Sunday, February 28, 2010

சில குறும்படங்கள்..

சமீபத்தில் இணையத்தில் ரசித்த சில குறும்படங்கள்!!

1.Colours Sky - மஜீத் மஜித்தின் இக்குறும்படம் 2006ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்காக எடுக்கப்பட்டது
உற்சாக முகங்கள்,பரவி கிடக்கும் வண்ணங்கள என இக்குறும்படம் ஒரு தேசத்தின் புன்னகையை வெகு இயல்பாய் பதிவு செய்துள்ளது.

http://www.youtube.com/watch?v=POY3G7_Uxfs

2.Revestriction -1990 ஆண்டு கேன்ஸ் விழாவில் விருது பெற்றுள்ள குறும்படம்.

http://www.youtube.com/watch?v=3S8Tskmp_CA

3.Wrong side of the bed - நகைச்சுவையாய் இரு வேறு சாத்தியங்களை ஒற்றை புள்ளியில் இணைக்கும் முயற்சி.

http://www.youtube.com/watch?v=uR_PzFZgsHU&feature=related

4.Some Contemplations - இந்திய குறும்படம்

http://www.youtube.com/watch?v=KX2PeXzLscU

5.முரளி மனோகரின் "கர்ண மோட்சம்" - நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பார்த்த பொழுது,வேறு பல புரிதல்கள் கூடவே அழிந்துவரும் நாட்டுபுற கலைகள் குறித்த கவலையை அதிகரிக்க செய்தது.இக்குறும்படம் தொடர்ந்து பெற்று வரும் மாநில மற்றும் தேசிய விருதுகள் முரளி மனோகரின் அடுத்த படைப்புகள் குறித்த ஆர்வத்தை கூட்டுகின்றது.வாழ்த்துக்கள்!!!


பகுதி ஒன்று -

//www.youtube.com/watch?v=3W87_I79JKA

பகுதி இரண்டு -

//www.youtube.com/watch?v=PgcqGpl3OqM&feature=related

Wednesday, February 24, 2010

எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாருமில்லை"


நவீன பாணி குறுங்கதைகளின் தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ள எஸ்.ரா வின் "நகுலன் வீட்டில் யாருமில்லை".Fables and parables எனப்படும் குறுங்கதை வடிவங்கள் ஏற்கனவே நமக்கு பரிச்சயமானவையே.முல்லா நீதி கதைகள்,ஜென் கதைகள் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.அவ்வகையில் எஸ்.ரா வின் இந்நூல் தமிழில் மிக முக்கியமான பதிவு.புனைவின் உச்சத்தை தொட்டு செல்லுகின்றன பல கதைகள்.முட்கரண்டிகளும்,மது கிண்ணங்களும்,தீக்குச்சியும்,சிகரெட்டும் உயிர் பெற்று உலவுகின்றன....பேசும் தாவரங்கள்,தவளைகள்,விந்தையான சிறுவர்கள்,நகரும் தீவு என ஒவ்வொரு கதையும் ஒரு மாய உலகினுக்குள் இட்டு செல்கின்றது.இத்தொகுப்பின் கதைகள் யாவும் சிறுவர்களுக்கானது அல்ல.மிகப்பெரிய தத்துவங்களை வெகு சில வரிகளில் உணர்த்தும் கதைகளும் ஏராளம்.

ஸ்பூன் மற்றும் முட்கரண்டியின் காதலை அவைகளின் உரையாடலோடு நகைச்சுவையாய் சொல்லும் கதை "காதல் மேஜை".நகரமயமாக்கல் பறவைகளை காணாமல் போக செய்து விட்டது போலவே தவளைகளையும்...அச்சிறு உயிரினம் குறித்து நாம் நினைத்து கூட பார்ப்பதில்லை.பெருநகரம் ஒன்றில் மிஞ்சும் கடைசி இரு தவளைகள் குறித்த "பெருநகர தவளைகள்",அழிந்துவரும் உயிரினங்கள் குறித்த அபாய எச்சரிக்கையை முன்வைக்கின்றது.குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிப்பதில் தொடங்கி ஒவ்வொரு காரியத்திற்கு வசதியாய் நாம் அணித்து கொள்ளும் முகமூடிகள் ஏராளம்..இதை உணர்ந்தும் குறுங்கதை "வீட்டிற்குள் ஓடும் ஆறு".




