Monday, June 29, 2009

அழகிய பெரியவனின் "நெரிக்கட்டு"

நெரிக்கட்டு,இந்த தொகுப்பிற்கு இதைவிட சிறந்த தலைப்பு எதுவும் இருக்க முடியாது.தொகுப்பின் ஒரு சிறுகதை தான் நெரிக்கட்டு எனினும் ஏனைய எல்லா கதைகளுக்கும் இப்பெயர் பொருந்தும்.ஒவ்வொரு கதையும் ஒருவித மனநிலையை தோற்றுவிட்டது.எல்லா கதைகளும் விளிம்பின் நிலையை சோகத்துடன் சொல்பவையே,இருப்பினும் இந்த கதைகளங்கள் இதுவரை படித்திடாதது.இப்படியுமான சூழ்நிலைகளை யோசிக்க இயலுமா என ஆச்சர்யத்தை தோற்றுவித்த கதைகள் "நெரிக்கட்டு" மற்றும் "நீர் பரப்பு".

நெரிக்கட்டு,வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியேறிய நாயகன் புலம் பெயர்ந்த ஊரில் மணமான பெண்ணொருத்தியுடன் கொள்ளும் காதலும் அதன் காரணமாய் சந்திக்கும் மரணமும் பற்றிய கதை.இக்கதையில் தெளிவாய் சொல்லபடாதது நாயகனின் வயது,அதன் காரணமாய் புரிதலில் சிறிது குழப்பம் உள்ளது. "திசையெட்டும் சுவர்கள் கொண்ட கிராமம்",மேல்குடியினருக்கு எதிரான தலித் இளைஞர்களின் போராட்டத்தை பற்றிய கதை.தலைமுறை தலைமுறையாய் தொடரும் தீண்டாமை,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் என தீராத கொடுமைகளை மையபடுத்தி பின்னப்பட்டுள்ள இக்கதை அழுத்தமாய் வலியுறுத்துவது தலித் இளைஞர்களுக்கு/பெண்களுக்கு இவற்றை எதிர்த்து போராட வேண்டிய மன தைரியத்தையும் உறுதியையும்.




"இறகு பிய்த்தல்",உயிர்களின் மீது பேரன்பு கொண்டவனும்,தான் சார்ந்துள்ள சமூகத்தை குறித்த நுண்ணறிவு பெற்றவனாகவும் உள்ள பிச்சைகாரனை பற்றிய கதை.அவனின் தெரிவிக்கப்படாத தொடக்க காலங்களை காட்சிகளின் விவரிப்பில் மறைமுகமாய் தெரிவிக்கின்றார்."உயிரிடம்",சொந்தமாய் வீடு இல்லாதவர்களுக்கு அது குறித்த கனவுகளும்,ஏக்கமும்,கற்பனையும் இருப்பது போலவே வீடு உள்ளவர்களுக்கு அது குறித்த நினைவுகளும்,பெருமைகளும் இருப்பது இயல்பு.பிறந்த வீடும்,புகுந்த வீடும் ஒரு பெண்ணிற்கு நெருக்கமாய் அமைவதை உருக்கமாய் விவரிக்கும் கதை.

"நீர்பரப்பு",இக்கதையில் மிக சிக்கலான மன போராட்டத்தை எழுத்தில் கொணர்ந்து உள்ளார் அழகிய பெரியவன்.கரகாட்டகாரியான தனது காதலியின் தாய்,அவன் ஊருக்கே ஆட வரும் சமயத்தில் நாயகனுக்கு ஏற்படும் மன போராட்டமே கதை.தர்மசங்கட நிலையில் தத்தளிக்கும் அவனின் ஒவ்வொரு கனங்களும் விவரிக்கப்பட்டுள்ள விதம் மிகையில்லாதது."கண்காணிக்கும் மரணம்",மரணத்தின் பிடியில் இருக்கும் மனைவியை உயிராய் கவனித்து கொள்ளும் கணவன் அவளோடு கூடிய கடந்த கால வாழ்கையை நினைவு கொள்வதை சில பூடகங்களோடு சொல்லும் கதை.

