tag:blogger.com,1999:blog-50929375921290547252024-02-20T01:53:11.380-08:00யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger173125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-46134144965798865702018-04-03T08:12:00.000-07:002018-04-03T08:12:14.203-07:00சோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லை!இது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் தாண்டி போய் சௌராஷ்டிரத்தின் எல்லையில் நின்று கொண்டு நீங்கள் பார்த்தால் எத்தைகைய வாழ்க்கை முறை உங்கள் பார்வையில் படுமோ அந்த வாழ்க்கையோட்டத்தை இந்த நாவலில் காணலாம்" <div>
<br /></div>
<div>
- ஜவேர்சந்த் மேகாணீ (ஆசிரியர்)<br /><div>
<br /><div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK3tbRBIn-itM3wCZuG_fjooZteBrFVnXz3avEJTvNnWy0wvKdGBT39di9soa2jhIUE91_5cboA4tt8TCNPzi9ksE-lZLECiHZTqPbQdwGk6l3FMt5SbM_ycAZ09A3kzJxxH_Yw8hP1lw/s1600/JM-HOME.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="381" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK3tbRBIn-itM3wCZuG_fjooZteBrFVnXz3avEJTvNnWy0wvKdGBT39di9soa2jhIUE91_5cboA4tt8TCNPzi9ksE-lZLECiHZTqPbQdwGk6l3FMt5SbM_ycAZ09A3kzJxxH_Yw8hP1lw/s320/JM-HOME.jpg" width="243" /></a></div>
ஜவேர்சந்த் மேகாணீயின் இந்நாவல் இலக்கிய உன்னதங்களில் ஒன்று.எழுத்தாளர்,பாடகன்,நாடோடி இலக்கிய ஆய்வாளர் என பன்முகம் கொண்ட ஜவேர்சந்தின் மொழி ஆளுமை வியக்க வைப்பது.ரசிக்கும்படியான வர்ணனைகளும், வியக்க வைக்கும் உவமைகளுமென தொடரும் இந்நாவல் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய வரலாற்றின் ஒரு பகுதியை நேர்த்தியாக பதிவுசெய்கிறது.1937ம் ஆண்டு வெளிவந்துள்ள இந்நூலை முக்கிய வரலாற்று ஆவணமாக கருத வேண்டியதின் காரணமும் அதுவே.சௌராஷ்டிர தேசத்தில் (குஜராத்) நிகழும் இக்கதை முழுக்க அம்மக்களின் சமூக அரசியல் வரலாறைப் பேசிக் செல்கிறது.சௌராஷ்டிர நகரங்கள் மற்றும் கிராமங்களில் பயணித்து சேகரித்த ஆசிரியரின் ஒப்பற்ற அனுபவங்களை நாவலின் போக்கில் அறிந்து கொள்ள முடிகிறது.கால சக்கரத்தில் பின்னோக்கி பயணித்து விக்ரம்பூர்,ராஜ்கோட் நகரங்களின் தெருக்களோடும் மனிதர்களோடும் நாம் பரிட்சயம் கொள்வது இயல்பாக சாத்தியப்படுகிறது.<br /><br />ஒரு சிறந்த நாவல் என்பது துவங்கிய சில பக்கங்களில் இருந்தே வாசகனை தன் பால் ஈர்த்துக் கொள்வது.கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலின் துவக்கத்தில் கோட்டை வீட்டார் நமக்கு அறிமுகமாவது அதற்கோர் உதாரணம்.சோரட்..உனது பெருகும் வெள்ளம் நாவலும் அப்படியான துவக்கத்தை கொண்டே பிரதான கதாபாத்திரங்களான மகீபத்ராமையும்,அவரது பேரன் பான்ஜாவையும் அறிமுகம் செய்கிறது. ஆங்கில ஆட்சியில் பிரபுத்துவ அதிகாரத்தின் கீழ் பணிபுரியும்போலீஸ் ஜமாதார் மகீபத்ராமின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இடையே நிகழும் இக்கதையின் மாந்தர்கள் பெரும்பாலும் சுய ஒழுக்கமும்,போராட்ட குணமும்,தீவிர உழைப்பின் மீது நம்பிக்கையும் கொண்டவர்கள்.<br /><br />பான்ஜாவின் பார்வையில் நகரும் பெரும்பாலான கதைப் பகுதி ஒரு சிறுவனின் நோக்கில் அன்றைய சமூகம் குறித்த மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது.உலகயுத்தத்தின் பொருட்டு இங்கிருந்து அனுப்பப்பட்ட சிப்பாய்கள் எவ்விதம் ஏமாற்றப்பட்டார்கள் என்பதன் விவரணைகள் சகிக்க முடியாதவை.1920களில் ஆங்கிலேயருக்கு எதிராக கிளம்பிய சிறு பொறி மக்கள் மனங்களில் எவ்வித மாற்றங்களை தோற்றுவித்தது என்பதை நாவல் கச்சிதமாக பதிவு செய்துள்ளது.காந்தியின் வருகை எழுப்பிய புயல் பரவலாக அங்கீகரிக்கப்பட துவங்கிய பொழுதுகள் அவை. ஆங்கிலேயருக்கு தம் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்த பிரபுக்களின் வருகை என அந்த சூழல் மாபெரும் போராட்டத்தை எதிர்நோக்கி இருந்துள்ளதை ஒருவித நெகிழ்ச்சியின்றி கடக்க இயலாது.<br /><br />நாவலில் கவனிக்கப்பட வேண்டியவற்றுள் ஒன்று பெண்களின் அன்றைய நிலை குறித்த விஸ்தரிப்புகள். அழகு பதுமையாக,கணவனுக்கோ குடும்பத்திற்கோ கட்டுப்பட்டு வெளியுலகம் அறிந்திராத அபலைகள்,யுத்தத்திற்கு சென்ற கணவனை எதிர்பார்த்து காத்திருக்கும் பாவப்பட்டவர்கள்,ஆங்கிலேய அதிகாரிகளின் வன்புணர்வுக்கு ஆளானஅப்பாவிகள் என அச்சமூகம் பலதரப்பட்ட பெண்களை கொண்டுள்ளது. இதில் நாம் எதிர்பார்த்திராத சித்தரிப்பு ரூட்கட்டின் விதவையும் மாமி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவளுமான போராளியினுடையது.அவள் அதிகார அமைப்பை எதிர்த்து நிற்பவள்.பணக்காரர்களிடமிருந்து அபகரித்து ஏழைகளுக்கு உதவுபவள்.ஆண்களை நடுங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவள்.இறுதி வரை தன் சத்தியத்தில் உறுதியாய் இருந்து தனித்துவம் பெற்றவளாக திகழ்பவள். எந்தவொரு பெண்ணும் தன் ஆதர்சமாகக் கொள்ள தகுதி பெற்றவள். <br /><br />மகீபத்ராம்,பான்ஜா,தேவுபா,மாமி,தேவேந்திரநாத்,லக்ஷ்மன்பாய்,ரூட்கட் சேட் என இந்நாவலில் எதிர்ப்படும் கதாபாத்திரங்களோடு நாம் கொள்ளும் பிணைப்பு இயல்பாய் உண்டாவது.அது ஜவேர்சந்தின்எழுத்தாளுமையின் சிறப்பு.தன் வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களை இந்நாவலில் வியத்தகு புனைவாக்கியுள்ளார். எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பின் தெளிவும்,நேர்த்தியும் இந்நாவலின் மீதான பிரமிப்பை இரட்டிப்பாக உதவுபவை.முன் வைக்கப்படும் சௌராஷ்டிர சமூகத்தின் நீண்ட நெடிய வரலாற்றை புரிந்து கொண்டு, அதன் அரசியல் சூழலை,மக்களின் நிலைப்பாட்டை ஆராயத் தூண்டும் இந்நாவல் இந்திய இலக்கியத்தின் மதிப்புமிக்க பொக்கிஷம். </div>
</div>
</div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-74069213963566803152017-01-25T05:13:00.000-08:002017-01-25T05:24:40.969-08:00The Second Mother (2015)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT6hOJeSJtRi2He_8w08WYz-3J0ODHNxVNQ28eCKfJb7OwBvqas3ph3yQZ_pQpwkJsH0NJfYXbdWPgrIfmRkcMKGJYATOIudsU-ZJu6jjixBSMZql8Nr-G8Mj7KHDVdzq55UZ9kw6eR2I/s1600/sec+mother.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT6hOJeSJtRi2He_8w08WYz-3J0ODHNxVNQ28eCKfJb7OwBvqas3ph3yQZ_pQpwkJsH0NJfYXbdWPgrIfmRkcMKGJYATOIudsU-ZJu6jjixBSMZql8Nr-G8Mj7KHDVdzq55UZ9kw6eR2I/s320/sec+mother.jpg" width="168" /></a></div>
எளிமையான காதாபாத்திரங்களும் தெளிவான திரைக்கதையும் அமையப்பெற்ற படங்கள் எதார்த்த பிரதிகளால அமைவதில் வியப்பில்லை. பிரேசில் இயக்குநர் அன்னா முலேர்ட்'ன் "Second Mother" அப்படியானதொரு படைப்பு.பணக்கார வீட்டில் பல ஆண்டுகளாக பணிப்பெண்ணாக இருக்கும் Val, நடுத்தர வயதை தாண்டியவள்.தனது நூறு சதவிகித உழைப்பை அர்ப்பணித்து வாழ்பவள்.தனிப்பட்ட வாழ்வின் துயரங்களையும்,பணி செய்யும் வீட்டில் சந்திக்க நேரிடும் சிற்சில அவமானங்களையும் தன் சிரிப்பின் மூலம் துடைத்தெறியும் வரம் பெற்றவள். நேர்மையும், தயக்கமும்,தனக்கான எல்லையை வகுத்து அதில் வெகு ஜாக்கிரதையாய் பயணிக்கும் Val,வெகு அழகான பாத்திரப்படைப்பு.அக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ரெஜினா இயல்பான நடிப்பாலும் உடல் மொழியாலும் திரைப்படத்தை முழுக்க தன் வசப்படுத்தியுள்ளார்.(ரெஜினாவின் "You Me Them" குறிப்பிட தகுந்த மற்றொரு பிரேசில் திரைப்படம்)<br />
<div>
<br />
<br />
Val பணிபுரியும் வீட்டின் சிறுவன் தன் தாயைக் காட்டிலும் இவளிடம் அதிக பிரியம் கொண்டிருக்கிறான். Val மடியில் படுத்துறங்கும் அவன், நவீன வாழ்வில் பணம்,புகழைத் தேடி ஓடும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கிடையே உருவாகிடும் வெற்றிடத்தின் குறியீடு.Val'ன் நாட்கள் அவளது மகளின் வருகைக்கு பிறகு பதற்றம் கொள்ள துவங்குகின்றன.சுதந்திர சிந்தனையும், வாழ்வில் சாதிக்க லட்சியங்களும் கொண்டிருக்கும் மகள்,தன் தாயைப் போலில்லாது அவ்வீட்டில் சுதந்திரமாய் நடமாடுகிறாள், எஜமானர்களிடம் கேள்விகள் கேட்கிறாள்,தன் தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்கிறாள். தலைமுறைகளின் இடைவெளி! மகளின் படிப்பறிவு குறித்த பெருமிதம் ஒருபுறமிருக்க அவ்வீட்டில் அவளது அதிகார போக்கை சகித்துக் கொள்ள இயலாத Val கொள்ளும் குழப்பங்கள் மிகுந்த நகைச்சுவையோடு சொல்லப்படுகிறது.<br />
<br />
மகளின் தேர்வு மதிப்பெண்களின் பொருட்டு Val உற்சாகம் கொள்ளும் காட்சிகள்,அதுவரை கால் வைத்திடாத நீச்சல் குளத்தில் இறங்கி நடக்கும் Val , உணர்வுப் போராட்டமாக மாறிடும் இறுதி நிமிடங்கள் என குறிப்பிடதக்க காட்சிகள் பல.மகளின் எதிர்காலத்திற்காய் Val எடுக்கும் முடிவு தாயன்பின் மேன்மையை சொல்லுவது.<br />
<br />
நவீன உலகில் உறவு சிக்கல்கள்,பிள்ளை வளர்ப்பு, எளியோருக்கென சமூகம் வரையறுத்திருக்கும் எல்லைகள்,பொருளாதாரத்தை முன்னிறுத்திய ஏற்ற தாழ்வு என யோசிக்கத் தூண்டும் பல்வேறு விஷயங்களை முடிந்தவரை தெளிவாக முன்வைக்கிறது.Val என்னும் பெண்ணை சுற்றி நிகழும் இக்கதை, முழுக்க முழுக்க கொண்டாட்ட மனநிலையோடு நம்மை வந்தடைவது ஆச்சர்யம்.செண்டிமெண்ட் காட்சிகளுக்கு வாய்ப்பிருந்தும், இயக்குநர் அதை முற்றிலும் நிராகரிப்பது சிறப்பு.<br />
<br />
விளிம்பு நிலை வாழ்வை வென்றெடுக்க கல்வி மட்டுமே ஆகச் சிறந்த ஆயுதம் என்னும் இதன் கருத்தாக்கம் நிச்சயம் பாராட்டப்படவேண்டியது.</div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-69432308921446423562016-11-27T05:34:00.002-08:002017-01-25T05:14:52.756-08:00சாதத் ஹசன் மண்டோவின் இரண்டு சிறுகதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrlLDtBSRqkdRCCPk5UI8Bt4w_87_VcxOF8o2lM4TqDimcU47dOUkxXqtcIO771Wrq_Kn16iTXWdN4Rx-i_trVrNg1-iFSlyJrxbiji4p0cHV1QIoasAGtUhKShXjTb2nmClx8Zu5cc-g/s1600/kalachuvadu.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrlLDtBSRqkdRCCPk5UI8Bt4w_87_VcxOF8o2lM4TqDimcU47dOUkxXqtcIO771Wrq_Kn16iTXWdN4Rx-i_trVrNg1-iFSlyJrxbiji4p0cHV1QIoasAGtUhKShXjTb2nmClx8Zu5cc-g/s200/kalachuvadu.jpeg" width="132" /></a></div>
மண்டோவின் எழுத்து இதற்கு முன் அறிமுகமில்லை.உரையாடல்களில் நண்பர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு சிலாகிக்கும் பெயர். காலச்சுவடு வெளியீடான "மௌனப் பனி ரகசியப் பனி " மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுதியில் மண்டோவின் இரண்டு சிறுகதைகள் வாசிக்கக் கிடைத்தன. மண்டோவின் மீது பெருமதிப்பை ஏற்படுத்திய கதைகள் இவை. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக் கால நிகழ்வுகளை மையப்படுத்திய இவ்விரண்டு கதைகளும் நிகழும் சூழலும்,இடமும் ஒன்றே. சுற்றி வளைத்து கொண்டிருக்காமல், இப்படியான போராட்ட சூழ்நிலையில் அப்பாவி குடும்பங்கள் சிதைவுறுவது இவ்விதமே என மாண்டோ சொல்லியிருக்கும் விதம் நம்மை அதிர்விற்குள்ளாக்குகிறது.<br />
<br />
"மீளல்",கண்ணெதிரே மனைவி கொல்லப்பட்டதை கண்டவன் மிஞ்சியிருக்கும் மகளை போராட்ட பூமியில் தொலைத்து பின் கண்டடையும் இக்கதை நம்பிக்கை துரோகத்தின் மோசமான முகத்தை குறித்தது. வன்புணர்வுக்கு ஆளாகும் அச்சிறு பெண் சந்தித்தவை எதுவும் நமக்கு நேரடியாய் சொல்லப்படவில்லை.இருப்பினும் அந்த அசாதாரண சூழ்நிலையின் பதற்றமும்,இருண்மையும் நம்மை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டு அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் வீரியத்தை உணரச்செய்கின்றன."உங்களின் மகளை எப்படியும் கண்டுபிடித்து தந்துவிடுவோம்.." என அந்த அப்பாவி தகப்பனுக்கு உறுதி அளித்த போராட்டகாரர்கள் அவனுக்கு இழைத்த துரோகம்,மலிந்த மனித மனங்களை அம்பலப்படுவதோடு பிரிவினையின் போது இத்தகைய கீழ் நிலைக்கு நம் மக்களை இட்டுச் சென்றது எதுவென்கிற கேள்வியையும் முன் வைக்கிறது.<br />
<br />
"கடமை",ஹிந்து-இஸ்லாமியர் இடையேயான போராட்டம் அதன் உச்சத்தை எட்டி நகரே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில்,மரணத் தருவாயிலிருக்கும் வயதான நீதிபதி தன் பிள்ளைகளோடு,தான் முன்பு உதவிய ஒரு குடும்பத்தின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் கதை.மத பூசல்கள் ஏதுமற்ற பிரிவினைக்கு முந்தைய நாட்களின் இனிமை இதில் நம் கற்பனைக்கு விடப்படுகிறது.சகோதரத்துவம் கொண்டு பழகி வந்த அம்மனிதர்கள் மதவெறி என்னும் சுழலில் சிக்கி அழிவை நோக்கி நகர்வதை பேசும் இக்கதையும் நம்பிக்கை துரோகத்தை குறித்ததே.<br />
