Saturday, January 30, 2010

கிருத்திகாவின் "வாசவேச்வரம்"

காலச்சுவடு கிளாசிக் வரிசையில் மற்றுமொரு நல்ல நாவல்.1966 இல் எழுதப்பட்டுள்ள இந்நாவல் ஆண்டுகள் பல கடந்தும் அதன் புத்துணர்ச்சி குறையாமல் உள்ளது.வாசவேச்வரம் என்னும் கற்பனை கிராமத்தின் கதை.கிராமத்தின் ஆறு குளங்கள்,கோவில்கள,வயல்வெளிகள் குறித்தெல்லாம் விவரணைகள் அதிகம் தேவை இல்லை என கருதி நேரடியாய் அக்கிராமத்தின் பிரதான குடும்பங்களின் குறித்த அறிமுகத்தோடு நாவல் தொடங்குகின்றது. சுப்பு குட்டி சாஸ்திரியின் கதாகாலசேபத்துடன் தொடங்கும் இந்நாவல் அவரின் கதாகாலசேபத்துடன் முடிகின்றது.இடைப்பட்ட காலத்தில் நிகழும் கதை, குடும்ப வாழ்வின் சிடுக்குகளை..அதிலும் முக்கியமாய் பெண்களின் ஊற்றெடுக்கும் ஆசைகளை அதன் காரணமாய் உண்டாகும் சங்கடங்களையும் சொல்லுகின்றது.


பாட்டா,வாசவேச்வரம் கிராமத்தின் மரியாதைக்குரிய பெரியவர்.இவரின் கம்பீரமும் தீர்க்கமான மனதைரியமும் பல இடங்களில் புலப்படுகின்றது.ரோஹிணி,அக்கிராமத்தின் படித்த,சௌந்தர்யம் மிக்க ஒரே பெண்..இவளின் கணவன் சந்திரசேகர் ஐயர்,வயற்காட்டு வேலைகள் மீது மட்டுமே மோகம் கொண்டு,புத்திகூர்மை கொண்ட ரோஹினியின் முன்னர் தாழ்மைஉணர்ச்சி கொண்டு இருக்கும் சராசரி மனிதர்.டாக்டர் சுந்தா,எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம் செய்யும் முன்கோபி.முற்போக்கு சிந்தனைகள் கொண்ட வாசுவேச்வரத்தின் இளைங்கர்களை எல்லா விதத்திலும் எதிர்க்க துணிந்த மூடன்.சுப்பையா,பெயர் தெரியா வியாதியின் பிடியில் மட்டும் அல்லாது சதா திட்டி கொண்டிருக்கும் மனைவி விச்சுவின் பிடியிலும் உழல்பவர்.




வாசவேச்வரத்தின் ஆண்கள் பலர் மனைவி மீது கொண்டுள்ள பிரியத்தை காட்டிலும் மற்ற பெண்டிரின் மீது மோகம் கொண்டவராகவும் உள்ளனர்சுப்பு குட்டி,சுந்தாவை போல,பெண்கள் சிலர் கொண்டவனை எப்போது குறை கூறி,இயலாமையில் பொறாமை கொண்டவர்களாக உள்ளனர் விச்சுவை போல.முக்கியமான பாத்திரபடைப்பு பிச்சாண்டியுடையது.எழுச்சி மிக்க சிந்தனை கொண்டவனாக,புரட்சிகாரனாக ஊரில் கலகங்கள் செய்து திரியும் இவனுக்கும் ரோஹிணிக்குமான பிரியம் அர்த்தம் மிகுந்தது.


குழப்பமும்,சங்கடங்களும் நிறைந்ததாகவே இருப்பினும் வாசவேச்வரதினரின் அன்றாட வாழ்க்கை அதன் போக்கில் சென்ற கொண்டிருக்கின்றது....தேர் திருவிழாவிற்கு முன்வரை..எதிர்பாராது நிகழும் ஒரு கொலையின் பொருட்டு ஏற்படும் குழப்பங்கள்..பாட்டா அதன் உண்மையை அறிய முயல்வதும்..அதன் தொடர்ச்சியாய் ஒரு தற்கொலையும் என முடிகின்றது.ஒரு சிறு கிராமத்தின் வெவ்வேறு மனித மனங்களின் ஆசைகள்,ஏக்கங்கள்,தாழ்வுணர்ச்சி,ஈடேரா காதல்,புரிதல் அற்ற வாழ்வு,போலித்தனங்கள் ஆகியவற்றை பூடகமாய் சொல்லுகின்றது இந்நாவல்.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 140 ரூபாய்

