Wednesday, October 29, 2008

எம்.வி.வெங்கட்ராமின் "நித்ய கன்னி"

சரித்திர நாவல்கள் தரும் கற்பனை வெளி எல்லை அற்றது.அரண்மனைகளும்,போர் படைகளும்,அரச குமாரிகள் குறித்த வர்ணனைகளும் சொல்லபட்டதிற்கு மேல் அதிகமாய் எண்ணி வியக்க கூடியவை.25 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த 'நித்யகன்னி" புராண சம்பவம் ஒன்றினை அடிப்படையாய் கொண்டது.மிகுந்த வர்ணனைகள் அற்று பெண் உடலை முன்னிறுத்தி பின்னபட்டிருக்கும் இந்நாவல் அந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டதில் வியப்பில்லை.

விசுவாமித்திர முனிவரின் சிஷ்யனான காலவன் குரு தட்சணையாக முனிவருக்கு 400 அதிசய வெண் புரவிகளை அளிக்க பணிக்கிறான்.பேரு வள்ளலான யயாதி மன்னனின் மகள் மாதவி 'நித்யகன்னி' வரம் பெற்றவள் என்பதை அறிந்து அவரிடம் சென்று அவளை பெற்று பின் அப்புரவிகள் உள்ள மன்னர்களுக்கு அவளை மணமுடித்து தன் குரு சேவையை நிறைவு செய்ய முடிவு செய்கிறான்




இந்நிலையில் காலவன் வந்த நோக்கம் அறியாது அவன் மீது காதல் கொள்கிறாள் மாதவி.மாதவி என்று அறியாது காலவனும் அவள் அழகில் மையல் கொள்கிறாள்.காலவனின் முடிவை மாற்றிவிடலாம் என எண்ணி அவன் உடன் புறப்படுகிறாள்.விசுவாமித்திர முனிவரின் கடுங்கோபத்திற்கு அஞ்சி காலவன் தன் காதலியை புரவி வேண்டி மன்னர்களுக்கு மனம் முடிக்க அழைத்து செல்கிறான்.
காமுகனான அயோத்தி மன்னனை மனம் முடித்து,பிள்ளை பெற்று கன்னியாக மாறிய மாதவியை தன் பிள்ளையை விட்டு பிரித்து அறத்தின் மீது பெரு நம்பிக்கை கொண்ட காசி மன்னனை மணக்க அழைத்து செல்கிறான் காலவன்.


அயோத்தி மன்னனும்,காசி மன்னனும் மாதவியின் அழகின் பொருட்டே அவளை மணக்க சம்மதித்து,அவள் உள்ளம் அறியா நடந்துகொள்கின்றனர்.காமம்,ஆறாம் தவிர்த்து கலைகளின் மீது ஆர்வம் கொண்ட மூன்றாவது மன்னன் மாதவியின் குணம் அறிந்து அவளை காலவனோடு செல்ல அனுமதிக்கிறான்.துயரங்கள் யாவும் முடிவுற்றது என எண்ணி காலவன்,மாதவியை மனம் செய்ய இருக்கும் தருணம் அவள் அழகில் மயங்கி விசுவமித்ரர் அவளை மணக்க முடிவு செய்து,தன் குடிலில் தங்க செய்கிறார்.



தொடர் திருமணங்களாலும்,ஸ்திர புத்தி அற்ற காதலான காலவனாலும் புத்தி பேதலித்து பைத்தியம் ஆகிறாள் மாதவி.பேரழகியாய்,நித்ய கன்னியாய் அரண்மனையில் உலா வந்த மாதவி,தனக்கு சிறிதும் சம்பந்தம் அற்ற விச்வாமித்ரரின் சாபத்திற்கு பலியாகி வாழ்கை முழுதும் தொடர் அல்லல்களால் சுழட்டி அடிக்கபடுவதை மிகை இன்றி,பெரும்பாலும் மாதவியின் மனநிலை கொண்டு விளக்கி உள்ளார் எம்.வி.வெங்கட்ராம்.