<br />
மண்டோவின் கதைகள் பிரிவினை கால கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு காரணியாய் அமைந்தவற்றையும் ஆராய தூண்டுகின்றன.வன்முறை மிகுந்த இரக்கமற்ற இந்தியாவின் சரித்திர பக்கங்களை நேர்மையான முன்வைக்கும் அதே சமயம் நிலையற்ற மனித இயல்பின் மீதான நம் பார்வையை விரிவுபடுத்துபவை.கையறு நிலையின் காரணமாக சக மனிதர்களை அழிக்க துணிந்தவர்கள் குறித்த இக்கதைகளை எங்கோ எவருக்கோ நேர்த்தவை என ஒதுக்கிவிட முடியாது.இக்கதைகள் நமக்கானவை.நாம் யாரென்று நமக்கு எடுத்துரைப்பவை.<br />
<br />
<br />
நூல் : மௌனப் பனி ரகசியப் பனி <br />
தொகுப்பாசிரியர்: கண்ணன் <br />
பதிப்பகம் : காலச்சுவடு </div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-28164204577442742842016-11-09T06:18:00.000-08:002017-01-25T05:15:48.814-08:00எம்.டி.வாசுதேவன் நாயரின் "இறுதி யாத்திரை"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyz_3fZaARoRjCXyiOJZkFsPHADHHXX_Mmmmc_nEbigf7qr7NUnQDkB-qPLE6WjlVJ-GyceJwCBh44oEZxP3VSRBUUddgOMqmEvWYI2WsfDVetoSGHc9QxfZ7oX_oBnMDbsZgC8R54K4M/s1600/vamsi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyz_3fZaARoRjCXyiOJZkFsPHADHHXX_Mmmmc_nEbigf7qr7NUnQDkB-qPLE6WjlVJ-GyceJwCBh44oEZxP3VSRBUUddgOMqmEvWYI2WsfDVetoSGHc9QxfZ7oX_oBnMDbsZgC8R54K4M/s320/vamsi.jpg" width="206" /></a></div>
<br />ரகசியங்களோடு புதைந்து போகும் மனிதர்கள் தன் தலைமுறைக்கு விட்டுச் செல்வதென்னவோ நிம்மதியின்மையே<br /><br />ஒரு மரணத்தை அடியொற்றிய ஆர்ப்பாட்டமில்லாத கதை.இறந்த தந்தையின் எரியூட்டலுக்கு வரும் சகோதரர்களின் மனவோட்டங்கள் அவர்கள் வாயிலாகவே நமக்கு சொல்லப்படுகிறது.வாழ்வில் பெரிதாய் சந்தோஷங்களை கண்டிராத நடுத்தர குடும்பத்தின் புத்திரர்கள் அவர்கள். எவ்விதத்திலும் தந்தையின் மரணத்தால் பாதிக்கப்படாதவர்கள். உண்மையில்,நகர ஓட்டத்தின் பிடியில் சிக்கித் திணறும் அன்றாட வாழ்வில் இருந்து சற்று விலகி ஆசுவாசம் கொள்ள உதவுகிறது அந்த மரணம்.அக்கிராமத்தில், கடந்து போன பால்ய நாட்களின் சிற்சில நிகழ்வுகளும், கை சேராது போன காதல்களும் அந்த அசாதாரண சூழ்நிலையிலும் அவர்களின் நினைவுகளை ஆக்ரமித்துக் கொள்கின்றன.<br /><br /><br />யின் மீது அவர்களுக்கு பெரும் மதிப்போ,பயமோ, பிரியமோ ஏதும் இருப்பதாய் சொல்லப்படவில்லை. ஆண்பிள்ளைகளுக்கும் தந்தைகளுக்குமான உறவென்பது வெளிப்படைத்தன்மை அற்றது. பெண்களைப் போல ஏதேனும் ஒரு வழியில் அன்பை விடாது தெரிவித்துக் கொண்டே இருப்பது ஆண்களுக்கு வாய்க்காதது.குட்டேட்டனும்,ராஜனும், அப்புவும், உன்னியும் அவ்விதமே.சிலோனில் தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்ட தந்தையை குறித்து அவர்களுக்கு தீராத கேள்விகள் இருக்கின்றன.மனக் குமுறல்களை கூட வெளிக்காட்ட தயங்கும் அந்த சகோதரர்களின் குணம் அவர்களின் தாயிடம் இருந்து வந்ததாக இருக்க வேண்டும்.வேலை தேடி சிலோன் சென்று வெறும் கையோடு திரும்பும் ராஜனை எவ்வித சலனமும் இன்றி தூணில் சாய்ந்து நின்று வரவேற்கும் அப்பெண்மணி குறித்து கதையில் அதிகம் சொல்லப்படவில்லை.அதற்கான அவசியமும் இல்லை. பெண்கள் எதிர்பார்ப்புகள் ஏதுமற்று குடும்பத்தை காப்பவர்கள்.<br /><br />ராஜனின் சிலோன் பயணம்,நாவலில் குறிப்பிடத்தக்க பகுதி.கேள்விகள் கேட்கவும்,ஆதரவு அளிக்கவும் யாருமற்ற அந்த தேசத்தில் அவர் கழித்த சொற்ப நாட்களின் நிகழ்வுகள் பலவும் நெகிழ்ச்சியானவை. அங்கு அவன் சந்திக்கும் தந்தையின் உதவியாளர் குருப்பின் சோகம் அப்பிய சொந்தக் கதை நம்மை அசைத்துப் பார்ப்பது.அனுபவங்களே மனிதர்களை பக்குவப்படுத்துகின்றன என்று கேட்டு சலித்த வாசகம் மீண்டுமொருமுறை நினைவிற்கு வராமலில்லை குருப்பின் கதையை ராஜனோடு சேர்ந்து நாமும் கேட்கையில்.<br /><br />இறந்த வீட்டின் சடங்குகள்,அதன் பொருட்டு நிகழும் சங்கடங்கள்,சலித்துக் கொண்டாலும் காரியங்களை தலைமை ஏற்று செய்யும் முதியவர் ஒருவர் என காட்சிகளை கண் முன் நிறுத்துவதான விவரிப்பு.காலம் காலமாக பின்பற்றப்படும் சடங்குகளுக்கு இன்றைய தலைமுறையின் பதில் என்னவோ,"சீக்கிரம் முடிந்தால் ஊருக்கு கிளம்பலாம்.." என்பதாகவே இருக்கு.வாழ் நாள் முழுக்க தங்களை தனித்து பயணிக்கச் செய்த ஒரு பொறுப்பற்ற தந்தையின் இறுதி யாத்திரையில், அப்பிள்ளைகள் அவர் குறித்த இனிய நினைவுகளை மீட்டெடுக்க முயன்று தோற்றுப் போவதை சொல்லும் பாசாங்கில்லாத படைப்பு.<br /><br />இது எம்டிவியின் சொந்தக் கதை என்று ஷைலஜாவின் குறிப்பு கூறுகிறது. பாசாங்குகற்றதன்மைக்கு அதுவே காரணமாக இருக்கக் கூடும்.உரத்த குரல்களும், கசப்பான மனங்களும், பழிவாங்கும் மனிதர்கள் என யாருமற்றது எம்டிவி விஸ்தரித்துள்ள இவ்வுலகம். மெல்லிய மனம் கொண்டு, வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக் கொண்ட மனிதர்களின் எதார்த்த பதிவு. நாவலின் இந்த மேலான இயல்பை நம்மை முற்றிலும் உணர்ந்து கொள்ள செய்வதாக உள்ளது ஷைலஜாவின் சிறப்பான மொழிபெயர்ப்பு.<br /><br />நாவல் : இறுதி யாத்திரை <br />ஆசிரியர்: எம் டி வாசுதேவன் நாயர் <br />தமிழில்: கே.வி.ஷைலஜா <br />வெளியீடு : வம்சி பதிப்பகம் <br />விலை: ரூ.140/-</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-42928902514503867322016-09-24T05:44:00.003-07:002017-01-25T05:16:06.968-08:00ஒரு மிகை எதார்த்தவாதியின் சுயசரிதை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<br /></div>
"எது எப்படியாகினும் என் உறுதிப்பாடுகளில் சமரசம் செய்தோ,தனிப்பட்ட ஒழுக்க நெறியில் சமரசம் செய்தோ ஒரு காட்சி கூட எடுத்ததில்லை நான் "<br />
<div>
<br /></div>
<div>
- இயக்குநர் லூயிஸ் புனுவல்</div>
<div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZc54foZMXEWA7p7Xb1qcc8a8iNJe7tWol_HBi1bP_VbiUgSlwhENzpnL2PTyN7Vq7xpypbuAn9fM2yK7gvX5YhW1DzBc5W_APcsv0Mj21WLACp-uwRYdXW6aT0okxKU2awy-O8vqScc0/s1600/bunuel_luis06.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZc54foZMXEWA7p7Xb1qcc8a8iNJe7tWol_HBi1bP_VbiUgSlwhENzpnL2PTyN7Vq7xpypbuAn9fM2yK7gvX5YhW1DzBc5W_APcsv0Mj21WLACp-uwRYdXW6aT0okxKU2awy-O8vqScc0/s200/bunuel_luis06.jpg" width="181" /></a></div>
<br />
மிகை எதார்த்தவாதியாக தன்னை முன்னிறுத்தும் ஸ்பெயின் நாட்டு இயக்குநர் லூயிஸ் புனுவலின் சுயசரிதை "இறுதி சுவாசம்" வாசிக்க கிடைத்தது.முதன் முதலில் பார்த்த புனுவலின் Belle de jour ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது.எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் தெளிவான மணவாழ்க்கை கொண்ட பெண் திடீரென விபச்சார விடுதியின் காரியங்களில் ஈடுபட துணிவதும்,தொடர்ச்சியாய் அவளை துரத்தும் வினோத கனவுகளுமென அத்திரைப்படம் அதுவரை கண்டிராத திரை அனுபவமாக இருந்தது.அதன் தொடர்ச்சியாய் புனுவலின் திரைப்படங்களை தேடிப் பார்க்க துவங்கினேன்.படைப்பாளியின் சுதந்திரம் என்பது எல்லைகளற்று நீண்டு கொண்டே இருப்பதென்பதை மெய்ப்பிக்கும் படியான திரைப்படங்கள் புனுவலுடையவை.<br />
<br />
ஒரே கதாபாத்திரத்தை இரு வேறு நாயகிகள் செய்வது,ஒரு காட்சியின் முடிவில் அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத மற்றொரு கதை துவங்குவது,கண்ணுக்கு புலப்படாத மந்திர கோட்டினால் பீடிக்கப்பட்டு ஒரு அறையில் மாட்டிக் கொள்ளும் மனிதர்கள் என புனுவல் தேர்ந்தெடுக்கும் காட்சிப் பின்னணிகள் ஆச்சர்யம் கொள்ள வைப்பவை.<br />
<br />
மத நம்பிக்கைகள் மீதும்,அதிகாரவர்க்கத்தின் மீதும் தனது கறாரான விமர்சனத்தை தெளிவாக முன்வைக்கும் புனுவல் அதன் காரணமாக தொடர்ச்சியாய் சந்தித்த எதிர் விமர்சனங்களும்/மிரட்டல்களும் குறித்து இப்புத்தகத்தில் தனக்கே உரிய பகடியோடு விவரித்துள்ளார்.Un Chien Andalou,Viridiana,Los Olvidados முதலான படங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்தவை.Virdianaவில் இடம் பெரும் "Last Supper"யை பகடி செய்யும் ஒரு காட்சி பிரசித்தி பெற்றது.தேவகுமாரன் மீண்டும் பூமியில் ஜனித்தால், அவனது பரிசுத்தம் அர்த்தமற்று போகும்படியாகவே உலகம் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதை உரத்துச் சொல்லுவதாக இருக்கும் அவரது Nazarin.கடவுளின் இருப்பையும்,மிஷினரிகளின் சேவைகளையும் தொடர்ந்து விமர்சிக்கும் லூயிஸ்,இரக்கமற்ற இவ்வுலகிற்கு புனிதர்கள் தேவையில்லை என்கிறார்.<br />
<br />
ஸ்பெயின்-மெக்சிகோ-பாரிஸ் என தொழில் நிமித்தமாய் பயணப்பட்ட அவரது நினைவுப் பாதை முழுக்க நிறைந்திருப்பது நண்பர்களே. சார்லி சாப்ளின்,பிக்காஸோ உடனான புனுவலின் அனுபவ பகிரல்கள் வாசகனுக்கு நிச்சயம் சுவாரஸ்யம் கூட்டுவது.புனுவலின் கதைகளில் கனவுகளுக்கு முக்கிய இடமுண்டு.அவை அசாதாரணமானவை.ஒரு நாளில் 2 மணி நேரம் தவிர்த்து மீதமுள்ள 22 மணிநேரமும் கனவுகளில் லயித்திருப்பதையே விரும்புவேன் என்கிறார் புனுவல்.திரையில் அவர் இடம்பெறச் செய்த காட்சிகள் மிகக் குறைவே என எண்ணும்படியாக தன் வினோத கனவுகளை குறித்து மட்டுமே நான்கு பக்கங்களுக்கு மேலாக விவரிக்கிறார்.<br />
<br />
குடும்பம்,மனைவி,காதலிகள் குறித்து அதிகம் பகிரவில்லை மாறாக விதவிதமான மது வகைகள் குறித்து பக்கம்பக்கமாக விவரிக்கிறார். புனுவலின் படங்களின் விருந்துண்ணும் காட்சிகள் பிரதான இடம் பிடித்திருப்பதற்கு காரணம் புலப்படுகிறது.இயக்குநராய் கால் பாதிக்கும் முன்னர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதிர் கொண்ட சிரமங்களை குறித்தும்,மனதிற்கு ஒப்பாத ஹாலிவுட் படங்களில் பணியாற்றியது குறித்தும் புனுவல் சொல்பவை இத்தொழிலின் மீது அவர் கொண்டிருந்த தீரா காதலை பறைசாற்றுவது.உலக யுத்தம் உச்சத்தில் இருந்த சமயம் கொண்டிருந்த அரசியல் கொள்கைகள் காரணமாக எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள்,மறைந்து திரிந்த நாட்கள் என உலக யுத்தத்தின் நாட்களையும் பதிவு செய்துள்ளார்.வரலாறுகளால் நிரம்பிய கடந்த காலம் புனுவலுடையது.<br />
<br />
தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகப் பிடித்ததென்ன "Phantom Of Liberty"யை குறிப்பிடுகின்றார்.வாழ்வில் நிகழ்ந்த மறக்கவியலா சம்பவங்களை பிற்காலத்தில் தமது படத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இடம்பெறச் செய்ததாக குறிப்பிடுகின்றார்.ஒளிப்பதிவு அழகியலின் அதிக நாட்டமில்லை அது கதையின் போக்கிலிருந்து பார்வையாளனை நகர்த்தி விடும் எனக் கூறும் புனுவல், தனக்கு பிரியமான இயக்குநர்கள் என பெடரிக்கோ பெலினி,பிரிட்ஸ் லேங்,ஹிட்ச்காக்,விட்டோரியோ டிசிகா,பெர்க்மான் முதலானோரை குறிப்பிடுகின்றார்.<br />
<br />
மத நம்பிக்கைகள் மீதும்,அதிகாரவர்க்கத்தின் மீதும் தனது கறாரான விமர்சனத்தை முன்வைத்த புனுவலின் சுயசரிதை அவரை குறித்து மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. திரைப்படங்களின் வழி நாம் அறிந்திருந்த புனுவலுக்கும் சுயசரிதையில் காணும் புனுவலுக்கும் அதிக வித்தியாசமில்லை.தன் கருத்துக்களில் பிடிவாதமும் படைப்புகளில் சமரசமும் செய்து கொள்ளாத மாபெரும் மனிதனின் நாட்குறிப்புகள் இவை.<br />
<br />
Te amo Luis Bunuel!</div>
<div>
<br /></div>
<div>
புத்தகம்: இறுதி சுவாசம் </div>
<div>
ஆசிரியர்: லூயிஸ் புனுவல் </div>
<div>
தமிழில் சா.தேவதாஸ் </div>
<div>
வெளியீடு: வம்சி </div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-60757227974451661172016-09-05T06:44:00.004-07:002017-01-25T05:16:20.414-08:00ராணியுடன் ஒரு தேநீர் விருந்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZA-jmpx0AYaiUVwMZByBO4MsMG_W-iy49zDYpYtMPOyC6UurXG1ynOC0RS9BLVH-15adk_hD4gG-PLYl-YeeV9KR_wEfTW6D6ktuTx75yXP1lFpcP-7gouDrN4PQnl3oufat5Yp8eP0I/s1600/Welsh+stories.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZA-jmpx0AYaiUVwMZByBO4MsMG_W-iy49zDYpYtMPOyC6UurXG1ynOC0RS9BLVH-15adk_hD4gG-PLYl-YeeV9KR_wEfTW6D6ktuTx75yXP1lFpcP-7gouDrN4PQnl3oufat5Yp8eP0I/s320/Welsh+stories.JPG" width="208" /></a></div>