Thursday, January 21, 2010

அய்யனாரின் "நானிலும் நுழையும் வெளிச்சம்" கவிதை தொகுதி

பூக்களாலும்,தேவதைகளாலும், பூனைகளாலும்,முத்தங்களாலும் நிறைந்த சௌந்தர்யம் கொண்டது அய்யனாரின் கவிதையுலகம் !! எனக்கு கவிதைகள் மீதான ஆர்வம் கூடிட முக்கிய காரணம் இவரின் கவிதைகள்..அய்யனாரின் மொத்த கவிதைகளையும் மின்னூலில் ஒரே நாளில் படித்து முடித்த பின் உண்டான ஏகாந்த மனநிலையை விவரிக்க இயலாது!!!!அய்யனாரின் கவிதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்ட எனது முன்னுரை அவசியப் படாது.எப்போதும் நெருக்கமாய் உணர செய்யும் மென்கவிதைகள் சில இந்த தொகுதியில் இருந்து....



மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல் குட்டியையே
நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லை என

-------------------------

தோட்டத்து நாகலிங்க பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்த கிளர்வில்
இருளை கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழ புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக்
கொள்ளலாம்.

---------------------------

கூடுகளை விரும்பிடாத
பறவையின் பின்
தொடர்ச்சியாய் பயணித்துக்
கொண்டிருக்கின்றேன்
இளைபாரல்களில் மிகுந்த ஆர்வம்
கொண்டவனேனினும்
இளைப்பாரல்களை
தொலைத்துவிடச் செய்தது
இதுவரை கடந்திடாத
தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்து
கொண்டிருக்கிறேன்
-----------------


நீளத்தின் கடலும்
கடலின் ஆகாயமும்
ஒன்றென்றேன்
எப்படி யென்றால்
இதழ்களை கவ்வியபடி
முணுமுணுத்தேன்
"முத்தமிடுகையில்"

-------------------------------

புத்தகங்களாலும் அழுக்குத்
துணிகளாலும்
நிரம்பி கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடி தொட்டிக்குள்
உலவுகின்றன
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசி கொள்வதாய்
சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கின்றேன்
ஒரு முறை வந்து
பார்த்துவிட்டுபோயேன்.

* * *

புத்தக கண்காட்சியில் இம்முறை பெரிதாய் எதிர்பார்த்தது அய்யனாரின் நூல்களே, எதிர்பார்த்தது பொய்க்கவில்லை..தேர்ந்தெடுத்த காதல் கவிதைகளை அழகிய நூல் வடிவில் வெளியிட்டுள்ள வம்சிக்கு நன்றிகள்..வாழ்த்துக்கள் அயிஸ்!!

ஆசிரியர் - அய்யனார்
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்

Monday, January 18, 2010

எஸ்.ராவின் கிறுகிறுவானம்

தமிழில் நான் வாசித்த வரையில் குழந்தைகள் உலகினுள் எளிதாய் புகுந்து இலக்கியம் படைப்பதில் கி.ரா விற்கு அடுத்த படியாய் சிறந்தவர் எஸ்.ரா மட்டுமே.எஸ்.ரா வின் "ஆலீஸின் அற்புத உலகம்" மொழிபெயர்ப்பை புத்தக கண்காட்சியில் வாங்க தவறிவிட்டேன்.அதற்கு மாற்றாய் இந்த நூல் கிடைத்தது.துடுக்கான சிறுவன் ஒருவன் அவனின் பிரத்தியேக உலகினுக்குள் நம்மை அழைத்து செல்வதாய் உள்ளது இந்நூல்.மீண்டும் மீண்டும் பேசினாலும்,வாசித்தாலும் அலுக்காத குழந்தைகளின் உலகம் சுலபமாய் நம்மை உள்ளிழுத்து கொள்கின்றது.

