Tuesday, December 29, 2009

ஆர்மேனியா தேசத்து சிறுகதைகள்

ஆர்மேனியா....சோவியத் யூனியன் குடியரசுகளில் ஒன்றான இந்த தேசத்தின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பிது.இந்த நூலிற்கு அசோகமித்திரன் எழுதியுள்ள விரிவான முன்னுரை ஆர்மேனியா தேசம் குறித்தும்,ஆர்மேனியாவிற்கும் இந்தியாவிற்குமான வர்த்தக மற்றும் காலாச்சார தொடர்பினை குறித்தும் சொல்லும் செய்திகள் ஏராளம்.ஆர்மேனியர்கள் வர்த்தகம் தொடர்பாய் இந்தியாவிற்கு வரும் முன்னரே உலக யுத்த காலத்தில் அகதிகளாய் கொல்கத்தாவிலும்,சென்னையிலும்,கேரளத்திலும் குடியேறி உள்ளனர் என்னும் செய்தி ஆச்சர்யம் தருவதாய் இருந்தது.மேலும் சென்னையில் ஆர்மேனியா வீதியில் மிகப்பழமையான கிறிஸ்துவ தேவாலயம் இன்றும் அவர்களின் சுவடினை நினைவூட்டுவதாய் உள்ளதாம்.இச்செய்திகள் யாவும் படிக்க படிக்க ஆர்மேனியா தேசம் குறித்து அறிய ஆர்வம் மேலிட,இணையத்தில் தேடியதில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்களில் ஒருநாள் முழுதும் மூழ்கி போனேன்.

அடர்ந்த மலைகளும்,பூக்கள் விரிந்த சோலைகளும்,புராதான கட்டிடங்களும் நிறைந்த அழகிய ஆர்மேனியா தேசத்தின் இலக்கிய சூழல் 1990 களில் தொடக்கத்தில் வெகு சிறப்பாய் இருந்துள்ளது.இத்தொகுதியின் சிறுகதைகள் யாவும் 1880-1930களில் எழுத பெற்றவை. "என் நண்பன் நெசோ",சிறு பருவத்து நண்பன் நேசொவை பின்னாட்களில் பரம ஏழையாய் சந்திக்கும் பணக்கார வாலிபனின் கதை.மங்கிய நிலவொளியில் வட்டமாய் அமர்ந்து பேசும் சிறுவர்களுக்கு மத்தியில் விசித்திர கதைகளை சொல்லுவதில் நெசோ ஒரு நாயகன்....ஏற்ற தாழ்வுகள் அற்ற சிறுவர் பிராயம் மெல்ல மெல்ல மறைந்து அவர் அவர் பெற்றோரின் பொருளாதார நிலைக்கேற்ப மாறுபடுவதை அழகாய் சொல்லி இருகின்றார் இக்கதை ஆசிரியர் ஹோவன்னஸ்."வயிறு",பெரும் பசி கொண்ட தச்சன் ஒருவனின் கதை.வருமானம் ஏதும் அற்ற நிலையில் தன் பசியின் பொருட்டு கிடைக்காத உணவு வகைகளை,பார்க்காத பதார்த்தங்களை கனவில் உண்டு மகிழும் விசித்திர பிறவியான தச்சனின் கதையை எழுதி இருப்பவர் தெரனிக்.



"ஆட்டு குட்டி",தனித்து வாழும் ஒரு ஏழை தந்தை தூர நகரத்தில் பெரும் பதவியில் இருக்கும் தம் மகன் குறித்தான நினைவுகளில் மூழ்கி, அவன் வரவை எதிர்நோக்கும் ஒரு நாளின் குறிப்புகள். மலிந்து வரும் உறவுகளுக்கிடையேயான பிணைப்பு குறித்து 1915 இல் எழுத பட்ட இக்கதை கூறுவது ஆச்சர்யம் ஏற்படுத்துகின்றது. "ஒரு சிறுவனும் பெரிய லாரி டிரைவரும் ",உலகத்தை சுற்றி வர ஆர்வம் கொண்டிருக்கும் சிறுவனுக்கும் அந்த ஆவலை தன கற்பனையால் பூர்த்தி செய்யும் ஆர்மேனிய எல்லையை தாண்டிடாத ஏழை லாரி டிரைவருக்குமான நடப்பை சொல்லுகின்றது இக்கதை.உலக வரைபடத்தை மனப்பாடமாய் வைத்திருக்கும் சிறுவனின் கேள்விகளுக்கு,தன் கற்பனையை கொண்டு ஆப்பிரிக்க யானைகளையும்,காட்டேருமைகளையும்,அவர்களின் வேட்டை திறமைகளையும் வர்ணிக்கும் உரையாடல் அழகானது.


