ள செய்பவர்கள்.மேலும் சமூகத்தின் மீதான கோபத்தை தன் கதைகளில் வெளிக்காட்ட கொஞ்சமும் தயங்கவில்லை இவர்.




இத்தொகுப்பில் மிகப்பிடித்த சில கதைகள் குறித்து இங்கே..

"வெள்ளம்",பெரு மழை நாளொன்றில் தன் வயலில் தனித்திருக்கும் நாயகன் , மழைக்கு ஒதுங்கும் அக்கிராமத்து பெண்களால் அலைக்கழிக்கபடும் கதை.பெண்கள் தான் எத்தனை வசீகரமானவர்கள்..ரகசியங்களின் குடுவை...விடை அறிந்து கொள்ள முடியாத புதிர் விளையாட்டில் எப்போதும் வெற்றி பெறுபவர்கள்.சிறுமி,பேரிளம்பெண்,புதிதாய் திருமணம் ஆனவள் என அவ்விடம் இருக்கும் ஒவ்வொருத்தியும் மாறி மாறி தேவதை கோலம் பூணுகின்றனர்,அவன் தனிமை புலம்பல்களுக்கும்,சிந்தனைகளுக்கும் உரம் போட்டபடி.மழை விட்டதும் பெண்கள் யாவரும் சென்று விட,சட்டென தோன்றிய வெறுமையை அவன் மேகத்தின் துணை கொண்டு வரவேற்பதோடு முடிகின்றது கதை.ஆணின் அகவுலகை - தனிமை துயரை இத்தனை நெருக்கமாய் வாசகனுக்கு வேறெந்த கதையும் முன்வைத்தாய் நினைவில்லை.

"துப்பாக்கி நாயக்கர்",தன் மனைவியை பெண்டாள முயன்ற வேலையாளின் துரோகத்தை,ஊரார் முன் ஏற்பட்ட அவமானத்தை கடக்க நிதானிக்கும் முன் நிகழும் அவனின் தற்கொலை - என சுழற்றி அடிக்கும் சூழலில்,இயல்பிற்கு மாறாய் நடந்து கொள்ளும் துப்பாக்கி நாயக்கரின் நிதான புத்தி அவ்வூராரோடு நம்மையும் ஆச்சர்யம் கொள்ள செய்வதே.பேச்சை காட்டிலும் மௌனத்திற்கு வீரியம் அதிகம்.சமயங்களில் எல்லா உணர்ச்சிகளும் அதில் அடங்கி விடுவதுண்டு. சகித்து கொள்ள இயலாத துரோகத்தை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதை நேரடி உரையாடல் அதிகம் இன்றி காட்சிகளின் விவரிப்பில் நமக்கு உணர்த்துபவை ஏராளம்.

"உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"

- ஜெயந்தனின் 'சம்மதங்கள்' சிறுகதையில்


"வாழ்க்கை ஓடும்",ராஜேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நினைவூட்டிய கதை இது.பகல் முழுக்க அடித்து கொள்ளும் மருமகள் - மாமியார்,தொடர்ச்சியான வசைகளில் அக்கம்பக்கத்தாரை குளிர்வித்துவிட்டு,வீடு வந்து சேரும் ஆணிடமும் தங்கள் நியாயத்தை சொல்லி மேலும் கொஞ்சம் களேபரம் செய்து முடங்கி போகின்றனர்.மறுநாள் வெளியூருக்கு நாட்கணக்கில் கூலி வேலை செய்ய அவன் புறப்பட...முன்னிரவில் நடந்த கலவரத்தின் சுவடே தெரியாது மகிழ்ச்சியாய் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.அவர்கள் அப்படிதான், அவர்களின் அன்றாடம் அது..அடித்து கொள்வதும்,சேர்ந்து கொள்வதும்..எனக்கும்,உனக்கும், எல்லோருக்குமான வாழ்க்கை அப்படிதான் என்பதை போல!

"மீண்டும் கடவுளும் கந்தசாமியும்",புதுமைபித்தனின் ஓவியத்திற்கு நவீன வண்ணம் பூசும் முயற்சி.கந்தசாமிபிள்ளையை சினிமா தயாரிப்பாளராக்கி/குடிசை வீட்டை கோபுரமாக்கி....கடவுளுக்கு தொடர்ச்சியான ஆச்சர்யங்கள் இம்முறை."ஊமை ரணங்கள்", திருமண சடங்குகளுக்காய் மகளிடமே கையேந்த நேரிடும் ஏழை தந்தையின் கதை.சில அவமானங்களை வலிந்து ஏற்று கொள்வது கொடுமை.கதை.மோசமானதொரு சமூக சூழலை/மாற்றம் காணாது தொடரும் திருமண கொடுக்கல் வாங்கல்களை சாடும் இக்கதை எந்த காலகட்டத்திற்கும் பொருந்திப் போவது.

"நாலாவது பரிமாணம்",இக்கதையின் முடிவில் உடன்பாடில்லை.கொஞ்சம் சினிமாத்தனமாய் தோன்றியது.இருப்பினும் பள்ளி ஆசிரியர்களான நாயகன் மற்றும் நாயகிக்கு இடையே தோன்றி,படரும் காதல்,வெகு இயல்பான உரையாடல்களோடு சொல்லப்பட்டிருக்கும் பாணி அருமை. தொடர்ச்சியான அவர்களின் உரையாடல்கள் இட்டு செல்லபோகும் இடம் எதுவென வாசகன் அறிந்திருந்தும், உடன் சேர்ந்து பயணிக்கும் சுவாரஸ்யம் குறையவில்லை.

"பைத்தியம்","மாரம்மா",எழுதியவனும் படித்தவளும்",ஜாதி மான்" ஆகியவையும் குறிப்பிட தக்கவையே.நம்மை குறித்த,நமக்கான கதைகள் இவை.அலங்காரமற்ற வர்ணிப்புகள்.வாசகனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் எதார்த்தங்களின் சித்தரிப்பு.கொஞ்சம் காத்திரமான குரலில் சமூகத்தை சாடும் கதைகளில் தெரிவது எழுத்தாளனின் கோபமும் அக்கறையும்.தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் மாற்று கருத்துக்களில் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டும் கதைகள் இவை.

"நிராயுதபாணியின் ஆயுதங்கள்",தமிழ் சிறுகதை தொகுதிகளில் மிக முக்கியமானதொன்று.