<br />காணா தேசங்களின் மனிதர்களை,அவர் தம் வாழ்க்கைச் சூழலை,கடந்து வந்த போராட்டங்களை,மேன்மை பொருந்திய காதலை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டல்லவா. உலக இலக்கியங்களின் ருசி என்பது எல்லைகள் கடந்து விரிந்து நிற்கும் விருட்சம் போன்றது. மொழியால்,பண்பாட்டால், பழக்க வழக்கங்களால்,தட்ப வெட்பத்தால் முற்றிலும் நம்மிடம் இருந்து வேறுபட்டு நிற்கும் தேசங்களின் கதைகள் தரும் நிறைவு படித்துணர வேண்டியது.<br /> <br /><br />அரவிந்தனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" தேர்ந்தெடுத்த வெல்ஷ் மொழிச் சிறுகதைகளின் இத்தொகுப்பு செறிவான படைப்பு.கதைகளின் தேர்வும் அவற்றின் கச்சித மொழிபெயர்ப்பும் சிறப்பு.தனித்தலையும் மனிதர்களின் கதைகள் இத்தொகுதியில் பிரதான இடம் பிடித்துக் கொண்டதாக தோன்றியது.அவர்களின் தனிமையின் காரணங்கள் வேறு பட்டவை.போரின் பொருட்டும், காதலின் பொருட்டும்,பிரியத்திற்கு உரியவர்களை இழந்ததின் பொருட்டும் நினைவுக்கு குழிக்குள் சிக்குண்டு வெளி வர வழியறியாது தவிப்பவர்கள் அவர்கள்.<br /><br />தொடர்ச்சியாக பிள்ளைகளை இழந்த தம்பதியினரின் கதையை சொல்லும் "தொலைந்து போன குழந்தைகள்" நெகிழ வைப்பது.மாலை மங்கிய பொழுதில் வழி தவறி காட்டினுள் செல்லும் நாயகியின் குழப்பம் மிகுந்த மனநிலை அவளது தினசரி நாட்களின் குறியீடு. "குழந்தைகள் உருவில் நாம் அழியாமல் இருக்கிறோம்" என்னும் வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளும் அவள் அப்பழுக்கற்ற தாயன்பின் அடையாளம்.மார்ட்டின் தாவிஸ்'ன் "தண்ணீர்" போரின் கோர முகத்தை ஒரு எளியவனின் ஒரு நாள் போராட்டத்தை கொண்டு அழுத்தமாக பதிவு செய்கிறது.தூரத்தில் விடாது ஒலித்துக் கொண்டிருக்கும் வெடிகுண்டு முழக்கத்திற்கு சற்றும் குறைந்ததல்ல பதுங்கு குழியில் அவன் காணும் காட்சிகள்.<br /><br />தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்ததும் தலைப்பு கதையுமான "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து",வாழ்ந்து கெட்ட ராணியின் நினைவுகள் வழி பயணித்து வரும்படியான கதை.யாருமற்ற அவ்வீதியின் ஆளரவமற்ற வீடுகளை சுட்டிக் காட்டியபடியே அவ்வீட்டு மனிதர்கள் சந்தித்த துயரங்களை பகிர்கிறார். உண்மையில் அக்கதைகள் யாவும் அச்சம் தருபவை. நினைத்து பாராத மோசமான முடிவை சந்தித்த அம்மனிதர்கள் குறித்து கதை சொல்லியின் நேர்த்தியுடன் எடுத்துரைக்கும் ராணி அவ்விடம் தனித்து இருப்பதின் காரணம் பெரும் சோகத்தில் ஆழ்த்துவது. மீண்டெழ முடியா நினைவுகள் மோசமானவை!<br /><br />"வாட்டிலன் ஒரு திருடன்" - கெட்டவர்கள் தண்டிக்கப்பட்டு இறுதியில் நல்லவர்களே வெற்றி பெறுவார்கள் என்று காலங்காலகமாக கண்டும்/படித்தும் வந்த நமக்கு எதார்த்தத்தை பகடி செய்யும் இச்சிறுகதை குட்டு வைக்கிறது.லோயிட் ஜோன்ஸ்'ன் "தபால் நிலைய சிகப்பு" கதை குறித்து என்ன சொல்ல.கதையின் ஓட்டத்தில் நம்மை மறந்து நாயகனோடு அவன் பார்க்கும் ரகசியம் பொதிந்த வீடுகளை நாமும் கண்காணிக்க துவங்குகிறோம். எதார்த்தத்தில் இது போன்ற நிகழ்வுகள் சாத்தியமே எனினும் அதை கதையாக்கிய இக்கதாசிரியரின் நுட்ப சிந்தனை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.<br /><br />"பனிப் புயல்" ,சிறுநகரொன்றில் தாந்தோன்றி இளைஞனான பெர்ரி உடல் நலிவுற்ற தன் தாயுடன் செலவிடும் ஒரு இரவின் நிகழ்வுகளை குறித்தது.ஒழுங்கீனங்களின் மொத்த உறைவிடமான பெர்ரி குடியின் மயக்கத்தில் தன் தாயை இரக்கமின்றி நிராகரிக்கும் காட்சிகள் அப்பனி இரவின் மூர்க்கத்திற்கு இணையானது.பெர்ரியின் மீது பரிதாபமும் கோபமும் ஒன்று சேர தோன்றி மறைவதை தவிர்க்க முடியாது.இருண்மையின் கதைகள் சகித்துக் கொள்ள முடியாதவை,பனிப் புயல் அதிலொன்று.<br /><br />தமிழில் வெளியாகி உள்ள உலக சிறுகதை தொகுதிகளில் நிச்சயம் "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" மிக முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.<br /><br />வெல்ஷ் மொழிச் சிறுகதைகள் <br />தமிழில்: அரவிந்தன் <br />வெளியீடு: காலச்சுவடு <br />விலை: 90 ரூபாய்<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-14115588001196139802016-09-02T08:36:00.002-07:002016-09-02T08:36:53.799-07:00Mustang <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxX54FnqHU-oj5dyaIKMZkDjEhf1yDZHBpaCYBQZK_Yv0Yt-YTOJr0M2QmGJf9fvTA9uNvcs828f69ccGNmAS6QlK77XFrj6LIUqNNGQKASN79atlLzm4kcKu9MLJ7uSZ2d19iJ7Ym2pY/s1600/mus.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxX54FnqHU-oj5dyaIKMZkDjEhf1yDZHBpaCYBQZK_Yv0Yt-YTOJr0M2QmGJf9fvTA9uNvcs828f69ccGNmAS6QlK77XFrj6LIUqNNGQKASN79atlLzm4kcKu9MLJ7uSZ2d19iJ7Ym2pY/s1600/mus.jpg" /></a><br />
<br />துருக்கி இயக்குநர் Deniz Gamze Ergüven'ன் #Mustang பெண் விடுதலையை முன்வைத்து ஐந்து சகோதரிகளின் கதையை பகிர்கின்றது. பெண்களுக்கான சுதந்திர வெளி முற்றிலும் ஒடுக்கப்பட்ட தேசத்தில் இருந்து வந்திருக்கும் துணிச்சல் மிகுந்த படைப்பிது.துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் பனி நாவலில் பேசப்படும் முக்காடு பெண்கள் குறித்த காரியங்கள் இப்படம் பார்க்கையில் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை. ஒரு கோணத்தில் பனி நாவலின் நவீன பிரதியாகவே இத்திரைப்படம் காட்சியளிக்கிறது<br /><br />நகரத்தில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட கிராமம் ஒன்றில் பாட்டியுடன் வசிக்கும் ஐந்து சகோதரிகள்.சிரிப்பும் ,கேலி விளையாட்டுமாய் அவர்கள் அறிமுகம் ஆகும் காட்சி அப்பெண்களின் விருப்ப வாழ்வின் ஒரு துளி.அதன் தொடர்ச்சியாய் நிகழ்பவை யாவும் சீழ் பிடித்த சமூகத்தின் கோர முகத்தை பறைசாற்றுபவை.ஒழுக்க நெறிகள் என பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட அற்ப விஷயங்களுக்காய் அவர்கள் முற்றிலுமாய் வீட்டினுள் சிறை வைக்கப் படுகிறார்கள்.அச்சிறையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரே தீர்வு திருமணம்.அது சிறை மாற்றம் மட்டுமே என்பதை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் செய்கின்றனர்.<br /><br />உடைகளில் துவங்கும் ஒடுக்குமுறை வீட்டு வேலைகளுக்கு அப்பெண்களை தயார்படுத்துவது, கன்னித் தன்மையை மருத்துவரிடம் சோதனை செய்வது,கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்துவது என நீள்கிறது.பாலியல் ரீதியிலான அடக்குமுறை இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.நீச்சல் உடையில் இல்லாத குளத்தை கற்பனை செய்துகொண்டு அச்சிறுமிகள் தரையில் விழுந்து நீந்தும் காட்சி அவர்களின் கையறு நிலையைச் சொல்ல போதுமானது. ஐந்து சகோதரிகளில் நம் கவனத்தை ஈர்ப்பது கடைசி பெண்ணாக நடித்துள்ள Günes Sensoy.துணிச்சல்காரியாக அவரது தீர்க்கமான நடிப்பு நம்மை ஆச்சர்யப்படுத்துவது.<br /><br />கற்பு நிலை சார்ந்த கோட்பாடுகள் பெண்களுக்கு மட்டுமே என்றான சமூகத்தில் உளவியல் ரீதியிலாக பாதிக்கப்படும் அப்பெண்கள் எவ்விதம் தங்களை அச்சூழலில் இருந்து விடுவித்துக் கொள்கின்றனர் என்பதை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். அவர்களுள் சமூகத்தை எதிர்த்து நிற்க துணிந்தவர்களே உண்மையான வெற்றியை பெறுகின்றனர்.நவீன உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்றும் சில அடக்குமுறை சமூகங்கள் தம் பெண்களை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது இப்படைப்பு.<br /><br />Guardian இதழுக்கு இயக்குனர் டெனீஸ் அளித்துள்ள விரிவான நேர்காணல் இத்திரைப்படம் குறித்த பல்வேறு புரிதல்களை தெளிவுபடுத்துகின்றது. தைரியமாக தன கருத்துக்களை பதிவு செய்ததற்கு பலனாக இனி துருக்கியில் தொடர்ந்து படங்கள் செய்ய முடியாத நிலை இயக்குநருக்கு. எப்படி பட்ட அடக்குவாத சமூகத்தில் இருந்து அவரது புரட்சிகர குரல் வெளிப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.<br /><br />ஆணாதிக்க சமூகத்தின் பிடியில் இருந்து வெளிவர புத்தி சாதுர்யமும் மிகுந்த துணிச்சலும் பெண்களுக்கு அவசியம் என்பதை எதார்த்த மொழியில் ரசிக்கும்படி சொல்லியுள்ள இப்பெண்ணிய படைப்பு எளிய கதை சொல்லல் வழி மாபெரும் பேருண்மையை உரத்துப் சொல்கிறது.</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7171956067729635782016-08-30T10:09:00.000-07:002016-08-30T10:09:14.034-07:00சத்யஜித் ரேயின் ஃபெலூடா கதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjATidrMJZUY7Q86sdVwZKNDOZexvAd3IPt8Ze2W9Kbu2n4bT-ZX9HhdALLziHBUP8T97oYiqy4L2zGfok92m0lhVew80w1ZgbWOcrCyGS8CugEvrUIY9Mi2tEgO6YhsaNT-LAVhYW_jWQ/s1600/satyajit_ray.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjATidrMJZUY7Q86sdVwZKNDOZexvAd3IPt8Ze2W9Kbu2n4bT-ZX9HhdALLziHBUP8T97oYiqy4L2zGfok92m0lhVew80w1ZgbWOcrCyGS8CugEvrUIY9Mi2tEgO6YhsaNT-LAVhYW_jWQ/s200/satyajit_ray.jpg" width="200" /></a><br />
சினிமாவும் இலக்கியமும் அபூர்வமாய் சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் சில உண்டு.கி ராவின் பிஞ்சுகள் நாவலுக்கும் ரேயின் பதேர் பாஞ்சாலிக்கு ஏதோ ஒரு நெருங்கிய தொடர்புண்டு என்றே எனக்கு தோன்றும்.சிறுவர்களின் பிரத்யேக கனவுகளுக்குள் நம்மை இட்டுச் செல்லும் இவ்விரு கதைகளுமே சிறார்களின் அகவுலகை வார்த்தைகளால்/காட்சிகளால் நமக்கு காட்டிச் செல்லும் இடங்கள் உணர்வுபூர்வமானவை.<br /><br />தம் கவித்துவ திரைப்படங்களின் வழி இந்தியாவின் பெயரை உலகளவில் உயர்த்திப் பிடித்த சத்யஜித்ரேயின் ஆச்சர்யமிக்க மற்றுமொரு முகம் ஃபெலூடா கதைகளை வாசிக்கையில் புலப்பட்டது.ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளின் பாதிப்பால் ரே உருவாக்கியுள்ள ஃபெலூடா கதைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நம் மனதை கவர்பவை.வயது வித்யாசமின்றி அனைவராலும் விரும்பப்படும் விதமான நேர்த்தி கொண்ட 20 தனித்த கதைகளின் தொகுப்பு.சிறுவர்களுக்கான தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பில் இக்கதைகள் மிக முக்கியமானவை.<br /><br /><br />துப்பறியும் நிபுணர் ஃபெலூடா,அவருக்கு உதவியாய் தம்பி தொப்ஷே,எழுத்தாளர் லால் மோகன் பாபு என மூவர் கூட்டணியின் சாகசங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை. பெலூடாவின் புத்தி சாதுர்யத்தை வியந்தபடியே ஒவ்வொரு கதையும் நாம் கடக்க வேண்டியுள்ளது. அறிவின் துணை கொண்டே அவிழ்க்கப்படும் மர்மங்களின் பின்னணி மிகையின்றி சித்தரிக்கப்படுவதோடு முடிந்த வரை எளிய நடையில் வாசகனுக்கு முன்வைக்கப்படுகின்றன.<br /><br />புராதான பொருட்கள் திருட்டு,புதையல் வேட்டை துவங்கி பெரும் மாபியாவாக செயல்படும் கொள்ளைக் கூட்டம் வரை ஃபெலூடா விசாரிக்கும் குற்றங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. சிறுவர்களுக்கான கதைகள் தான் என்றாலும் போகிற போக்கில் சமூகத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கவும் தவறவில்லை ரே.அதே போலவே இந்திய திரைப்படங்கள் குறித்த கேலிகளும். பம்பாயில் கதைகள் தயாரிக்கப் படுகின்றன,கொல்கத்தாவில் கதைகள் ரசிக்கப்படுகின்றன என்கிறார்.எத்தனை உண்மை!<br /><br />ஃபெலூடா கதைகள் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடப்பதாக உள்ளன.வாரணாசி, டார்ஜிலிங், லக்னோவ், ஜெய்சால்மர்,புவனேஸ்வர், பம்பாய்,சிலிகுரி என ஃபெலூடா பயணிக்கும் நகரங்கள் குறித்த விவரணைகள் குறிப்பிடத்தக்கவை.மேலும் அந்நகரங்களின் தட்ப வெட்பம்,உணவு பழக்கங்கள், சுற்றுலாத் தளங்கள் என முடிந்த வரை விரிவாகச் சொல்லி நம்மை அப்பயணத்தில் ஒருவராக உணர்ச்சி செய்கிறார் ரே.பரந்துப்பட்ட அவரது ஞானமும்,பயணங்கள் மீதான காதலும்,பழம் பொருட்கள் மீதான அக்கறையும் இக்கதைகளின் வழி நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.<br /><br />எப்போதும் தீவிர சிந்தனையில் பைப் புகைத்தபடி இருக்கும் ஃபெலூடாவை ரேயாகவே உருவகித்துக் கொண்டேன்.ரேயின் கம்பீரம் அத்தகையது தான் இப்புகைப்படத்தில் உள்ளது போல.<br /><br />மொத்தம் 30 புத்தகங்களின் தொகுப்பான இதில் 20 புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன. வீ.பா.கணேசனின் மொழிபெயர்ப்பு தங்கு தடையின்றி எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு. இந்தியாவின் ஷெர்லாக் என பெருமையோடு சொல்லிக் கொள்ளும்படியான ஃபெலூடா கதைகள் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அவசியம் பரிந்துரைக்கப்பட்ட வேண்டிய தொகுப்பு.<br /><br /><br /><b>புத்தக வரிசை: ஃபெலூடா கதைகள்<br />ஆசிரியர்: சத்யஜித் ரே<br />மொழிபெயர்ப்பு: வீ.பா.கணேசன் <br />வெளியீடு : பாரதி புத்தக நிலையம்</b></div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-82126174019125610222016-07-07T09:43:00.000-07:002016-07-07T09:43:51.228-07:00ஒதுக்கப்பட்டவைகளின் உலகம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<br />
