Saturday, February 28, 2009

சந்தோஷ்சிவனின் "டெரரிஸ்ட்"

வெளிவந்த காலகட்டத்தில் பரபரப்பாய் பேசப்பட்ட சந்தோஷ்சிவனின் "டெரரிஸ்ட்" திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.1998 இல் வெளிவந்துள்ள இத்திரைப்படம் ராஜிவ் கொலைக்கு காரணம் என பெரிதும் நம்பபடும் விடுதலைபுலிகளின் தற்கொலை படையை சேர்ந்த தனுவை மையமாய் கொண்டு பின்னப்பட்டுள்ள கதை.இருப்பினும் இக்கதை முழுக்க முழுக்க தனுவின் சுயசரிதை என எடுத்து கொள்ள முடியாது,அக்கொலை சம்பவத்தை மையமாய் வைத்து முழுவதுமாய் மூளை சலவை செய்யப்பட்டு சமூகத்தின் மீதான தீராகோவமும் வன்மமும் கொண்ட பெண்ணை பற்றிய கதை.



தான் சேர்ந்த இயக்கத்தின் போராட்டத்தில் குடும்பத்தையும்,காதலனையும் இழக்கும் மல்லி அரசியல் தலைவர் ஒருவரை தற்கொலை தாக்குதலினால் கொலை செய்ய பொறுப்பேற்று அழகிய கிராமம் ஒன்றில் ஊரின் பெரிய மனிதர் வீட்டில் தங்குகின்றாள். இயக்க நண்பர்கள் இருவர் அவ்வப்பொழுது வந்து திட்டங்களை விளக்கி கொண்டு செல்ல அவளின் நீண்ட பகல்கள் அவ்வீட்டின் பெரியவரோடு கழிகின்றது.மகனின் பிரிவால் கோமா நிலையில் உள்ள மனைவியோடு வசிக்கும் அப்பெரியவர் மல்லி மீது மிகுந்த அன்பு கொண்டு வாழ்வின் மீதான பிடிமானங்களை மெல்ல மெல்ல உணர்த்துகிறார்.

முழுதுமாய் வாழ்வை வெறுத்து,சமூகத்தின் மீதும்,சக உறவுகள் மீதும் நம்பிக்கை இழந்து இயக்கத்திற்காக முழு மனதுடன் சாவை ஏற்கும் மனநிலை கொண்டு இருக்கும் மல்லியின் மனநிலையில் தடுமாற்றம் நிகழ்வது அவள் தான் கர்ப்பமுற்று இருப்பதை உணரும் நேரம் முதல்.வெடிகுண்டு பொருத்திய பெல்டை இடுப்பில் அணித்து கொண்டு தலைவரை கொல்ல பயிற்சி அளிக்கப்படும் மல்லி திட்டத்தை நிறைவேற்றினாலா இல்லையா என்பதே முடிவு.உணர்ச்சிகள் மரத்து இறுக்கத்தோடு வளைய வரும் மல்லியிடம் கிராமத்து பெரியவர் நடத்தும் உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.செடியின் விதையை கொண்டு பூமிக்கும் வானுக்கும் உள்ள உறவை சொல்லும் இடமும்,மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் மனைவியை அன்போடு அணுகும் இடமும் இதில் குறிப்பிடத்தக்கவை .

இதில் மல்லியாய் நடித்துள்ள ஆயிஷா நல்ல தேர்வு. இறுக்கம், வன்மம்,கனவுகள்,ஆச்சர்யம்,ஆச்சர்யம்,பயம் என மாறி மாறி காட்டும் முகபாவனைகள் அற்புதம்.சந்தோஷ் சிவனின் காமிரா,அழகிய அச்சிறுகிராமத்தை வெயிலோடும்,மழையோடும் கவித்துவமாய் படம்பிடித்துள்ளது.தற்கொலைபடையை சேர்ந்த பெண்ணொருத்தியின் நிச்சயிக்கப்பட்ட மரண நாளின் முந்தைய நாட்கள் குறித்த இப்படம் ஆவணபடங்களுக்கே உள்ள சில குறைபாடுகளை கொண்டிருப்பினும் காணப்படவேண்டிய ஒன்று.