வெளியீடு - வம்சி
விலை - 400 ரூபாய்

Tuesday, November 30, 2010

எஸ்.ராவின் "பேசத்தெரிந்த நிழல்கள்"

நாவலையும்,சினிமாவையும் முறையே வாசகனுக்கும்,பார்வையாளனும் அணுகும்/அணுக வேண்டிய முறை குறித்து இக்கட்டுரையில் வாசித்த வரிகள் சத்தியமானவை.

இலக்கியத்தை வாசிப்பவர்கள் சொற்களின் வழியே ஒரு பிம்பத்தை தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள்.அதில் காட்சிபடுத்துதல் தான் வாசகனின் வேலை.அதே நேரம் சினிமாவோ காட்சிகளை முன்வைக்கிறது.அதை தனது மனதிற்குள் சொற்களாக, நினைவுகளின் பகுதியாக மாற்றிக் கொள்வதை பார்வையாளர்கள் செய்கிறார்கள்"

திரைப்படங்கள்/நடிகர்கள் குறித்த தங்களின் விரிவான பார்வையாய் தமிழில் தொடர்ந்து முன்வைப்பவர்கள் எஸ்.ராவும் சாருவும்.என்னளவில் சாருவின் "தீராக்காதலி"(கே.பி சுந்தராம்பாள்)தொகுப்பு முக்கியமான ஒன்று.ரேயின் "பதேர் பாஞ்சாலி" குறித்த எஸ்.ராவின் 'பதேர் பாஞ்சாலி - நிதர்சன புனைவு" ,ஒரு திரைப்படத்தை மட்டுமே மையமாக கொண்டு தமிழில் வெளிவந்த முதல் நூல் என நினைக்கின்றேன்.நல்ல சினிமாவை,மறக்கடிக்கப்பட்ட நடிகர்களை தம் வாசகர்களுக்கு முன்னெடுத்து செல்லும் இம்முயற்சிகள் இப்பொழுது பரவலாய் காணப்படுவது மகிழ்ச்சிகரமானது.

எஸ்.ராவின் இந்த தொகுப்பு,முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனின் அவதானிப்பில் தமிழ்,மலையாளம் தொடங்கி உலகளவில் தான் ரசித்த திரைப்படங்கள்,குறும்படங்கள், விருப்பத்திற்குரிய நடிகர்கள்,நேர்காணல்கள் என தகவல்களை பகிர்ந்து கொண்டே செல்கின்றது.




சாவித்திரி,நடிப்பு ராட்சசி.நவராத்திரி திரைப்படத்தில்,மேடை நாடக காட்சியில்..முகத்தை வெட்டி,சிவாஜியிடம்,"அதாகப்பட்டது சுவாமி........." என கூறும் ஒரு காட்சி போதும் அவர் சிறப்பை பகிர.இத்தொகுப்பில் சாவித்திரி குறித்த கட்டுரையை(சாவித்திரி - இரண்டு பிம்பங்கள்) வாசித்து கொண்டிருக்கும் பொழுது,வைகை எக்ஸ்ப்ரஸ்ஸில் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி புத்தகத்தை வாங்கி ஆர்வமாய் அதை மட்டும் படித்துவிட்டு திருப்பி தந்தார்.கூடவே சாவித்திரி குறித்து தனக்கு தெரிந்த செய்திகளை சொல்லி கொண்டே வந்தார் சோகத்துடன்.அந்த நடிகையின் இறுதி நாட்கள் குறித்த உருக்கமான கட்டுரை அது.

"சிரித்தால் மட்டும் போதுமா?",நடிகர் நாகேஷை குறித்த இக்கட்டுரை அந்த மாபெரும் கலைஞன் குறித்த தகவல்களோடு அவருக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரம் குறித்தும் பேசுகின்றது. விருதுகளுக்கும் மேலான சிறப்பு ரசிகனின் வரவேற்பே.தருமியும்,செல்லப்பாவும் எளிதில் மறக்க கூடியவர்கள் அல்லவே!மொழி கடந்து சில நடிகர்கள் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.மலையாள நகைச்சுவை நடிகர்கள் ஜெகதி, ஜகதீஷ்,இன்னொசன்ட் எப்போதும் என் விருப்பதிற்குரியவர்கள்.ஜெகதியும்,இன்னொசென்ட்டும் இல்லாத படங்களே இல்லையா என்று கூட தோன்றும்.இத்தொகுப்பில் "நகைச்சுவை நாயகன்" கட்டுரை ஜெகதி குறித்தானது.

ராஜாவின் திருவாசகம்,முதன்முதலில் கேட்டது ஒரு இரவில்.ராஜாவை அதிகமாய் பிடித்து போன தருணங்களில் அதுவும் ஒன்று."எத்தனை கோபுரங்கள் இருந்தாலும்,தஞ்சை கோபுரம் தனித்துவமானது,ராஜாவும் அது போலவே" என்ற இயக்குனர் பாசிலின் வரிகள் நினைவிற்கு வருகின்றது.திருவாசக இசையில் கரைந்து உருகிய தருணங்களை பதிவு செய்கின்றது "திருவாசகம் கேட்ட பொழுது" கட்டுரை.(ராஜாவின் பாடல்கள் குறித்து விரிவாக எழுத வேண்டும்..எப்பொழுதிற்குமான இசை).

"Wind Migration " மற்றும் "The Forgotten Woman " ஆகிய இரு ஆவணப் படங்கள் குறித்த தகவல்கள் பார்க்கும் ஆவலை தூண்டுபவை.Wind Migration ஆவணப்படத்தின் பல பகுதிகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.பறவைகளின் தீரா பயணத்தில் கொஞ்சம் நாமும் உடன் பயணிக்கும் சுவாரஸ்ய அனுபவம்."The Forgotten Woman ",மதுரா நகரில் தனித்து விடப்பட்ட விதவைகளை குறித்தது.உணவிற்கும்,இருப்பிடத்திற்கும் வழியின்றி எஞ்சிய நாட்களை விதியின் வசம்விட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களின் நிலை குறித்த இப்படத்தை இயக்கியிருப்பவர் திலீப் மேத்தா(தீபா மேத்தாவின் சகோதரர்).