"ஆட்டு குட்டி" ,சிறுகதையை ஒத்திருந்த கதை "அம்மாவின் வீடு",கிராமத்தில் தனித்திருக்கும் தாயை சந்திக்க வரும் மகனின் கதை.இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் இரண்டு,"துரோகி" மற்றும் "பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்" ."துரோகி",பாம்பிற்கும் மனிதனுக்குமான நட்பு சாத்தியமா என்கிற கேள்விக்கு கொஞ்சம் கற்பனை கலந்து பதில் அளிக்கும் கதை இது.வேட்டையின் பொழுது குழியில் விழுந்துவிடும் நாயகன் அங்கு வசித்திருக்கும் பாம்பிடம் நட்பு கொண்டு அதன் உதவியால் மீண்டு வருகின்றான்.சிறப்பு பொருந்திய அப்பாம்பினை சில வருடங்கள் கழித்து அவனே சிறு தொகைக்காக பாம்புகளை வைத்து வித்தை காட்டுபவர்களிடம் காட்டி கொடுத்து விடுகின்றான்.துரோகத்தை தாங்காத அப்பாம்பு கக்கிய விஷமானது அவன் முகத்தை அகோரமாக்கிவிடுகின்றது.நட்பின் துரோகத்தை விசித்திர உறவுகள் மூலம் சொல்ல முயலும் கதை.

"பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்",1800 மற்றும் 1900இல் நிகழ்வதான இரு வேறு காதல் கதைகள்.இரு கதைகளும் ஏழை - பணக்கார - ஜாதி - எதிர்ப்பு என பார்த்து சலித்த திரைகாதல் போல இருப்பினும் ஆசிரியரின் விவரிப்பு ஏரவான் நகரத்தின் அழகினை அற்புதமாய் வர்ணிப்பதோடு காலங்களுக்கு ஏற்ப மாறும் காதலின் தீவிரத்தை அழகாய் சொல்லி செல்கின்றன.காதல்,துரோகம்,உறவுகளின் பிரிவு என இந்த கதைகள் ஒவ்வொன்றும் ஒரு களத்தை மையபடுத்தியே உள்ளன.வயலட் பூக்களின் தேசமான ஆர்மேனியா குறித்து அறியும் ஆவலை தூண்ட போதுமான செய்திகள் இந்த தொகுப்பில் உள்ளன.ஆர்மேனியா மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் பின்பு ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.சென்ற பதிவில் குறிபிட்டது போல நேசனல் புக் டிரஸ்ட் தொடர்ந்து இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளை வெளியிடாமல் போனது வருத்தம் தரும் விஷயமே.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
தமிழில் முதல் பதிப்பு - 1991
தமிழில் மொழிபெயர்ப்பு - வல்லிகண்ணன்

Thursday, December 24, 2009

பனகர்வாடி - மராத்திய நாவல்

பனகர்வாடி..ஆடு மேய்ப்பதை பிரதான தொழிலாய் கொண்ட மக்கள் வாழும் ஒரு சிறிய மராத்திய கிராமம்.படிப்பறிவில்லாத அம்மக்களுக்கு நடுவே இளைஞன் ஆன வாத்தியார் ராஜாராம் விட்டல் மூன்று வருடம் பெரும் அனுபவங்களின் கோர்வை.கதை முழுதுமே நாயகனான ஆசிரியன் சொல்லுவதாய் அமைந்துள்ளது.அச்சிறு கிராமத்தின் ஒவ்வொரு மனிதரையும் அவர்தம் விருப்பு வெறுப்புகளையும் உடனிருந்து அவதானிக்கும் நாயகன்..மெல்ல மெல்ல தயக்கங்கள் விலகி அவர்களின் ஒருவனாகின்றான்.
பாடம் கற்பிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதை செய்ய முனையும் நாயகன் ஒரு கட்டத்தில் அவர்களின் எல்ல சிக்கல்களுக்கும் தீர்வு தர வேண்டிய ரட்சகனாய் ஆகிறான்.

பள்ளிக்கூடம் என்ற ஒன்றினை மறந்துவிட்டிருந்த பனகர்வாடி கிராமத்திற்கு வந்து சேரும் நாயகன்..பெரும் குழப்பமும்,அக்கிராமத்தில் கழிய போகும் மீதி நாட்கள் குறித்த அச்சத்தோடும் தன் நாட்களை தொடங்குகின்றான்.அக்கிராமத்தின் நாட்டாண்மை கிழவரின் ஆதரவு தரும் நம்பிக்கையில் பள்ளிக்கு சிறுவர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் அடைகின்றான்.பெரும்பால குழந்தைகளை ஆடு மேய்க்க செல்வதால் பள்ளி நடைபெற தடங்கல் ஏற்படுகின்றது..மெல்ல மெல்ல பெற்றோர் மனநிலையை மாற்றி..குழந்தைகளை பள்ளிக்கு வர வழைக்கின்றான்.படித்தவர்களுக்கு கிராமத்தில் எப்பொழுதும் மரியாதை உண்டு.படித்தவர்களின் எடுக்கும் முடிவும் சொல்லும் தீர்ப்பும் உறுதியானது என நம்பும் மக்கள் அவர்கள்..அவ்விதத்தில் வாத்தியாரான ராஜாராமும் சில நாட்களில் அங்கு முக்கிய நபராக எல்லோராலும் விரும்படுகின்றான்.