கண்ணீரும் சிரிப்பும் பெருநகர வாழ்க்கையை சிக்கல் இன்றி தொடர அவசியபடுகின்றன என்பதை "கண்ணீர்பூட்டு" கதை உணர்த்துகின்றது.குழந்தையுடன் உரையாடும் மாயவித்தைகாரனின் கதையான "கைமூடி திறந்து", சிறுவர் உலகமானது விசித்திரங்களை விரும்புவதோடு கேள்விகள் நிறைந்ததென்பதை நினைவூட்டுகின்றது.ரயில் பூச்சி மீதேறி தொடங்கும் மீசை முளைத்த சிறுவன் ஒருவனின் சாகச பயணத்தில் அவன் எதிர் கொள்ளும் யாவுமே விசித்திரங்கள்!பேசும் மீன்கள்,மூன்று கண் திருடன்,தும்பிக்கை இல்லா யானைகள் என கற்பனை உலகினுக்குள் முழுதாய் நம்மை இட்டு செல்லும் கதை "எப்படி என்று மட்டும் கேட்காதீர்கள்".

இரு வேறு கதைகளில் வரும் சம்பத்தின் தினகரன் மற்றும் நகுலன் உடனான உரையாடல்கள் வாசித்து கொண்டாடப்பட வேண்டிய புனைவின் உச்சங்கள்!இத்தொகுதியில் வாய் விட்டு சிரிக்க வைத்த கதை "சிறகுள்ள பொறியாளன்".கார்பரேட் வாழ்க்கை தேவதூதனை கூட காதல்,கடன்...என ஆசை கொண்டவனாய் மாற்றி விடும் அவலத்தை நிறைந்த பகடியோடு சொல்லுகின்றது.வாசிப்பு மனிதனை மட்டும் இன்றி தவளையை கூட ஆட்கொண்டு விடும் என்பதை "படிக்க தெரிந்த தவளை" கதை சொல்லுகின்றது."மழையின் எறும்பு" மற்றும் "பகலின் முதுகு" கதைகள் மனிதனின் தேடலுக்கு புத்த பிக்குகளின் தத்துவார்த்த விளக்கங்களை சொல்லுகின்றன.

கொட்டி கிடக்கும் இத்தொகுப்பின் குறுங்கதைகளுள் வெகு சிலவற்றை மட்டுமே பகிர்ந்துள்ளேன்.கதைகளுக்கு சிறகுகள் உண்டு!!தேசங்கள் பல கடந்து தொடர்ந்து உலாவி வரும் பல கதைகள் இப்படியாய் நினைக்க செய்கின்றன.சிறுமி ஒருத்தியை மடியில் வைத்து கொண்டு சில கதைகளை உடனே வாசித்து காட்ட வேண்டும் என தோன்றியது..நவீன வாழ்வின் சிக்கல்கள்,சிறுவர்களின் மாய உலகம்,துறவிகளின் தத்துவார்த்தம்,மிகு காமம்,தொடர்ந்து வரும் நம்பிக்கைகள்.........என இக்குறுங்கதைகள் தொட்டு செல்லாத களங்களே இல்லை எனலாம்!!

வெளியீடு - உயிர்மை
விலை - 80 ரூபாய்

Wednesday, February 17, 2010

வேலுசரவணனின் "தங்க ராணி"

வேலுசரவணன்,குழந்தைகள் நாடக கலைஞரான இவரை குறித்த அறிமுகம் இலக்கிய இதழ் ஒன்றில் வெளிவந்திருந்த இவரின் நேர்காணல் மூலம் கிடைத்தது.இலக்கிய வெளியில் வேலுமாமா என்று அழைக்கபடுகிறார்.வேலுசரவணனின் நாடகங்கள் குறித்தான செய்திகள் எங்கு கிடைப்பினும் தேடி வாசிப்பேன்.அரிதாரம் கலைந்த இவரின் முகம் காண கிடைப்பது அரிது என்று தோன்றும் வண்ணம் எப்போதும் குழந்தைகளை குதூகலிக்க செய்யும் ஒப்பனையில் மட்டுமே இவரின் புகைப்படங்கள் காண கிடைக்கின்றன.வம்சியில் இவரின் "தங்க ராணி" புத்தகம் வெளியீட போவதான அறிவிப்பு மிகுந்த ஆவலை ஏற்படுத்தி இருந்தது.இந்த ஆண்டு புத்தக சந்தையில் விரும்பி வாங்கிய நூல்களில் இது ஒன்று.




