Wednesday, January 25, 2017

The Second Mother (2015)

எளிமையான காதாபாத்திரங்களும் தெளிவான திரைக்கதையும் அமையப்பெற்ற படங்கள் எதார்த்த பிரதிகளால அமைவதில் வியப்பில்லை. பிரேசில் இயக்குநர் அன்னா முலேர்ட்'ன் "Second Mother" அப்படியானதொரு படைப்பு.பணக்கார வீட்டில் பல ஆண்டுகளாக பணிப்பெண்ணாக இருக்கும் Val, நடுத்தர வயதை தாண்டியவள்.தனது நூறு சதவிகித உழைப்பை அர்ப்பணித்து வாழ்பவள்.தனிப்பட்ட வாழ்வின் துயரங்களையும்,பணி செய்யும் வீட்டில் சந்திக்க நேரிடும் சிற்சில அவமானங்களையும் தன் சிரிப்பின் மூலம் துடைத்தெறியும் வரம் பெற்றவள். நேர்மையும், தயக்கமும்,தனக்கான எல்லையை வகுத்து அதில் வெகு ஜாக்கிரதையாய் பயணிக்கும் Val,வெகு அழகான பாத்திரப்படைப்பு.அக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ரெஜினா இயல்பான நடிப்பாலும் உடல் மொழியாலும் திரைப்படத்தை முழுக்க தன் வசப்படுத்தியுள்ளார்.(ரெஜினாவின் "You Me Them" குறிப்பிட தகுந்த மற்றொரு பிரேசில் திரைப்படம்)


Val பணிபுரியும் வீட்டின் சிறுவன் தன் தாயைக் காட்டிலும் இவளிடம் அதிக பிரியம் கொண்டிருக்கிறான். Val மடியில் படுத்துறங்கும் அவன், நவீன வாழ்வில் பணம்,புகழைத் தேடி ஓடும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கிடையே உருவாகிடும் வெற்றிடத்தின் குறியீடு.Val'ன் நாட்கள் அவளது மகளின் வருகைக்கு பிறகு பதற்றம் கொள்ள துவங்குகின்றன.சுதந்திர சிந்தனையும், வாழ்வில் சாதிக்க லட்சியங்களும் கொண்டிருக்கும் மகள்,தன் தாயைப் போலில்லாது அவ்வீட்டில் சுதந்திரமாய் நடமாடுகிறாள், எஜமானர்களிடம் கேள்விகள் கேட்கிறாள்,தன் தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்கிறாள். தலைமுறைகளின் இடைவெளி! மகளின் படிப்பறிவு குறித்த பெருமிதம் ஒருபுறமிருக்க அவ்வீட்டில் அவளது அதிகார போக்கை சகித்துக் கொள்ள இயலாத Val கொள்ளும் குழப்பங்கள் மிகுந்த நகைச்சுவையோடு சொல்லப்படுகிறது.

மகளின் தேர்வு மதிப்பெண்களின் பொருட்டு Val உற்சாகம் கொள்ளும் காட்சிகள்,அதுவரை கால் வைத்திடாத நீச்சல் குளத்தில் இறங்கி நடக்கும் Val , உணர்வுப் போராட்டமாக மாறிடும் இறுதி நிமிடங்கள் என குறிப்பிடதக்க காட்சிகள் பல.மகளின் எதிர்காலத்திற்காய் Val எடுக்கும் முடிவு தாயன்பின் மேன்மையை சொல்லுவது.

நவீன உலகில் உறவு சிக்கல்கள்,பிள்ளை வளர்ப்பு, எளியோருக்கென சமூகம் வரையறுத்திருக்கும் எல்லைகள்,பொருளாதாரத்தை முன்னிறுத்திய ஏற்ற தாழ்வு என யோசிக்கத் தூண்டும் பல்வேறு விஷயங்களை முடிந்தவரை தெளிவாக முன்வைக்கிறது.Val என்னும் பெண்ணை சுற்றி நிகழும் இக்கதை, முழுக்க முழுக்க கொண்டாட்ட மனநிலையோடு நம்மை வந்தடைவது ஆச்சர்யம்.செண்டிமெண்ட் காட்சிகளுக்கு வாய்ப்பிருந்தும், இயக்குநர் அதை முற்றிலும் நிராகரிப்பது சிறப்பு.

விளிம்பு நிலை வாழ்வை வென்றெடுக்க கல்வி மட்டுமே ஆகச் சிறந்த ஆயுதம் என்னும் இதன் கருத்தாக்கம் நிச்சயம் பாராட்டப்படவேண்டியது.