அக்கிராமத்தில் நாயகனுக்கு நெருக்கமாய் இருக்கும் சிலரை குறித்த கிளைக்கதைகள் சுவாரஸ்யமாய் சொல்லபடுகின்றன.ஆனந்தா ராமோஷி-வேட்டையாடுவதில் சிறந்தவரான ராமோஷி இனத்தவரான ஆனந்தா சிறு சிறு திருட்டுக்கள் செய்து பிழைத்தாலும் யாராலும் வெறுக்கபடாதவன்,அக்கிராமத்தின் நாட்டாண்மை கிழவர்- தன் பேத்தி அஞ்சியோடு வசிக்கும் அவர் ஊரின் எல்லா முடிவுகளையும் திறத்தோடு எடுக்கிறார்,நாயகனோடு அவருக்கு வரும் சிறு ஊடல் தோன்றி மறைவது வெகு அழகாய் சொல்லப்பட்டுள்ளது.ராமாகோனான்- அவ்வூரின் மிகப்பெரும் ஆட்டு மந்தைக்கு சொந்தக்காரன்..மந்தை முழுதும் பார்த்து கொள்வது ராமாக்கொனானின் தந்தையான காகூபா கிழவன்,ஆடு மேய்ச்சலில் பல வருட அனுபவம் கொண்ட அவர் வாசத்தை கொண்டு ஓநாய்கள் நடமாட்டத்தை கண்டுபிடித்துவிடுவார்.கசாப்பு தொழில் செய்யும் ஆய்பு ஆகியோரே ராஜாராமின் உற்ற தோழமையுடன் இருந்தனர்.

பனகர்வாடி கிராமத்தில் விளையாட்டு கூடம் ஒன்றினை கட்டிட நாயகன் முடிவு செய்கின்றான்.கூரை வீடுகளே உள்ள அவ்வூரில் திடமான கட்டிடம் ஒன்றினை நிறுவினால் அது பல காரியங்களுக்கு பயன்படும் நோக்கில்."வீட்டை கட்டி பார்.." என்னும் சொலவைடைக்கு ஏற்றார் போல பல சிக்கல்களுக்கு இடையே கிராமத்தினரை ஒன்று சேர்த்து விளையாட்டு கூடத்தை கட்டி முடித்து அதை மகாராஜாவை கொண்டே திறந்து வைக்கின்றான்.அக்கிராமத்து பெண்களும் காதலும் வீரமும் கொண்டவர்களே.நோஞ்சானான சேகூவின் மனைவி கலைப்பையில் ஒரு எருதை கட்டி மறுமுனையில் தான் நின்று நிலத்தை உழுது ஊரை வியக்க வைத்தவள்.எதிர்பாரா திருப்பம் போல வறட்சி காலம் தீவிரமடைந்து பனகர்வாடி கிராமத்தை ஆட்டி படைகின்றது.ஆடுகள் இறந்துவிட,விளைநிலங்கள் பொய்த்து விட மக்கள் யாவரும் பிழைக்க வழி தேடி வேற்று ஊர்களுக்கு செல்வதோடு நாவல் முடிகின்றது.

வெங்கடேஷ் மாட்கூல்கரின் இந்நாவல் 1954 இல் ஒரு மராட்டி வார பத்திரிகையில் வெளிவந்து பின் நூல் வடிவம் பெற்றுள்ளது.இந்திய கிராமங்கள் யாவும் ஒன்றே என எண்ண தோன்றியது இந்நாவலை வாசித்த பொழுது.பள்ளி ஆசிரியனான நாயகன் கிராமத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் - ஆடு வளர்ப்பு,பயிர் விளைச்சல்,சண்டை சச்சரவுகள்,கருத்து வேற்றுமைகள்,பஞ்சகால அழிவு என தன் பார்வையில் நமக்கு முன்வைகின்றான்.இந்நாவல் "The Village Had No Walls" என்கின்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.பனகர்வாடி மொழிபெயர்ப்பு என்கின்ற நெருடல் ஏதும் இல்லாத மிக சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் நாவல்.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
ஆசிரியர் - வெங்கடேஷ் மாட்கூல்கர்
மொழி பெயர்ப்பு - உமா சந்திரன்
விலை - 18 ரூபாய் முதல் பதிப்பு (1977)