மதுரை இருந்த நாட்களில் உலக சினிமா பார்ப்பதென்பது ஏழு கடல்,ஏழு மலை தாண்டி அடைய வேண்டிய காரியம் என்றிருக்கும்.ஹாலிவுட் படங்கள் குறித்து மட்டுமே அறிந்திருந்த காலம் அது.இணைய அறிமுகத்திற்கு பிறகு அதிகமாய் உலக சினிமா குறித்து அறிமுகம் கிடைத்தது எஸ்.ரா மற்றும் சுரேஷ் கண்ணனின் "பிச்சைபாத்திரம்" வலைத்தளங்களின் வழியே.தேசத்திற்கு தேசம் வேறுபடும் கலாசாரத்தையும்,வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள திரைப்படங்களை தவிர்த்து வேறு எளிமையான வழியிராது.அவ்வகையில் இத்தொகுப்பில் கோடிட்டு காட்டப்படும் ஆசிய/பௌத்த/வியட்நாமிய திரைப்படங்கள் எண்ணற்றவை.

ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து பிற தேச திரைப்படங்கள் வேறுபடம் விதம் குறித்தும்,திரைப்பட வகைகள் குறித்தும் விரிவாய் அலசும் "ஆசிய - சினிமாவின் குவிமையம்'கட்டுரை முக்கியமான ஒன்று.மேலும் ஒரு குறிப்பிடதக்க பதிவு,அகிராவுடன் இரானிய இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியின் உரையாடல்.தொழில்முறை நடிகர்கள்,சர்வதேச விருதுகள்,மிகை நடிப்பு,தற்கால சினிமா குறித்தான அகிராவின் பார்வையை முன்வைக்கும் கட்டுரை.

இத்தொகுப்பின் கட்டுரைகள் சினிமாவை அணுகும் முறை குறித்தோ,அதன் நுணுக்கங்கள் குறித்தோ நமக்கு பாடம் சொல்லுபவை அல்ல.மாறாக அனுபவ வாயிலாக அறிமுகங்களை தந்து, நம் நினைவுகளையும் மீட்டெடுக்கும் முயற்சி.சினிமாவின் மீது தீராக்காதல் கொண்டவர்கள் தவறவிடக் கூடா வாசிப்பு!

வெளியீடு - உயிர்மை

Monday, November 8, 2010

The Day I Became A Woman (2000)

ஒரே நாளில் நிகழும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.ஒரு சிறுமி,ஒரு நடுத்தரவயது பெண்,ஒரு மூதாட்டி - தங்களை அடையாளம் கண்டு கொள்ள நேரிடும் ஒரு நாளை குறித்த மூன்று தனிக்கதைகள்.முதல் முறை சுதந்திரம் முடக்கப்படும் பொழுது எழும் கேள்விகள்,விருப்பங்களுக்கு தடை ஏற்படும் பொழுது அதை மீறி வென்றிட நடத்தும் போராட்டம்,பிடிதமானதொரு வாழ்வை இறுதி நாட்களில் கண்டெடுத்து அடையும் மகிழ்ச்சி,இவற்றை இப்பெண்களின் வாழ்வில் ஒரு நாள் நிகழ்வின் மூலம் பார்வையாளனுக்கு சிறப்பாய் கொண்டு சேர்ந்திருக்கிறார் இரானிய பெண் இயக்குனர் மர்சீ மெஷ்கினி.




முதல் கதை, ஹவா என்னும் சிறுமி தனது ஒன்பதாவது பிறந்த நாளின் பொழுது அம்மாவாலும்,பாட்டியாலும் இனி நீ ஒரு பெண் என போதிக்கப்படுகிறாள். சதோர் எனப்படும் கருப்பு அங்கியை அணிந்து கொள்ள அதுவே சரியான நாள் என தீர்மானம் ஆகின்றது.ஆண் நண்பர்களோடு விளையாடவும்,வெளியே செல்லவும் தடை விதிக்கப்படுகின்றது."நேற்று வரை விளையாடி கொண்டுதானே இருந்தேன்" என அவள் கேட்கும் இடம்...சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீண்ட போராட்டத்திற்கு பிறகு பகல் 12 மணிவரை விளையாட அனுமதி பெற்று நேரத்தை கணிக்க குச்சியை எடுத்து கொண்டு வெளியேறுகிறாள்.வெகு இயல்பாக வந்து விழும் கேள்விகளும்,நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியாத சிறுமியின் மனநிலையை அழகாய் பிரதிபலிக்கும் பகுதி இது.

இரண்டாவது கதை - கணவனின் எதிர்ப்பை மீறி சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொள்ளும் ஆஹு என்னும் பெண்ணை குறித்து.இக்கதை முழுதும் பந்தைய களத்திலேயே நடிக்கிறது.எத்தனையோ பெண்களோடு பந்தயத்தில் பங்கு கொண்டிருக்கும் ஆஹூவிடம் அவளது கணவன் அதை விடுத்து வீடு வருமாறு வற்புறுத்துகிறான்.விவாகரத்து செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறான்...மத குருவை அழைத்து வந்து விவாகரத்தும் செய்கின்றான்..எதையும் கண்டுகொள்ளாமல் இறுக்கமான மனநிலையில் போட்டியில் வெற்றி பெற தொடர்ந்து சைக்கிள் ஒட்டி செல்லும் ஆஹு தனது சகோதரர்களால் பாதி வழியில் சைக்கிள் பிடுங்கப்பெற்று தனித்து விடப்படுவதோடு முடிகின்றது இக்கதை.மத ரீதியான கட்டுபாடுகள் நியாயமான விருப்பங்களுக்கு இடையூறாய் வந்தால் அதை துணிந்து எதிர்கொள்ளும் மனநிலை கொண்டிருப்பவர்கள் பெண்கள் என்பதை சொல்லுவதான கதை.மூன்று கதைகளில் அழுத்தம் மிகுந்தது இதுவே.



மூன்றாவது கதை - தான் அனுபவித்து அறியாத சொகுசான வாழ்கையை இறுதி நாட்களில் சாத்தியப்படுத்திட நினைக்கும் மூதாட்டி ஹூரா,வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் அத்தனையையும் கூலிக்கு சிறுவர்களை வைத்து கொண்டு வாங்கி தன் நகரம் நோக்கி பயணிக்கின்றால். அத்தனை சுவாரஸ்யமான பகுதி இல்லை இது..இருப்பினும் ஹூரா கிளம்பும் முன்னர் அவள் சந்திக்கும் இரண்டு பெண்கள்,ஆஹூவை குறித்து அவளிடம் சொல்லுகின்றனர்,அத்தனை எதிர்ப்பை மீறி அவள் சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொண்டதும்,சகோதரர்களால் சைக்கிள் பிடுங்கப்பட்டு பந்தய களத்தில் தனித்து விடபட்டாலும் அவள் வாடகைக்கும் சைக்கிள் பெற்று அதில் வெற்றி அடைந்துவிட்டாள் என அவர்கள் பேசி கொள்வது பெருத்த நிம்மதி அளிக்கும் செய்தி.இரண்டாம் கதையின் வெற்றியும் அதுவே.

