"கொம்பன்",மந்தை மாடுகள் ரெண்டு,உளவு மாடுகளாக ஆக்கபடுவதை வெகு அழகாய் சித்தரிக்கும் கதை.அந்திப்பொழுதில்,மேய்ச்சல் முடித்து ஊர் திரும்பும் மந்தை மாடுகள் கழுத்தின் மணியோசை தூரத்தில் ஒலிப்பதை, கேட்பதற்கு அற்புதமாய் இருக்குமென அப்பா சொல்லி கேட்ட பொழுது அந்த ஓசையை கற்பனை செய்து பார்க்கவே சுகமாய் இருந்தது.விருமாண்டி திரைப்படத்தில் ஒரு பாடலில் அழகாய் அவ்வோசையை இணைத்திருப்பர்.மந்தையில் கம்பீரமாய்,சுதந்திரமாய் திரிந்த மாடுகள் உழுவதற்கு ஏற்ப தயார் செய்யபடுவதை விரிவாய் பதிவு செய்கின்றது இக்கதை.
"கதை தேசம்",இந்த கதையை படிக்க தொடங்கிய பொழுது,என்ன ஒரு சம்பந்தம் அற்ற தலைப்பு என தோன்றியது..வாசிக்க வாசிக்க இதை விட வேறு தலைப்பேதும் பொருத்தமில்லை என தோன்றியதில் வியப்பில்லை.ராமேஸ்வரத்திற்கு நீங்கள் சென்றவர் என்றால் நன்கு புரியும்.வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் வடகத்தியர்களும்,அவர்களை மொய்க்கும் கைடுகளும்,ஊர் சுற்றி காட்டி உண்மையும் பொய்யுமாய் கதைகள் பலவற்றை தருவித்து பணம் சம்பாதிக்கும் அவர்களின் ஒரு நாள் பொழுதினை உடன் இருந்து பார்ப்பது போல இருக்கின்றது இக்கதையை வாசிக்கும் பொழுது.நான் இதுவரை படித்த சிறுகதைகளில் இக்கதை குறிப்பிடத்தக்கது.

"தண்ணீர்",முதல் பத்தியில் குறிப்பிட்டது போல வெகுவாய் கவர்ந்த கதை இது.தமிழக கிராமங்கள் பல குடிநீருக்கு படும்பாட்டை தினமும் ஊடகங்களில் படித்தும்,பார்த்தும் வருகின்றோம்.அப்படிப்பட்ட கிராமம் ஒன்றில் குடிநீருக்காக பெண்கள் பயணிகள் ரயிலில் ஏறி அடித்து பிடித்து தண்ணீர் பிடிப்பதை சோகமும் சிரிப்புமாய் சொல்லும் கதை."தெரியாமலே",அரசு அலுவலகம் ஒன்றின் தினசரி காட்சிகளை விவரிக்கும் இக்கதைகளம் எல்லா அலுவலகங்களுக்கும் பொருந்தும்.அலுவலக ஓய்வு நேரங்களில் கூடி கூடி சினிமா தொடங்கி அரசியல்,விளையாட்டு என பேசும் நண்பர்கள் கூட்டம் ஒன்று கிராமத்து கிழவர் ஒருவரிடம் சிறுமை பட்டுபோகும் காரியம் ஒன்றை நேர்த்தியாய் சொல்லும் கதை.
"அதிசயம்",விழுதூன்றி வளர்ந்த பனை மரம் ஒன்றை தன உடல் பலத்தால் சாய்க்கும் வீரன் ஒருவனின் கதை.பெரும் மரியாதையோடு கிராமத்தினரால் வரவேற்கபட்டு சாகச வீரனாய் தோன்றும் அவ்வீரன் பனை மரத்தை வேரோடு விழுதாட்டிய பிறகு அதற்கு தட்சணம் வேண்டி ஊரார் முன் கையேந்தும் காட்சி பல செய்திகள மறைமுகமாய் சொல்லி செல்கின்றது."மணியாடர்",பணத்தின் பொருட்டு ஏற்படும் பிரிவுகள் தவிர்க்க முடியாதவை.வெளியூருக்கு தம் குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர்களின் மனவோட்டத்தை,பிள்ளைகள் அதை இயல்பாய் எடுத்து கொள்ளுவதையும் கிராமத்து பின்னணியில் சொல்லி உள்ளார்.
இவை தவிர்த்து "அவுரி","தலைவர்","யாரோ ஒருவர்","காளிப்புள்ளே" ஆகிய சிறுகதைகளும் இத்தொகுப்பில் உண்டு.நடைமுறையில் நாம் கவனிக்க தவறிய,கவனிக்க வேண்டிய சின்ன சின்ன காரியங்களை வெகு அழுத்தமாய் பதிவு செய்துள்ளார் கந்தர்வன்.அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பிது.
வெளியீடு - அகரம்(முதல் பதிப்பு)
விலை - 30 ரூபாய்