Saturday, December 12, 2009

Death Of A President

சில திரை முயற்சிகள் மேலை நாடுகளில் மட்டுமே சாத்தியம்.பெருவாரியான வசூல் சாதனை படைத்த படங்களை இரக்கமே இல்லாமல் காட்சிக்கு காட்சி கிண்டல் செய்து உடனே படம் எடுப்பார்கள்.அவை பலி வாங்கும் நோக்கில் அல்ல..பகடி அவ்வளவே!!Scarie Movie Series ,Super Hero Movie என அது போன்ற படங்களின் பட்டியல் ஏராளம்.இதில் குறிப்பிட வேண்டியது என்ன வென்றால் Scarie movie series மாபெரும் வெற்றி பெற்றது.அங்கே அதற்கான ஆரோக்கியமான சூழல் உள்ளது.சக கலைங்கர்களும் ரசிகர்களும் பகடியை பகடியாகவே எடுத்து கொள்ளும் மனப்பான்மை கொண்டுள்ளனர்.இங்க அது போன்ற..வேணாம் புலம்பி பிரயோஜனமில்லை!!Death Of A President,பகடி வகையை சார்த்தது இல்லை.வித்தியாச முயற்சி என சொல்லுவதை காட்டிலும் துணிச்சலான முயற்சி எனலாம்.

சிகாகோ நகரில் 2006 ஆண்டு அக்டோபரில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சுட்டு கொலை செய்யப்படும் பரபரப்பான காட்சியோடு தொடங்குகின்றது இத்திரைப்படம்.ஜனாதிபதியின் மரணத்தை அடுத்த விசாரணைகள்,உள்நாட்டு அரசியல்,இஸ்லாமிய ஒடுக்கு முறை,சிறுபான்மை நாடுகள் மீதான அமெரிக்காவின் பார்வை என காட்சிகள் விரிகின்றன.ஆவண படம் போன்ற காட்சி அமைப்புகள் படத்திற்கு பெரியதோர் பலம்.படம் முழுவதும் மாறி மாறி தொடரும் சம்பந்தப்பட்டவர்களின் நேர்காணல்கள் பூடகமாய் விளக்கும் விஷயங்கள் ஏராளம்.



சிரியா நாட்டு இளைஞர் ஒருவரை குற்றவாளியென கண்டுபிடிக்கும் போலீஸ் அவருக்கும் அல் கொய்தாவிற்குமான தொடர்பை அம்பல படுத்த முயற்சிகள் ஒரு புறம் விளக்க படும் பொழுதே,குற்றவாளியின் மனைவி அதை மறுத்து முன் வைக்கும் காரணங்கள் மறுபுறமும் நேர்காணல் வடிவில் வெகு இயல்பாய் படம் பிடிக்கபட்டுள்ளது.படம் பார்த்து கொண்டிருக்கும் வேளையில் சட்டென தோன்றியது....நடைபெறாத ஒரு கொலையை இவ்வளவு தீவிரமாய் விசாரணைக்கு உட்படுத்தி அலசி,ஆராய்ந்து இருக்கும் இயக்குனரின் முயற்சியை நினைத்து வெகுவாய் வியந்தேன்.பரபரபிற்காக கூட "ஜனாதிபதியின் மரணம்" என்பதை கையாண்டிருக்கலாம்.அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பிய படம் இது,பல நாடுகளில் வெளியிடவும் தடை செய்யபட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் இருந்து இராக் சென்று வந்த கறுப்பின இளைஞன் ஒருவனின் தந்தையின் தற்கொலையும் அதே நாளில் சிகாகோவில் நடப்பதால் அவரையும் சந்தேகிக்கின்றது போலீஸ்,அந்த கறுப்பின குடும்பத்தின் வாயிலாக இராக்கில் அமெரிக்காவின் இரக்கமற்ற தாக்குதல் சொல்லபடுகின்றது.கொலை சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழித்து வெளிவரும் தீர்ப்பு சிரியா இளைஞரை குற்றவாளியென தீர்மானிக்கின்றது.அதை எதிர்த்து அவரின் மனைவி மேல் முறையீடு செய்வதோடு படம் முடிகின்றது.

எங்கோ,எப்பொழுதோ இப்படம் குறித்து வாசித்தது.படம் பார்த்ததும் இணையத்தில் தேடியதில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தது.அக்டோபர் 2006 ஆண்டு கொலை சம்பவம் நடைபெற்றதாக வரும் நாளிலேயே இத்திரைப்படம் பல இடங்களின் முதலில் திரையிடபட்டுள்ளது..காப்ரியல் ரேஞ்இயக்கியுள்ள இத்திரைப்படம் எம்மி,அகாதெமி உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது.பரபரப்பிற்கான முயற்சி,இயக்குனரின் துணிகரம் என்பவை ஒருபுறம் இருப்பினும் இத்திரைப்படம் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.