இவை தவிர்த்து "பால் மறதி","யாரும் யாரையும்" ஆகிய கதைகளும் குறிப்பிட்டு சொல்லபடவேண்டியவை.ஆழமான வாசிப்பு இக்கதைகள் நன்கு உணர செய்யும்.அழகிய பெரியவனின் கதைகள் மனித உறவுகளுக்குள்ளான மிக மிக மென்மையான உணர்ச்சி போராட்டங்களை தொட்டு செல்பவை.

வெளியீடு - United Writers
விலை - 50 ரூபாய்.

Tuesday, June 23, 2009

குற்றால சாரல்....

சமீபத்திய அலுவலக பயிற்சி வகுப்பொன்றில் "DRIVE" என்கிற வார்த்தையை கேட்டதும் தோணும் ஐந்து விஷயங்களை பட்டியலிட சொன்னார்கள்.சட்டென எனக்கு தோன்றியது "மழை நாள்".மழையோடு செய்யும் எந்த காரியமும் அழகு தானே!!சமீபத்தில் மழையோடு கூடிய நெருக்கத்தை அதிகரிக்க செய்வதாய் அமைந்தது குற்றால பயணம்.மதுரைக்கு அப்பால் ஒரு நாலு மணிநேர பயணத்தில் ஒரு சொர்க்கபுரி இருக்கின்றது என்பதே பெரிய சமாதானம் தான்.




பள்ளி,கல்லூரி நாட்களில் குற்றாலம் சென்று திரும்புவது ஏதோ ஒரு வருடாந்திர கடமை போல இருக்கும்.சென்னை வந்த பிறகு மெல்ல குற்றால ஆசை தூர கனவாய் போனது.இந்த வருடம் சீசன் துவக்கதிலேயே செல்லும் வாய்ப்பு..குற்றாலதிற்கே உரிய சாரல்,குளிர் காற்று,ஈரம் ஒட்டிய நீண்ட சாலைகள்,முன்பின் அறிமுகம் இல்லாத பொழுதும் அருவியின் பொருட்டு நட்பாய் சிரித்த பெண்கள்,சாரலோடு கூடிய பயணத்தில் கேட்ட ராஜாவின் பாடல்கள்,இரவில் வெள்ளி கம்பியென தூரத்தில் காட்சியளித்த மெயின் அருவி என மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ பல காட்சிகளை எனக்காய் பத்திரபடுத்தி வைத்துள்ளேன்.



வாசுதேவநல்லூரை கடந்ததும் வைக்கோல் போருக்கும் பாழடைந்த ஒரு மண்டபத்தின் பின்னணியிலும் கண்ட வானவில் காட்சி..பிரம்மாண்ட காற்றாலைகள்...சின்ன சின்ன பழைமை மாறாத கிராமங்கள்..நெல்லை தமிழ் என முற்றிலுமாய் என்னை உள்ளிழுத்து கொண்டது இந்த பயணம்.தலையை தட்டும் மேகங்கள் உங்களுக்கு பிடிக்குமா?? பெரு மழைக்கு முன் திரண்டு இருக்கும் மேகங்கள் அச்சத்தை மீறிய சிலிர்ப்பை தருவதை மறுக்க முடியாது.குற்றாலத்தில் மேக கூட்டங்களுக்கு பஞ்சமில்லை.நிற்பதாய்..நடனமிடுவதாய். அசைந்து நடப்பதாய் உருவம் தரித்து மலைகளை வலம் வருகின்றன.குற்றாலம், அருவிகளின் இரைச்சலும்,மனதை வருடும் சாரலும்,குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும்,தீரா மர்மங்கள் பொதிந்த மலைகளும் என ஒருவித சௌதர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர்...வேறென்ன சொல்ல?!!!