சிறுகதையோ,நாவலோ பிரதான பாத்திரத்திற்கு உருவம் கொடுத்து வாசிப்பதில் பல சௌகரியங்கள் உண்டு.இந்நாவலின் நாயகன் ஓட்ட பல்லு செம்பாவிற்கு உருவம் ஏதும் சட்டென தோன்றவில்லை காரணம்,ஒவ்வொரு காரியங்களாய் அவன் விவரிக்கும் பொழுது நமது பால்ய காலமே கண்முன் வந்து போகின்றது.செம்பா தனது ரகசியங்கள் என கருதும் பலவற்றையும் தயக்கமின்றி வாசகனோடு பகிர்ந்து கொள்கின்றான் விரிவான தனது அறிமுகத்தோடு!!சாப்பாடும் கூப்பாடும்,குழந்தைகளின் பசி எல்லோரும் அறிந்ததே..இன்ன வேலை என்றில்லாமல் நினைத்த போதெல்லாம் தின்று திரியும் வயசு..தனது பசி குறித்து வேடிக்கையாய் செம்பா விளக்குவது தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்து,உண்டு பிறகு திரும்பி தூங்கி போகும் கி.ராவின் கோபல்ல கிராமத்து சிறுவன் ஒருவனை நினைவூட்டியது..



கை நிறைய பொய்,கள்ளன் கணக்கு பகுதிகளில் செம்பா சொல்லுவது சிறு பருவத்தில் சகஜமான கபடமற்ற திருட்டும்,பொய்யும்.சின்ன சின்ன திருட்டுக்கள், நண்பர்களை,பெற்றோரை ஏய்க்க கூறிய பொய்கள் இப்பொழுது நினைவில் இல்லாவிடினும் அவை மறுப்பதிற்கில்லை.கிறுகிறுவானம்,இதை விளையாடாமல் யாரும் பால்ய காலத்தை தாண்டி வந்திருக்க முடியாது..கிறுகிறுவானம் சுத்தி கீழே விழுந்து வானத்தை பேரதிசியமாய் பார்த்த நினைவுகள் மீண்டும் துளிர்த்தெழுந்த சந்தோசம்!!.கிறுகிறுவானம் தவிர்த்து கள்ளன் போலீஸ் ,கிளியாந்தட்டு,கபடி,கோலி,கிட்டி என மறந்து போன விளையாட்டுகள் பலவற்றையும் நினைவூட்டுகிறது இப்பகுதி.இவை தவிர்த்து ஆற்றில் மீன் பிடிப்பது,கனவுகள் சுமந்து திரியும் தனது பால்ய காலத்தில் செம்பா விரும்பும் குதிரை சவாரி,புது துணி அணிந்து கொள்ளும் சமயம் ஏற்படும் மகிழ்ச்சி,பேய்கள் குறித்தான விளங்க முடியா அச்சம்,பிள்ளைகள் மொய்க்க இரவில் வரும் பலகார வண்டி என அந்த வயதிற்கே உரிய விஷயங்களை ஒன்று விடாமல் நினைவூட்டுகின்றன செம்பாவின் வர்ணனைகள்..

செம்பா விவரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஊடாக எண்ணற்ற சிறுவர் நாடோடி கதைகளும் வருகின்றன.பெரும்பசி கொண்ட பூசணிக்காய் சாமியார் கதை,தூங்கு மூஞ்சி சோணன் கதை,கால் திருடன்-அரை திருடன் - முழு திருடன் கதை,ஊசி கள்ளன் கதை என படிக்க சுவாரஸ்யமான சில நாடோடி கதைகள் இத்தொகுப்பில் உண்டு.நட்சத்திரங்களோடு பேசும் சிறுவர்கள் யாரேனும் இப்பொழுது உண்டா??!! குழந்தைத்தனம் மீறி சினிமாத்தனம் அதிகம் கொண்டுள்ள இக்காலத்து சிறுவர்கள் இழந்து கொண்டிருப்பவை எத்தனையோ என்பதை மீண்டும் அழுத்தமாய் நினைவூட்டுவதாய் உள்ளது இந்நூல்.குழந்தைகளுக்கான இலக்கியங்களை தொடர்ந்து படைத்து வரும் எஸ்.ராவிற்கு நன்றிகள்.

