Wednesday, January 6, 2010

பஷீரின் "எங்க உப்பப்பாவிற்கொரு ஆனை இருந்தது.."

வைக்கம் முகமது பஷீர்....அறிமுகங்கள் தேவையற்ற இலக்கிய பிதாமகன்.பஷீரின் இந்நாவலை,தலைப்பை கொண்டு வேறு மாதிரியாக எண்ணி இருந்தேன்..என் அவதானிப்பு தவறென குட்டியது போல இருந்தது இந்த அற்புத காதல் கதையை படித்த பொழுது.பெண் மனதின் உணர்வுகளை இவ்வளவு நேர்த்தியோடு வர்ணிப்பது பஷீருக்கு மட்டுமே கைவரும் கலை.காதலோடு சேர்த்து இந்நாவல் பகிரும் சுவாரஸ்யமான விஷயங்கள் குரானின் இருந்து மேற்கோள் காட்டப்படும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள்.படிப்பதிற்கு புது அனுபவமாய் இருந்தது.இக்கதை 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்வதாய் கொள்ளலாம்..அன்றைய கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் குறித்த நிலைபாடுகள் தீவிரமாய் இருந்ததை மிகவும் அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல்

பாத்தும்மா என்னும் கதாபாத்திரத்தை மையமாய் கொண்டு சுழலும் இக்கதையில்,அவளின் பால்ய காலம் தொடங்கி பருவகாலம் வரையிலான காட்சிகள் விரிகின்றன .கடந்த காலத்தின் பெருமைகளை நிகழ் காலத்தில் நிலை பெற செய்ய முயலும் அவளின் தாய்,ஊரில் பிரதானத்துவம் தனக்கே இருக்க வேண்டி சொத்து வழக்கிற்கும்,இதர பஞ்சாயத்துகளுக்கும் பணத்தை செலவழிக்கும் தந்தை,எதிர்காலம் குறித்த குழப்பத்தில் திருமண கனவுகளோடு இருக்கும் பாத்தும்மா என மூன்று முக்கிய பாத்திரங்களின் குணாதிசியங்கள் சில காட்சி விவரிப்புகளில் புலப்படுகின்றன.




குழந்தை பாத்தும்மா செல்வ செழிப்பில் திளைத்தவள்..உடல் கொள்ளா நகையோடு வீற்றிருக்கும் பாத்துமாவை குறித்த பஷீரின் வர்ணிப்புகள் நகைச்சுவையாய் இருப்பினும் உண்மையே."என் உப்பாவிற்கொரு ஆனை உண்டு..கொம்பானை..." என எப்போதும் தன் புகழ் பேசி திரியும் பாத்துமாவின் தாய் மேல்தட்டு பெண்களின் குறியீடு.சொத்து வழக்கில் செல்வம் அனைத்தையும் தொலைக்கும் பாத்துமாவின் குடும்பம் அவளின் 20ஆம் வயதில் ஏழ்மையின் பிடியில் சிக்குகின்றது.இனி முழுதும் சோகமே என நினைத்திருக்கும் வேளையில் நாவல் அழகுற தோன்றுவதே அங்கிருந்து தான்..கைதியாய் வீட்டில் முடங்கி இருந்த பாத்துமாவிற்கு இப்பொழுது அநேக சுதந்திரம்..அவர்களின் குடிசைகருகில் உள்ள அல்லிகுளத்தில் அவள் செலவிடும் நீண்ட பகல்கள்,அந்த குளத்தில் உள்ள மீன்களும்,அட்டை பூச்சிகளும்,மலர்களும் அவளின் தோழிகளாக மாறிப்போவது.. ஏனோ தேவதை கதை ஒன்றை படித்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தந்தது.

பாத்துமா தன் பிரியத்திற்குரிய நிஸார் அகமதுவை முதன்முதலில் காண முற்படும் சூழல் அழகிய ஹைக்கூ கவிதை...அடிபட்டு விழுந்த சிட்டு குருவியின் மீது அன்பு கொள்ளும் இருவரும் அடுத்தடுத்த சந்திப்புகளில் பிரியம் கொள்வது இயல்பாக உள்ளது.சேலை அணிவதும்,வகுப்பெடுத்து தலை பின்னுவதும்,வேற்று ஆண்களை கண்ணால் பார்ப்பதும் இறைவனுக்கு எதிரான காரியங்கள் என்பதாகவே இருக்கும் பாத்துமாவின் உலகம் மெல்ல மாற்றம் காண்பது கவிஞனான நிஷார் அகமதுவின் வருகைக்கு பிறகே!!பஷீரின் "பால்யகால சகி" நாவலின் கடைசி பக்கங்கள் துயரத்தின் உச்சகட்ட சோகத்தை தாங்கி நிற்பவை.இக்கதையில்,பாத்துமாவின் போலித்தனம் அற்ற மெய்யான காதல் இனிதாய் நிறைவேறுவதில் வாசகனுக்கு இம்முறை மகிழ்ச்சியை தந்துவிட்டார் பஷீர்.இந்த வருடத்தை மிக சிறந்த ஒரு வாசிப்போடு தொடங்கியதில் பெரும் திருப்தி.