தான் வாங்கிய பொருட்களை படகில் ஏற்றி கொண்டு செல்லும் ஹூராவை பார்த்தபடி சிறுமி ஹவா நிற்பதோடு முடிகின்றது இத்திரைப்படம்.ஆஹூவை போல போராட்ட குணமும்,ஹூராவிற்கு இறுதி நாட்களில் கிடைத்த மகிழ்ச்சியும் நிறைவும் இனி வாழ்க்கையை தொடங்க போகும் சிறுமி ஹவாவிற்கு சாத்தியம் ஆகுமா என்கிற கேள்விகள் தொக்கி நிற்பதென்னவோ உண்மை.தீவிரமான பெண்ணிய கருத்துக்களை வெளிப்படையாக பேசும் இத்திரைப்படம் இரானில் சிறிது காலம் தடை செய்யப்பட்டுள்ளது.மத ரீதியான கட்டுபாடுகளை விலக்கி பார்த்தால் இத்திரைப்படம் எல்லா தேசத்து பெண்களும் பொருந்தி வருவதே.

Monday, November 1, 2010

அ.முத்துலிங்கத்தின் "வியத்தலும் இலமே"

"வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்"

- அ.முத்துலிங்கம்


இத்தொகுப்பை வாசிக்க தொடங்கிய சில நிமிடங்களில், தமிழின் அபூர்வ நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றியது.உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் உடனான நேர்காணல்களின் தொகுப்பிது.சமகால உலக இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டே செல்கின்றன ஒவ்வொரு கட்டுரையும்.மொழிபெயர்ப்பல்லாமல் உரையாடல்களின் நேரடி தமிழ் பதிவு. வாசகனாய் மட்டுமே தன்னை முன்னிறுத்தி எழுத்தாளர்களோடு கொண்ட உரையாடல்களை தொகுத்திருக்கும் அ.முவின் இம்முயற்சி ஆச்சர்யம் அளிப்பது.வாசிப்பின் மீதான தீராக்காதல் மட்டுமே காரணமாய் இருக்கவேண்டும்....நிச்சயமாய் அது மட்டுமே!

சிறுகதை - நாவல் வடிவம்,வாசிக்க விரும்பும் நூல்கள்,எழுதும் முறை,பதிப்பாளர்களுடனான உறவு குறித்தான கேள்விகள் பொதுவாக எல்லா நேர்காணலிலும் கேட்கபடுபவையாக இருக்கின்றன.பதில்களில் தான் நமக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

"The Devil that danced on the water" நாவலின் அசிரியர் அமினாட்டா போர்னோ தமக்கு பிடித்த நூல் என அகராதியை கூறுகின்றார்."கொலம்பஸ் ஒரு நாட்டை கண்டுபிடித்தது போல ஒவ்வொரு புது வார்த்தையும் எனக்கு பெரிய கண்டுபிடிப்பு தான்" என்கிறார்.இத்தொகுப்பில் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்படும் புத்தகம் "An Obidient Father",இதன் ஆசிரியர் புலம் பெயர்ந்த இந்தியர் அகில் ஷர்மா.இந்திய அரசியல் பின்னணியில் நிகழும் இந்நாவல் கொண்டாடப்படுவதற்கு, அதிர்ச்சி மதிப்பீட்டிற்கு மீறிய காரணங்கள் உள்ளன என உணர நாவல் குறித்த சிறு அறிமுகம் உதவுகின்றது. பல்லாயிரம் டாலர் சம்பள வேலையை விடுத்து முழு நேர எழுத்தாளராய் இருப்பவர் இவர்.


இத்தொகுப்பில் எழுத்தாளர்கள் அல்லாத வேறு சில சுவாரஸ்ய மனிதர்களும் உண்டு.பறவையியல் விஞ்ஞானி கிரிஸ் பிலார்டி உடனான சந்திப்பை சொல்லலாம்,அபூர்வ பறவைகள் குறித்தும்,முற்றிலும் அழிந்து போன பறவை இனங்கள் குறித்தும் தொடரும் உரையாடல்கள் ஒரு நிமிடம் நாமும் அவர்களோடு அந்த பறவை கூடத்தில் நின்று கொண்டிருப்பதான பிரம்மிப்பை தருகின்றது.



"ஒரு விஞ்ஞானக் கதை உங்கள் அறிவை தூண்ட முடியும் அல்லது எதிர்பாராத ஒரு மூளை அதிர்ச்சியை தர முடியும்.ஆனால் இலக்கியம் என்று நீங்கள் அழைக்க வேண்டுமானால் அது உணர்வுபூர்வமாக உங்களை தொட வேண்டும்"

-- டேவிட் பெஸ்மொஸ்கிஸ்


திருக்குறளோடு ஆரம்பமாகும் அத்தியாயங்கள் கொண்ட ஆங்கில நூல் இருக்குமென நாம் நினைத்திருக்க சாத்தியங்கள் இல்லை."Cinnamon Gardens" என்னும் அந்நூலை எழுதி இருக்கும் ஷியாம் சுந்தர் சிங்கள எழுத்தாளர். தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாத இவர் திருக்குறளை தேர்ந்தெடுத்ததற்கு சொல்லும் காரணங்கள் சுவாரஸ்யமானவை.அனிதா தேசாயின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு எழுத தொடங்கியதாய் கூறுகின்றார்.அனிதா தேசாயின் "கடற்புரத்து கிராமம்"மட்டுமே வாசித்திருக்கிறேன்,வருடங்கள் பல கடந்தும் இன்னும் அந்நாவலின் மனிதர்கள் ஹரியும்,பேலாவும்,கமலாவும் மனதில் இருக்கிறார்கள்.

கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது தொகுப்பில் படித்ததில் பிடித்தது என அ.மு பகிர்ந்திருக்கும் நூல் "Teacher Man". ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்ற ப்ரான்க் மக்கொர்டின் சுயசரிதை நூல் இது.நகைச்சுவையும்,ஒளிமறைவு அற்ற இவரின் எழுத்து குறித்தும் அந்த கட்டுரையில் வாசித்திருந்தது நினைவில் இருந்தது.வாசித்தே தீரவேண்டிய பட்டியலில் "Teacher man " நூலை சேர்க்க கூடுதலான தகவல்கள் இக்கட்டுரையில் உள்ளது.எழுத்தில் இருக்கும் வசீகரமும்,நகைச்சுவையும் எழுத்தாளனிடம் எதிர்பார்ப்பது தவறு என்பதை சொல்லும் விதமாய் இக்கட்டுரை இவ்வாறாக முடிகின்றது.