இத்தொகுப்பில் ஐந்து சிறுவர் நாடகங்கள் உள்ளன.நமக்கு வெகு பரிட்சயமான கதைகளும் அடக்கம்.பார்வையாளர்கள்,மேடை அலங்காரம்,நாடக பாத்திரங்கள் என சிறு அறிமுகத்தோடு காட்சிகள் விரிகின்றன."ஓவியர் நரி", ஈசாப் நீதி கதைகளில் ஒன்றிது.தந்திர நரியானது அப்பாவி கழுதை ஒன்றை ஏமாற்றி சிங்கத்திற்கு உணவாக்கும் இக்கதை பெரியவர் சொல் பேச்சு கேட்க வேண்டும் என்பதை போதிப்பது.இயல்பான மொழி நடையில் வசனங்கள் உள்ளன."குதூகூல வேட்டை",சோவியத் எழுத்தாளர் நிக்கலாய் நாசாவின் கதையொன்றை தழுவிய இந்நாடகம் கோமாளிகளான இரு நண்பர்கள் வேட்டைக்கு போய் வந்ததை நகைச்சுவையாய் சொல்லுகின்றது.கிளை கதைகளும் கொண்டுள்ளது இந்நாடகம்.இது போன்ற வேடிக்கை கதைகளில் சிறுவர்களை நாடக கதாபாத்திரங்களாய் யோசித்து பார்க்கவே சுவாரஸ்யமாய் உள்ளது.

"அல்லி மல்லி",பிரபலமான நாடோடி கதைகள் பலவும் தேசத்திற்கு தேசம் சிறு சிறு மாற்றங்கள் கொண்டு உலவி வருகின்றன.இக்கதையும் அது போலவே மாறுபட்ட குணம் கொண்ட சகோதரிகள் இருவரை பற்றியது.தலையில் ஒரே ஒரு முடி கொண்டதால் கேலிக்கு ஆளாகும் தங்கை கடல் தாண்டி,மலை தாண்டி எதிர்படும் உயிரினங்களுக்கு உதவி செய்து,மந்திர கிழவியை கண்டடைந்து நீண்ட கூந்தல் பெறுகிறாள்.அதே போல பயணத்தை தொடரும் அவளின் சகோதரியோ எதிர்படும் உயிர்களை உதாசினபடுத்துவதால் பயன்பெறாமல் போகின்றாள்.இந்நாடகத்தில் மருதாணி செடியும்,பசு மாடுகளும் கூட பேசுகின்றன...கதை சொல்லும் சிறுவன்,பாடல் குழுவினர்,நடன பெண்கள் இவர்களுக்கு மத்தியில் அல்லி மல்லி சகோதரிகள் என மேடை காட்சிகள் வாசிக்க வாசிக்க கற்பனையில் விரிவடைவது அழகு.