Wednesday, February 25, 2009

பஷீரின் "பாத்திமாவினுடே ஆடு / பால்ய கால சகி" - குறுநாவல் தொகுப்பு

மலையாள நாவல்கள் வரிசையில் தகழியின் "செம்மீன்", "தோட்டியின் மகன்",பாறபுரத்துவின் "அப்பாவின் காதலி" யை தொடர்ந்து எனது விருப்ப பட்டியலில் உள்ள நாவல் பஷீரின் "பால்ய கால சகி".எல்லா நாவக்களும் மறுவாசிப்பிற்கு உகந்ததாய் இருக்காது.சில நாவல்கள் பாதி படித்து கொண்டிருக்கும் பொழுதே அயர்ச்சியின் காரணமாய் கடைசி அத்தியாயத்திற்கு இழுத்து செல்லும்.எத்தனை முறை படித்தாலும் சலிக்காத நாவல் என்றால் என்னளவில் கி.ரா வின் 'கோபல்ல கிராமத்தை" சொல்லுவேன்.பஷீரின் "பால்ய கால சகியும்" அது போலவே."பாத்திமாவின் ஆடு" மற்றும் "பால்ய கால சகி" இரு குறுநாவல்களின் தொகுப்பை மீண்டும் வாசிக்க ஆர்வம் மேலிட உடனே படித்து முடித்தேன்.




பஷீரின் பெரும்பாலான கதைகள் சொந்த அனுபவங்களை கொண்டு எழுதப்பட்டவை.மேலும் தீவிர இலக்கண பிடிப்பின்றி பேச்சு வழக்கில் அமைக்கப்பட்டவை இவரின் கதாபாத்திரங்களின் உரையாடல்கள்."பாத்திமாவின் ஆடு" முழுக்க முழுக்க அவர் தம் குடும்பத்து மனிதர்களை பற்றியது.தம்பிமார்கள்,தங்கைகள் இவர்களின் குழந்தைகள் மற்றும் தனது தாயுடன் கழித்த நாட்கள் குறித்த குறிப்புகளை ஹாசியம் கலந்து விவரித்துள்ளார்.தம் குடும்பத்தில் பணத்தின் பொருட்டு எழும் சிறு சிறு ஊடல்களும்,அதனை முன்னிட்டு உறவுகளுக்குள் நிகழும் சிறு சச்சரவுகளும் மிகையின்றி வெளிப்படையாய் கூறி உள்ளார்.தனது தங்கையின் ஆட்டை முன்வைத்து அவ்வீட்டு பெண்களுக்கும் ஆண்களுக்கும் எழும் பூசல்கள் நகைச்சுவையாய் கூறப்பட்டாலும்,வறுமையின் பிடியில் சிறு விஷயங்கள் தேவையின் பொருட்டு பூதாகரபடுத்தப்படுவது கசப்பான உண்மை.

"பால்ய கால சகி",ஹஜ்ரா - மஜீத் சிறு வயது முதல் பேரன்பு கொண்டு பழகும் இவர்களின் வாழ்க்கை கால சுழற்சியில் துன்பத்தின் பிடியில் முற்றிலுமாய் சிக்கி சிதிலடைவதே இக்கதை.குழந்தை பருவத்து காட்சிகள் எதனை கதைகளில் படித்தாலும் சலிக்காதது.இக்கதையிலும் இவர்களின் பால்ய கால நாட்கள் விவரிக்கப்பட்டுள்ள விதம் மீண்டும் மீண்டும் அந்த அப்பருவத்தின் மீதான பிரியத்தை அதிகரிக்க செய்வது.பால்ய காலம்,பதின் பருவம்,நடுத்தர வயது என ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்களின் பிரிவு சத்தமின்றி அதிகரிப்பதும் கொண்டகாதல் அதனினும் மேலாக பெருகுவதும் சோகம் கொண்டு சொல்லபடுவதால் இக்கதை காவியம் ஆகின்றது.

இவ்விரு நாவகளிலும் சில வார்த்தைகள் புரியவில்லை.மொழிபெயர்ப்பாளர் எதற்கு வம்பு என்று அப்படியே விட்டு விட்டார் போல.புரிய சொற்களை குறிப்பெடுத்து கொண்டு அலுவலக தோழியிடம் (கேரளத்தவர்) அர்த்தம் கேட்டேன்,அவருக்கும் தெரியவில்லை.இருப்பினும் சில சுவாரசிய தகவல் கிடைத்தது.பஷீரின் இவ்விரு நாவல்களும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ளதாம்.அது மட்டும் இன்றி தகழி,வாசுதேவன் நாயர் ஆகியோரின் கதைகளும் உண்டாம்.வாசிப்பு மீது ஈடுபாடு இல்லாதிருப்பினும் தம் தேசத்தின் எழுத்தாளர்களையும்,அவர்களின் படைப்புகளையும் அறிந்து வைத்திருக்கின்றனர்.என்னுடைய பள்ளி காலத்தில் அழகிரிசாமியின் "ராஜா வந்திருகின்றார்" சிறுகதை மட்டுமே பாடத்திட்டத்தில் இருந்தவற்றுள் உருப்படி.:-((