"ஒரு எழுத்தை படைத்தவரை சந்திக்காமல் இருப்பதே உத்தமம் என பல சமயங்களில் தோன்றும்.இனிமேல் மக்கோர்டை எங்கு சந்தித்தாலும் அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் செல்வேன்.அவர் புத்தகங்கள் எங்கு கண்டாலும் வாங்குவேன்"

காம இலக்கியம் படைக்கும் மேரி ஆன் ஜான் புலம் பெயர்ந்த சிங்களத்தவர்.தனது டைரி குறிப்புகளை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வரும் இவரின் நாவல் "Bodies in Motion ", மிக நுணுக்கமான விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்கின்றார். குழந்தையின் உற்சாகத்தோடு இவர் பேசி இருப்பதாய் தோன்றியது.யாழ்ப்பான அப்பம் குறித்து இருவரும் பேசி கொள்ளும் இடம் அதை உறுதி செய்தது.

கிரேக்க புராணம் ஒன்றை (ஓடிசி) மீள் ஆராய்ச்சி செய்யும் மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவல் குறித்த விஸ்தாரமான அறிமுகம் பெனிலோப்பே என்னும் கிரேக்க இலக்கிய பாத்திரத்தின் மீதான மதிப்பை கூட்டுவது.புராணம் ஓடிசியசை பிரதானப்படுத்தி இருந்தாலும்,அவன் மனைவி பெனிலோப்பேவை முன்னிறுத்தி எழுதபட்டிருக்கும் இப்பெண்ணிய நாவலில் வருவதான இவ்வரிகள் என்னை கவர்ந்தன.


"நீ ஒரு தண்ணீர் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை ,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்"


வெகு சில எழுத்தாளர்கள் குறித்து மட்டுமே பகிர்ந்துள்ளேன்.தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் உடனான நேர்காணல் குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.முதல் ஆச்சர்யம் தமிழ் மீதான இவருக்கு உண்டான ஆர்வம்..சங்க இலக்கியம் தொடங்கி சமகால தமிழ் இலக்கிய சூழல் வரை தோய்வின்றி பேசுகின்றார்.செம்மொழி மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியது இவர் தான்.

உலக இலக்கியங்கள் குறித்த பேச்சின் ஊடே புதுமைப்பித்தனும், எஸ்.ராவும்,ஜெமோவும் அதை ஒத்த படைப்புகளுக்காய் கோடிட்டு காட்டப்படுவது நிறைவு.ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்திக்க எடுத்து கொண்ட முயற்சிகள்,எதிர் கொண்ட இடர்பாடுகள்,குறித்து வாசிக்க வாசிக்க வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது!!அவரவர் படைப்பு சார்ந்த கருத்தாளமிக்க உரையாடல்கள்,எத்தனை தீவிர வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் இது சாத்தியமாக. குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் வாசிப்பதற்கு போதுமான நூல்கள் இத்தொகுப்பில் பரிந்துரைக்கபடுகின்றன.தமிழில் ஆக சிறந்த முயற்சி.தவிர்க்க கூடா வாசிப்பும் கூட.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 125 ரூபாய்

Wednesday, October 20, 2010

La Strada..சபிக்கப்பட்ட காதலியின் கதை

ஜெல்சொமினா,அவள் ஒன்றும் வசீகரமானவள் இல்லை.குள்ளமான உருவம்,கோமாளியை நினைவூட்டும் நடை,ஆண்பிள்ளையை போன்ற தோற்றம்.....இருப்பினும் துடுக்குத்தனமான செய்கைகளும்,அந்த கண்களில் தேங்கி நிற்கும் காதலும்,ஏக்கமும் பார்வையாளனுக்கு அவள் மீது காதலை வரச்செய்துவிடும்.ஜெல்சொமினாவாக நடித்துள்ள கிலியட்டா மசினாவின் அற்புத நடிப்பால் இப்படம் காவியம் ஆகின்றது.இவர் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எனக்கு சாவித்திரியை ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தார்,அதிலும் நவராத்திரி திரைப்படத்தில் பைத்தியம் போல பாவனை செய்யும் சாவித்திரியை.

நாடோடி வித்தைக்காரனான ஜாம்பினோவிடம் சொற்ப பணத்திற்காக விற்கப்படுகிறாள் ஜெல்சொமினா.மார்பை சுற்றி இரும்பு சங்கிலி கட்டி அதை தன் பலம் கொண்டு அறுத்தெறியும் வித்தை செய்யும் ஜாம்பினோ முரடன்,குடிகாரன்,பெண் பித்தன்.ஜெல்சொமினாவிடம் எந்த ஒரு சந்தர்பத்திலும் அவன் பிரியத்தை காட்டியதில்லை.தொடக்கம் முதல் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் பாவத்திற்குரிய பெண்ணாக கிலியட்டா மசினாவின் நடிப்பு அட்டகாசம்.அவரின் தனித்துவ நடிப்பிற்கு உதாரணமென பல காட்சிகளை குறிப்பிடலாம்.வித்தையின் பொழுது மத்தளம் அடிக்க ஜெல்சொமினாவிற்கு ஜாம்பினோ கற்று கொடுக்கும் காட்சி சிறந்த உதாரணம்,சிறு குழந்தைக்கான உற்சாகத்தோடு அவள் அதை பழக முயல்வதும்,அவனோ அவளை குச்சியால் அடித்து சொல்லி தர,அதை எதிர்பாராத அவளின் முக பாவம்.




ஜாம்பினோ அவளை ஒரு உணவு விடுதிக்கு அழைத்து செல்லும் பொழுது அந்த முகத்தில் தோன்றும் ஆவலும் பெருமிதமும்..அவனோ அவளை பொருட்டென மதிக்காமல் அவளை தனியே விட்டுவிட்டு ஒரு வேசியோடு இரவை கழிக்க சென்றுவிடுகிறான்.இரவெலாம் உறங்காமல் அவனிற்காக காத்திருக்கும் ஜெல்சொமினா,காலையில் அவன் இருப்பிடம் அடைந்து, உறங்கி போயிருக்கும் அவன் அருகில்..தான் கண்டெடுத்த தக்காளி விதைகளை உற்சாகமாய் நட்டு கொண்டிருக்கின்றாள்.அற்புத நாடகம் ஒன்றின் உணர்வுபூர்வமான காட்சி போல..ஏமாற்றத்தை,கோபத்தை,வஞ்சிக்க பட்டதை மறக்க முயல்வதை அல்லது மறந்து விட்டதை உணர்த்துவதான காட்சி.