இத்தொகுப்பின் மற்றொரு நாடகம் "தங்கராணி",உலக பிரசாத்தி பெற்ற "மைதாஸ் கோல்டன் டச்" கதையின் தழுவல்.பொன்னாசை கொண்ட ராணி,சிரிப்பு மூட்டும் அவளின் நம்பிக்கைக்கு உரிய சேவகர்கள் இவர்களோடு சேர,சோழ,பாண்டிய அரசிகள் என கதையை முற்றிலுமாய் தன நோக்கில் மாற்றி அமைத்துள்ளார் வேலுசரவணன்.சில கதைகள் திரும்ப திரும்ப படித்தாலும்/கேட்டாலும் அலுக்காது..மேலும் பல புதுமைகள் புகுத்தி இதுபோல சொன்னால் சிறுவர்களுக்கு ஆர்வம் மேலிடும் என்பதில் ஐயமில்லை."நீதி கதைகள்","வேடிக்கை கதைகள்" மட்டும் இன்றி இதிகாச சம்பவங்களையும் நாடகமாய் கொணர்ந்துள்ளார்.துரோணரின் சக்கர வியுகத்தை உடைத்து வெற்றி கண்ட சிறுவன் அபிமன்யுவின் வீரத்தை சொல்லும் இந்நாடகம் மகாபாரதத்தின் போர் காட்சிகளை கண் முன் கொண்டு வருகின்றது.சிறுவர்களுக்கு விளையாட்டு பயிற்சியின் முக்கியதுவத்தை உணர்த்துவதற்காக இந்நாடகம் எழுதப்பட்டதாக ஆசிரியர் கூறுகின்றார்.

சிறுவர் நாடகங்கள் இன்றைய சூழலில் எந்த அளவிற்கு சாத்தியமாகின்றன என தெரியவில்லை.சிறுவர்கள் சிறுவர்களாய் இல்லாமல் சினிமாத்தனம் மிகுத்து இருப்பதே அதற்கு காரணம்.பெரும் சிரத்தை எடுத்து அதை தொடர்ந்து சாத்தியபடுத்தி வரும் வேலு சரவணன் பாராட்டுதலுக்குரியவர்.

வெளியீடு - வம்சி
விலை - 80 ரூபாய்

Tuesday, February 16, 2010

சு.வேணுகோபாலின் "கூந்தப்பனை"

"என் தோட்ட தொரவுகளோடு கிடந்து,அத்தோடு எழுதி கொண்டிருக்க தான் ஆசை.கதை எழுதி வெற்றி பெறுவதை விட ஒரு பருத்தி வெள்ளாமை வெற்றியடைவதில் உள்ள சந்தோசத்திற்கு ஈடு இணை இல்லை."

--- சு.வேணுகோபால்


மண்ணின் மீது நீங்கா பிரியம் கொண்ட ஒரு விவசாயியின் வார்த்தைகளாக உள்ள வேணுகோபாலின் வரிகளின் வலி இந்த தொகுதி முழுதுமே காண கிடைக்கின்றது.குறுநாவல் தொகுப்பான இந்நூலின் கதைகள் யாவும் எதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியா சிக்கல்களை
பெரும் இறுக்கத்தோடு சொல்லுபவை.மேலும் மனித உறவுகளுக்குள்ளான வெகு நுட்பமான பிணைப்பை அலசுகின்றன.ஆண் பெண் உறவின் பெயரில் தொடர்ந்து நிகழ்த்தபட்டு வரும் நாடகத்தில்,முகமூடிகளை கிழித்தெறியவும் தவறவில்லை இக்கதைகள்.

"கண்ணிகள்",மாறிவரும் சமூக சூழலின்பிடியில் சிக்கி தனித்து விடப்படும் ஒரு விவசாயியின் வலியை சொல்லும் கதை.வெகு பொருத்தமான தலைப்பிது.லாபமோ,நஷ்டமோ மீண்டும் மீண்டும் பூமியின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கும் சம்சாரிகள் தொடர்ந்து ஏமாற்றம் கொள்வதும்,மழை ஒத்துழைக்காத சூழ்நிலையில் கடனாளி ஆவதும்,பெருமழையின் பிடியில் இருந்து தப்பிக்க சிறு பறவை ஒன்று எடுத்துகொள்ளும் பிரயத்தனங்களை போல..எல்லா வழிகளையும் தேடி இறுதியில் மத மாற்றம் விடிவு தரும் என்கிற நிலைக்கு தள்ளபடும் சம்சாரியின் கதை.



