Wednesday, May 5, 2010

ரைநீஸ் ஐயர் தெருவில்.......!!

வாசிப்பின் இடையே இடர்படும் ஏதேனும் இடம் குறித்த சிறுகுறிப்பும் ஈர்த்திடும்.. முடிந்தால் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் சட்டென தோன்றி மறையும்.பள்ளி நாட்களில் படித்த சரோஜினி நாய்டுவின் "Bazaars Of Hydrabad " கவிதை அப்பெரு நகரின் ஜன நடமாட்டம் நிறைந்த சந்தை காட்சிகளை வெகு அழகாய் விவரிக்கும்.அந்த நகரம் குறித்த அழகிய பிம்பத்தை தோற்றுவித்த அவ்வர்ணிப்புகள் இன்றும் நினைவில் உண்டு.



மதுரைக்கு அடுத்தபடியாய் மனதிற்கு நெருக்கமாய் உணரும் நகரம் நெல்லை.நேரில் சென்று பார்க்கும் முன்னரே அத்தகைய உணர்வை தோற்றுவித்தவை வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் கதைகள்.வேனிற் காலத்து நீண்ட பகல்கள்......ராஜாவின் இசை..வண்ணதாசன் சிறுகதைகள் - மூன்றும் சேர்ந்த பொழுதுகள் ஊடே,அந்நகரம் சார்ந்த வாசிப்பு கூட என் ஆர்வத்தை கூட்டிட காரணமாய் இருக்கலாம்.இவர்களின் கதைகளில் வரும் நெல்லை குறித்த வர்ணிப்புகளை பெரும்பாலும் மதுரையோடு குழப்பி கொள்வேன்.வண்ணதாசனின் "ஆறு" சிறுகதையில் சுலோச்சன முதலியார் பாலம் - அரவிந்த் கண் மருத்துவமனை குறித்து வாசித்துவிட்டு மதுரையில் அந்த பாலம் எங்குள்ளது என அப்பாவிடம் விசாரித்தது நினைவில் உள்ளது.

வண்ணநிலவனின் "கம்பா நதி" குறித்த பதிவில்....

"தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது...."


கதைகளில் வாசித்து,காட்சிபடுத்தியிருந்த இடங்களை நேரில் தேடி சென்றது இதுவே முதல் முறை..வாசிப்புதேடல் ஒரு வகை சுவாரஸ்யம் என்றால் இது ஒருவகை,சொல்ல தெரியவில்லை.அதிகப்படியான கிறுக்காய் கூட தோன்றலாம்..மதுரையில் இருந்து சாத்தூர்,கோவில்பட்டி,இடைச்செவல், கயத்தாறு வழி சென்ற மரங்கள் அற்ற நெடுஞ்சாலை பயணம் தந்த அயர்ச்சி நெல்லையை அடைந்ததும் சட்டென மறைந்துவிட்டது.மல்டி ப்ளெக்ஸ்,காபி டேக்களின் பிடியில் சிக்காது அதன் இயல்போடு மிளிரும் சிறு நகரம்!!வார்த்தைகளின் கண்டிருந்த சுலோச்சன முதலியார் பாலம்,தாமிரபரணி ஆறு,ரத்னா டாக்கீஸ் தொடங்கி கோவில் ரத வீதிகள்,தெப்பம்,சென்ட்ரல் டாக்கீஸ் என பல இடங்களை பார்த்து வந்தது இனம் புரியா மகிழ்ச்சி!!



வண்ணநிலவனின் "ரைநீஸ் ஐயர் தெரு"- டாரத்தி,அன்னமேரி,இருதயம்,தியோடர்,சாம்சன், பிலோமி,ஆசிர்வாதம் பிள்ளை,எபன் என வண்ணநிலவன் அந்நாவலில் உலவ விட்ட கதை மாந்தர்களை எளிதில் மறப்பதற்கில்லை.எப்போதும் மழை நனைத்த தெருவாகவே அதை உருவகப்படுத்தி வைத்திருப்பேன்.மழைக்கும் அத்தெருவிற்குமான உறவு நாவலில் வெகு நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.பாளையங்கோட்டையில் சிறு தேடலுக்கு பிறகு ரைநீஸ் ஐயர் தெருவை கண்டுகொண்டதும் சிறு பிள்ளைக்கான உற்சாகம் தோன்றி மறைந்தது!!