எஸ்.ராவின் "ஏழு தலை நகரம்" குறித்தான எனது பதிவு

கி.ராவின் "பிஞ்சுகள்" குறித்த எனது பதிவு

வெளியீடு - பாரதி புத்தகாலயம்
விலை - 25 ரூபாய்

Wednesday, January 13, 2010

கல்யாண்ஜியின் "இன்னொரு கேலி சித்திரம்" - கவிதை தொகுதி

கொஞ்ச நாட்களாய் கவிதைகள் வாசிக்க ஆர்வம் வந்துள்ளது.இலக்கிய இதழ்களிலும்,பதிவர்களின் கவிதைகள் மட்டுமே அறிமுகம் இதுவரையில்.இந்தாண்டு புத்தகசந்தையில் சில கவிதை தொகுதிகளும் வாங்கினேன்.வண்ணதாசனின் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இங்கு அதிகமாகவே பகிர்ந்துள்ளேன் ..மீண்டும் கவிதைகளில் அதே உணர்வை பகிர்ந்துள்ளார் கல்யாண்ஜியாய்.இவரின் "இன்னொரு கேலி சித்திரம்" தொகுதியின் கவிதைகள் சில...



ஓவிய போட்டியில் பரிசு வாங்க
வந்த சிறுவன் அவசரமாக
ஒன்றுக்கு இருக்க உட்காந்த
இடத்தில
உதிர்ந்து கிடந்தன இருட்டுக்குள்
பன்னீர் பூக்கள்
பார்த்தவுடனே எழுந்து போய்
தூரத்து மரத்தடியில்
அமர்ந்தவனை
பார்த்து சிலிர்த்தது வாசனை
அனுப்பி பன்னீர் மரம்.

----------------------------------------------------------

பார்த்து கொண்டிருக்கும் பொழுதே
காணாமல் போய்விட்டது வானவில்
தட்டான் பிடிக்க தும்பைச்செடி
மிதித்தொடும் குழந்தைகள் முகத்தில்
படர்ந்திருந்தன ஏழு நிறங்கள்

----------------------------------------------------------
.... நேரடி வானத்தில்
தெரிவதைவிட
நிலா அழகாக இருப்பது
கிளைகளின் இடையில்..

----------------------------------------------------------

மழை இதுவரை உங்களிடம் ஏதேனும் புகார்
சொல்லி இருக்கிறதா.....
ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக.....
ஒரு வானவில் மீன்கொத்தி சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டு சிறுவனை
நனைய கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பார்க்காமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக....
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து இவ்வளவு புகார்களை
வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே
சொல்லி கொண்டு இருக்கின்றீர்கள்?



வெளியீடு - சந்தியா பதிப்பகம்

Thursday, January 7, 2010

கி.ராவின் "அந்தமான் நாயக்கர்" மற்றும் "சிறுவர் நாடோடி கதைகள்"

கி.ராஜநாராயணன்,இலக்கிய வாசிப்பை தொடர்ந்து கொண்டிருக்க காரணமான பிரதான எழுத்தாளர்களில் ஒருவர்.எப்பொழுதும் எனது "default buy list" இருக்கும் பெயர் கி.ரா.கி.ராவின் "அந்தமான் நாயக்கர்" நாவல் நீண்ட தேடலுக்கு பிறகு இந்தாண்டு புத்தக சந்தையில் கிடைத்தது.இவரின் "கோபல்ல கிராமம்" மற்றும் "கோபல்ல கிராம மக்கள்" நாவல்களின் தொடர்ச்சியாய் இந்நாவலை கொள்ளலாம்.அவ்விரு நாவல்களை படித்திராதவர்களுக்கு புரிதலில் சிக்கல் ஏதும் இராது.இந்நாவல் முன் வைக்கும் முக்கிய செய்தி நம்பிக்கை துரோகத்தின் வலி.இது பல்வேறு நிகழ்ச்சிகளால் ,கிளைக்கதைக்களால் அழுத்தமாக சொல்லபடுகின்றது.சோகத்தை எடுத்து சொல்வதாக இருப்பினும் கி.ரா வின் வழக்கமான பகடிக்கும்,கிளை கதைகளுக்கும் பஞ்சமில்லை.