சுயசரிதை எழுத துணிவோர் ஒளிவு மறைவுகளை முற்றிலுமாய் துறந்திட வேண்டும் என Mc.Court இன் சுயசரிதை நூலான "Teacher Man" பற்றிய தன் கட்டுரை ஒன்றில் முத்துலிங்கம் குறிப்பிட்டு இருப்பார்.பஷீரின் எழுத்துக்கள் அவ்வகையில் நிஜத்தை மட்டுமே பகிர்ந்தளிப்பது.

வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட்

Tuesday, February 24, 2009

காவல் கோட்டம்,சாருவின் "நான் கடவுள்",கல்கி மற்றும்...

* * * எஸ்.ரா தனது சமீபத்திய பதிவான "காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்" இல் காவல் கோட்டம் நூலை துவைத்து,கிழித்து காயபோட்டிருந்தார்.இதுவரை இப்படி ஒரு கடுமையான விமர்சனத்தை எஸ்.ரா எழுதி படித்ததில்லை.இவ்வலைத்தளத்தில் எனக்கு பிடித்த நூல்களை,பரிந்துரைக்க ஏற்ற நூல்களை குறித்து மட்டுமே எழுதி வருகின்றேன்.எஸ்.ரா வின் அந்த காட்டுரை வெகுவாய் யோசிக்க செய்தது.விகடன் விருதுகள் -2008 இல் காவல் கோட்டம் பரிந்துரைக்கபட்டதை குறித்து எஸ்.ரா வருத்தபட்டுளார்.விகடன் விருதுகளை நம்பி வா.மு கோமுவின் "தவளைகள் குதிக்கும் வயிறு" சிறுகதை தொகுப்பை வாங்கி ஏமாற்றம் அடைந்தது நினைவிற்கு வந்தது.

* * * திருநங்கை கல்கியின் வலைபூ குறித்து செந்தழல் ரவியின் பதிவின் மூலம் முதலில் தெரியவந்தது.பொங்கலின் பொழுது வசந்த் தொலைகாட்சியில் கல்கியின் விரிவான பேட்டி காண நேர்ந்தது.வெகு நேர்த்தியாய் தனது குடும்பம்,குழந்தை பருவம்,நண்பர்கள்,காதல், அலுவலக சூழல்,மேடை நாடக ஈடுபாடு குறித்து விவரித்தார்.வித்யாவை தொடர்ந்து கல்கியின் வருகை மகிழ்ச்சி கூட்டுவதாய் உள்ளது.

சகோதரி கல்கியின் வலைத்தளம்


* * * நான் கடவுள் திரைப்படம் குறித்த சாருவின் வெளியிடபடா விமர்சனம் குறித்து சாரு ஆன்லைன் இல் தரப்படும் அறிவுப்புகள்,கேள்விகள்,விளக்கங்கள்....... ஆர்வத்தை விட அயர்ச்சி தருவதாய் உள்ளது.முன்னமே இவை எதிர்பார்த்த ஒன்று தான் எனினும் இந்த அளவு எதிர்பார்கவில்லை :-)

* * * கடந்த ஞாயிறு அன்று பெருத்த எதிர்பார்போடு Slumdog Millionare திரைப்படம் பார்க்க சென்றேன், சுமாரான பாலிவுட் திரைபடத்தை பார்த்து முடித்த ஏமாற்றமே மிஞ்சியது. ஆஸ்கரில் இதனை விருதுகள் வாங்கி குவித்து இருப்பதும்,உலக அரங்கில் இந்தியாவின் பெயர் திரைத்துறை சார்ந்து முன்னிறுத்தபடுவது மகிழ்ச்சியே.திரைப்படம் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடாமல் தமிழனுக்கு ஆஸ்கர் கிடைத்ததில் தாராளமாய் மகிழ்ச்சி கொள்ளலாம்.