நகரின் எளிமை,நெல்லையப்பர் கோவிலின் அழகிய சிற்பங்கள்(சாமி சன்னதிக்கு முன்பான தூண்கள் ஏற்படுத்திய பிரமிப்பு),நேர்த்தியான தேர் வீதிகள்,அழகு தமிழ்,தெப்பக்குளம்,தாமிரபரணி..அதன் கரையோர கல் மண்டபங்கள்,பரபரப்பான கடை வீதிகள்,எந்திரதனம் அற்ற மனிதர்கள்...என அச்சிறு நகரத்தை பிடித்து போனதிற்கு காரணங்கள் பலவுண்டு!!பெருமழை காலத்தில் மீண்டும் நெல்லை சென்று வர வேண்டும் தாமிரபரணியில் வெள்ளம் பார்க்கவேணும் !!

39 comments:

ஆயில்யன் said...

படித்தபிறகு/உணர்ந்த பிறகு ஊர் ஊரா சுத்தணும்ங்கற நினைப்புத்தான் வருது ! :)

vijayan said...

வண்ணநிலவன் தன்னுடைய படைப்புகளைப்பற்றி எப்போதும் சாதரணமாகத்தான் பேசுவார்,ஆனால் வாசகன் அப்படியல்ல,அவனுக்கு அவருடைய கதைகள் மிகப்பெரிய மற்றும் புதுமையான அனுபவம்.கம்பா நதியை படித்து பாருங்கள், அது ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப்புது அனுபவங்களைக்கொடுக்கும்.

Gurusamy Thangavel said...

ரேனியஸ் ஐயர் தெரு நான் கல்லூரியில் படிக்கும்போது ரூம் எடுத்து தங்கியிருந்த தெரு. அது ஒரு பொற்காலம்.

Asir said...

Good One.. Congrats..

Santhappanசாந்தப்பன் said...

வித்தியாசமா இருக்கே!!

Haripandi Rengasamy said...

நாம் படித்த பகுதிகளைச் நேரில் சென்று பார்ப்பது என்பது மிக அற்புதமான நிகழ்வு ... உங்களுடைய எழுத்துக்களும் நன்றாக உள்ளன ...வாழ்த்துக்கள் ...

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றிங்க

ச.முத்துவேல் said...

ரெயினீஸ் ஐயர் தெரு நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை, நாவலையொட்டி பகிரமுடியுமா? நாவல் பற்றியும், அது பிடித்ததன் காரணமும் சொல்லியிருப்பீர்கள் என்று எதிர்பார்த்து படித்தேன். நான் அண்மையில்தான் இந் நாவலைப் படித்துமுடித்தேன். இந் நாவல் குறித்து எனக்கு தயக்கங்களும், சந்தேகங்களும் இருக்கிறது. அதற்காகத்தான் கேட்கிறேன்.

சுஜாதா விருதுக்கு வாழ்த்துகள் லேகா.

சரவணன்-சாரதி said...

இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் ...................உயிர்மையின் விருது கிடைத்ததற்கு.....வாழ்த்துகள் லேகா.......

Madumitha said...

விருதுக்கு
வாழ்த்துக்கள் லேகா.
அப்படியே
கடல் புரத்திற்கும்
சென்று வார்ங்களேன்.

ராம்ஜி_யாஹூ said...

அருமை லேகா.

நெல்லை நகர வீதிகளும், தாமிரபரணி தீரமும் தான் புண்ணியம் செய்து இருக்க வேண்டும், ஒரு தேர்ந்த வாசிப்பாளினி, பதிவரின் வருகை கிடைப்பதற்கு.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Anonymous said...

Read Kalapriya's ninaivin thazvarangal (maybe already you did).

By the by visit our kumari dist to feel kurinchi,mullai,marutham and neithal.

i find your site very useful.thanks.

ராம்ஜி_யாஹூ said...

லேகா, கலாப்ரியாவின் எட்டயபுரம் பதிவு படியுங்கள், நெல்லையின் எல்லைகள் அத்தனையும் அவர் தொட்டு உள்ளார்:

என் பார்வையில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்:

டவுன்- தேரடி திடல், இருட்டு கடை அல்வா (மாலை 5மநிக்கு மேல்), அம்மன் சன்னதி மண்டபம், பூதத்தான் முக்கு, வாகையடி முக்கு, மாரார் ஸ்டுடியோ (பிணம் தூக்கி கதையில் வருமே), சந்தி பிள்ளையார் கோயில் , உடுப்பி ஹோட்டல், லாலா சத்திர முக்கு, ராயல் திரை அரங்கம், தெப்ப குள தெரு, குறுக்குத் துறை, தாமிரபரணி ஆறு.

சாப்ப்டர் மேல் நிலை பள்ளி, சென்ட்ரல் திரை அரங்கம், இரு அடுக்கு மேம்பாலம், பூர்ணகலா திரை அரங்கம், பாரதி வேலை செய்த உலவிய, ம தி தா இந்து மேல் நிலை பள்ளி, சிந்து பூந்துறை, சுலோச்சனா முதலியார் பாலம், கொக்கிர குளம், ஊசி கோபுரம், பாளையம்கோட்டை பெருமாள் கோயில் திடல், வாய்க்கால் பாலம், சவேரியார், யோவான் , இன்ஜாஜியர் கல்வி குழுமங்கள், சாரா டக்கர் கல்லூரி, பேட்டை செக்கடி

லேகா said...