தொடர்ந்து ஜாம்பினோ தன்னை புறக்கணிப்பதை பொருத்து கொள்ள இயலாமல் ஜெல்சினோ ஓர் இரவு அவனை விடுத்து ஓடி வெகு தூரம் வந்து ஒரு நகரை அடைகிறாள்.அங்கு உயரமான கட்டடங்களுக்கிடையே கம்பியை கட்டி,அதில் நடக்கும் மட்டோவின் சாகச நிகழ்ச்சியை ஆச்சர்யத்தோடு காண்கிறாள்.அவளை தேடி வரும் ஜாம்பினோவிடம் தப்பிக்க முடியாமல் மீண்டும் அவனுடன் செல்கிறாள்.இம்முறை ஒரு சர்கஸ் கூட்டத்தோடு இணைந்து செயல் பட அவன் முடிவு செய்கின்றான்.அங்கு மட்டோவும் இருக்கின்றான்..அவளின் பிரியத்திற்குரிய ட்ரம்பட் கருவியை இசைக்க கற்று தருகின்றான் மட்டோ.கோமாளித்தனங்கள் மிஞ்சிய மட்டோ கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் ஜாம்பினோவை கிண்டல் செய்து கொண்டே இருக்கின்றான்.இவனின் சீண்டல் ஒரு நாள் கைகலப்பில் முடிய ஜாம்பினோ சிறை செல்கின்றான்.

அன்றிரவு ஜெல்சொமினாவும் மட்டோவும் கொள்ளும் உரையாடல் முக்கியமானது.ஜாம்பினோவிற்கு அவள் மீது பிரியம் உண்டு என்பதை அவள் மனதில் அழுத்தமாக பதிய வைக்கின்றான்..வாழ்வதற்கு எல்லோருக்கும் ஒரு காரணம் உண்டு.கூழாங்கற்களுக்கு கூட என அவன் பேசி கொண்டே போக...ஜெல்சொமினா ஜாம்பினோவுடன் தொடர்ந்து இருக்க முடிவு செய்கின்றாள்.சிறை இருந்து திரும்பிய ஜாம்பினோ அவளை அழைத்து கொண்டு வேறு நகரத்திற்கு செல்கின்றான்..பயணத்தில் ஊடே அவர்கள் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் தங்க நேரிடுகிறது.அன்றிரவு அவனிடம் தன் காதலை சொல்லுகின்றாள்.அதற்கும் அவனிடம் கோபமும்,எரிச்சலுமே பதிலாய் இருக்கின்றது.அங்கிருக்கும் கன்னிகாஸ்திரிகள் முன்பு அற்புதமாய் ட்ரம்பட் வாசித்து காட்டும் ஜெல்சொமினாவை முதல் முறையாக ஜாம்பினோ ஆச்சர்யமாய் பார்க்கின்றான்.




தொடரும் அவர்கள் பயணத்தின் பொழுது மட்டோவை சந்திக்க நேரிடுகிறது.ஜாம்பினோ அவன் மீது கொண்ட கோபத்தில் ஓங்கி அடித்துவிட மட்டோ இறந்து விடுகிறான்.சற்றும் இதை எதிர்பாராத ஜாம்பினோ யாரும் அற்ற அந்த சாலையின் ஓரத்திலேயே அவன் உடலை அப்புறபடுத்தி விட்டு பயணத்தை தொடர்கிறான்.மிரண்ட விழிகள் கொண்டு நிற்கும் காட்சியில் கிலியட்டாவின் நடிப்பு நேர்த்தி.மிட்டாவின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து கொஞ்சமும் மீள முடியாமல் ஜெல்சொமினா தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.மிட்டா உடனான உரையாடலில் அவன் கூறியதையே திரும்ப திரும்ப கூறி பிதற்றும் அவளால் எங்கே தான் மாட்டி கொள்ள நேரிடுமோ என்று ஜாம்பினோவிற்கு பயம் வந்துவிடுகின்றது.

ஓய்வெடுக்க ஒதுங்கிய சாலையோரம், அவள் புலம்பி கொண்டே உறங்கி போக.ஜாம்பினோ அவளை தனியே விட்டு விட்டு செல்கின்றான்.சொல்லவியலா துக்கத்தை தாங்கியபடி உறங்கி போகும் ஜெல்சொமினாவை கடைசியாய் நாம் பார்ப்பதும் அப்பொழுது தான்.மனதை கிழிக்கும் சூனியமான நிசப்தத்தை போன்றதொரு காட்சி அது.சில வருடங்கள் கழித்து..கடற்கரை சாலை வழி நடந்து செல்லும் ஜாம்பினோ ஜெல்சொமின இசைக்கும் அதே பாடலை கேட்கின்றான்..அப்பாடலை பாடிய பெண்ணின் மூலம் ஜெல்சொமினா பைத்தியமாய் திரிந்து இறந்து போனதை அறிந்து கொள்கின்றான். குற்ற உணர்ச்சி பீடிக்க பெற்று..கடற்கரையில் அலையும் ஜாம்பினோ,சோகம் தாளாமல் பெருங்குரல் எடுத்து அழுவதோடு படம் முடிகின்றது.

கிலியட்ட மசினாவின் நடிப்பிற்கு அடுத்த படியாய் ஜாம்பினோவாக நடித்துள்ள அந்தோணி கொயினின் நடிப்பு குறிப்பிடும்படியானது.ஊருராய் சுற்றி அலையும் ஜிப்சியிடம் அதீத பிரியத்தையோ,காதலையோ எதிர் பார்க்க முடியாது.சலிப்பு தரும் தனது அன்றாடங்களில் இருந்து விடு பட அவன் உணர்ச்சியற்ற நிலையை தேர்ந்தெடுப்பதாய் தோன்றியது.கச்சிதமான நடிப்பு இவருடையது.காதலை யாசித்து நிற்கும் அபலை பெண் ஜெல்சொமினாவாய் கிலியட்டா மசினா,எந்த ஒரு காட்சியிலும் கவனம் இவரை விட்டு அகலவில்லை. பார்வையாளன் ஜெல்சொமின மீது கொள்ளும் காதலும்,பரிதாபமும் இவரின் தனித்துவமான நடிப்பால் மட்டுமே சாத்தியமாகின்றது.