Saturday, December 5, 2009

இரா.முருகனின் "அரசூர் வம்சம்"

கால எந்திரத்தின் உதவி இன்றி தலைமுறைகள் பல பின்நோக்கி பயணிக்க செய்கின்றது
இந்த "அரசூர் வம்சம்" .தாத்தா பாட்டி உடன் கூட அமர்ந்து பேச நேரம் இன்றி ஓடிடும், உறவுகள் மலிந்து வரும் இன்றைய சூழலில் முன்னோர்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிடும் நாவல் இது.பாட்டனும்,பூட்டனும் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நினைக்கவே சுவாரசியமாய் இருக்கும் தானே??!!.அப்பாவும்,அம்மாவும் எப்போதும் அவர்களின் அம்மச்சி குறித்தோ,பெரிய தாத்தா குறித்தோ பேசி கொண்டிருப்பார்கள்.பெரியவர்களிடம் நிறைய கதைகள் புதையுண்டு கிடக்கும்..அதை கிளறி கேட்பதும் ஒதுங்கி போவதும் நம் விருப்பம்.மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளற்ற அந்த காலங்களில் கூட்டு வண்டி கட்டி மதுரைக்கு இரவில் ராக்கொள்ளையர்களுக்கு பயந்து ஆண்களும்,பெண்களுமாய் சென்று வந்த கதையை அப்பாவின் அத்தை முறை பாட்டி சொல்லி கேட்டது ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி.

இரா.முருகனின் இந்நாவல் குறித்த சில கட்டுரைகளை சிவராமன் பகிர்ந்திருந்தார்..சுஜாதாவின் கட்டுரை அதில் ஒன்று.தி.ஜ,கு.பா.ரா என பல எழுத்தாளர்களின் சாயல் தொனிப்பதாய்..அற்புத நடையில் இந்நாவல் அமைந்துள்ளதாகவும் சொல்லி இருக்கின்றார்.அது முற்றிலும் உண்மை.கோர்வையாய் கதையாடல் இல்லாது முன்னும் பின்னுமாய் கொஞ்சம் சுழற்றி அடித்து நாவலின் முதல் சில அத்தியாயங்கள் குழப்புவதாய் தொடங்கினாலும் பின்பு சுவாரஸ்யமாய் ஜெட் வேகமெடுக்கின்றது..முன்னோர்கள் அல்லது நாவலில் குறிப்பிடுவது போல மூத்தகுடிகள் தாம் இக்கதையின் நாயகர்கள்...கற்பனைக்கு எல்லையில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தும் முயற்சி இது.




அரசூர் வம்சம் ...புகையிலை விற்று செல்வதில் கொழித்த பிராமணர்களின் வம்சம். சுப்ரமணிய அய்யர்..அவர் தம் புதல்வர்கள் சாமிநாதன் மற்றும் சங்கரன்,இவர்களின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் ஜமீன்தார் அவரின் மனைவி,சங்கரன் பெண் எடுக்கும் கிட்டவாயனின் குடும்பம் என மூன்று குடும்பங்களை பற்றிய கதை.இதில் பன்யன் சகோதரர்கள் காலத்தின் குறியீடாய் வந்து போகின்றனர்.மூத்த குடிகளோ கடந்த காலத்தின் எச்சங்களை நிகழ் காலத்தில் பதித்திடவும்,எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகளை கோடிட்டு காட்டவும் வந்து போகின்றனர். சுப்ரமணிய அய்யரின் வளர்ச்சியை கண்டு பொறாமைபடும் ஜமீந்தார் பின்பு சமரசம் செய்து கொண்டு அரண்மனையை புகையிலை கிடங்காக மாற்றி லாபம் சம்பாதிக்கின்றார்.ஜமீந்தார் வரும் காட்சிகள் யாவும் சிரிப்பை வரவழைப்பவை.அளவில்லாத பகடி.

தன்னை விட பல நூறு வருடம் மூத்த பெண்ணுடன் காதல் கொள்ளும் சாமிநாதன்,விசித்திர சாபம் கொண்டு நித்திய சுமங்கலியாய் இருக்கும் சுப்பம்மா கிழவி,பறக்கும் சக்தி கொண்ட கிட்டவாயனின் மாமனார்,பணத்தின் பொருட்டு மதம் மாறும் குடும்பத்தார்,துர் தேவதைகள்-மந்திரங்கள்-ஜபித்த எந்திரங்கள் என காலத்தை ஓட்டும் ஜோஸ்யர்,சகல வித்தைகளும் கற்று அறிந்த கொட்டகுடிதாசி என அரசூர் வம்சத்தின் கதாபாத்திரங்கள் யாவும் மர்மமும் ஆச்சர்யங்களும் பொருந்தியவர்கள்.

எங்கள் வீட்டு முந்தைய தலைமுறை பெண்கள் தொட்டு தடவிய வேலைபாடுகள் கொண்ட பல்லாங்குழி,கரையான் அரித்த புகைப்படங்களின் அமர்ந்திருக்கும் முண்டாசு கட்டிய கிழவன்கள், பாம்படம் மாட்டிய கிழவிகள்,பாட்டன் காலத்து கைத்தடிகள்,வைத்தியர் என அறியப்பட்ட தாத்தாவின் அப்பா காலத்து ஓலை சுவடிகள் என கிராமத்து வீடு முழுதும் சின்ன சின்ன விஷயங்கள் மூதாதையர்களை இன்றும் நினைவுபடுத்தி கொண்டே இருக்கின்றன.இந்த நாவல் இதுபோல எத்தனையோ விஷயங்களை கிளறிவிட்டது.இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பாட்டன் பூட்டன் குறித்த காரியங்கள் அவசியம் தானா? என கேட்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாய் இந்த நாவல் உங்களுக்கானது இல்லை.