சுதந்திரம் பெருவதிற்கு முன்பு வெள்ளையனும்,சுதந்திரம் பெற்ற பின்பு அரசு அதிகாரிகளும் ஏதும் அறியா அப்பாவி முதியவருக்கு இளைத்த நம்பிக்கை துரோகத்தை பற்றியது இக்கதை.அழகிரி நாயக்கர்,ஆங்கிலேய இந்தியாவில் விளையாட்டாய் தேசிய கொடியை கட்டியதிற்காய் அந்தமான் சிறை சென்று வாழ்கையின் பெரும் பகுதியை கழிக்கின்றார்.அவர் சிறையில் இருந்து திரும்பி வரும் பொழுது சுதந்திர இந்தியாவின் மாற்றங்கள் யாவும் நகரத்தாற்கு மட்டுமே சாதகமாவும்,விவசாயிகளின் நிலையில் மாற்றம் ஏதும் இல்லாதிருப்பதும் மெல்ல மெல்ல புலப்படுகின்றது.விவசாய புரட்சி தீவிரம் அடைந்து எங்கும் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்ட சமயத்தில் இந்திய காவல்துறையால் அடித்து கொல்லபடுகின்றார் அழகிரி என்கின்ற அந்தமான் நாயக்கர்.



அந்தமான் நாயகரின் கதையின் ஊடே..சின்ன சின்ன கிளை கதைகள் சொல்லபடுகின்றன.நம்பிக்கை துரோகத்தின் விளைவை சொல்லும் விரலக்கா கதை அதில் முக்கியமானது..எல்லாவற்றின் மையமும் நம்பிக்கை துரோகம்!!!நாவல் ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் நிகழ்காலமும் ,கடந்த காலமும்,கிளை கதைகளும் மாறி மாறி சொல்லப்பட்டு இருப்பது அலுப்பை தரவில்லை.அந்தமான் நாயக்கர் நாவலில் கி.ரா வின் பின்னுரை முக்கியமாய் கவனிக்க பட வேண்டியது.நாவலில் சொல்லபட்டதை காட்டிலும் வெகு அழுத்தமாய் விவசாயிகளின் நிலை குறித்த தமது கருத்துக்களை முன்வைக்கின்றார்.


சிறுவர் நாடோடி கதைகள்,தலைமுறை தலைமுறையாய் சொல்லபட்டு வரும் கதைகள் எத்தனையோ.."பணியார மழை","செக்கு குட்டி போடுமா" ஆகிய கதைகள் தவிர்த்து இத்தொகுப்பில் மற்றவை யாவும் கேள்விபடாத கதைகளே..!!காரண கதைகள் படிப்பதிற்கு சுவாரஸ்யமானவை.அதீத கற்பனையின் வெளிப்பாடான இக்கதைகள் நம்பிக்கைகளின் கதை வடிவம்.காரண கதைகள் படிப்பதிற்கு சுவாரஸ்யமானவை.அதீத கற்பனையின் வெளிப்பாடே இக்கதைகள்.இதொகுப்பிலும் பெரும்பாலானவை காரண கதைகளே..மொச்சை பயரின் நடுவில் இருக்கும் வெள்ளை நிற தோலுக்கும்,நிலவின் கரையாய் புலப்படும் கிழவிக்கும் சொல்லப்படும் கதைகள்,சனிக்கிழமை விடுமுறை என மாறியது எப்படி என பல காரண கதைகள்.கற்பனை நிறைந்த குழந்தைகள் உலகம் அற்புதமானது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக்குகின்றன இது போன்ற கதைகள்.

வெளியீடு - அன்னம்

Wednesday, January 6, 2010

பஷீரின் "எங்க உப்பப்பாவிற்கொரு ஆனை இருந்தது.."