Thursday, February 12, 2009

பெருமாள் முருகனின் "கூளமாதாரி"

பெருமாள் முருகன்,"ஏறுவெயில்" நாவலில் சமூக கட்டமைப்பின் காரணமாய் நடுத்தர குடும்பம் ஒன்றில் நிகழும் மாறுதல்களை அழுத்தமாய் பதிவு செய்திருந்தார்.இந்நாவல் விளிம்புநிலை சோகத்தை முற்றிலும் புதிய நடையில் சொல்லுகின்றது.கவுண்டர் வீடுகளில் வருட கூலிகளாய் விடப்படும் சக்கிலிய சிறுவர்களை சுற்றி சுழலும் கதை.கூளையன்,நெடும்பம்,வவுரி,செவுடி,மொண்டி இவர்களின் ஆடுகள்,தினசரி விளையாட்டு,தீரா நட்பு,பொய் கோபங்கள்,நினைவில் வந்து மறையும் அரிதான இனிய பொழுதுகள் என சிறு சிறு விஷயத்தையும் மிக நுட்பமாய் வர்ணித்தபடி செல்கின்றது.கதையின் நாயகன் கூளையன்.இருப்பினும் பெரும்பாலான கதை நாயகனை மையப்படுத்தி இல்லை.



குழந்தைகள் உலகம் அற்புதமானது.கற்பனைகளும்,கனவுகளும் கொண்டு துள்ளி திரியும் அந்த பருவத்தின் மீதான ஏக்கம் யாவருக்கும் உண்டு.கிராமத்து சிறார்களின் உலகம் இதனிலும் சுவாரசியமானது.வயல் வெளிகளில் ஓடி திரிந்து,விருப்ப மரங்களின் ஏறி ஆடி,பூக்களையும்,பழங்களையும் தனதாக்கி கொண்டு,வித விதமாய் விளையாட்டுகள் பழகி, நினைத்த பொழுதில் கிணற்றில் குளித்து மகிழும் வாழ்கை இச்சிறுவர்களுக்கும் உண்டு.கூடுதலாய் இவர்கள் பெற்றிருப்பது கவுண்டச்சிகளின் ஏச்சு பேச்சுகள்,குறுக்கு ஓடிய செய்யும் கிடை வேலைகள்,அயர்ச்சி தரும் ஜாதியின் மீதான வசவுகள்,அடுத்த வருட கூலி குறித்தான பயம்.....

சிறுவர் இலக்கிய வகையில் வெகுவாய் சேரும் இக்கதையில் வரும் பல சம்பவங்கள் பொறாமை கொள்ள செய்பவை.ஆடுகள்,நண்பர்கள் என யாவற்றையும் மறந்து தனது பாட்டியின் ஊரில் கூளையன் செலவிடும் நேரங்கள்.மொத்தமாய் தேக்கி வைத்திருந்த உறக்கத்தை அனுபவிக்கும் நீண்ட பகல் பொழுதின் இனிமை,பசித்திருந்த பொழுதில் நண்பர்களோடு ஆற்று மீன் பிடித்து பாறையில் சுட்டு தின்றும்,பெரிய கவுண்டரோடு ராத்திரி ஆட்டம் எம்.ஜி.ஆர் படம் பார்த்து வந்ததும்,கவுண்டர் வீட்டு செல்வதோடு விடிய விடிய கருப்பசாமி கதை பேசியதும்,தனது விருப்ப ஆடான வீரனை சாமிக்கு படையல் இடும் நாளில் கோவிலை விட்டு வெகு தூரம் தனித்து வந்து அமர்ந்து சோகத்தை மறக்க முயலும் தருணங்கள் தருவிக்கும் வாசிப்பு அனுபவம் அலாதியானது.

நாவலின் பிற்பகுதி கூளையனை சோகத்தின் பிடியில் ஆழ்த்தும் நிகழ்ச்சிகள் வரிசையாய் விவரிக்கப்பட்டு நம்மையும் வதைக்கின்றது.வயதிற்கு அதிகமான முதிர்ச்சியோடு எதிர்காலம் குறித்த நிச்சயம் ஏதுமின்றி பொட்டல் காட்டில் ஆடுகளோடு பொழுதை கழிக்கும் இவர்களின் மெல்லிய சோகமும் மனதை கனக்க செய்வது.ஒரு வாரம் இடைவெளி விட்டு விட்டு படித்தேன் இந்நாவாலை.சோம்பல் கூட்டும் பகல் பொழுதுகள் இச்சிறுவர்களோடு கழிந்தது சுகானுபவம்.தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய வரிசை நாவல்களில் "கூளமாதாரி" இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