"வேதாளம் ஒளிந்திருக்கும்",இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை.இதுவரை வாசித்திடாத எதார்த்த நிகழ்விது.சண்டையிட்டு தாய் வீட்டில் இருக்கும் நண்பனின் மனைவியை சமாதானம் பேசி அழைத்து வர நண்பனோடு அவள் ஊருக்கு செல்லும் நாயகன்,அதன் ஊடான சம்பாஷனைகள்,பயணத்தின் பொழுது எதிர்படும் மனிதர்கள்,கணவன் - மனைவி உறவின் விசித்திரங்களை அறிய முயலும் தருணங்கள்...என இக்கதை அழகான ஒரு உலகத்தை விவரித்து கொண்டே செல்கின்றது.மதுரை நகர பேருந்து நிலையத்தின் பகல் நேர காட்சிகளை வெகு நேர்த்தியாய் விவரித்து இருப்பது அருமை.


"கூந்தப்பனை",
இலக்கற்ற நாயகனின் பயணதை சொல்லி தொடங்கும் கதை மெல்ல மெல்ல கடந்து போன அவனின் திருமண வாழ்வின் கசப்பான தருணங்களை,மன போராட்டங்களை கூறுகின்றது.தாம்பத்ய வாழ்வை தொடர்ந்திட முடியாத சதீஷ் தன் நண்பனுக்கே மனைவியை மணம் முடித்து,அதன் தொடர்ச்சியாய் கொள்ளும் மன அழுத்தம் தாளாது வீட்டை விட்டு வெளியேறி திசை தெரியாது அலைந்து இறுதியில் தனக்கென ஒரு உலகினை கண்டடைகிறான்.இவரின் எல்லா கதைகளிலும் பிரதான பாத்திரம் காணும் கனவுகள்,குழப்பம் நிறைந்த மனதின் பிரதிபலிப்பாய்,பயந்த மனநிலையின் வெளிப்பாடாய் உள்ளன..


"அபாய சங்கு",தோல்வியின் பிடியில் தொடர்ந்து உழலும் நாயகனின் குழப்ப நிறைந்த மனவோட்டங்களை நேர்த்தியாகவும் வெகு அழுத்தமாகவும் பகிர்கின்றது இக்கதை.காதல்,காமம்,வேலையில்லா தாழ்வுணர்ச்சி,ஏமாற்றங்கள் என மொத்தமாய் தலைமீதேரும் சங்கடங்கள் நெருக்கடியாய் மாறி விபரீத முடிவிற்கு நாயகனை தள்ளுகின்றன.வேலை தேடும் பொழுதுகளின் தனிமை துயரம் கொடூரமானது என்பதை உணர்த்தும் வண்ணதாசனின் "பறப்பதற்கு முன்பு கொஞ்சம் புழுக்களாக" என்னும் சிறுகதையை நினைவூட்டியது இக்கதை.துயரமும்,சங்கடங்களும் நிறைந்த எதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை துணிச்சலாய் தமது கதைகளில் எடுத்தாளுகின்றார் வேணுகோபால்.பெரும் இறுக்கம் விளைவிப்பதாய் இருப்பினும் தவிர்க்க முடியா வாசிப்பிது.


வெளியீடு - தமிழினி
விலை - 50 ரூபாய்

Thursday, February 4, 2010

அசோகமித்திரன் பார்வையில் சென்னை நகரம்!!

எழுத்தாளர் அசோகமித்திரன் சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் குறித்து தமது நினைவில் இருந்து மீட்டெடுத்து தொகுத்துள்ள கட்டுரைகள் அடங்கியது இந்நூல். எந்திரத்தனம் மிகுந்து தோன்றும் இன்றைய சென்னையின் கடந்த கால குறிப்புக்கள் ஆச்சர்யம் கூட்டுவதோடு தெரியா பல பெருமைகளை கொண்டுள்ளதாய் உள்ளது.தமது 50 வருட கால சென்னை வாழ்கையில் தான் பார்த்த நகரத்தின் தோற்றம் அன்றும் இன்றும் கண்டிருக்கும் மாற்றங்களை வெகு நேர்த்தியாய் வர்ணித்துள்ளார்.இம்மாநகரம் குறித்த பலசெய்திகளை கொண்டுள்ள இந்நூல் சிறந்தோர் ஆவணமாகும்.