Monday, October 18, 2010

பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்"

சுயசரிதை எழுத்திற்கு ஒளிவு மறைவு இருத்தல் கூடாது என்று அ.முத்துலிங்கம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருப்பார்.அவ்வாறான எழுத்தே வாசகனுக்கு நம்பதன்மையையும், எழுத்தாளன் கூட்டி செல்லும் உலகத்தினுள் அந்நியோனியமாய் உலவும் ஆற்றல் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.மலையாள கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்" அவ்வாறான சுயசரிதை.புதைந்து போன இசை கருவிகளை தோண்டி எடுக்கும் மனநிலை எவ்வாறிருக்கும்?!மீண்டும் அதன் இசையை கேட்க எழும் ஆர்வம்,கிடைக்காமல் போனால் அடைய நேரிடும் ஏமாற்றம்,ஏற்கனவே அது தந்து போன இசை மயக்கம் என்பது போன்ற கலவையானதொரு மனநிலைக்கு இட்டு செல்லுகின்றது இந்த தொகுப்பு.

வறுமையின் பிடியில் சிக்கி பரதேசியாய் அலைந்த காலம் தொடங்கி நோபல் அரங்கம் சென்றது வரை, வெவ்வேறு சந்தர்பங்களில் தான் சந்தித்த மனிதர்கள் குறித்த ஒரு கவிஞனின் நேர்த்தியான சுயசரிதை இது.வாசிக்க வாசிக்க ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.வாசித்து முடித்ததும், இவர் வாழ்வின் எல்லா சம்பவங்களையும் பார்த்திருப்பாரோ என தோன்றியது.தனது வாழ்வனுபவங்களை கொஞ்சமும் கூட்டாமல், குறைக்காமல் வாசகனுக்கு அப்படியே தந்திருக்கின்றார்.



இந்நூலில் இவர் பகிர்ந்திருக்கும் நினைவுகளில், ஆண்களை விட பெண்களே வசீகரமானவர்கள்.சாஹீனா,சூன்யமாகி போன வாழ்கையின் துரத்தலில் இருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்று தோற்றவள்.தீக்காயங்கள் கொண்டு விகாரமாய் தோற்றம் அளிக்கும் சஹீனாவை எதிர்பாராமல் ரயில் பயணத்தில் சந்திக்கும் பாலசந்திரன்,அவளோடான தனது கடந்த கால காதலை மீட்டெடுத்து பின் மெல்ல நிகழின் அதிர்வில் இருந்து விலகுவது நெகிழ்வான விவரிப்பு.

"கண் ஜாடையாலே பாவக்கடலின் சூழலில் ஆழ்த்தும்
பெண்கள் புழுவால் தின்னப்பட்டு உதிர்ந்துபோவார்கள்"


இவ்வரிகளுக்கு அட்சரமாய் பொருந்தி போகும் லைலா என்னும் பெண்ணோடான பாலாவின் உரையாடல்கள் கோபியின் டேபிள் டென்னிஸின் சிறு பகுதியை வாசித்தது போல இருந்தது.கடற்கரை மணலில் சாந்தம்மா என்னும் வேசியுடன் துயரத்தை பங்கிட்டு, பாடி கழித்த இரவு,சர்வதேச புத்தக சந்தை ஒன்றில் காந்தியின் "சத்திய சோதனை" புத்தகத்தை தேடி அலைந்த தென் ஆப்பிரிக்க மூதாட்டியுடனான உரையாடல்கள்,கண்களில் மின்னலிட்டு சிரிக்கும் ராதிகாவின் மீது மோகித்திருந்த நாட்கள் - தொடர்ச்சியான அவளின் மரணம், மருமகளின் கொடுமை தாளாது தினம் ஒரு வேஷம் கட்டி யாசித்து அலைந்த முதியவள் என எல்லாவிதமான பெண்களும் உலவுகின்றனர்.

சிவாஜியுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு ஏற்கனவே இலக்கிய இதழ்களில் வெளிவந்து பேசப்பட்ட கட்டுரை.அதி உன்னதமான எழுத்தாளனை கூட சிறு பிள்ளையின் ரசிக மனநிலைக்கு மாற்றிவிடும் மந்திரத்தை சினிமா கொண்டுள்ளது.சிவாஜியை அவர் வீட்டில் சந்தித்தது குறித்து அந்த நேரத்தின் ஆச்சர்யம் விலகாமல் பகிர்ந்துள்ளார்.கமலா தாஸ் உடனான சந்திப்பு கவிதை சார்ந்த உரையாடல்கள் பற்றி அல்லாது, அவரின் பிரியமும்,அக்கறையும் உள்ள தயாள குணத்தை பறைசாற்றுவதானது.

பிரியத்திற்குரிய நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்கு பிறகு பைத்தியகாரனாய் காண நேர்ந்த அவலமும்,பணம்-உறவுகளை துறந்து கடவுளின் சந்நிதியில் முழுதுமாய் தங்களை அர்ப்பணித்து கொண்ட தம்பதியரை கண்டு நெகிழ்ந்த சந்தோஷ தருணமும் பாலச்சந்திரனுக்கு அமைந்திருக்கின்றது.ரத்த வங்கியில் மோசமானதொரு சூழ்நிலையில் நண்பன் ஆகி போன கிருஷ்ணன் குட்டி,தரித்திரத்தின் பிடியில் இருந்து விலக முடியாத அற்புத கவிஞன் ஸ்ரீவத்ஸன் என பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தி செல்லும் ஒவ்வொரு மனிதரும் நமக்காய் பெருங்கதை ஒன்றை வைத்திருக்கின்றார்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பு - கே.வி.ஷைலஜா
வெளியீடு - காவ்யா (2002 )

Sunday, October 10, 2010

இயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்....



"ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பிடித்த பட்டுப்பூச்சியை,அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்."

-- வண்ணதாசன்



தேர்ந்த ஓவியனின் சித்திரங்களை போலவே வண்ணதாசனின் கதை மாந்தர்களும். இவ்வோவியங்கள் கால ஓட்டத்தில் தொலைத்த உறவுகளை/நினைவுகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.ஓவியத்தில் ஒளிந்திருப்பது தொலைத்த நட்பாகவோ.. மறக்கவியலா காதலியாகவோ....கண்டதும் கைபிடித்து கொள்ளும்,எங்கோ தூரத்து சிறுநகரில் வசிக்கும் சித்தப்பாவாகவோ,மதினியாகவோ இருக்கலாம். நினைவில் புதைந்து கிடந்த சில முகங்களை மீண்டும் காண வேண்டும் என்கிற ஆவலை கிளறிவிட்ட எதார்த்த ஓவியங்கள் தனுவும், சின்னுவும்,லீலாக்காவும்,சிறு மலரும்....கடல் மணலில் கால் புதைத்து சிப்பிகளை தேடி அலையும் சிறுமியின் மனநிலையில் வந்து விடுகின்றது வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் பொழுது.