<div class="MsoNormal">
<span style="background-color: rgba(255, 255, 255, 0);">இயக்குநர் ஆக்னஸ் வார்டாவின் "Gleaners & I" தேவையற்றவை என நாம் ஒதுக்கும் பொருட்களை சார்ந்து வாழும் மனிதர்கள் பற்றியது.விளை நிலங்களில் மிஞ்சிய காய்கறிகள்,வைன் தோட்டத்து திராட்சைகள் , ,வீட்டு உபயோக பொருட்கள்,எலெக்ட்ரானிக் சாதனங்கள்,விளையாட்டு பொம்மைகள் என ஒதுக்கப்படும் யாவையும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஆட்களை தேடிச் செல்லும் ஆக்னஸ் வார்டாவின் திரையாக்கம் இது.</span></div>
<div class="MsoNormal">
<span style="background-color: rgba(255, 255, 255, 0);"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="background-color: rgba(255, 255, 255, 0);">சிறு பிள்ளையின் உற்சாகத்தோடும் தன் 67வது வயதில் ஆக்னஸ் இந்த டாக்குமென்ட்ரியை சாத்தியப்படுத்தி இருப்பது ஆச்சர்யம்.அதனினும் பெரிய ஆச்சர்யம் அவர் நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் மனிதர்கள்.விவசாய நிலங்களில் அதீதம் என விட்டுச் சென்றவற்றை குடும்பம் குடும்பமாக எடுத்துச் செல்லும் ஆட்கள்..அதில் ஒரு குடும்பம் வைன் காடுகளில் உற்சாகமாக பாடிக் கொண்டே பழங்களை பறிப்பது ஓவியத்தின் அழகை மிஞ்சும் காட்சி.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="background-color: rgba(255, 255, 255, 0);">பிரெஞ்ச் தேசத்தின் கிராமபுறங்கள்,நகர தெருக்களில் உலாவும் ஆக்னஸின் கேமரா பின்தொடரும் நபர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு தனித்து வாழும் தேசாந்திரிகள்.வீதியில் கண்டெடுக்கும் பொருட்களைக் கொண்டு ஜீவிதத்தை செலுத்துபவர்கள்.தங்களின் காரியங்கள் குறித்து அவர்களுக்கு எந்தவித புகாரும் இல்லை.மாறாக குடும்பம்,அலுவல்,கடமைகள் என சராசரி மனிதர்களின் சிக்கல்கள் தங்களிடம் இல்லாதது குறித்த மகிழ்ச்சியே அதிகம் தெரிகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span style="background-color: rgba(255, 255, 255, 0);"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="background-color: rgba(255, 255, 255, 0);">ஆங்காங்கே ஆக்னஸ் தன்னைக் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.Gleaner ஆக மாறி முட்கள் இல்லாத கடிகாரம் ஒன்றையு வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஆக்னஸ் அதை குறித்து "This handless clock will help me to forget the passage of time, to paper it over, and forget my increasing age.." எனக் கூறுகிறார்.வார்டாவின் மனவெளியை நமக்கு விளக்கிச் செல்லும் காட்சியது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="background-color: rgba(255, 255, 255, 0);">ஒரு ஓவியத்தின் தூண்டுதலால், ஆக்னஸ் மேற்கொள்ளும் இப்பயணத்தில் நாம் அறிந்திராத அவ்வுலகம் குறித்த முக்கிய செய்தியொன்று இருக்கிறது.மார்க்கெட் வீதியின் காய்கறி மிச்சங்களை மட்டுமே உண்டு,பகுதி நேரத்தில் அகதிகளுக்கு இலவச கல்வி புகட்டும் உயிரியல் பேராசியர் அலைனின் வாழ்க்கைமுறை நமக்குச் சொல்லும் விஷயமும் அதுவே.அவர்கள் ஞானியைப் போல தீர்க்கமானவர்கள்!</span></div>
<div>
<span style="font-family: "vijaya" , sans-serif;"><br /></span></div>
</div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-57614270739363061952016-07-07T09:42:00.003-07:002016-07-07T09:44:53.040-07:00காற்று நம்மை ஏந்திச் செல்லும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
நேற்றைய பொழுது ஈரானிய சினிமாவின் பிதாமகன் அப்பாஸின் மரணச் செய்தியோடு துவங்கியது.கண்டு நெகிழ்ந்த அவரின் திரைப்படங்களை ஒவ்வொன்றாய் யோசித்து கொண்டிருக்கிறேன்.மேலோட்டமாக அணுக முடியாதவை அப்பாஸின் படைப்புகள்.ஆழ்ந்த வாழ்வியல் தத்துவங்களை பேசுபவை அவை.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVIsgH7W58t_vlJ5DYeFsqJsAHXi-IIS0s-QJL7yT3zVmaFYvR1QKaLRZk47k8OhnRXaprspzAhytn9KR7-XsHv5VDlLp0dEJDE0wYrxXnZvSTl6UR5LS1a8bsoLu_yn8Ok9eGAzrgHno/s1600/Abbas.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVIsgH7W58t_vlJ5DYeFsqJsAHXi-IIS0s-QJL7yT3zVmaFYvR1QKaLRZk47k8OhnRXaprspzAhytn9KR7-XsHv5VDlLp0dEJDE0wYrxXnZvSTl6UR5LS1a8bsoLu_yn8Ok9eGAzrgHno/s320/Abbas.jpg" /></a><br />
<br />
<br />
இவரது Taste Of Cherry(1997) தற்கொலை செய்யத் துணிந்தவனின் ஒரு நாள் பயணம் குறித்தது.மரணத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கும் இப்படத்தில் மரணம் முரண்பாடுகளின் இடைவெளி என்பதை தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் முன்வைத்திருப்பார்.<br />
<br />
சுயநலத்தினால் மனிதம் சிதைவுறுவதை கிராமத்து - நகரத்து மனிதர்களின் வேற்றுமை கொண்டு பேசும் Wind Will Carry Us திரைப்படம் நெடுகிலும் இரானிய கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பார்.கவித்துவம் நிறைந்து வழியும் காட்சிகளுக்கு குறைவில்லை. அப்பாஸின் ஆகச் சிறந்த படைப்பாக இத்திரைப்படம் கருதப்படுவதற்கு அதன் கருப்பொருளாக அடிப்படை மனிதநேயம் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.<br />
<br />
அப்பாஸ் கியோஸ்தமியின் "Ten(2002)" ஆரவாரமான டெக்ரான் நகர வீதிகளில் காரில் பயணிக்கும் நாயகி, உடன் பயணிப்பவர்களுடன் கொள்ளும் சுவாரஸ்யமான/தீவிரமான விவாதங்களின் தொகுப்பு. தன சகோதரி,ஒரு மணப்பெண்,பாலியல் தொழிலாளி என அவள் சந்திக்கும் யாவரிடமும் அவளுக்கு விவாதிக்க விஷயங்கள் இருக்கின்றன. எதிர்ப்பார்ப்பில்லாமல் எந்த உறவும் சாத்தியமில்லை என்கிறாள் பாலியல் தொழிலாளி.மற்ற பெண்களின் பேச்சில் இருந்து அது உண்மை என்றே நிறுவப்படுகிறது.நவீன வாழ்வின் பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு பெண்ணிய பார்வையில் முன்வைக்கிற வகையில் இப்படம் எனது விருப்பத்திற்குரியது.<br />
<br />
"நல்ல சினிமா என்பது நம் நம்பிக்கையை பெறுவது. மோசமான சினிமாவோ நம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று .." இது அப்பாஸின் புகழ் பெற்ற வாசகம். அத்தகையதொரு நம்பிக்கையை பெற்றவையே அவரது படைப்புகள்.<br />
<br />
"Definition of death is nothing but Closing your eyes on the beauty of the world.." என்கிற அப்பாஸின் கூற்றுப் படியே அவர் விடைபெறலை காண்கிறேன்!<br />
<br />
Adieu Master!!</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-74059140023781471612016-02-10T05:51:00.000-08:002017-01-25T05:16:51.298-08:00எருது - உலகச் சிறுகதைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM0OAlVYoVezn9HigQw_-xQ00J8KYlXrB7biKZnVEFW-cCr_0GT3WyM_6YqbWr_5NGAONUo349jV3u-pIaK7Jf_lKqTbqdMv8uodOdEbRg3ER8Q3hGxISYOZkoloNK10rWr9cOfRpqu5M/s1600/142218967.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM0OAlVYoVezn9HigQw_-xQ00J8KYlXrB7biKZnVEFW-cCr_0GT3WyM_6YqbWr_5NGAONUo349jV3u-pIaK7Jf_lKqTbqdMv8uodOdEbRg3ER8Q3hGxISYOZkoloNK10rWr9cOfRpqu5M/s1600/142218967.jpg" /></a></div>
<br />தேர்ந்தெடுத்த உலக சிறுகதைகளின் தொகுப்பு.தேர்ந்தெடுத்த என்பதை அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்னும் படியான அற்புத கதைகளின் தேர்வு. உலக நாடுகளின் தலை சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் வெகு நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன.<br /><br />யாவருக்கும் புதிரான முதியவன் முர்லாக்கின் வாழ்வின் மோசமானதொரு நாளை விவரிக்கும் முதல் கதையான அம்புரோஸ் பியர்ஸின் <b>"சட்டமிடப்பட்ட சாளரம்</b>" ஏற்படுத்தும் அதிர்வில் இருந்து வெளிவரும் முன்னர்,பல்வேறு மனநிலைக்கு இட்டுச் செல்லும் பின்வரும் கதைகள்.நாம் மறந்து போன கடந்த காலம் மீண்டும் நினைவிற்கு கொண்டு வரும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமானதாக இருப்பின் கவலையில்லை,ஆனால் பிரியத்திற்கு உரிய கார்ட்டருக்கு நிகழ்ந்ததென்னவோ துன்பகரமானது.கார்ட்டரின் கதையை சொல்லும் கிரகாம் கிரீனின் <b>"நிலப்படம்"</b> அசலான வாசிப்பனுபவம்.ரைஸ் யூக்ஸின் <b>"கல்லறை சாட்சியம்"</b> சிறுகதை லூயிஸ் புனுயலின் "The Phantom of Liberty" திரைப்படத்தை நினைவூட்டியது.ஒரு கதையின் முடிவே மற்றொரு புதிய கதையின் துவக்கமாய் நீளும் பாணி..எழுத்தில் எதிர்பார்க்காதது.இரானிய எழுத்தாளர் யூசுப் இதிரிஸின் <b>"சதையாலான வீடு"</b> இருண்மை சூழ்ந்த குடும்பத்தின் கதை.யாருமறியா ரகசியம் ஒன்றை உள்ளடக்கி எழுதப்பட்ட கவிதையைப் போல அவ்வீடும் அவ்வீட்டுப் பெண்களும்.<br /><br />ஒவ்வொரு கதையும் ஒரு விதத்தில் ஈர்க்கும் தன்மையில் இருப்பினும் தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு கதைகள் உண்டு. மொழிபெயர்ப்பின் சாயல் ஏதுமற்ற துல்லியமான நடை கொண்ட கதைகள் இவை.பிரபல அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசனின்<b> "வசன கவிதை" </b>அதிலொன்று.இனத்தால் வேறுபட்ட (ராபர்ட்டா - ட்வைலா) இரு தோழிகளின் கதை.சிறுவயதில் துவங்கும் அவர்களின் நட்பு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பிருந்தும் புதுப்பிக்க வழியற்று போகும் அவலத்தை சொல்லுவது.சிறுமிகளாய் இருந்த சமயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாத பலவும் வயது கூட கூட பெருஞ்சுவராய் அவர்களுக்கு நடுவில் எழுகிறது. சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நிழல் அவர்களை சூனியமாக துரத்துவதும்,அதன் பொருட்டு நிகழும் உரையாடல்களும்.. ராபர்ட்டாவின் மனவெளியை புரிந்து கொள்ள முயன்று தோற்கும் ட்வைலாவின் போராட்டங்கள் நம்மையும் அசைத்துப் பார்ப்பது.<br /><br />தலைப்புக் கதையான மோ யானின் <b>"எருது"</b> - மான அவமானங்களின் பொருட்டு பிள்ளையின் முன் சிறுமைப்பட்டும் பெருமைப்பட்டும் நிற்கும் தகப்பனின் கதை.மகன் கண்ணெதிரே,எதிரியின் அத்தனை அவமதிப்புகளையும் கண்டு கொள்ளாது அல்லது சகித்துக் கொள்ளும் தகப்பன், இறுதியில் வெடித்துக் குமுறும் இடம் தகப்பன் - பிள்ளை உறவின் புனிதத்தை உரத்துச் சொல்வது."Bicycle Tieves" படத்தின் இறுதிக் காட்சிக்கு ஒப்பான மனநிலையை தந்து செல்லும் படைப்பிது.சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளுள் ஆகச் சிறந்த கதையும் இது தான்.<br /><br />நூலை தொகுத்து மொழி பெயர்த்துள்ள நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு அன்பும் வாழ்த்துகளும்.<br /><br /><br />எருது <br />எதிர் வெளியீடு</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-84851525126289026042015-11-04T23:04:00.000-08:002015-11-04T23:11:08.151-08:00வானெங்கும் உனது பின்பம்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<b><i>"ஹாலிவுட் திரைப்படங்கள் பார்வையாளனை உணர்ச்சிவசப்பட வைப்பதை தவிர்த்து வேறொன்றும் செய்வதில்லை.என் திரைப்படங்களின் மூலம் நான் சாதிக்க விரும்புவதெல்லாம் அவ்வுணர்ச்சிகளை நிஜத்தில் பிரதிபலிக்கவும்,அதைக் குறித்து ஆராயவும் என் பார்வையாளனை தூண்டுவதே.."</i></b><br />
<br />
- <b>வெர்னர் பாஸ்பிண்டர் </b><br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGQMlU6bF44RsNH8hviwHjxASJzIeApFySYCegCrZKEZ6G0o2O4a3iLQYTJYYygujlM3KNooLBFE4KE6CuuHM4FDeFOhfizKCqgSsQNqF12DESEjNuAvsiy06s4eCXVFXet-cTRaUQh-k/s1600/fassbinder-rainer-werner.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGQMlU6bF44RsNH8hviwHjxASJzIeApFySYCegCrZKEZ6G0o2O4a3iLQYTJYYygujlM3KNooLBFE4KE6CuuHM4FDeFOhfizKCqgSsQNqF12DESEjNuAvsiy06s4eCXVFXet-cTRaUQh-k/s320/fassbinder-rainer-werner.jpg" /></a><br />