Sunday, November 15, 2009

மழை... இசை..ஒரு தூர பயணம்!!

மழை..!!!எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு மழை குறித்து அதிகமாய் நண்பர்களிடம் பேசுகின்றேன்..மழையை வெறுக்க போதுமான காரணங்கள் சென்னையில் இருப்பினும் அது தரும் மகிழ்ச்சியும் நிறைவும் தவிர்க்க முடியாதது.மழையை சில இடங்களோடு பொருத்தி பார்க்க மிகவும் பிடிக்கும்.மதுரையில் பரந்து விரிந்து இருக்கும், 100 ஆண்டுகள் பழமையான எனது பள்ளி, மழை நாட்களில் இன்னும் அழகாய் இருப்பதாய் தோன்றும்..பெருமழை பொழுதில் மந்தையில் இருந்து அடித்து வரும் மழைநீரானது எங்கள் கிராமத்தின் ஆள் அரவம் அற்ற நடுவீதியில் செல்லும் காட்சி,அழகர் மலை காற்றோடு அடிக்கும் சாரல்,மழை..சாரல் என்றதும் நினைவிற்கு வரும் குற்றாலம்,சாரல் பொழுதில் செல்லும் மின்சார ரயில் பயணம்..மஞ்சள் வெயிலோடு பெய்யும் மழை...வேனிற்கால தூரல்கள் எழுப்பும் மண்வாசனை.....என.




கடந்த வாரத்தில் ஒரு மழை நாளில் மதுரைக்கு அருகில் இருக்கும் அணைப்பட்டிக்கு செல்வதென திடீரென முடிவு செய்து மூவரும் புறப்பட்டோம்.பெருமழையின் பொழுது வயல்வெளிகளில் பயணம் செய்வது அதுவே முதல் முறை.சோழவந்தான்,வாடிப்பட்டி வழியே மட்டபாறை,கரட்டுப்பட்டி கிராமங்களை கடந்து, இன்னும் இன்னும் என மழையை ரசித்த படி சென்றது மறக்கமுடியாதது.அணைபட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அப்பகுதியில் பிரசித்தம்..அம்மாவிற்கு விருப்பமானது.வைகையில் நீரை எதிர்பார்த்து சென்றது மட்டும் வீணானது..இருப்பினும் மழை காட்சிகள் அந்த குறையை மறக்கடித்துவிட்டன.


கொட்டும் மழையில் செம்மண் காட்டிற்கு நடுவே பார்த்த கிடை மாடுகள் கூட்டம்!!ம்ம்.....அப்பாவிற்கு பிடித்தமான காட்சி அது.அரிதான காட்சியும் கூட..இனிமையான மணியோசையோடு கூட்டமாய் வயல்வெளிகளில் திரியும் கிடை மாடுகள் குறித்த தனது பள்ளி கால நினைவுகளை அப்பா சொல்லி கேட்டதுண்டு..அடுத்த தலைமுறைக்கு செய்தியாய் மட்டுமே சென்றடைய போகும் விஷயங்களில் இதுவும் ஒன்று.கரட்டு காட்டில் பெய்த மழை நீரானது ..வழியெங்கும் ஓடையில்..வாய்காலில்....ஏன் வழியெங்கும் குண்டும் குழியுமான சாலைகளில் கூட வழிந்தோடியது அழகாய்!!"இன்னும் என்னை
வெகு தூரம் கூட்டி செல்லடி........" என ராஜாவின் இசையில் மயங்கியபடி சென்று வந்த இந்த பயணம் சில மணி நேரமே என்றாலும் அது தந்த உற்சாகம் சொல்லில் அடங்காதது.





சமீபத்தில் எங்கோ கண்ட மழை குறித்தான இந்த வாசகம் "If someone tells sunshine brings happiness,then they might not hav danced in the rain" எவ்வளவு உண்மை என தோன்றியது.மீண்டும் சென்னை வந்து எந்திர சுழற்சியில் உள்புகுந்தாகிவிட்டது!! "ஆதவன் பார்த்தாச்சா","Q3 ரிசல்ட் நல்லா இருக்காமே " வகையறா உரையாடல்களுக்கு மத்தியில்..மீண்டும் மீண்டும் அணைபட்டியில் எடுத்த புகைப்படங்களை புரட்டி கொண்டிருக்கின்றேன்..மழையின் ஈரம் அதில் கொஞ்சமேனும் மிச்சமிருக்கும் என்கிற நம்பிக்கையில்!!