வண்ணதாசனின் சமீபத்திய தொகுப்பான "பெய்தலும் ஓய்தலும்" வாசித்து முடித்ததும்,"சின்னு முதல் சின்னு வரை" வாசிக்க வேண்டும் போல இருந்தது.மிகப்பிடித்த குறுநாவல் அது.சின்னு குறித்து மிகவும் குறைவாகவே தெரிவிக்கபட்டிருக்கும்,முற்று பெறாத கவிதையை தந்து இஷ்ட சொற்கள் கொண்டு முழுமைபடுத்திக்கொள் என விட்டுவிடுவது போல.இந்நாவல் பேசுவதெல்லாம் குறுகி வரும் மனித மனப்பான்மைகள் குறித்து!கணவனை இழந்த சின்னு,அவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டிருப்பதை,சகிக்க முடியாத குற்றமென கொள்ளும் பொதுப்பார்வையை முன்வைத்து பின்னபட்டிருக்கும் கதை.நெற்றியில் விழும் சுருள் முடியை ஒதுக்கியபடி சின்னு அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் என்பதான முதல் வர்ணனையே இப்போதும் சின்னு குறித்து யோசித்தால் நினைவிற்கு வருகின்றது...!

இந்நாவலை முதல்முதல் வாசித்தது ஒரு வேனிற்கால பகலில்.பொதுவான கற்பிதங்களுக்கு பழகி போய்விட்ட மனிதமனங்கள் அத்தகைய பொழுதொன்றின் புழுக்கத்திற்கு ஒப்பானவையே.

'நகரத்திற்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்' சிறுகதையின் நாயகன் தாஸ்,அலுவலகத்தில் மின்விசிறி கொஞ்ச நேரம் இயங்காவிட்டாலும் கூப்பாடு போடும் தாஸ் குறித்த தொடர் விவரிப்புகள் சுவாரஸ்யத்தை மீறிய எதார்த்தங்கள்...நைந்து போன விசிறியோடு இரவு வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் தாஸ் போன்றவர்களை நிச்சயம் ஒருமுறையேனும் சந்தித்திராமல் இருந்திருக்க முடியாது.வீட்டில் நிலைமை தலைகீழாய் இருக்க,பொது இடங்களில் வேறுவிதமாய் வெளிக்காட்டி கொள்ளும் இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல மாறாக இயல்பே அதுவென சிறு புன்னகையோடு கடந்து செல்ல வேண்டியவர்கள்.

தனுவை குறித்து இன்னும் என்ன பேச?!!மௌனியாய் இருந்து கொண்டே அவனுள் காதல் வளர்க்கும் அந்த சிறுபெண்ணை குறித்து யோசித்தால்..மழை நனைத்த சாலையும்..வாதாம் மரங்களுமே முன்வருகின்றன."தனியாகி..தனுவாகி.." என அவனோடு சேர்ந்து கரைந்து போக செய்பவள்.நடுகையில் வரும் அந்த கிழவர்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லியை போன்றதொரு பாத்திர படைப்பு.அவரின் தர்க்கங்கள்.. செடிகள் மீதான தீராக்காதல்..."ஒண்ணை பிடிங்கினால் ஒண்ணை நடணும் .." என கூறும் இடத்தில் பிடுங்கி எறியப்பட்ட துளசி வாசனை.


"கூடு விட்டு" கதையில் வரும் லீலாக்கா, "அதெப்படி மறக்கும்,நீங்க சொன்னதை ஒரு சொட்டு விடாமல் உரை ஊற்றியில்லா வச்சிருக்கேன்" என்கிறாள் ஒரு இடத்தில்.."கையில் கோலப்பொடி இருக்கு,இல்லாட்டி உன் வண்டி ஹார்ன் சத்தத்தை பந்தை பிடிப்பது போல ரெண்டு கையிலயும் பிடித்து இருப்பேன்" என்கிறாள் வேறொரு சந்தர்ப்பத்தில்."கோபம்னா அப்படி ஒரு கோபம் எனக்கு..சில்லு சில்லா தெரிச்சு பட்டாசலைல கிடக்கு.நீ வந்திருந்தா உன் காலில் பூந்திருக்கும்" என்பவளை எதனோடு ஒப்பிடுவது..


"இந்த சாதாரண வாழ்வின் மத்தியில் காதல் தான் சில
தேவதை கதைகளை சொல்லி செல்கிறது"


"ஒரு முயல் குட்டி இரண்டு தேநீர் கோப்பைகள்" கதையில் வரும் சிறுமலர் அப்படி ஒரு தேவதையே.நட்பின் எல்லை எதுவென தீர்மானிக்க முடியாத நிலையில் நிகழும் சங்கடங்களை மெலிதாக அணுகி இருக்கும் இக்கதை கோபியின் சிறுகதை ஒன்றை நினைவூட்டியது.'உப்பு கரிக்கிற சிறகுகள்' கதையில் வரும் செல்வி,எல்லா கடல் மீதும் பறந்து விட்டு உப்பு கரிக்கும் சிறகோடு ஓய்வெடுக்க வரும் பறவையோடு தன்னை ஒப்பிட்டு கொள்கின்றாள்.சபிக்கப்பட்ட காதலி தேவதையாய் உருமாறும் கதை.

வண்ணதாசன் கைமாற்றி விட்டிருக்கும் பட்டுப்பூச்சிகள் இன்னும் எத்தனையோ..பொலிவற்ற நகர ஓட்டத்தின்,பதற்றம் நிரம்பிய முகங்களுக்கு மத்தியில் இந்த பட்டுபூச்சிகளின் தேவை அவசியமானது என்பதில் சந்தேகமில்லை..


சின்னு முதல் சின்னு வரை - விமலன் புக்ஸ் வெளியீடு(1991 )
வண்ணதாசன் கதைகள் - புதுமைப்பித்தன் பதிப்பகம்
பெய்தலும் ஓய்தலும் - சந்தியா பதிப்பகம்