Thursday, July 7, 2016

ஒதுக்கப்பட்டவைகளின் உலகம்


இயக்குநர் ஆக்னஸ் வார்டாவின் "Gleaners & I" தேவையற்றவை என நாம்  ஒதுக்கும் பொருட்களை சார்ந்து வாழும் மனிதர்கள் பற்றியது.விளை நிலங்களில் மிஞ்சிய காய்கறிகள்,வைன் தோட்டத்து திராட்சைகள் , ,வீட்டு உபயோக பொருட்கள்,எலெக்ட்ரானிக் சாதனங்கள்,விளையாட்டு பொம்மைகள் என ஒதுக்கப்படும் யாவையும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஆட்களை தேடிச் செல்லும் ஆக்னஸ்  வார்டாவின் திரையாக்கம் இது.

சிறு பிள்ளையின் உற்சாகத்தோடும் தன் 67வது வயதில் ஆக்னஸ் இந்த டாக்குமென்ட்ரியை சாத்தியப்படுத்தி இருப்பது ஆச்சர்யம்.அதனினும் பெரிய ஆச்சர்யம் அவர் நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் மனிதர்கள்.விவசாய நிலங்களில் அதீதம் என விட்டுச் சென்றவற்றை குடும்பம் குடும்பமாக எடுத்துச் செல்லும் ஆட்கள்..அதில் ஒரு குடும்பம் வைன் காடுகளில்  உற்சாகமாக பாடிக் கொண்டே பழங்களை பறிப்பது ஓவியத்தின்  அழகை மிஞ்சும் காட்சி.

பிரெஞ்ச் தேசத்தின் கிராமபுறங்கள்,நகர தெருக்களில் உலாவும் ஆக்னஸின் கேமரா பின்தொடரும் நபர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு தனித்து வாழும் தேசாந்திரிகள்.வீதியில் கண்டெடுக்கும் பொருட்களைக் கொண்டு ஜீவிதத்தை செலுத்துபவர்கள்.தங்களின் காரியங்கள் குறித்து அவர்களுக்கு எந்தவித புகாரும் இல்லை.மாறாக குடும்பம்,அலுவல்,கடமைகள் என சராசரி மனிதர்களின்  சிக்கல்கள் தங்களிடம் இல்லாதது குறித்த மகிழ்ச்சியே அதிகம் தெரிகிறது.

ஆங்காங்கே  ஆக்னஸ் தன்னைக் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.Gleaner ஆக மாறி முட்கள் இல்லாத கடிகாரம் ஒன்றையு வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஆக்னஸ் அதை குறித்து  "This handless clock will help me to forget the passage of time, to paper it over, and forget  my increasing age.." எனக் கூறுகிறார்.வார்டாவின் மனவெளியை நமக்கு விளக்கிச் செல்லும் காட்சியது.

ஒரு ஓவியத்தின் தூண்டுதலால், ஆக்னஸ் மேற்கொள்ளும் இப்பயணத்தில் நாம் அறிந்திராத அவ்வுலகம் குறித்த முக்கிய செய்தியொன்று இருக்கிறது.மார்க்கெட் வீதியின் காய்கறி மிச்சங்களை மட்டுமே உண்டு,பகுதி நேரத்தில் அகதிகளுக்கு இலவச கல்வி புகட்டும் உயிரியல் பேராசியர் அலைனின் வாழ்க்கைமுறை நமக்குச் சொல்லும் விஷயமும் அதுவே.அவர்கள் ஞானியைப் போல தீர்க்கமானவர்கள்!

காற்று நம்மை ஏந்திச் செல்லும்...



நேற்றைய பொழுது ஈரானிய சினிமாவின் பிதாமகன் அப்பாஸின் மரணச் செய்தியோடு துவங்கியது.கண்டு நெகிழ்ந்த அவரின் திரைப்படங்களை ஒவ்வொன்றாய் யோசித்து கொண்டிருக்கிறேன்.மேலோட்டமாக அணுக முடியாதவை அப்பாஸின் படைப்புகள்.ஆழ்ந்த வாழ்வியல் தத்துவங்களை பேசுபவை அவை.




இவரது Taste Of Cherry(1997) தற்கொலை செய்யத் துணிந்தவனின் ஒரு நாள் பயணம் குறித்தது.மரணத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கும் இப்படத்தில் மரணம் முரண்பாடுகளின் இடைவெளி என்பதை தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் முன்வைத்திருப்பார்.

சுயநலத்தினால் மனிதம் சிதைவுறுவதை கிராமத்து - நகரத்து மனிதர்களின் வேற்றுமை கொண்டு பேசும் Wind Will Carry Us திரைப்படம் நெடுகிலும் இரானிய கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பார்.கவித்துவம் நிறைந்து வழியும் காட்சிகளுக்கு குறைவில்லை. அப்பாஸின் ஆகச் சிறந்த படைப்பாக இத்திரைப்படம் கருதப்படுவதற்கு அதன் கருப்பொருளாக அடிப்படை மனிதநேயம் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.

அப்பாஸ் கியோஸ்தமியின் "Ten(2002)" ஆரவாரமான டெக்ரான் நகர வீதிகளில் காரில் பயணிக்கும் நாயகி, உடன் பயணிப்பவர்களுடன் கொள்ளும் சுவாரஸ்யமான/தீவிரமான விவாதங்களின் தொகுப்பு. தன சகோதரி,ஒரு மணப்பெண்,பாலியல் தொழிலாளி என அவள் சந்திக்கும் யாவரிடமும் அவளுக்கு விவாதிக்க விஷயங்கள் இருக்கின்றன. எதிர்ப்பார்ப்பில்லாமல் எந்த உறவும் சாத்தியமில்லை என்கிறாள் பாலியல் தொழிலாளி.மற்ற பெண்களின் பேச்சில் இருந்து அது உண்மை என்றே நிறுவப்படுகிறது.நவீன வாழ்வின் பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு பெண்ணிய பார்வையில் முன்வைக்கிற வகையில் இப்படம் எனது விருப்பத்திற்குரியது.

"நல்ல சினிமா என்பது நம் நம்பிக்கையை பெறுவது. மோசமான சினிமாவோ நம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று .." இது அப்பாஸின் புகழ் பெற்ற வாசகம். அத்தகையதொரு நம்பிக்கையை பெற்றவையே அவரது படைப்புகள்.

"Definition of death is nothing but Closing your eyes on the beauty of the world.." என்கிற அப்பாஸின் கூற்றுப் படியே அவர் விடைபெறலை காண்கிறேன்!

Adieu Master!!