<br />
<br />
ஜெர்மானிய சினிமாவில் புதிய அலை உருவாக காரணமானவர்களில் மிக முக்கியமானவர் வெர்னர் பாஸ்பிண்டர்.பத்தாண்டு கால திரைவாழ்வில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ள வெர்னர், அவற்றின் தனித்த அடையாளத்திற்காய் உலகின் கவனத்தை பெற்றவர். நடிகர், கதாசிரியர்,ஒளிப்பதிவாளர், எடிட்டர் என பல்வேறு முகங்களைக் கொண்ட வெர்னர்,மிக குறுகிய காலத்திற்குள் சினிமாவில் சாதித்தது அத்துறை மீதான அவரது பேரன்பைச் சொல்லுவது.சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் வெர்னரின் படங்கள்,எதார்த்த விவரிப்புகளால் நம்மை அதிர்விற்குள்ளாக்குவதோடு தீவிர சிந்தனைக்கும் உட்படுத்துகின்றன.The Marriage of Maria Braun,Veronika Voss,Berlin Alexanderplatz முதலான வெர்னரின் குறிப்பிட தகுந்த படைப்புகளுள் பரந்த கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்ற திரைப்படம் Ali:Fear Eats The Soul.<br />
<br />
சமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் காதல்,உலகப்போரின் விளைவாக குணம் மாறிப்போன மனிதர்கள்,சமூகத்தை எதிர்கொள்ள முடியாத முதியவளின் உளவியல் என இத்திரைப்படம் தொட்டுச் செல்லும் விஷயங்கள் ஏராளம்.ஒரு மழை இரவில் மதுவிடுதியொன்றில் நுழையும் முதியவள் எம்மி அங்கு ஒலிக்கும் அரேபிய இசையை கேட்கவே தான் வந்ததாக கூறுகிறாள். கவித்துவ பயணமொன்றிற்கு தயார் செய்து கொள்ள தூண்டும் அந்த முதல் காட்சியே நம்மை படத்தோடு ஒன்றிட செய்கிறது.60 வயதான எம்மி அங்கு மொரோக்கோ தேசத்து இளைஞனான அலியை சந்திக்கிறாள்.நண்பர்களின் கிண்டல்களுக்கு மத்தியில் எம்மியோடு நடனமாடிடும் அலி அம்முதியவளோடு சிநேகம் கொள்கிறான்.<br />
<br />
<br />
ஒரு தாயின் அரவணைப்போடு அவனை அணுகிடும் எம்மி அவனது காதலை ஏற்றுக்கொள்ள தடுமாறுகிறாள்.தன் வயதை அவன் ஒரு பொருட்டாக கருதாதது அவளுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆச்சர்யமே.அவனோ அவள் மீது கொண்ட காதலில் உறுதியாய் இருக்கிறான்.ஒரு அரபு தேசத்து இளைஞனை தான் மணமுடிக்கப் போவதாய் மகளிடமும் மருமகனிடமும் எம்மி கூறிட,அவர்கள் அவளை நம்பாமல் சிரித்து கேலி செய்கின்றனர்.அவ்விருவரின் ஏளன பார்வை ஒட்டு மொத்த சமூகத்தின் பார்வையை குறிப்பது.மழை ஓய்ந்த ஒரு பகல் பொழுதில்,தங்களின் திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் அலியும் எம்மியும் தாங்கள் நினைத்ததை விட மிக மோசமான எதிர்வினையை சந்திக்க நேரிடுகிறது. எம்மியாக நடித்துள்ள மிரா,தன் இயல்பான நடிப்பால் நம்மை வசீகரிக்கிறார்.<br />
<br />
அவர்களுக்கிடையேயான வயது வித்தியாசம் ஒரு பேசுபொருள் எனில் மற்றொன்று அலி, அரபு தேசத்தைச் சேர்ந்தவன் என்பது.அரேபியர்கள் சுத்தமற்றவர்கள்,தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள்,பெண்களை ஏமாற்றுபவர்கள் என உலவும் வதந்திகளை நம்புகிற சமூகம் அவர்களுடையது. அக்கம்பக்கத்து வீட்டு பெண்கள்,உடன் பணிபுரியும் தோழிகள்,வருட கணக்காக நட்போடு இருந்த மருந்துக்கடைகாரர் என எம்மிக்கு வேண்டியவர்கள் அனைவரும் அலியை வெறுக்கின்றனர்.அதனால் எம்மியோடான தங்களின் நட்பை முறித்துக் கொள்கின்றனர்.அவளது பிள்ளைகளோ பெரும் கூச்சலிட்டு அவளோடு சண்டையிட்டு பிரிகின்றனர்.அலியை அவ்விடம் இருந்து வெளியேற்ற குடியிருப்புவாசிகள் நாடகங்கள் நிகழ்ந்துகின்றனர்.எம்மி ஒரு இளைஞனை மணந்துள்ளால் என்பதைக் காட்டிலும் ஒரு அரேபியனை மணந்துள்ளால் என்பதே அவர்களின் வன்மத்திற்கு காரணமாக இருக்கிறது.ஜெர்மானிய சமூகம் கொண்டிருந்த நிறவெறியின் தாக்கத்தை அலியின் நிலை கொண்டு நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7Qa3rOZb8zVFz7bYwmCA3Tl_XBxY6H2RujEq1URzexkh-4COYHUx2nuLWKdiQhZzMZW7AaU86vAAluv1nENaGtEIzsYyms9IkkncHtOdWDfceP4LgyYf3Yqnpi8h9hY4sHUn_OYKITfY/s1600/Ali+Fear+Eats+the+Soul.png"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7Qa3rOZb8zVFz7bYwmCA3Tl_XBxY6H2RujEq1URzexkh-4COYHUx2nuLWKdiQhZzMZW7AaU86vAAluv1nENaGtEIzsYyms9IkkncHtOdWDfceP4LgyYf3Yqnpi8h9hY4sHUn_OYKITfY/s400/Ali+Fear+Eats+the+Soul.png" /></a><br />
<br />
<br />
காதலின் மேன்மையை உணர்ந்த அவ்விருவரும் செய்வதறியாது சிக்கித் தவிக்கும் பொழுதொன்றில்,யாருமற்ற பூங்காவில் எம்மி அலியின் கைப்பற்றி அழுதிடும் காட்சி உருக்கமானது.அவனை புறக்கணிக்கும் சமூகத்தின் மீதான தன் கோவத்தை சொல்லி வீரிட்டு அழுதிடும் எம்மியை தேற்றுகிறான் அலி.அவளைப் போல எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவனில்லை அவன். அலியின் தீர்க்கமான குணாதிசியங்கள் அபூர்வமாய் காணக்கிடைப்பவை.தன்னை வெறுத்து ஒதுக்கும் மனிதர்களிடம் குறை காணாத அவன் முன்னே அச்சமுகமே சிறுமைப்பட்டு போவதாய் தோன்றுகிறது.அந்த அசாதாரண சூனியத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் சிறிது நாட்கள் வேறு ஊருக்கு பயணப்படுகின்றனர். <br />
<br />
ஊர் திரும்பும் அவர்களுக்கு இம்முறை பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.எம்மியை விட்டு விலகியவர்கள் அனைவரும் இப்பொழுது அவளிடம் வலிய வந்து நட்பு பாராட்டுகின்றனர். அவளிடம் உதவி கேட்கின்றனர். பிள்ளைகள் தேடி வருகின்றனர்.பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் கைகூடிய மகிழ்ச்சியில் எம்மி, அலியிடம் சற்று கடினமாக நடந்து கொள்கிறாள். ஜெர்மானியர்களின் பழக்கவழக்கங்களை அவன் கற்றுக் கொள்ள வலியுறுத்துகிறாள்.முதல் முறை அவன் தான் தனித்து விடப்பட்டதை உணர்கிறான்.எம்மியிடம் சொல்லாமல் அவன் தன் தோழியோடு சென்று தங்குகிறான்.அவர்கள் மீண்டும் இணைந்தார்களா, எம்மியினால் அவன் அன்பை மீண்டும் பெற முடிந்ததா என்பது தீராக் காதலின் அழகினையொத்த இறுதிக் காட்சிகள்.<br />
<br />
சமூகம் ஏற்றுக் கொள்ளாத அல்லது ஏற்றுக் கொள்ள தயங்கும் காரியங்களை எதார்த்தத்தை விட்டு கொஞ்சமும் விலகிடாமல் அழுத்தமாக பதிவு செய்துள்ள இத்திரைப்படம் ஒரு இனிய காதல் கதை என்பதைத் தாண்டி நமக்கு கடத்திடும் விஷயங்கள் உணர்வுப்பூர்வமானவை.Ali:Fear Eats The Soul பாஸ்பிண்டரின் உலகை அறிந்து கொள்ள உதவிடும் நிகரற்ற படைப்பு.இளவயதில் மரணித்து விட்ட வார்னர் தன் நிகரற்ற படைப்புகளின் வழி தொடர்ந்து பார்வையாளோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.போதைப் பொருளுக்கு அடிமை, ஓரின சேர்க்கையாளர் என தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கலகக்காரன் என பெயரெடுத்த வெர்னர் பாஸ்பிண்டர்,தன் திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யங்களின் முரண்.</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-52940429273911753522015-05-14T07:28:00.002-07:002015-11-04T23:06:34.257-08:00என் பெயர் சிகப்பு - ஓரான் பாமுக் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwLIL4PcL4vl8Z6EZ88zmbz0C_eBw2lmsMGYjq0YYwV3k3l7hrPUJtkX1latFP2gwmT6x2Eyvef3miKEFw_5o9HzhZXza1FhmFJohiedAKsUzSfcMX3ZfTgJvv4GRFOlNszGGQNl0r8IM/s1600/oran.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwLIL4PcL4vl8Z6EZ88zmbz0C_eBw2lmsMGYjq0YYwV3k3l7hrPUJtkX1latFP2gwmT6x2Eyvef3miKEFw_5o9HzhZXza1FhmFJohiedAKsUzSfcMX3ZfTgJvv4GRFOlNszGGQNl0r8IM/s320/oran.jpg" width="179" /></a><br />
<br />
<b><i>"நிறம் என்பது கண்ணின் தொடுகை,செவிடனுக்கு இசை,இருட்டிலிருந்து வெளிப்படும் ஒரு வார்த்தை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளால ஒவ்வொரு புத்தகத்திலும்,ஒவ்வொரு பொருளிலும் ஆன்மாக்கள் - காற்றின் முணுமுணுப்பை போல - கிசுகிசுப்பதை நான் கேட்டிருப்பதால், என் தொடுகை தேவதைகளின் தீண்டலை ஒத்திருக்கிறது என்று சொல்லுவேன். சிவப்பாக இருப்பது என் அதிர்ஷ்டம். நான் மூர்க்கமானவன். நான் வலிமையானவன். எவ்விடத்திலும் மனிதர்கள் என்னை கவனிப்பார்கள் எனத் தெரியும்.நான் கட்டுப்படுத்த முடியாதவன்.."</i></b><br />
<br />
ஒரு மாபெரும் கலாச்சாரத்தை,அதன் தொன்மச் சுவடுகளின் வழி ஊடுருவிச் சென்று காணும் வாய்ப்பை தன வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் ஓரான் பாமுக்.16ம் நூற்றாண்டு துருக்கியின் ஓட்டான் சாம்ராஜ்யத்தில் நடைபெறும் கதை.ஓவியக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த மூன்றாம் சுல்தான் மூராத்தின் ஆணையின் கீழ் சித்திர சுவடிகளை வரைய முற்பட்ட நுண்ணோவியர்களின் வாழ்வரசியல் குறித்து விரிவாய் பேசுகிறது. நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனுடன் நேரடியாக பேசி கதையை விளக்குகின்றன.இங்கு கதாபாத்திரங்கள் என்பது மனிதர்கள் மட்டும் அல்ல..ஓவியங்களும் பிரேதமும் கூட.<br />
<br />
எனிஷ்டே,ஓஸ்மான் ஆகிய ஓவியக் ஆசான்கள்,அவர்களின் சீடர்களான (புனைபெயர்களால் அழைக்கப்படும்)வசீகரன்,ஆலிவ்,நாரை, வண்ணத்துப்பூச்சி..மற்றும் எனிஷ்டேவின் மருமகன் கருப்பு,மகள் ஷெஹூரெ அவளது குழந்தைகள் ஓரான்,ஷெவ்கத்,ஷெஹூரெவின் கொழுந்தன் ஹசன் ஆகியோரைச் சுற்றி நகரும் கதையில் சுவாரஸ்யங்களுக்கு குறையில்லை. இவர்களுக்கு தொடர்பில்லாத யூதப் பெண்ணான வாயடி எஸ்தரின் மீது நம்மையும் அறியாமல் ஒரு நெருக்கம் பற்றிக் கொள்கிறது.அவள் கூவி விற்கும் பட்டாடைகள்,கைக்குட்டைகளின் வண்ணங்களைப் போல கலவையான குணம் கொண்ட பெண்ணவள்.பேரழகி என யாவராலும் வர்ணிக்கப்படும் ஷெஹூரெ காதலின் நிமித்தம் ஆண்களிடம் பகடையாட்டம் ஆடும் பெண்களின் குறியீடு.நிலையற்ற மனம் கொண்டு பேதலிக்கும் அவள்,நம்மை வசீகரிப்பது தம் பிள்ளைகள் இருவரோடு கொண்டிருக்கும் தூய அன்பினால் மட்டுமே.<br />
<br />
ஓவிய மெருகாளன் வசீகரன், கொலையாகும் காட்சியோடு துவங்கும் நாவல் அவனது கொலையாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்போடு 100 ஆண்டுகால பாரசீக ஓவியக் கலையின் வரலாறையும் பேசிச் செல்கிறது. நுண்ணோவியர்கள் மத்தியில் காலங் காலமாக புகைந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு,பொறாமை குணத்திற்கு,ஓவியனின் தனித்த பாணியின் மீதான விமர்சனங்களுக்கு,மதச் சம்பிரதாய<span style="background-color: white; color: #292f33; font-family: "arial" , sans-serif; line-height: 20px;">ங்</span>களுக்கு விடை தேடும் எண்ணற்ற உரையாடல்கள். விவாதங்களுகிடையே மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் நூல்கள் (பேரரசர்களின் நிகண்டு,ஹூஸ்ராவ் -ஷிரின் ..) மற்றும் ஓவியங்கள் வாசகனுக்கு சாவாலாக அமைபவை.குறிப்பாக காதலர்கள் ஹூஸ்ராவ் - ஷிரின் இருவரின் சந்திப்புக்கள் ஓவியமாக காட்சிப்படுத்தபட்டதை குறித்த விவரணைகள் அவ்வோவியங்களை தேடிப் பார்த்திடும் ஆவலை தூண்டுவது.<br />
<br />
ஓட்டோமான் சுல்தானின் கருவூலத்தில் ஓவியர் ஒஸ்மானும் கருப்பும் செலவழிக்கும் அவ்விரு நாட்களில் - உலகின் நான்கு புறங்களில் இருந்தும் வந்து சேர்ந்த மாபெரும் ஓவியங்களை அவர்கள் கண்டு வியந்து விவாதிக்கும் பொழுதுகள் அற்புதமானவை.அவ்வோயிய<span style="background-color: white; color: #292f33; font-family: "arial" , sans-serif; line-height: 20px;">ங்</span>களுக்கு மத்தியில் நாமே நடப்பதாய்,மிதப்பதாய் ஒரு மாயை.வசீகரனின் கொலையாளி- நாரை, ஆலிவ்,வண்ணத்துப்பூச்சி இவர்களுள் ஒருவன் தான் என தெளிவாகி தேடல் பயணம் தொடரும் வேளையிலும் கொலைகாரன் தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு நம்மோடு உரையாடுகிறான்.நாவலோடு நாம் இணக்கம் கொள்வதற்கு இவ்வகை கதை சொல்லலும் ஒரு காரணி.<br />
<br />
பிற தேச ஓவியங்களை நகல் எடுத்தல்,மததுவேஷ் ஓவியங்களை வரைதல் உள்ளிட்ட விஷயங்களே திரும்ப திரும்ப விவாதிக்கப்படுவது சிறிது அயர்ச்சியே.சாத்தானின் வாயிலாக மதவெறியர்களின் மற்றொரு பக்கத்தை சுட்டிக் காட்டுவது ஆசிரியரின் சார்பின்மையின் அடையாளம்.நூற்றாண்டுகள் கடந்து வந்த ஓவியக்கலையின் மகத்துவத்தை,ஓவியங்களை குறித்த விரிவான பார்வையை முன்வைக்கும் அதே வேளையில் ஒரு இலக்கிய வாசகனாய் இந்நாவல் குறித்து யோசித்தால்..ஜெமோவின் இவ்வரிகளே நினைவுக்கு வருகின்றன.<br />
<br />
<i><b>"என் பெயர் சிவப்பு’-ஐ நாம் துருக்கியை அறிந்துகொள்ள, ஐரோப்பியப் பண்பாடு கீழைப்பண்பாட்டுடன் கலந்த ஒரு தருணத்தை அறிந்துகொள்ள, கீழைக்கலைமனம் மேலைக்கலையை சந்திக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள வாசிக்கலாம்.ஆனால் பேரிலக்கியங்களை நாம் நம்மைப்பற்றி அறிந்துகொள்ளவே வாசிக்கிறோம்.." </b></i><br />