பரிட்சயம் உள்ள பகுதிகள் குறித்த கடந்த கால குறிப்புகளை படிப்பதற்கு ஏற்படும் ஆர்வம் எனக்குமிருந்தது.இத்தொகுதியில் முதலில் புரட்டியது திருவல்லிக்கேணி,மயிலை குறித்த கட்டுரைகளை.சென்னை வந்த புதிதில் தங்கியிருந்த ஹோட்டலில் பழங்கால சென்னை நகரின் காட்சிகள் கோட்டோவியங்களாய் வைக்கபட்டிருந்தன.ஆள் அரவம் அற்ற அண்ணாசாலை,மரங்கள் அடர்ந்த பைகராப்ட்ஸ் ரோடு,ஜட்கா வண்டிகள் செல்லும் மயிலாப்பூர் சாலை,படகு சவாரி பரபரப்பில் கூவம் நதி என்பதான அவ்வோவியங்கள் உயிர் பெற்றது போல இருந்தது அசோகமித்ரனின் வார்த்தைகளில் விரியும் சென்னையின் புராதானத்தை படித்தபொழுது.


திருவல்லிகேணியில் உள்ள அமீர்மஹால் பிரமாண்ட தோற்றம் கொண்டு இருக்கும்.அது குறித்து அறியும் ஆவலில் ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்ட பொழுது முஸ்லிம்களின் கல்யாண சத்திரம் என்றார்.திருப்திகரமான பதிலாய் இல்லை அது.இந்த நூலில் அதற்கு தெளிவான பதில் உள்ளது.ஆற்காட்டு நவாப் மாளிகையாம் அது!!அந்தந்த பகுதிகளில் வசித்த பிரபலங்கள் குறித்த குறிப்புகளும் உள்ளது.திநகர் மற்றும் திருவான்மியூர் குறித்த குறிப்புக்கள் அப்பகுதிகளின் தற்பொழுதைய பிரமாண்டத்தை எண்ணி மலைக்க வைக்கின்றன.இடுகாடும்,குட்டைகளும் சூழ்ந்த தியாகராய நகர்,வயல் வரப்பிற்கூடான திருவான்மீயூரும் இன்று கண்டுள்ள மாற்றங்கள் எல்லா பெருநகரங்களுக்கும் பொருந்தும்..


வேளச்சேரி,மந்தவெளி,சைதாபேட்டை,சென்ட்ரல் ரயில் நிலையம் என சென்னையின் எல்லா முக்கிய பகுதிகள் குறித்தும் தனது அனுபவங்களை நகைச்சுவை கலந்து பகிர்ந்துள்ளார்.ஆங்கிலேயர் காலத்து தேவாலயங்களும்,பழமையான கோவில்களும்,தர்காக்கள் குறித்த செய்திகள் புதியவை.சென்னையில் உள்ள ஆர்மேனிய தேவாலயம் குறித்த தகவல்கள் இல்லாது போனது சிறிது ஏமாற்றம்.சென்னை நகரின் பாலங்கள்,அருங்காட்சியகங்கள்,மின்சார ரயில் போக்குவரத்து,கல்வி நிறுவனங்கள்,திரையரங்குகள்,மருத்துவமனைகள் ஆகியவை கடந்த 50 வருடங்களில் கண்டுள்ள மாற்றங்கள் எளிமையாய் சொல்லப்பட்டுள்ளது.சென்னை நகரின் கடந்த கால வரலாற்றினை அறிந்து கொள்ள இந்நூல் சிறப்பாக வழிகாட்டுகின்றது.நிலவொளியில் வாணிபம் நடந்த பக்கின்ஹாம் கால்வாயும்,ட்ராம் வண்டிகள் ஓடிய சென்னை நகர சாலைகளும் இனி எப்போதும் காண கிடைக்காத காட்சிகள்...............நினைவில் இருந்து இவற்றை மீட்டெடுத்து பகிர்ந்துள்ள அசோகமித்ரனுக்கு நன்றிகள்.ஒரு பெருநகரத்தின் கடந்த கால நினைவுகளில் பயணித்து வந்த திருப்தி.


வெளியீடு - கவிதா பப்ளிகேஷன்
விலை - 60 ரூபாய்