Saturday, November 14, 2009

ரஸ்டியின் வீரதீரங்கள் - ரஸ்கின் பாண்ட்

மீண்டும் ஒரு சிறுவர் நாவல்.ரஸ்கின் பாண்ட் எழுதியுள்ள இந்த சிறுவர் இலக்கியம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.ரஸ்கின் பாண்ட் குறித்து பல சுவையான செய்திகள் இணையத்தில் கிடைத்தன.ஆங்கிலோ இந்தியரான இவர் சிறுவர்களுக்காக பல நூல்கள் எழுதியுள்ளார்.பெரும்பாலான இவரின் நாவல்கள் குழந்தைகள் பார்வையில் உலகம் என்கிற போக்கில் உள்ளது.சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நிகழ்வதாய் வரும் இக்கதை கூட ரஸ்டி என்னும் சிறுவன் பள்ளி வாழ்கையை வெறுத்து உலகத்தை சுற்றி பார்க்க ஆர்வம் கொண்டு மேற்கொள்ளும் பயணத்தை பற்றியது.


தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டு பாகங்களாக உள்ளது "கென் மாமா" & "ஓடி போதல்" என.கோடைகால விடுமுறைகள் பள்ளிபருவத்தின் போது மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் இருக்கும்.பாட்டி தாத்தாவுடன் செலவிட எங்கள் கிராமத்திற்கு சென்று விடுவேன்!!!பேசுவதற்கு அவர்களிடம் அதிக செய்திகள் உண்டு..கேட்பதற்கு தான் நாம் தயாராக இல்லை."கென் மாமா" பகுதி ரஸ்டியின் கோடைகால விடுமுறைகள் குறித்தது.அருமையாக சமையல் செய்வதில் வல்லவலான தனது பாட்டியின் வீட்டிற்கு செல்லும் ரஸ்டி,தனது தூரத்து உறவினரான கென் மாமாவோடு டெகராடூன் நகரில் கழித்த காலங்களை கூறுவதாய் உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மலைகளை,பள்ளத்தாக்குகளை..அழகாய் வர்ணித்துள்ளார்.



நாவலின் இரண்டாம் பகுதி சுவாரஸ்யமானது.ஜாம் நகருக்கு வரபோகும் கப்பல் காப்டனான தனது மாமா கென்னை சந்தித்து அவரோடு உலக பயணம் மேற்கொள்ள முடிவு செய்து பள்ளியை விட்டு அந்நகருக்கு மேற்கொள்ளும் பயணம் குறித்தது. பயணங்கள் எப்போதும் உற்சாகம் தரக்கூடியவை.புதிய இடங்கள்..புதிய மனிதர்கள்..புதிய உணவு பழக்கங்கள்..மொழிவேற்றுமை என முற்றிலுமாய் புதிய உலகத்திற்குள் பயணிப்பது சுவாரசியமானது தானே!!டெகராடூன்இல் இருந்து ஜாம் நகருக்கு ரஸ்டியும் அவனின் நண்பன் தல்ஜித்தும் ஆர்வமும்,பயமும் கொண்டு மேற்கொள்ளும் பயணம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானாதாய் இல்லை..இருப்பினும் அச்சிறுவர்களின் மன உறுதி அவர்களின் இலக்கை சுலுவாய் சென்றடைய துணை நிற்கின்றது.

தேகராடூனில் தொடங்கும் இச்சிறுவர்களின் பயணம்..டெல்லி..ராஜஸ்தான் வழியாக ஜாம் நகர் சென்றடையும் வரை இடறல்களை மட்டுமே தருகின்றது.இவர்கள் சந்திக்கும் நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை.அன்பாய் வரவேற்கும் டீ கடைகாரர்,பணம் எதுவும் வேண்டாமல் ராஜஸ்தான் அழைத்து செல்லும் லாரி ஓட்டுனர்..இவரின் சத்தம் மிகுந்த ஹாரன் குறித்த ரஸ்டியின் கருத்துக்கள் சிரிப்பை வரவைப்பவை,இடிந்த மண்டபம் ஒன்றில் சந்திக்கும் கொள்ளையர் கூடம்,ஜாம் நகரின் துறைமுகத்திற்கு செல்ல உதவும் ஜட்கா வண்டிக்காரன் என.கஷ்டங்கள் பல கடந்து ஜாம் நகரை வந்தடையும் ரஸ்டியின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பது சின்ன சோகத்தோடு சொல்லப்படுகின்றது.

ரஸ்கின் பாண்ட் நாவல்கள் தவிர்த்து கவிதைகள்,கட்டுரைகள்,சுயசரிதைகள் பல எழுதியுள்ளார்.சாகித்திய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதுகளும் பெற்றுள்ளார்.நேஷனல் புக் டிரஸ்ட் பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளன தமிழில்.எளிய தமிழில் உள்ள இந்நாவல்கள் சிறுவர்களின் உலகினுக்குள் சென்று வந்த திருப்தியை தருகின்றன.