<i><b>- ஜெயமோகன் </b></i><br />
<br />
சில எதிர்பார்ப்புகள் பொய்த்திருந்தாலும் நோபல் பரிசு வென்ற இம்மாபெரும் எழுத்தாளனின் பிற படைப்புகளை தேடி வாசிக்கும் ஆவலை தந்து விடுகின்றது 'என் பெயர் சிகப்பு'.ஓரான் பாமுக்கின் வர்ணனனையில் இஸ்தான்புல் நகரின் அழகை வாசிக்கும் விருப்பத்தை வித்திட்டுள்ளது இந்நாவல்.<br />
<br />
வெளியீடு - காலச்சுவடு <br />
தமிழில் - ஜி.குப்புசாமி</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-56864891649287531702014-11-14T10:39:00.001-08:002015-11-04T23:06:54.735-08:00சுமித்ரா குறித்து..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் சேமிப்பிற்காக ஜெமோவின் தளத்தில் யாழிசையில் வெளியான பதிவைக் குறித்த இக்கட்டுரையை இங்கு பதிவு செய்கிறேன்..<br />
<br />
http://www.jeyamohan.in/?p=54108</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-28216948232141774472014-11-06T09:32:00.000-08:002014-11-06T09:32:19.586-08:00Fandry - யுகமாற்றதிற்கான கதை (மராத்தி)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />கீழ்க்கண்ட சுகிர்தராணியின் கவிதையை முதல் முறை வாசித்த பொழுது எனக்கு கன்னட எழுத்தாளர் மொகள்ளி கணேஷின் 'காளி' சிறுகதையின் ஞாபகம் வந்தது.சுகிர்தாவின் கவிதை, இளவயதில் தலித் அடையாளத்தினால் அனுபவித்த மன வேதனையை உள்ளபடியே நமக்குச் சொல்வது.<br /><br />கிட்டத்தட்ட இதே போன்றதொரு தலித் சிறுவனின் மனநிலையை படம் பிடித்து காட்டும் கதை கணேஷனுடையது.இவ்விரு இலக்கியங்களும் பகிரும் யுகம் யுகமாக தீராத ரணத்தை நாகராஜ் மஞ்சுளேவின் FANDRY திரைப்படமும் பேசுகிறது.<br /><br />"செத்துப்போன மாட்டை<br />தோலுரிக்கும் போது<br />காகம் விரட்டுவேன்<br />வெகு நேரம் நின்று வாங்கிய<br />ஊர் சோற்றைத்தின்று விட்டு<br />சுடு சோறென பெருமை பேசுவேன்<br />தப்பட்டை மாட்டிய அப்பா<br />தெருவில் எதிர்ப்படும்போது<br />முகம் முறைத்து கடந்து விடுவேன்<br />அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்<br />சொல்ல முடியாமல்<br />வாத்தியாரிடம் அடிவாங்குவேன்<br />தோழிகளற்ற<br />பின் வரிசயிலமர்ந்து<br />தெரியாமல் அழுவேன்<br />இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்<br />பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்<br />பறச்சி என்று" <br />-சுகிர்தராணி<br /><br /><br />விடலை பருவத்திற்கே உரிய ஆசைகளும்,கனவுகளும் கொண்ட தலித் இளைஞன், தீண்டாமைக் கொடுமையால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மனவேதனை அடைவதை முடிந்த வரை எதார்த்த மொழியில் பேசுகிறது இப்படம்.நாயகன் ஜாப்யா பன்றி மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன்.பள்ளி மாணவன்,பகுதி நேரமாக சைக்கிளில் சென்று ஐஸ் விற்கிறான்.ஏழ்மையின் கோர முகம் ஒரு புறமென்றால் அதை விழுங்கிடும் தாழ்ந்த ஜாதி என்கிற வேற்றுமை மறுபுறம்.அவ்வூரின் பிற இளைஞர்களைப் போல அவனால் இயல்பாக நடமாட முடியவில்லை.ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஜாதி குறுக்கே புகுந்து அவனை கூனி குறுகிப் போகச் செய்கிறது.<br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEu_cft-VCKsKbUyn1n2b43F707k0PY_tyYqPnsCf0jPhy256YvwQvEV_96IYeHWBOLXUP5IZazDUNwybPUcelxcOK77KnRHPDx5yAgvRDiRmZEd7FBOlBCNIYhcwlYaSEJeD5wKm7lMQ/s1600/Blog-Article.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEu_cft-VCKsKbUyn1n2b43F707k0PY_tyYqPnsCf0jPhy256YvwQvEV_96IYeHWBOLXUP5IZazDUNwybPUcelxcOK77KnRHPDx5yAgvRDiRmZEd7FBOlBCNIYhcwlYaSEJeD5wKm7lMQ/s1600/Blog-Article.jpg" /></a><br /><br /><br /><br />ஆதிக்க ஜாதி இளைஞர்களின் கேலி,கிண்டல்,மிரட்டல்களுக்கு மத்தியில் பயந்தே அவன் தன காரியங்களை தொடர வேண்டியிருக்கு.பள்ளியில் மட்டுமே அவன் சற்று ஆசுவாசம் கொள்கிறான்.தீண்டாமை வேர் விடாத இடம் அது மட்டுமே.சாணக்யாவாக நடித்துள்ள இயக்குனர் நாக்ராஜின் கதாபாத்திரம் முக்கியமானது.சாணக்யாவின் சைக்கிள் கடையில் ஜாதி வேற்றுமைகளுக்கு இடமில்லை.மேலும் அவன் ஜாப்யாவிடம் மிகுந்த அன்போடு பழகுகிறான்.தயக்கங்கள் ஏதுமில்லாமல ஜாப்யா கால் வைக்கும் இடம் சாணக்யாவின் கடை மட்டுமே.<br /><br />ஜாப்யாவிற்கு உடன் படிக்கும் ஷாலுவின் மீதொரு காதல் அல்லது அந்த வயதிற்கே உரிய ஈர்ப்பு.முடிந்தவரை தன அடையாளங்களை அவள் முன்னே மறைத்துக் கொள்ளவே விரும்புகிறான்.அவ்வூரின் திருவிழா கொண்டாட்ட காட்சிகள்,நிதர்சனத்தை விளக்கிட போதுமானவை.புது ஆடை அணிந்து நண்பனோடு உற்சாகமாக வளம் வரும் ஜாப்யா,சாமி ஊர்வலத்தில் மேள தாளத்திற்கு சாணக்யாவோடு சேர்ந்து துள்ளாட்டம் போடுகிறான். சாணக்யாவின் தோள் மீதமர்ந்து உற்சாக கொண்டாட்டத்தோடு தூரத்தில் நிற்கும் ஷாலுவை இவன் பெருமிதத்தோடு பார்க்கும் நிமிடங்கள் மிகச் சில நொடிகளில் கரைந்து போவது ..வேதனை.படத்தில் வரும் அக்காட்சியை நேரில் கண்ட வகையில் சகித்துக் கொள்ள இயலாதஅவ்வலியின் தீவிரம் புரிந்தது.<br /><br /><br />திருவிழா காட்சியைப் போலவே இறுதிக் காட்சியும் நீளமானது,மேலும் அர்த்தம் மிகுந்தது. இதுவரையிலான அவனது வேதனைகள் அத்தனைக்கும் சிகரம் வைத்தது போலொரு நிகழ்வு.உண்மையில் ஜாப்யாவும்,அவன் குடும்பமும் அக்காட்சியில் துரத்துவது பன்றிகளை அல்ல,தலைமுறை தலைமுறையாய் அவர்களை அடக்கி வைத்திருக்கும் ஆதிக்க ஜாதியின் அசிங்கங்களை.இறுதிக் காட்சியில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த அம்பேத்கர் உட்பட பல தலைவர்களின் புகைப்படங்களை கடந்து ஜாப்யாவின் குடும்பம் செல்கிறது.பேருண்மையை உரத்துச் சொல்லும் காட்சியது.<div>
<br /></div>
<div>
ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் நமக்கொரு விஷயம் சொல்லுகிறார்.அது ஏழை குடும்பத்தின் கல்யாண ஏற்பாடுகள்,வசதியற்ற சிறுவர்களின் பொழுதுபோக்குகள்,சின்ன சின்ன காரியங்களின் மீதான அவர்களின் ஆச்சர்யங்கள் என நீள்கிறது.இந்தத் திரைப்படம் குறியீடுகள் அதிகமின்றி பட்டவர்த்தனமாக ஜாதிய ஒடுக்குமுறையை பேசுகிறது.</div>
<div>
<br /></div>
<div>
சிறுவர் துவங்கி பெரியவர் வரை அவர்கள் அனுபவிக்கும் அவமானம் எவருக்கும் நிகழக் கூடாதது.ஒடுக்கப்படும் சமூகத்திற்கான எழுச்சிக் குரல் இத்திரைக்காவியம். உண்மையில் இப்படம் அடுத்த தலைமுறையினருக்கானது.இந்த அசாதாரணமான திரைப்படத்தை சாத்தியமாக்கிய இயக்குனர் நாக்ராஜின் கரங்களை பற்றி வாழ்த்து சொல்லிட விருப்பம்...!<br /><br />சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்ல,அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள, நம்மை பக்குவபடுத்திக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் உண்டு என்பதற்கு Fandry ஆகச் சிறந்த உதாரணம்.முடிந்தவரை நண்பர்களுக்கு இந்தப் படத்தை பரிந்துரையுங்கள்.இப்படத்தை புரிந்து கொள்ள மொழி ஒரு தடையில்லை.<br /><br />{மொகள்ளி கணேஷின் சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு : பாறைகள் -இந்தியச் சிறுகதைகள் (சந்தியா வெளியீடு) }<br /></div>
</div>
<!-- Blogger automated replacement: "https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-w2kPf35DCHM%2FVFutCibzQQI%2FAAAAAAAAB6g%2FZ-2X7PtmTv4%2Fs1600%2FBlog-Article.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*" with "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEu_cft-VCKsKbUyn1n2b43F707k0PY_tyYqPnsCf0jPhy256YvwQvEV_96IYeHWBOLXUP5IZazDUNwybPUcelxcOK77KnRHPDx5yAgvRDiRmZEd7FBOlBCNIYhcwlYaSEJeD5wKm7lMQ/s1600/Blog-Article.jpg" -->லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-43123654854223325132014-08-11T06:15:00.001-07:002014-08-16T02:10:12.612-07:00மிலேச்சன்களின் உலகம்...Uzak (துருக்கி) <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglRiH4qisyJQbTWdB8-W_-3pI8n4V0JkV-XC8zpjuOVT3YV4OZ1v9e1Tyr5RT2fT9q1t6zZGLKCG3VxNEm3wyQ4xYuKG2sMmH1cbwDSLCMZ2nIRDPyWhDkuFOPEKalThcryeL7Qu5b5Ww/s1600/images.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglRiH4qisyJQbTWdB8-W_-3pI8n4V0JkV-XC8zpjuOVT3YV4OZ1v9e1Tyr5RT2fT9q1t6zZGLKCG3VxNEm3wyQ4xYuKG2sMmH1cbwDSLCMZ2nIRDPyWhDkuFOPEKalThcryeL7Qu5b5Ww/s1600/images.jpg" /></a></div>
<br />
எதார்த்தத்தை மீறிய ஆச்சர்யங்கள் துருக்கி இயக்குனர் சிலானின் (Nuril Bilge Ceylan) படைப்புகள். அதிகமாக இவர் படங்களை பார்க்கப் பார்க்க இன்னும் அதிகமாக சினிமாவை நேசிக்கத் துவங்குகிறேன்.ஆண் மன சலனங்களை இவரைப் போல வேர் வரை ஊடுருவிச் சென்று கதை சொன்னவர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை.சிலானின் கதையுலகத்தில் பெண்களும் உண்டு. ஆனால் பிரதானமாக முன்னிறுத்தப்படுவதோ ஆண்களே. துரோகம் என்ற ஒற்றைச் சொல்லை சுற்றி கட்டமைக்கப்படுகின்றன சிலானின் கதையுலகம். அதன் நீட்சியாய் தொடரும் தடுமாற்றங்கள்,குற்ற உணர்வுகள், மன்னிப்புகள் இவற்றையும் காண்பிக்க தவறுவதில்லை இவர்.<br />
<br />
Climates,Once Up On A Time In Anatolia வை தொடர்ந்து பார்த்த இவரின் Distant(Uza) மற்றுமொரு காவியம்.<br />
<br />
மஹ்மத் - நடுத்தர வயதினன், படித்தவன்,ரசனைக்காரன், விவாகரத்து பெற்றவன்,புகைப்பட கலைஞன்,தனிமை விரும்பி,நாகரீகம் பேணுபவன்,பணக்காரன்,ஸ்த்ரி லோலன்,பந்த பாசங்கள் அற்றவன்;யூசூப் - இளைஞன்,ஏழை,கிராமத்தான்,வேலை தேடுபவன், பொறுமைசாலி, உறவுகளை நேசிப்பவன். இவ்விருவரும் ஒரே வீட்டில் தங்க நேரிடும் நாட்களின் விவரிப்புகள் தான் Distant(Uzak).<br />
<br />
இணக்கமாய் தொடரும் நாட்கள்..மெல்ல மெல்ல மஹமெத்தின் அழுக்குக்கான மனநிலையையும்,பாவப்பட்ட யூசுப்பின் பரிதாப நிலையையும் நமக்கு விளக்கிச் செல்பவை.படித்த படிப்பும்,கொண்ட ரசனையும் மெஹ்மத் அந்த ஏழை இளைஞன் மீது காட்டும் வன்மத்தில் அர்த்தமற்று போகின்றன. பெருவாழ்விற்கு சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் குறைந்த பட்ச சிநேகம் போதும் என்பதை உரத்துச் சொல்லும் கதை.இவ்விருவரும் தனிமையை செலவிடும் காட்சிகள் முக்கியமானவை.வேலை ஏதும் கிடைக்காத சூழலில்,பனி போர்த்திய சாலையில் மகிழ்ச்சியாய் சுற்றித் திரியும் ஜோடிகளை யூசூப் பார்த்துக் கொண்டு நிற்பதும்,செய்வதறியாமல் எதிர்படும் பெண்ணொருத்தியை காரணமேயில்லாமல் துரத்துவதும்..பரிதாபம்!<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwZ5immUiMPggwmhVLC4QXYTMzFsQMpL4NTB-cnNV2LyHkPFXhsESYM_Z9xhTz9eITd9dAHrjZkFo4D62leK1DVDFFH-7Z3XxlxnqqBvWkAKms4XSVMxSoTz3gY5nvKfIEWnKDzEO1lkQ/s1600/nuri-bilge-ceylan.jpg"><img border="0" height="159" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwZ5immUiMPggwmhVLC4QXYTMzFsQMpL4NTB-cnNV2LyHkPFXhsESYM_Z9xhTz9eITd9dAHrjZkFo4D62leK1DVDFFH-7Z3XxlxnqqBvWkAKms4XSVMxSoTz3gY5nvKfIEWnKDzEO1lkQ/s1600/nuri-bilge-ceylan.jpg" width="320" /></a><br />
<br />
<br />
மஹ்மூதும்,யூசுப்பும் அனடோலியா பகுதிக்கு புகைப்படம் எடுக்க செல்லும் காட்சிகள் அவர்கள் இருவரும் பயணிக்கும் திசைகளை நமக்கு அறிவிப்பவை.குறைந்த பட்சம் யூசுபிற்கு அவன் தாய் குறித்த அக்கறை உண்டு.அவளுக்காக அவன் சிரமங்கள் ஏற்க துணிகிறான்.உறவுகளின் பிடிமானம் ஏதுமில்லாமல் ரசனை சார்த்து இயங்கும் மஹ்மத்,யூசுப்பின் முன் தாழ்ந்து போகிறான்.பனிக்காலத்தில் தொடங்கும் கதை வசந்த காலத்தில் முடிவுறுகிறது.பனி உருகி ஆவியாகிப் போனது போல மஹ்மூத்தின் சுற்றி இருந்தவர்கள் விலகிப் போகிறார்கள்.அவன் அது குறித்து அலட்டிக் கொள்பவனும் இல்லை.அவன் அப்படித்தான்.<br />
<br />
சிலான் மாபெரும் புகைப்படக்காரர் என்பது காட்சிக்கு காட்சி வெளிப்படும் அழகில் தெரிகிறது.இஸ்தான்புல் நகரை நேரில் சென்று பார்த்துவிட ஆசையை தூண்டும் ஒளிப்பதிவு.ரசனைகளில் மூழ்கித் திளைக்கும் மனிதர்கள் உண்மையில் மனிதர்களை விட்டு விலகியே இருக்கிறார்கள். அவர்களின் உலகத்தில் புதியவர்களின் வரவும்,கடந்த காலத்தின் நினைவுகளும் தொந்தரவிற்குரியவை.மஹ்மூத்தின் உலகத்தைப் போல...</div>