@ஆயில்யன்

உண்மை தான்.

வாசகன் காணாத உலகத்திற்குள் இட்டு செல்வது ஒரு வகை எழுத்து என்றால்..இவர்களின் எதார்த்த பாணி எழுத்து அன்றாட சம்பவங்களையும், இடங்களையும் வேறு வண்ணம் பூசி உலவ விடுவது. :-)

லேகா said...

@விஜயன்

நன்றி.

கம்பா நதி வாசித்துள்ளேன். கம்பாநதி பற்றிய எனது பதிவில் எழுதிய தாமிரபரணி குறித்த குறிப்பையே இங்கும் இணைத்துள்ளேன்.

@தங்கவேல்

ஆகா.. :-)

லேகா said...

நன்றி ப்ளே கிங்

நன்றி பிள்ளையாண்டான்

நன்றி ஹரி

லேகா said...

@சக்திவேல்

ரைநீஸ்ஐயர் தெரு குறித்து தனி பதிவு எழுதி உள்ளேன்..இன்னும் விரிவாய் எழுத வேண்டும்.....மழையின் பின்னணியில் மனித உறவுகளின் சௌந்தர்யத்தை வண்ணநிலவன் விவரித்திருக்கும் விதம் வாசித்து உணர வேண்டியது

லேகா said...

நன்றி நர்சிம் :-)))

நன்றி சரவணன்

@மதுமிதா,

நன்றி

கடல்புரத்தில்..ம்ம்ம்..வாசித்த அழகிய காதல் கதைகளில் ஒன்று..கடல் சார்ந்த எல்லாமே அழகு தானே!!

லேகா said...

@ராம்ஜி,

//புண்ணியம் செய்து இருக்க வேண்டும்,//

இது ஓவர்ங்க..;-))))))

நீங்க குறிப்பிட்டுள்ள இடங்கள் பெரும்பாலானவை நெல்லையில் பார்த்துவிட்டேன்,பதிவில் குறிப்பிடவில்லை.

கலாபிரியாவின் நூல் அறிமுகத்திற்கு நன்றி.

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

வணக்கம்,

சுஜாத்தாவின் சிறந்த வலைபதிவிற்கான விருது பெற்றதற்கான வாழ்த்துக்கள் லேகா. எழுத்து அங்கீகரிக்கப் படுவதென்பது; ஒரு நல்ல படைப்பாளி பாராட்டப் படுவது சமுகத்தின் இன்னொரு நன்மைக்குரியதன்றி வேறில்லை. நல்ல தேர்வினை செய்துள்ளார்களென்பதை தங்களின் வலைதளம் கண்டதும் உணர்ந்தேன். இன்னும் நிறைய சிறப்புக்களை அடைவீர்களாக..

மிகுந்த பாராட்டும் பேரன்போடும்..

வித்யாசாகர்

பா.ராஜாராம் said...

பகிர்வுக்கு நன்றிங்க.

அப்புறம்,வாழ்த்துகளும்.

//மழையின் பின்னணியில் மனித உறவுகளின் சௌந்தர்யத்தை வண்ணநிலவன் விவரித்திருக்கும் விதம் வாசித்து உணர வேண்டியது//

தலைப்பு பார்த்து எதிர்பார்த்து வந்தது,இங்கு கிடைத்தது.

selvanambi said...

விருதுக்கு வாழ்த்துக்க்ள்.
பயணக்கட்டுரை நன்று.

Ramasubramanian said...

pakirvikku nantri parisukku valthukkal

லேகா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி வித்யாசாகர் :-)

நன்றி ராஜாராம் :-)

நன்றி செல்வநம்பி :-)

லேகா said...

@Ramasubramanian

Hey Dad...tnx lol:-)

prince said...

புத்தக வாசிப்பின் மேல் இவ்வளவு காதலா .. நிஜமாகவே மெய் சிலிர்க்க வைக்கிறது.. எழுதியவர்கள் கூட இவ்வளவு ரசிசிருப்பங்களா என்பது சந்தேகம் தான்...

kuthu said...

நீங்கள் படித்த புத்தகத்தில், உங்களுக்கு பிடிக்காத புத்தகம் ஏதாவது இருக்க? இப்படி எல்லாப் புத்தகத்தையும், ஒரே மாதிரி தட்டையா விமர்சனம் பண்ணுவதோடு, கொஞ்சம் உங்கள் எதிர்மறை கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

இனியாள் said...