வெளியீடு - காலச்சுவடு
தமிழ் மொழி பெயர்ப்பு - குளச்சல் யூசூப்
விலை - ரூபாய் 80

16 comments:

Baski.. said...

இந்த புத்தக கண்காட்சியில் வாங்கியதில் எதை முதலில் படிப்பது என்ற குழப்பத்தை தீர்த்து வைத்துவிட்டீர்கள்...நன்றி...

லேகா said...

பாஸ்கி,

ஹா ஹா..உண்மை தான்!!
மிக அற்புதமான நாவல் இது :-)

பஷீரின் கதையுலகம் எப்பொழுதும் அழகு நிறைந்தது அதன் மனிதர்களை போலவே!!

sathishsangkavi.blogspot.com said...

ஒரு நல்ல நாவலை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி....

குப்பன்.யாஹூ said...

பஷீரின் புத்தகத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் லேகா.

ஆமாம் எப்படி அந்த படம் வெளியிடுகிறீர்கள், அச்சு புத்தகத்தில் இருந்து ஸ்கேன் செய்தா அல்லது இணையத்தில் இருக்கிறதா படங்கள்.

இந்தப் பதிவு படித்ததும் , சுஜாதா புத்தக கண்காட்சி சென்று தான் வாங்கி படித்த புத்தகம் குறித்து உடனே (கற்றதும் பெற்றதும் இல்) எழுதிய ஞாபகம் எனக்கு வந்து விட்டது.

It is the 2nd year exhibition we miss Sujatha.

Unknown said...

நானும் இந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பஷீரின் மொழி இருக்கிறதே மொழி! அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். நல்லதொரு பகிர்வு லேகா...

பதிவுக்கு தேர்ந்தெடுத்த படமும் அழகாக இருக்கிறது...

நர்சிம் said...

நல்ல புத்தகம்.

லேகா said...

நன்றி சங்கமேஷ்!!

லேகா said...

@ராம்ஜி,

நன்றி..

கதைகேற்றார் போல படங்களை இணையத்தில் தான் எப்பொழுதும் தேர்ந்தெடுப்பேன்.
அதிலும் இந்த ஓவியம் பாத்தும்மா பாத்திரத்திற்கு மிக நெருக்கமாய் இருப்பதாய் தோன்றியது.:-)

லேகா said...

நன்றி கிருஷ்ணன் பிரபு.

நன்றி ஹேராம்

லேகா said...

@நர்சிம்

ரொம்ப நல்ல புத்தகம்..:-))

நன்றி.

விஜய் மகேந்திரன் said...

நல்ல பகிர்வு .அதே காலச்சுவடு ஸ்டாலில் இன்னொரு புத்தகம் வாங்கினேன்.அது அமெரிகாகாரி -அ.முத்துலிங்கம். நல்ல கதைகள் உள்ளன.

முஹம்மது ,ஹாரிஸ் said...

இதை விட பால்யகால சிநேகிதியும், உலக புகழ்பெற்ற மூக்கு எனக்கு மிகவும் பிடித்தது இதையும் காலச்சுவடு தான் வெளியிட்டுள்ளது . உலக புகழ்பெற்ற மூக்கு சிறுகதையை கண்டிப்பாக படியுங்கள் அழுகை கலந்த சிரிப்பு வரும்.

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி விஜய்

லேகா said...

முகமது ஹாரிஸ்,

வருகைக்கும் பகிர்ந்தலுக்கும் நன்றி.
பஷீரின் அவ்விரு நாவல்கள் குறித்த எனது முந்தைய பதிவுகள்,

உலக புகழ் பெற்ற மூக்கு - http://yalisai.blogspot.com/2009/07/blog-post_30.html

பால்யகால சகி -
http://yalisai.blogspot.com/2009/02/blog-post_25.html

மாதவராஜ் said...

நல்ல பகிர்வு.

சென்னை புத்தகக் கண்காட்சியில் தங்களை சந்திக்க முடியும் என்றிருந்தேன்.

வந்தீர்களா?

லேகா said...

அன்பின் மாதவராஜ்,

வருகைக்கு நன்றி.

சனியன்று புத்தக கண்காட்சி வந்திருந்தேன்.வம்சியில் அதிக நேரம் செலவிட்டேன்.உங்கள் வருகை நேரம் குறித்து கேட்காமல் போனது என் தவறு.மன்னிக்கவும்.

அடுத்த முறை கட்டாயம் சந்திக்கின்றேன்.