<!-- Blogger automated replacement: "https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-Dy1Meh5hNZY%2FU-jAsHTqU7I%2FAAAAAAAAB5w%2Fw7-LSapTXjI%2Fs1600%2Fnuri-bilge-ceylan.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*" with "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwZ5immUiMPggwmhVLC4QXYTMzFsQMpL4NTB-cnNV2LyHkPFXhsESYM_Z9xhTz9eITd9dAHrjZkFo4D62leK1DVDFFH-7Z3XxlxnqqBvWkAKms4XSVMxSoTz3gY5nvKfIEWnKDzEO1lkQ/s1600/nuri-bilge-ceylan.jpg" -->லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-22077929914435283392014-08-03T21:07:00.002-07:002014-08-16T02:10:32.842-07:00ரேமண்ட் கார்வர் சிறுகதைகள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அமெரிக்க சிறுகதையாசிரியர் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், உறவுகளுக்குள் நிகழும் அன்றாட காட்சிகளின் எதார்த்த விவரிப்புகள். பெரும்பாலான கதைகள் கணவன் - மனைவிக்கிடையேயான நிகழ்வுகளின் பதிவு.தினசரி வாழ்வில் சிறியதும் பெரியதுமாய் எத்தனை விதமான சிக்கல்கள்.நாம் நினைத்தே பாராத விஷயங்களை எடுத்தாளுகின்றன ரேமன்ட்டின் கதைகள்.இவர் கதையுலகத்து பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள்,பதற்றம் நிறைந்தவர்கள்,நினைத்தால் உருகி அழுதிட கூடியவர்கள்.ஆண்களோ பொழுதுபோக்குகளில் விருப்பம் உள்ளவர்கள், குடிகாரர்கள்,குழப்பம் நிறைந்தவர்கள்.இருவேறு திசையில் பயணிக்கும் இவர்கள் இணைந்த வாழ்வு உண்மையில் சுவாரஸ்யமானதே. காதலிப்பவர்கள்,திருமணம் ஆனவர்கள்,விவாகரத்து பெற்றவர்கள்,பெறப் போகிறவர்கள் என....<br />
<div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR1h9oa1oabV5Xr47aLNddhL8U5g4hgXbY8wPNhxrd4oU9kz31vBCtoFkgXdnNwoqJsCyH7XV6etT95ka0VmEn2MP3b7oNahuyvy_f75OkkdWhNjcW1Wl2fr28T9iKscnWZALkD6alYgk/s1600/download.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR1h9oa1oabV5Xr47aLNddhL8U5g4hgXbY8wPNhxrd4oU9kz31vBCtoFkgXdnNwoqJsCyH7XV6etT95ka0VmEn2MP3b7oNahuyvy_f75OkkdWhNjcW1Wl2fr28T9iKscnWZALkD6alYgk/s1600/download.jpg" /></a>"ஒரு சிறிய நல்ல காரியம்" - இத்தொகுப்பில் மிகப் பிடித்த கதை.ஒரு எதிர்பாராத விபத்தும் அதன் தொடர்ச்சியான மருத்துவமனை நாட்களும் கணவன் மனைவியிடையே உண்டு பண்ணும் உணர்வுகளைத் தாண்டிய நெருக்கம் குறித்தது.நோயுற்றவர் குணமாகும் வரையிலான மருத்துவமனை தங்கலும்,அங்கு செலவிடப்படும் இரவுகளும் அமானுஷ்யம் நிறைந்தவை. தேறி வருவது மகனாக இருக்கும் பட்சத்தில்,அந்த நிலை இன்னும் கொடுமை. நம்பிக்கை வேர் விட்டு படர்ந்திருக்கும் இடம் மருத்துவமனைகள். அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் வெளிப்படும் உண்மை இது.காட்சிகளின் விவரிப்பில் அவர்களின் முக பாவங்களை கூட கற்பனை செய்யமுடிகிறது.மகனை குறித்த சோகத்தில் உள்ள இவர்களுக்கும் ஒரு பேக்கரி கடைக்காரனுக்குமான உரையாடல் சொல்லும்..வாழ்க்கை தத்துவத்தை.<br />
<br />
<br />
"எங்கிருந்து அழைக்கிறேன் நான்" - குடிமறதி விடுதியில் சந்தித்துக்கொள்ளும் இரு மனிதர்களின் கதை.அவர்களின் உரையாடல் வழி நமக்கு அறிமுகமாகும் பெண்கள்,இவர்களை சகித்துக் கொண்ட காதலிகள்.புகைபோக்கி சுத்தம் செய்யும் பெண்ணை காதலித்து மணந்து கொண்ட கதையொன்று அழகானது. பெரும் சண்டையோடு மோசமாக முடிவுறும் காதலும்,ஒரு சமயம் கவித்துவமாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கோர் உதாரணம் இச்சிறுகதை.<br />
<br />
<br />
'ஜூரம்' - விட்டோரியோ டிசிகாவின் 'Children are watching Us' திரைப்படத்தை ஒரு நிமிடம் நினைவூட்டிய சிறுகதை.பிள்ளைகளை விட்டுவிட்டு வேறொருவனுடன் செல்லும் தாய்.அவர்களை பராமரிக்க ஆள் கிடைக்காமல் கஷ்டப்படும் தந்தை.அவர்களுக்கு உதவ வரும் மூதாட்டி எனத் தொடரும் கதையில் படித்த நாயகனும் நாயகியும் ஓவிய கலையின் நுட்பத்தை அறிந்த அளவிற்கு வாழ்வின் நுணுக்கங்களை அறியாமல் உள்ளனர்.வீட்டுக்கு வேலைக்கு வரும் மூதாட்டியும் அவள் கணவனும் வாழ்வை திட்டமிட்டு வெகு அழகாக எடுத்துச் செல்கின்றனர். கல்வியறிவு, ரசனை,இவற்றைத் தாண்டி வேறு பல விஷயங்கள் இல்லற வாழ்விற்கு தேவை என்பது எவ்வளவு உண்மை.<br />
<br />
கதீட்ரல் - கண் பார்வையற்ற மனைவியின் தோழனோடு ஒருவன் கொள்ளும் நட்பின் தொடக்க பொழுதுகள்.கண்பார்வையற்றவனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதறியாமல் சலித்துக் கொள்ளும் இவன், அவன் வருகைக்கு பிறகு மெல்ல மெல்ல அவன் உலகிற்குள் நுழைகிறான்.அவர்கள் இருவரும் சேர்ந்து வரையும் தேவாலைய படத்தின் நெளிவுசுளிவுகளை போன்றதே அவர்கள் கொள்ளும் நட்பும்.<br />
<br />
வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு - ஒரு கொடூர கொலை. கொலையான பெண்ணின் பிணத்தை முதலில் கண்டெடுக்கும் மனிதனின் மனநிலை தொடரும் நாட்களில் எவ்வாறிருக்கும்? அவனைக் காட்டிலும் அவன் மனைவி அதிக குற்ற உணர்ச்சி கொள்கிறாள்.பல நேரம் பயணப்பட்டு அந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கு கொள்கிறாள். இறந்தவள் குறித்த சின்ன சின்ன விஷயங்களையும் கேட்டறிகிறாள். இவளுக்கும் அவளுக்குமான பிணைப்பு பெண் என்பதைத் தாண்டி வேறொரு புள்ளியில் இணைகிறது..<br />
<br />
சின்னஞ்சிறு வேலை - ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் மருத்துவமனை நாட்களோடு,அவரின் இறுதி நிமிடங்களையும் கோர்வையாக நம் முன் வைக்கிறது இக்கதை.நாம் இன்றும் போற்றிக் கொண்டாடும் ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையின் மரணத்தை அருகில் இருந்து பார்த்தது போலொரு உணர்வு.செகாவை குறித்த இந்தக் கதையில் டால்ஸ்டாயும்,கார்க்கியும் வருகிறார்கள்.செகாவின் கதைகள் உங்கள் மனதிற்கு நெருக்கமானவை என்றால் இக்கதை நிச்சயம் கண்ணீர் வர வழைக்கும்.<br />
<br />
அடுத்த வீட்டுக்காரர்கள்,பெட்டிகள்,அவர்கள் யாரும்உன்னுடைய கணவன் இல்லை என நீளும் பட்டியலில் ஒரு கதையைக் கூட வேண்டாம் என ஒதுக்க முடியாதபடி அத்தனையும் பொக்கிஷங்கள்.மனித மன சலனங்களை ஊடுருவிச் செல்லும் கதைகள் இவை.ஒரு சில கதைகளை தவிர்த்து மொழிபெயர்ப்பும் சரியாகவே அமைந்துள்ளது.<br />
<div>
<br /></div>
<div>
மகத்தான வாசிப்பனுபவம்!<br />
<br />
<br />
-வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு-<br />
வெளியீடு - காலச்சுவடு</div>
</div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-26475730504233741332014-07-02T23:13:00.000-07:002014-08-16T02:10:48.944-07:00கமலாதாசின் "சந்தன மரங்கள்"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கமலாதாஸ் கதைகளோ,கவிதைகளோ இதற்கு முன் அறிமுகமில்லை. பாலச்சந்திரன் சுள்ளிகாடு தனது சுயசரிதை நூலான சிதம்பர ரகசியத்தில் கமலாதாஸ் உடனான சந்திப்பை குறித்து எழுதி இருப்பார்.அந்தக் கட்டுரை இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் குறித்து இல்லாது கமலாதாசின் பிரியமும்,அக்கறையும் கொண்ட தயாள குணத்தை குறித்து பேசுவது. அதிலிருந்து அவரின் எழுத்துக்களை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும்.மிகச்சமீபத்தில் எதிர்பாராத காரணங்களினால் நான் வேண்டிய புத்தகத்திற்கு பதில் "சந்தன மரங்கள்" கை வந்து சேர்ந்தது.மகிழ்ச்சியான ஏமாற்றம்!<br />
<br />
முன்னுரையில் ஜெமோ குறிப்பிட்டுள்ளதைப் போல கமலாதாசின் உலகத்திற்குள் நுழைய இந்தப் புத்தகம் சிறுவாசல்.நாம் கண் பொத்தி,வாய் மூடி பகிர்ந்து கொள்ளும் ரகசிய மனிதர்கள் அவர் கதை மாந்தர்கள்.முழுக்க முழுக்க பெண் மன உளைச்சல்களை அணுகிப் பேசும் கதைகள்.கமலாதாசின் பெண்கள் சபிக்கப்பட்டவர்கள்,பிரியமானவர்களால் துரத்தியடிக்கப்பட்டவர்கள்,அன்பிற்கு ஏங்குபவர்கள்,மனதளவில் வலிமையற்றவர்கள்,வீட்டை மறந்து வேலையில் மூழ்கி கிடப்பவர்கள் இன்னும் இன்னும்..இதில் ஏதோ ஒன்றில் எந்தப் பெண்ணும் தன்னை சுலபமாக பொருத்திக் கொள்ள இயலும்.<br />
<div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK3xzBK4qF9wPwfSadUZtK63Ek6RiJ96bptolvriBkGOzzns8Py_RPprsHsxkr3Bz1FrTHPFR61JVH-QVnaaYBpMjfL68ley3zUshEVyeoybUXRQAMNtwVUBNjS83RwC8DihUyR2Mah1E/s1600/Kamala_das.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK3xzBK4qF9wPwfSadUZtK63Ek6RiJ96bptolvriBkGOzzns8Py_RPprsHsxkr3Bz1FrTHPFR61JVH-QVnaaYBpMjfL68ley3zUshEVyeoybUXRQAMNtwVUBNjS83RwC8DihUyR2Mah1E/s1600/Kamala_das.jpg" /></a><br />
<br />
ஒரு நாவலின் நேர்த்தி கொண்டது 'ருக்மணிக்கு ஒரு பொம்மை குழந்தை' கதை."Arappatta kettiya gramathil" என்றொரு பத்மராஜனின் படம்.பரத்தையர் கூடத்தில் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடும் பெண்ணிற்கு உதவும் நண்பர்களின் கதை.ஏனோ இந்தக் கதை வாசிக்கையில் அப்படத்தின் ஞாபகம்.அங்கு நிகழும் காதலும்,வன்முறையும்,மரணமும் - மாற்றங்கள் இன்றி தொடர்பவை.ஒரு சிறுமியின் வருகையும், கருகலைப்பினால் நிகழும் மரணமும்,அங்கிருந்து தப்பிப்பிழைத்து பின் மீண்டும் வந்து சேரும் ஒருத்தியின் காதல் கதையும் பதரவைப்பவை.இளையவள்,மூத்தவள் என்கிற பாகுபாடின்றி அங்குள்ள பெண்கள்களின் மனவோட்டத்தை, கனவுகளை, நிராசைகளை நுட்பமாய் விவரிக்கும் கதையிது.அழுதாலும், புரண்டாலும் வாழ்க்கையை அங்கு தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும்.பத்மராஜனின் படத்தில் வருவது போல காப்பாற்றிச் செல்ல தேவகுமாரன்கள் கிட்டாத புறக்கணிக்கப்பட்ட தேவதைகள் இவர்கள்.<br />
<br />
'சந்தன மரங்கள்', இருளும் - வெளிச்சமுமான இரண்டு தோழிகளின் கதை.பெண்ணிய கதைகள் எப்போதும் பெண்களின் சிறப்பை மட்டும் பேசுபவை அல்ல என்பதற்கோர் உதாரணம் இக்கதை.எண்ணங்களில் வன்மமும்,குரோதமும் மிகுந்து வார்த்தைகளில் கத்தியின் கூர்மையை கொண்டவள் கல்யாணிகுட்டி.தாழ்வுமனப்பான்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டவள்.பழிவாங்க காதலை ஆயுதமாக பயன்படுத்தவும் துணிபவள். கல்யாணி குட்டி காதல் கொள்வது தனது தோழி ஷீலாவோடு.ஆம் அவர்கள் காதலர்கள்.லெஸ்பியன் உறவு சார்ந்த கதையொன்றை வாசிப்பது இதுவே முதல் முறை.கதை முழுக்க ஷீலா நமக்கு சொல்வது போல வருகிறது.கல்யாணிகுட்டி மீதான சிநேகமும்,நெருக்கடியான திருமண வாழ்வும்,விலகிய பொழுதும் மீண்டும் மீண்டும் வாட்டும் நினைவுகளும்....<br />
இரண்டு பெண்களுக்கிடையேயான அற்புதமான காதல் கதை.<br />
<br />
இவை தவிர்த்து, கூடா காதல் என உலகம் வரையறுக்கும் ஒரு பெண்ணின் நேசத்தை பேசும் 'மாஹிம் வீடு',இரவு பகல் பாராது உழைத்து, தன் தொழிலை நேசிக்கும் பெண் மருத்துவருக்கு நேரும் 'துரோகம்' குறித்தான கதையும் குறிப்பிடத்தக்கவை.தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு கமலாதாஸ் புனைந்துள்ள 'பறவையின் வாசனையும்' சிறப்பான கதையே.கண்ணுக்கு புலப்படாத சங்கிலியால் பிணைக்கப்பட்டு உறவுகளை விட்டு வெளியேற முடியாத எல்லாப் பெண்களுக்குமான கதைகள் இவை.கமலாதாசின் படைப்புகளை தேடி வாசிக்க இந்தத் தொகுப்பின் அறிமுகம் போதுமானது.<br />
<br />
<br />
வெளியீடு - உயிர்மை <br />
தமிழில் - நிர்மால்யா </div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-62699328220109429952014-06-03T09:15:00.001-07:002014-08-16T02:11:01.240-07:00KG ஜார்ஜ் மற்றும் பத்மராஜனின் கதையுலகம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மிகச் சமீபத்தில் இவ்விரு மலையாள இயக்குனர்களின் படங்கள் அறிமுகம் ஆகின.இது வரை தவறவிட்டதற்கு வருந்தும்படியான படங்கள் இவை.<br />
<br />
கே ஜி ஜார்ஜின் <b>யவனிகா (1982) </b>திரைப்படம் நேர்த்தியான த்ரில்லர்.இவரின் மற்றொரு படமான லேகேயுட மரணம் ஒரு ப்ளாஷ் பேக் (1983) தந்த அனுபவத்தில் இருந்து மீண்டு வருவதற்கும் இந்தப் படம்.<br />
<br />