வைக்கம் முகமது பஷீர்....அறிமுகங்கள் தேவையற்ற இலக்கிய பிதாமகன்.பஷீரின் இந்நாவலை,தலைப்பை கொண்டு வேறு மாதிரியாக எண்ணி இருந்தேன்..என் அவதானிப்பு தவறென குட்டியது போல இருந்தது இந்த அற்புத காதல் கதையை படித்த பொழுது.பெண் மனதின் உணர்வுகளை இவ்வளவு நேர்த்தியோடு வர்ணிப்பது பஷீருக்கு மட்டுமே கைவரும் கலை.காதலோடு சேர்த்து இந்நாவல் பகிரும் சுவாரஸ்யமான விஷயங்கள் குரானின் இருந்து மேற்கோள் காட்டப்படும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள்.படிப்பதிற்கு புது அனுபவமாய் இருந்தது.இக்கதை 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்வதாய் கொள்ளலாம்..அன்றைய கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் குறித்த நிலைபாடுகள் தீவிரமாய் இருந்ததை மிகவும் அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல்

பாத்தும்மா என்னும் கதாபாத்திரத்தை மையமாய் கொண்டு சுழலும் இக்கதையில்,அவளின் பால்ய காலம் தொடங்கி பருவகாலம் வரையிலான காட்சிகள் விரிகின்றன .கடந்த காலத்தின் பெருமைகளை நிகழ் காலத்தில் நிலை பெற செய்ய முயலும் அவளின் தாய்,ஊரில் பிரதானத்துவம் தனக்கே இருக்க வேண்டி சொத்து வழக்கிற்கும்,இதர பஞ்சாயத்துகளுக்கும் பணத்தை செலவழிக்கும் தந்தை,எதிர்காலம் குறித்த குழப்பத்தில் திருமண கனவுகளோடு இருக்கும் பாத்தும்மா என மூன்று முக்கிய பாத்திரங்களின் குணாதிசியங்கள் சில காட்சி விவரிப்புகளில் புலப்படுகின்றன.




குழந்தை பாத்தும்மா செல்வ செழிப்பில் திளைத்தவள்..உடல் கொள்ளா நகையோடு வீற்றிருக்கும் பாத்துமாவை குறித்த பஷீரின் வர்ணிப்புகள் நகைச்சுவையாய் இருப்பினும் உண்மையே."என் உப்பாவிற்கொரு ஆனை உண்டு..கொம்பானை..." என எப்போதும் தன் புகழ் பேசி திரியும் பாத்துமாவின் தாய் மேல்தட்டு பெண்களின் குறியீடு.சொத்து வழக்கில் செல்வம் அனைத்தையும் தொலைக்கும் பாத்துமாவின் குடும்பம் அவளின் 20ஆம் வயதில் ஏழ்மையின் பிடியில் சிக்குகின்றது.இனி முழுதும் சோகமே என நினைத்திருக்கும் வேளையில் நாவல் அழகுற தோன்றுவதே அங்கிருந்து தான்..கைதியாய் வீட்டில் முடங்கி இருந்த பாத்துமாவிற்கு இப்பொழுது அநேக சுதந்திரம்..அவர்களின் குடிசைகருகில் உள்ள அல்லிகுளத்தில் அவள் செலவிடும் நீண்ட பகல்கள்,அந்த குளத்தில் உள்ள மீன்களும்,அட்டை பூச்சிகளும்,மலர்களும் அவளின் தோழிகளாக மாறிப்போவது.. ஏனோ தேவதை கதை ஒன்றை படித்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தந்தது.

பாத்துமா தன் பிரியத்திற்குரிய நிஸார் அகமதுவை முதன்முதலில் காண முற்படும் சூழல் அழகிய ஹைக்கூ கவிதை...அடிபட்டு விழுந்த சிட்டு குருவியின் மீது அன்பு கொள்ளும் இருவரும் அடுத்தடுத்த சந்திப்புகளில் பிரியம் கொள்வது இயல்பாக உள்ளது.சேலை அணிவதும்,வகுப்பெடுத்து தலை பின்னுவதும்,வேற்று ஆண்களை கண்ணால் பார்ப்பதும் இறைவனுக்கு எதிரான காரியங்கள் என்பதாகவே இருக்கும் பாத்துமாவின் உலகம் மெல்ல மாற்றம் காண்பது கவிஞனான நிஷார் அகமதுவின் வருகைக்கு பிறகே!!பஷீரின் "பால்யகால சகி" நாவலின் கடைசி பக்கங்கள் துயரத்தின் உச்சகட்ட சோகத்தை தாங்கி நிற்பவை.இக்கதையில்,பாத்துமாவின் போலித்தனம் அற்ற மெய்யான காதல் இனிதாய் நிறைவேறுவதில் வாசகனுக்கு இம்முறை மகிழ்ச்சியை தந்துவிட்டார் பஷீர்.இந்த வருடத்தை மிக சிறந்த ஒரு வாசிப்போடு தொடங்கியதில் பெரும் திருப்தி.