எந்த ஒரு கால கட்டத்திற்கும் பொருந்தி போகும் கதை இது.தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறாக,சுயேச்சையாக முடிவு எடுக்க வழியின்றி எப்போதும் எவரையேனும் சார்ந்து வாழும் நிலை பெண்களுக்கு நம் சமூகத்தில் இன்றும் உண்டு.பெண் உடல் குறித்த சமூகத்தின் பார்வையை மாதவி மணக்கும் மூன்று மன்னர்களின் குணங்களாய் கொள்ளலாம்.காமம் மிகுந்த,அற ஒழுங்கம் பற்றி,போற்ற பட வேண்டிய அழகிய கலை போல நோக்கப்படும் பார்வைகளில் பெண்ணிற்கு மிக விருப்பமானதாய் இருப்பது மூன்றாவதே!!

மிக கடினமான கருத்தை சரித்திர பின்னணியுடன் புனைந்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.நாவல் முடியும் தருவாயில் அதன் சாரத்தை முழுதாக உணர முடிந்தது,ஒவ்வொரு காட்சிக்கும் ,உரையாடல்களுக்கும் பல்வேறு உட்பொதிந்த அர்த்தங்கள் உண்டு.தனது கிளாசிக் நாவல்கள் வரிசையில் காலச்சுவடு இந்நாவலை வெளியிட்டுள்ளது..


வெளியீடு - காலச்சுவடு
விலை - 100 ரூபாய்

9 comments:

KARTHIK said...

// தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறாக,சுயேச்சையாக முடிவு எடுக்க வழியின்றி எப்போதும் எவரையேனும் சார்ந்து வாழும் நிலை பெண்களுக்கு நம் சமூகத்தில் இன்றும் உண்டு.பெண் உடல் குறித்த சமூகத்தின் பார்வையை மாதவி மணக்கும் மூன்று மன்னர்களின் குணங்களாய் கொள்ளலாம்.காமம் மிகுந்த,அற ஒழுங்கம் பற்றி,போற்ற பட வேண்டிய அழகிய கலை போல நோக்கப்படும் பார்வைகளில் பெண்ணிற்கு மிக விருப்பமானதாய் இருப்பது மூன்றாவதே!! //

நல்ல விமர்சனங்க லேகா,
சில வருசமா சரித்திர நாவல் படிக்குரதில்லை.இன்நாவல் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

Anonymous said...

நல்ல பதிவு, உங்க பதிவே நாவலை படிச்ச திருப்தி தருகிறது.

கார்த்திக் சொன்ன மாதிரி நானும் தமிழ் சரித்திர நாவல்கள் படிச்சது வெகு குறைவு.

ஆங்கில புலமை வேண்டும் என்பதற்க்காக ஆங்கில சரித்திர நாவல்கள் சில படித்து உள்ளேன். இங்கிலாந்து சரித்திர நாவல்கள் மிக சிறப்பாக இருக்கும்.

நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி கார்த்திக்
நன்றி குப்பன் யாஹூ

Krishnan said...

As always, pleasing review Leena. How was Deepavali ?
I just got his Kaathugal and reading it. Quite a disturbing novel about auditory hallucinations. I read somewhere that Venkatram was having auditory hallucinations himself.

லேகா said...

//இங்கிலாந்து சரித்திர நாவல்கள் மிக சிறப்பாக இருக்கும்//

பகிர்விற்கு நன்றி,அப்புத்தகங்களின் பெயரை பகிர்ந்து கொள்ளுங்கள்.

லேகா said...

Hi Krishan!!

Diwali was fantastic.

Tnx for ur comments.I havent heard much abt M.V.Venkatram,from the comments given by Thi.Jaa for this book it seems tat Thi.Ja and Venkatram are very good frds..

Nice novel infact :-)

ramachandranusha(உஷா) said...

மன்னிக்கவும். இது சரித்திர கதையல்ல. புராண புனைவு வகை. சரிதானே லேகா?

லேகா said...

சரி தான் உஷா.

புராண நிகழ்வின் சிறு பகுதியை நெடுங்கதையாக புனைந்துள்ளார் ஆசிரியர்.

தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

Jags said...

//எந்த ஒரு கால கட்டத்திற்கும் பொருந்தி போகும் கதை இது.தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறாக,சுயேச்சையாக முடிவு எடுக்க வழியின்றி எப்போதும் எவரையேனும் சார்ந்து வாழும் நிலை பெண்களுக்கு நம் சமூகத்தில் இன்றும் உண்டு....

கசப்பான உண்மைதான். காலம் கண்டிப்பாய் பதில் சொல்லும்..
வாழ்த்துக்கள்...