பெருமாள்முருகனின் ஏறுவெயில் நாவல் குறித்த எனது முந்தைய பதிவு

Thursday, February 5, 2009

எக்பர்ட் சச்சிதானந்தத்தின் "அம்மாவின் அத்தை" - குறுநாவல் தொகுப்பு

எக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த அறிமுகம் எஸ்.ரா வின் வலைத்தளத்தில் கண்டதும் அவரின் "நுகம்" சிறுகதை தொகுப்பை தேடி படித்தேன்.கிறிஸ்துவ மடங்கள் மீது இருக்கும் மேலோட்டமான பார்வையை தவிர்த்து உள்ளிருக்கும் மடாதிபதிகளின் அதிகார போக்கு,ஊழல்,போலி கரிசனம் முதலியவற்றை வெளிப்படையாய் பேசும் சிறுகதைகளின் தொகுப்பு அது.அதே போன்ற எதிர்பார்ப்புடன் இந்த தொகுப்பை படிக்க தொடங்கினேன்.நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.இந்தனை நாள் வாசிக்காமல் போனதிற்கு வருத்தம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ள கதைகள்.



"அம்மாவின் அத்தை" ,நாயகன் தாமு தன் அம்மாவின் அத்தை குறித்தான பின்னோக்கிய நினைவுகளோடு பயணிக்கின்றது.வயதான காலத்தில் தனி ஒரு ஆளாய் குடும்பத்தை சமாளிக்கும் அத்தையோடு சோமுவிற்குள்ள நெருக்கத்தை பறைசாற்றி தொடரும் கதை அத்தையோடு சோமு தூரத்து கிராமத்திற்கு சென்ற நாட்களின் விவரிப்பில் சுவாரசியம் பெறுகிறது.குழந்தை பருவத்து நிகழ்வுகள் முழுதாய் நினைவில் இல்லாவிட்டாலும் ஒவ்வொருவருக்கும் சில பொழுதுகள் மறக்க முடியாதவை.அது போல அமைந்தது சோமுவின் பயணம்.செழித்த விளைநிலங்கள்,கபடம் அற்ற விவசாயிகள்,தூரத்து பறவை கூச்சல்,இருள் பொழுதின் மின்மினி கூட்டம் என விரியும் வர்ணிப்புகள் பொறாமை கொள்ள செய்பவை.

மேதில்டா - இத்தொகுப்பில் எனக்கு மிக பிடித்த கதை.நாயகனின் இளம் வயது ஆங்கிலோஇந்திய காதலி மேதில்டா மற்றும் நண்பனான அவளின் அண்ணன் பீட்டரை குறித்த கதை என்பதை விட குறிப்புகள் என சொல்லலாம்.படிப்பில் ஆர்வம் அற்று பட்டம் விடிவதில் மோகம் கொண்டு அதை தவம் போல மேற்கொண்டு வண்ண வண்ண பட்டங்கள் செய்து மைதானத்தில் பீட்டர் போட்டியிடும் காட்சிகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் உலகம் முழுதுமாய் பட்டங்களை மாறிபோனதாய் தோன்ற செய்தது.ஆங்கிலோ இந்தியர்கள் குறித்த கதைகள் தமிழில் மிக அரிது.காதல் மனைவியின் மரணத்தை ஏற்று கொள்ள இலயாது தவிக்கும் ஆங்கிலோஇந்திய கணவனை பற்றிய வண்ணதாசனின் சிறுகதை ஒன்று நினைவில் வந்து போனது.திடீரென யாவரும் எங்கே மறைந்து போனார்கள்?

கோபிகிருஷ்ணன் நடையில் உள்ள "இன்னொரு கிழவர்" அரசு அலுவலகம் ஒன்றின் தினசரி காட்சிகளை நகைச்சுவை கொண்டு விவரிப்பது".வீட்டோடு மருமகனான பிராமண வாத்தியார் பள்ளியில் வேலை செய்யும் சேரி பெண்ணுடன் கொள்ளும் காதலை மிக நுட்பமாக சொல்லும் மற்றொரு கதைக்கு சிறிதும் பொருந்தாமல் "அனுமார் கோவில் அய்யங்கார்' என ஏன் தலைப்பு என புரியவில்லை.இத்தொகுப்பின் முன்னுரையில் எக்பர்ட் சச்சிதானந்தம் தமது படைப்புக்களை வெளியிட முயற்சிமேற்கொள்ளவில்லை என சொல்லப்பட்டுள்ளது.மிகவும் வருத்தம் தரும் செய்தி அது.

வெளியீடு - தமிழினி
விலை - 55 ரூபாய்