வெளியீடு - காலச்சுவடு
தமிழ் மொழி பெயர்ப்பு - குளச்சல் யூசூப்
விலை - ரூபாய் 80

Tuesday, January 5, 2010

சென்னை புத்தக கண்காட்சி 2010

மதுரையில் இருந்த காலங்கள், சென்னை புத்தக கண்காட்சி என்னும் பிரமாண்ட திருவிழாவில் கலந்து கொள்ள இயலாத ஏக்கத்தை தொடர்ந்து தந்து கொண்டே இருந்தன.2008 ஆண்டு முதல் முறையாக புத்தக கண்காட்சி சென்றது மறக்க முடியாத நிகழ்வு..எழுத்தாளர்கள் யாரையும் சந்திக்காவிடினும் அத்தனை புத்தகங்களை ஒரு சேர பார்த்த பிரமிப்பில் இருந்து மீள நாட்கள் பிடித்தது.சென்ற ஆண்டு புத்தக சந்தையில் கி.ரா வை பார்த்திட விரும்பி நிறைவேறாது போனது.எஸ்.ராவை பார்த்தும் பேச தயங்கி வந்துவிட்டேன்.புத்தக பெயர்,ஆசிரியர்,வெளியிடும் பதிப்பகம் என சின்ன பட்டியல் தயாரித்து கொண்டு தான் புத்தககண்காட்சிக்கு செல்வேன்.தேவையானவற்றை மட்டும் வாங்கி வந்துவிடலாம்.

இந்தாண்டு புத்தக கண்காட்சி தந்த அனுபவம் அலாதியானது.எழுத்தாளர்கள்,நண்பர்கள் உடன் உரையாடியது நிறைவாய் இருந்தது.பதிவுலக அறிமுகம் இல்லையென்றால் இவை யாவும் சாத்தியம் இல்லை.இந்தாண்டு புத்தக சந்தையில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இதோ..

உயிர்மை

எஸ்.ராவின் சமீபத்திய நூல்கள் - 4
சாருவின் தீராக்காதலி

காலச்சுவடு

பஷீரின் "எங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனை இருந்தது"   
கு.பா.ரா மொத்த தொகுப்பு
கிருத்திகாவின் "வாசவேஸ்வரம்"

தமிழினி

ஏழாம் உலகம்   ஜெமோ
ராஜேந்திர சோழன் கதைகள்

அன்னம்

கி.ரா அந்தமான் நாயக்கர்
கி.ரா சிறுவர் நாடோடி கதைகள்

பிற

எஸ்.ராவின் ஆலீஸின் அற்புத உலகம் - விகடன்
அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் -கவிதா
ரகோத்தமனின் 'ராஜீவ் கொலை வழக்கு'
கன்னட மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்புகள்- நேஷனல் புக் டிரஸ்ட்

இவை தவிர்த்து வம்சி வெளியீடுகளான ஜெயந்தன் சிறுகதைகள் முழு தொகுப்பு, அய்யனாரின் மூன்று நூல்கள்,வேலு சரவணனின் "தங்க ராணி' மற்றும் "ஒற்றை கதவு" மலையாள மொழிபெயர்ப்பு நாவல் ஆகிவை இந்த வார இறுதியில் வாங்க வேண்டியவை.

Sunday, January 3, 2010

பாறப்புரத்தின் "அப்பாவின் காதலி"

மலையாள இலக்கிய பரப்பில் குறிப்பிட தகுந்த எழுதாளர்களில் ஒருவர் பாறப்புரத்து.அவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான "அப்பாவின் காதலி" யை தமிழில் மொழி பெயர்த்துள்ள சு.ரா இவ்வாறு முன்னுரையில் குறிப்பிடுகின்றார்,

"மிக சிறந்த புதினத்தை மொழி பெயர்த்திருக்கின்றேன் என்பதற்காக பெருமைபடுகின்றேன்.வருடங்கள் எவ்வளவு கடந்தோடட்டும் - பாறபுரத்தின் இந்த அழியாப் புகழ் பெற்ற புதினம் எப்போதும் தமிழ் மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும்...."