Tuesday, November 10, 2009

உயிர்மை

தமிழில் இலக்கிய இதழ்கள் வெகுஜன பத்திரிக்கைகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாய் வந்து கொண்டுதான் இருக்கின்றன.எப்போதும் அப்பாவின் கேஸ் கட்டுக்களின் ஊடாக இருக்கும் இலக்கிய இதழ்கள் பள்ளி காலங்களில் ஏதோ படிக்கவே முடியாத தமிழில் உள்ள நூல்கள் என உணர்வை தரும்.கணையாழி,சுபமங்களா,புதிய பார்வை என தொடங்கி..கொஞ்ச கொஞ்சமாய் இலக்கிய புத்தகங்கள் அறிமுகம் ஆயின. தி.ஜா வின் "மோகமுள்" தொடராய் வந்த பழைய கணையாழி இதழ்களை கிராமத்து வீட்டில் வாசித்த அனுபவம் அலாதியானது."தீபம்" 80களில் குறிப்பிட தக்க இலக்கிய இதழ் என அப்பா சொல்லி அறிந்துள்ளேன்.

தீராநதி,உயிர்மை,காலச்சுவடு,தீம்தரிகிட,வார்த்தை ஆகிய இலக்கிய இதழ்களை தொடர்ந்து வாசித்து வந்தாலும் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து மட்டுமே படிக்கும் பழக்கம் என்னிடம்.இதற்கு முற்றிலும் மாறாய் உயிர்மையின் 75 ஆவது இதழ்..தேர்ந்தெடுத்த கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள் என முழுதாய் வசப்படுத்தி கொண்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வண்ணதாசனின் சிறுகதை படிக்க கிடைத்தது.வண்ணதாசனின் கதை தலைப்புகளே கவிதை போல தான்.."அவனுடைய நதி அவளுடைய ஓடை" ,"பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக","ஒரு வாதாம் இல்லை ஒரு நீலச்சிறகு" என் அவரின் கதை தலைப்புகள் நான் வெகுவாய் ரசித்தவை.உயிர்மையின் 75 வது இதழில் வெளி வந்துள்ள வண்ணதாசனின் கதை "சுலோச்சனா அத்தை,ஜெகதா மற்றும் ஒரு சுடுமந் காமதேனு".மனித உறவுகளுக்கிடையேயான சிடுக்குகளை வெகு இயல்பாய் எடுத்தாள்வதில் வண்ணதாசனுக்கு நிகர் அவர் தான்.இவர் விவரிக்கும் எதார்த்த உலகின் மனிதர்கள் சௌந்தர்யம் மிக்கவர்கள்.

சாருவின் " தமிழ் சினிமா பாடல்கள் - ஒரு பண்பாட்டு வீழ்ச்சியின் அடையாளம்" கட்டுரை தமிழ் சினிமாவின் பாடல் வரிகளின் ஆளுமை குறித்து அலசுகிறது..தற்பொழுதைய பாடல் வரிகள் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை..சாரு பாணி விளாசல் கட்டுரை."துறவிகளின் தனிமைக்குரல்" - எஸ்.ரா வின் இந்த கட்டுரை உலக சினிமாவில் பௌத்தம் குறித்து அலசுகின்றது."தமிழ் சினிமாவின் புதிய அலை" என்னும் அம்ஷன் குமாரின் கட்டுரை நம்பிக்கை தரும் தமிழின் புதிய திரை முயற்சிகளின் குறித்தது.




ஞானகூத்தன் மற்றும் மனுஷ்யபுத்ரனின் கவிதைகள் மழை நாளின் பின்னிரவில் வாசித்து மகிழ வேண்டியவை. "சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்" என்னும் மனுஷ்ய புத்ரனின் கவிதை இவ்வாறாக வருகின்றது..

"புனிதர்களோ கடவுள்களோ சட்டென மண்டியிடும்படி நம்மை கட்டாயபடுதுவதில்லை......

...."சக்கர நாற்காலிகள் பூமியின் எந்த மையத்தோடும் பிணைக்கபடுவதே இல்லை"..

இவை தவிர்த்து..அ.முத்துலிங்கத்தின் "இருளில்" கட்டுரை பார்வையற்றவர்கள் குறித்தது.அவர்களின் உலகம் நமக்கு விசித்திரம் நிறைந்ததாய் தோன்றினாலும்..வெகு இயல்பாய் அதை வழி நடத்தி செல்லும் தமது நண்பர் ஒருவர் குறித்து இக்கட்டுரையில் சொல்லுகின்றார்.எஸ்.வி.ராமகிருஷ்ணனின் "என் அக்காவின் காது குத்து கல்யாணம்" கட்டுரை சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் இந்து சடங்கு ஒன்றினை பற்றியது.முன்னவர்கள் குறித்து அடிக்கடி நினைவு கொள்வேன் நான்..கால சுழற்சியில் எத்தைனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்..அவர்கள் தூக்கி எறிந்த மிச்சத்தை கொஞ்சமேனும் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றோம் ஏதோ ஒரு செயலில்.

அழகிய மழை நாளில் நல்ல இலக்கியம் வாசித்த திருப்தி..மனுஷ்யபுத்ரனுக்கு நன்றி.