இந்த பதிவில் நீங்கள் நெல்லையை பார்த்து வந்தது குறித்து பகிர்ந்து உள்ளீர்கள், நெல்லையை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது, அற்புதமான அந்த ஊரை மதுரையில் இருந்து வெகு அருகில் இருக்கும் ஊரை இவ்வளவு நாள் எப்படி நீங்கள் பார்க்காமல் விட்டீர்கள் என்று தான் ஆச்சர்ய படுகிறேன், வண்ணதாசன் சொல்வது போல தாமிரபரணி கரையில் வளர்ந்த எங்களால் ஒரு நாள் கூட ஆற்றங்கரையை மறந்து குளிக்க முடியவில்லை, இந்த நகரத்து வாழ்வின் பிசுபிசுப்புகளை தாமிரபரணியின் நினைவில் தான் கழுவி கொள்கிறோம், கலாப்ரியாவின் பதிவுகளை கண்டிப்பாக படியுங்கள் உங்களுக்கு அப்பா சித்தப்பா வாய் மொழியில் ஊர் கதைகள் கேட்கும் ஒரு அற்புத உணர்வு ஏற்படும். http://kalapria.blogspot.com

லேகா said...

நன்றி பிரின்ஸ் :-)

பதின்மங்களில் தொடங்கிய வாசிப்பு பழக்கம்...தொடர்ந்து சோர்வின்றி இயங்க பெரும் உந்துதலாய் உள்ளது.

லேகா said...

@இனியாள்..

நெல்லை போய் வர வேண்டும்னு ரொம்ப நாள் ஆசைங்க..ஒரு வழியாய் தீர்ந்தது.

தாமிரபரணி - ஆஹா..வண்ணநிலவனின் கம்பாநதி வாசித்த பிறகு இந்நதி மீதான பிரியம் கூடியது எனக்கு.பதிவில் குறிப்பிட்டது போல பெரு மழை நாளில் அதன் கரையோர கல் மண்டபங்களில் நின்று கால் நனைக்க வேண்டும் ;-)

கலாபிரியாவின் எழுத்துக்கள் குறித்து நண்பர்கள் பலரும் இங்கு குறிப்பிட்டு உள்ளனர்.நெல்லை குறித்து அவர் வார்த்தைகளில் வாசிக்க ஆவலாய் உள்ளது.

தமிழ்நதி said...

திருநெல்வேலியில் அல்வா (சாந்தி என நிறையக் கடைகளுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.)வாங்கிச் சாப்பிட்டதோடு சரி. ஊருக்குள் சென்று பார்த்ததில்லை. உங்கள் பதிவு அந்த ஆவலைத் தூண்டிவிட்டது. கவிஞர் கல்யாண்ஜி மற்றும் என் நண்பர் சண்முகசுந்தரம் இவர்களையும் போய்ப் பார்த்து வரவேண்டுமென நீண்ட நாள் ஆசை. உங்கள் பதிவு நெல்லையைப் பார்க்கும் ஆசையைத் தூண்டிவிட்டிருக்கிறது லேகா.

yEsKaY said...

முதலில் பெருமைக்குரிய "சுஜாதா " விருதுக்கு வாழ்த்துக்கள் & நன்றி - அதன் மூலம் தங்களின் பகிர்வு தொடர்பு கிடைத்தமைக்கு !
தங்களின் இப்பகிர்வு , மிக இயல்பாக ,அருமையாக உள்ளது . மேலும் மற்ற பகிர்வுகளை படிக்க விழைகிறேன் .நன்றி !

Krishnan said...

Hi Lekha, CONGRATULATIONS on winning Sujatha Inaiya Virudhu. Just read rather late in Uyirmai. You richly deserve it. As a consistent follower of your blog, I feel very happy.

Dhanaraj said...

Came to know of your blog through UYIRMMAI. Congratulations for the award.
Your desire to, and its achievement in travelling to Nellai, made a good reading.

லேகா said...

Krishnan,

Thanks a lot for ur wishes n continuos encourgement :-)

லேகா said...

தமிழ்நதி,

நன்றி.

வண்ணதாசனை சந்திக்க முடியாது போனது இப்பயணத்தில் பெரிய வருத்தம்.

கோவில் தேர் வீதியில் உள்ள இருட்டு கடை அல்வா கூட நெல்லையில் ரொம்ப பிரசித்தம் போல :-))

லேகா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி தனராஜ் :-)

வாழ்த்துக்களுக்கு நன்றி எஸ்.கே

Anonymous said...

உறுப்பினராகுங்கள். பரிசினை வெல்லுங்கள்!

கமலேஷ் said...

நல்ல பகிர்வு...விருதுக்கு வாழ்த்துக்கள்...