"அப்பாவின் காதலி",தவிர்த்திட தவறிய உறவு ஏற்படுத்தும் சிக்கல்கள் ஒரு அழகிய குடும்பத்தை எவ்வாறு சிதைக்கின்றது என்பதை அலட்டல் ஏதுமின்றி வெகு எளிமையாய் சொல்லும் கதை.வீதியில் சந்திக்கும் தன் அப்பாவின் காதலியை அடையாளம் கண்டுகொள்ளும் நாயகன் பல வருடங்கள் பின்நோக்கி சென்று நடந்தவற்றை எல்லாம் நினைவு கூறுகின்றான்.மணிகுட்டன்,அந்த கிராமத்தின் பெரிய மனிதரான மூத்த தம்பிரானின் மகன்.நண்பர்கள்,பண்ணை கூலிகள்,பால்காரி ஆகியோர் கூறியும் செம்மண்பறம்புல் கவுரியம்மாவோடு தனது தந்தை கொண்டிருக்கும் உறவை ஏற்க இயலாது சிறுவனான மணிகுட்டன் கொள்ளும் மன உளைச்சல் வெகு இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது.கவுரியம்மாவோடு கொண்டிருந்த உறவால் குடும்பத்தில் ஏற்படும் தொடர் சண்டைகள்,தந்தையின் திடீர் உடல்நல குறைவு என கொஞ்சமாய் சிதைய தொடங்கும் குடும்பம் பெரிய தம்புரானின் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாய் ஒடிந்து மணிகுட்டனின் பாரத்தை கூட்டுகின்றது.தன் படிப்பால் குடும்ப நிலையை மீண்டும் முன்னேற்றுகின்றான் மணிகுட்டன்.



இந்நாவலில் சிறு சிறு நிகழ்வுகள் கூட வெகு நேர்த்தியாய் சித்தரிக்கபட்டுள்ளன.யாரென்று தெரியாமல் மணிகுட்டன் முதல் முறையாக கவுரியம்மாளின் வீட்டிற்கு செல்லும் காட்சி,தனது தந்தையும்,கவுரியம்மாவும் தனித்து பேசி கொண்டிருப்பதை மணிகுட்டன் காணும் காட்சியென பல உதாரணங்கள்.மணிகுட்டனின் தாய்,அக்கா என அவனின் குடும்பம் குறித்த விவரிப்புகள் அதிகம் இல்லாவிடினும் கிராமத்து பெரிய குடும்பத்தின் இயல்புகள் மாறாதவையே.பின்னொரு நாளில் தன் தந்தையை ஏமாற்றி சொத்தை பிடிங்கிய கவுரியம்மாளை பார்க்கும் மணிகுட்டன் கோபத்திற்கு மாறாக அவளின் ஏழ்மை கண்டு பணம் கொடுத்துவிட்டு செல்கின்றான்.


வெளியில் தெரியாத இம்மாதிரியான உறவுகள் எப்பொழுதும் பேசுவதிற்கும்,கேட்பதிற்கும் சுவாரஸ்யம் நிறைந்தவை அது நம் குடும்பத்திற்குள் நிகழாதவரை.ஒரு மகனின் பார்வையில் தந்தையின் காதலை சொல்ல முயன்றுள்ளார் பாறபுரத்து.கோபக்கார தந்தை,வாய் பேசா தாய்,அன்பான அக்கா என இக்கதை மனிதர்கள் சில சமயம் எனக்கு யுமா வாசுகியின் "ரத்த உறவு" நாவலை ஞாபகபடுத்தினர்.எனினும் பிழியும் சோகம் ஏதும் இன்றி கள்ள உறவின் பொருட்டு ஒரு குடும்பம் சிதைவதை வெகு எளிமையாய் மண்வாசனை மாறாது கூறும் நாவல் இது.


வெளியீடு - சாரு பிரபா பப்ளிகேசன்ஸ்
தமிழ் மொழி பெயர்ப்பு - சு.ரா