எளிய மனிதர்கள்,அவர்களை சுற்றிய உலகம்,தினசரி வாழ்வின் சிடுக்குகள் இவற்றை முடிந்த வரை விஸ்தாரமாய் பேசிச் செல்கின்றன இப்படங்கள். யவனிகா,நாடக கம்பெனி பின்னணியில் நிகழும் கதை.நாம் அறிந்திராத உலகம் இப்படித் தான் இருக்கும் என நம்பும்படியான காட்சியமைப்புகள். மேலும் திலகன்,பரத்கோபி, மம்மூட்டி, ஜகபதி,நெடுமுடி வேணு என மொத்த ராட்சச கூடமும் ஓரிடத்தில்.முரடன் - குடிகாரன் - யாருக்கும் கட்டுப்படாத ஐயப்பன் என்னும் கதாபாத்திரத்தில் பரத் கோபி.இவரின் அறிமுக காட்சி ஒன்று போதும் அசாத்திய நடிகன் எனக் கூற.கொலையை துப்பறியும் சாதாரணக் கதை அல்ல இது,ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் நுட்பமாய் விளக்கிச் செல்லும் திரைக்கதை முக்கியமானது.போலவே பின்னணி இசையும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihRrgP3voiiTfv59C_UF4CWMyoHR0RTrttrPAL8sawAJocylNiGHEsgshoLDusVLAGFHv9GRO8qNZOknpZoC7SVT40gMXS5-jnntaV-wqR4Jtc4awO3C5dAncc9K-0E5TDaD-V-kUdZ4c/s1600/MammuFakePoster-Yavanika-125D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihRrgP3voiiTfv59C_UF4CWMyoHR0RTrttrPAL8sawAJocylNiGHEsgshoLDusVLAGFHv9GRO8qNZOknpZoC7SVT40gMXS5-jnntaV-wqR4Jtc4awO3C5dAncc9K-0E5TDaD-V-kUdZ4c/s1600/MammuFakePoster-Yavanika-125D.jpg" height="311" width="320" /></a></div>
<br />
<br />
ஜார்ஜின் மற்றொரு படமான <b>லேகேயுட மரணம் ஒரு ப்ளாஷ்பேக் (1983)</b>,ஒரு நடிகையின் கதை.உண்மையில் இப்படம் ஒரு ஆவணம்.இதற்கு பின்னணியாய் அமைந்த கதை குறித்து பேச விருப்பமில்லை. அவசியமுமில்லை.ஏனெனில் இக்கதை முழுக்க முழுக்க ஒரு நடிகையின் தொடக்க நாட்கள் தொடங்கி விரிவாய் பேசிச் செல்கிறது.ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டது போல.நளினியின் நடிப்பு பெரிய ஆச்சர்யம்.இந்தளவு அவரை இதற்கு முன் ரசித்ததில்லை.கிராமத்து வெகுளிப் பெண்,நகர சாக்கடையில் மெல்ல மெல்ல அமிழ்ந்து போவதை கச்சிதமாய் தம் உடல்மொழியாலும், முகபாவனைகளாலும் வெளிக்கொணர்ந்துள்ளார்.நடிகைகள் குறித்து நமது நாளிதழ்கள் எழுதித் தீர்த்த கதைகளில் ஒன்றை மிக அருகில் சென்று பார்த்த உணர்வு.<br />
<br />
குடிகாரர்கள்/ ஸ்த்ரீலோலர்களிடம் காதல் வேண்டி நிற்கும் பெண்கள். உறவுகளை விட்டு தப்பியோட முயலும் மனிதர்களென...பத்மராஜனின் கதையுலகம் தனித்துவமானதாய் இருக்கிறது.ரசித்து பார்த்த இவரின் படங்கள் இரண்டும் காதல் கதைகள்.காதல் என்றால் திஜாவின் கதைகளில் வரும் காதல்.அவர்கள் மட்டுமே உணர்ந்தறிந்த தெய்வீகம்.<br />
<br />
பத்மராஜனின் <b>தூவானதும்பிகள்(1987)</b> லால்,பார்வதி,சுமலதா நடித்திருக்கும் முக்கோண காதல் கதை.கிளாரா என்னும் தேவதையாக சுமலதா. ஆரவாரமில்லாத அந்த அழகும்,நடிப்பும் அட்டகாசம்.இத்திரைப்படத்தில் மழையும் ஒரு கதாபாத்திரம்.கிளாராவின் வருகையை அறிவிக்கும் பெருமழைக் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை!மீண்டும் மீண்டும் கேட்டு மயங்கிடச் செய்யும் "ஒன்னாம் ராகம் பாடி.." என்ற பாடலில் முகத்தில் கை வைத்து ஆச்சர்யமாய் பார்வதியைப் பார்த்துச் சிரிக்கும் லால்....அசல் நடிகன்!மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லாத காதல் கணங்கள்..நினைவின் ரணங்கள் என்பதைச முடிந்த வரை கவிதை மொழியில் சொல்லும் கதை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhyphenhyphenHw11VsV2L5ZFeWgCJH4BqUcFYGUqQRP87a6rsP_hrp9FJQd3JpdSX1d4WJlB3GvuD5yACIlVOTR4_VSZNX5GC5PzWIlNrdCeg_ZGEUsMKWak9dk-TS_YISZQe3MSOqLlT2SIBotCL0/s1600/Thoovanathumbikal-01W.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhyphenhyphenHw11VsV2L5ZFeWgCJH4BqUcFYGUqQRP87a6rsP_hrp9FJQd3JpdSX1d4WJlB3GvuD5yACIlVOTR4_VSZNX5GC5PzWIlNrdCeg_ZGEUsMKWak9dk-TS_YISZQe3MSOqLlT2SIBotCL0/s1600/Thoovanathumbikal-01W.jpg" height="285" width="400" /></a></div>
<br />
<br />
பத்மராஜனின் கதைகளை தேடி வாசிக்கவேண்டும் என்கிற ஆவலைத் தந்த படம்<b> நமக்கு பார்க்காம் முந்திரி தோப்புகள்(1986)</b>.நினைவுகளை கிளறி விட்டு நம்மை மொத்தமாய் உள்ளிழுத்துக் கொள்ளும் படமிது.காதலர்களின் தேசம்..தேவதைகளின் தேசம்!சாலமன் என்னும் பெயர் கொண்ட நாயகர்கள் அன்பைத் தாங்கி வரும் தேவகுமாரர்கள் போல.ஆமெனில் பஹத்..இதில் லால்.வேதாகமத்தில் இருந்து மேற்கோள் காட்டப்படும் இவ்வரிகள். காதல்..காதல்..திகட்டச் செய்யும் காதல்.<br />
<br />
<b><i>Song Of Solomon 7:12 : "Let us rise early and go to the vineyards; Let us see whether the vine has budded And its blossoms have opened.And whether the pomegranates have bloomed. There I will give you my love"</i></b><br />
<br />
இவ்வரிகளை மெய்ப்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் தான் கதை.கதையின் முடிவில் ஒரு திருப்பம் உண்டு,நிச்சயமாய் அது அதிர்ச்சி வைத்தியதிற்காய் வைக்கப்பட்டதில்லை.அவர்கள் காதலின் வலிமையை மீண்டுமொருமுறை அங்குள்ளவர்களுக்கு எடுத்துச்சொல்ல..<br />
<br />
இரண்டு படங்களிலும் மிகப் பிடித்த பொதுவான விஷயங்கள் இரண்டு.ஒன்று காதல் மற்றொன்று லாலின் அசத்தல் நடிப்பு..One Devil Of An Actor!<br />
<br />
--மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் யாவும்Youtube'ல் இருக்கின்றன--</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-48939771420394115042014-02-26T06:53:00.000-08:002014-08-16T02:11:12.326-07:00INTO THE WILD (2007)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<b>"I read somewhere... how important it is in life not necessarily to be strong, but to feel strong... to measure yourself at least once.” - Jon Krakauer, Into the Wild</b></div>
<div style="text-align: left;">
<b><br /></b></div>
<div style="text-align: left;">
<b><br /></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD117xy0d4Bw9x828f-9GGhKlT8xKWimgQGtR5lX5sVqCkGg1ZDikBrOkzWXmLXQ93lBwE_-o-BavZqQxJlO5YVvwGf-R6j3evLLo6reLapplz2qFyrMahOITeciQjsvvkzpObfJt_-Wc/s1600/into-the-wild-movie-poster-lathyrism1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD117xy0d4Bw9x828f-9GGhKlT8xKWimgQGtR5lX5sVqCkGg1ZDikBrOkzWXmLXQ93lBwE_-o-BavZqQxJlO5YVvwGf-R6j3evLLo6reLapplz2qFyrMahOITeciQjsvvkzpObfJt_-Wc/s1600/into-the-wild-movie-poster-lathyrism1.jpg" height="192" width="320" /></a></div>
<div style="text-align: left;">
<b><br /></b>
I wish I were a Gypsy எனக் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அது சாத்தியமற்ற பெருங்கனவு என்பதையும் நன்கு அறிவேன்.<br />
<br />
குடும்பம்,அலுவல்,தினசரி கடமைகள் என யாவற்றையும் துறந்து தேடல்,தேடல் என ஒரு இளைஞன் மேற்கொள்ளும் பயணங்களின் தொகுப்பு இத்திரைப்படம்.பயணங்கள் வழி அவன் சந்திக்கும் மனிதர்கள்,அவர்களோடு கூடிய உரையாடல்கள்,அவர்கள் அன்பில் தேங்கி நின்று விடாமல், விடைபெற்று தொடரும் அவனின் சாகச வாழ்க்கை...என் கனவை எவனோ வாழ்ந்து தீர்த்துள்ளான் என்கிற திருப்தி.இது உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு உருவாக்கப் பட்ட திரைப்படம்.இதுவே காட்சிகளுக்கு இன்னும் அழுத்தம் கூட்டுகின்றது.</div>
<div style="text-align: left;">
<br />
வேரோடு முற்றிலும் தன்னை உறவுகளிடம் இருந்து துண்டித்துக் கொண்டு தேசாந்திரியாக அவன் மேற்கொள்ளும் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் யாவரும் அன்பைப் பற்றிக் கொண்டவர்கள்.அவர்களிடம் கேட்கவும்,பெறவும் ஏராள கதைகள் இருந்தன..மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் அவர்களிடமிருந்து புதுப்புது தொழில்களை கற்றுக் கொள்கிறான்."Career is the Invention of 20th Century' என்னும் அவனின் நிலைப்பாடு எத்தனை உண்மையானது. நிகழும் எல்லா சம்பவங்களுக்கும் தான் வாசித்த புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டிட அவனால் முடியும் என்கிறாள் அவன் சகோதரி.புத்தகப்பித்துகளுக்கு தெரியும் இதன் முழு அர்த்தம்.</div>
<div style="text-align: left;">
<br />
மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவொன்று,அழுத்தமான வசனங்கள்.வாசிக்கும் புத்தகத்தில் மிகப் பிடித்த வரிகளை பென்சிலில் அடிக்கோடிட்டு கொண்டே வருவதை போல.. இப்படத்தின் வசனங்களை கவனமாய் குறித்துக் கொண்டேன். அத்தனையும் வாழ்க்கைப் பாடங்கள். பெற்றோர்களின் பொறுப்பு,மெய் வாழ்வின் தேடல்,Survival of the fittest என ஒன்றிற்கும் மேற்பட்ட படங்களில் தனித் தனியே சொல்லக் கூடிய விஷயங்களை திகட்டாமல்,நேர்த்தியாய் சொன்ன விதத்தில் இந்தப் படம் தனித்து தெரிகிறது.</div>
<div style="text-align: left;">
<br />
பயணங்களும்,புத்தகங்களும் உங்களுக்கு பிடிக்குமாயின் இந்தத் திரைப்படம் உங்களுக்கானது..<a href="https://www.facebook.com/hashtag/mustwatch">#MustWatch</a></div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-968256032531413052014-02-12T02:25:00.001-08:002014-08-16T02:11:22.675-07:00அடூரின் எலிப்பத்தாயம் (1981)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கேளிக்கைகளும்,கொண்டாட்டங்களும் கொண்ட வாழ்க்கையை கனவிலும் கண்டிராத ஒரு குடும்பத்து மனிதர்களை குறித்த பதிவு.அதன் பொருட்டு அழுது,அரற்றி சோகத்தை பிழியும் திரைப்படம் இல்லை இது.மாறாக சூழ்நிலை கைதியாகிப் போன பெண்ணொருத்தியை மையமாகக் கொண்டு ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளை நுட்பமாய் விவரிக்கின்றது.<br />
<br />
குடும்பத்தின் வீழ்ச்சியை சட்டை செய்யாத,தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள இயலாத உன்னி,கல்லூரி காலத்திற்கே உரிய கனவுகளோடு கற்பனை உலகில் மயங்கிக் கிடக்கும் ஸ்ரீதேவி, வீட்டுச் சுமையோடு,எந்நேரமும் அடுப்பங்கரையில் உழன்று கொண்டிருந்தாலும் மாறாத அன்போடு மற்ற இருவரையும் கவனித்துக் கொள்ளும் முதிர்கன்னி ராஜம்மா - இவர்களை சுற்றி நடக்கும் கதை.ராஜம்மாவாக வரும் சாரதாவின் நடிப்பு அசாத்தியம்.நேர்த்தியாக விவரிக்கப்படும் ராஜம்மாவின் பொழுதுகள் அவள் குறித்து அறிந்து கொள்ள போதுமானவை.நாலு பெண்ணுகள் திரைப்படத்தில் வரும் நந்திதாவின் கதாப்பாத்திரம் ராஜம்மாவின் சாயலை கொண்டதே.தன் திருமணத்தை தட்டிக் கழிக்கும் அண்ணன் உன்னியின் மீது அவளுக்கு எந்த வருத்தங்களும் இல்லை,வீட்டு வேலைகளில் உதவாது,அலங்கார மோகம் கொண்டு திரியும் ஸ்ரீதேவியின் மீதும் அவளுக்கு பிரியமே.<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFlvAZQdIkC60TLOqdgaJxKkO5qrYymDdRIA9Ejk0Y49ZX8we7bKwk0HlkYX1pNL5wZvprYLDmN2SeHFANKbm_f0soBG0l8A15P6xOsJGXlF_kEC3q2zl29Ox9lTsx4ekTS3L330OO7e8/s1600/Yelipathayam.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFlvAZQdIkC60TLOqdgaJxKkO5qrYymDdRIA9Ejk0Y49ZX8we7bKwk0HlkYX1pNL5wZvprYLDmN2SeHFANKbm_f0soBG0l8A15P6xOsJGXlF_kEC3q2zl29Ox9lTsx4ekTS3L330OO7e8/s1600/Yelipathayam.jpg" /></a>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span><br />
தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மட்டுமே உன்னி தன் உறவுகளை பயன்படுத்திக் கொள்கின்றான். அவனிடமிருந்து பெறுவதற்கு எதுவுமில்லை.பிறர் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே ராஜம்மாவின் வேலை,பரஸ்பர அன்பை பகிர்ந்து கொள்ள அவளுக்கு எவருமில்லை.ஊரில் இருந்து தனித்துவிடப்பட்ட அப்பெரிய வீட்டில்,ஒட்டுதல் இல்லாது இயங்கும் மூவர்.<br />
<br />
எந்தவித மாற்றங்களும் காணாமல் தொடரும் அவர்களின் நாட்கள் எதிர்பாராத நாளொன்றில் அஸ்தமிக்கத் தொடங்குகின்றது.அவர்கள் வீட்டிலேயே ஒரு பெரிய எலிப்பத்தாயம் உண்டு.ஒவ்வொரு முறை அதில் சிக்கும் எலியை ஸ்ரீதேவி தூரத்தில் உள்ள குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரில் விடுகிறாள்.உன்னிக்கும்,ராஜம்மாவிற்கும் தெரியாத பிணியில் இருந்து தப்பிக்கும் கலையை அவள் நன்கு அறிந்து வைத்திருக்கிறாள், பின்னாளில் அதுவே அவளை அவ்வீட்டை விட்டு தூரம் போக செய்கின்றது.தீராத நோயின் காரணமாய் ராஜம்மாவும் உருகுலைந்துபோக நேரிடுகிறது.ஸ்ரீ தேவியும்,ராஜம்மாவும் இல்லாது போன வீட்டில் உன்னி எலிப்பத்தாயதிற்குள் சிக்கிய எலியைப் போல செய்வதறியாது திகைந்து வீட்டிற்குள் ஓடி ஒழிவதாக படம் முடிகின்றது.<br />
<br />
மழை எந்தவொரு சூழ்நிலைக்கும் கணம் கூட்ட கூடியது. இப்படத்தின் இறுதிக் காட்சிகள் யாவும் மழையின் பின்னணியில் நிகழ்கின்றன.இப்பட கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வண்ணத்தில் உடை அமைத்ததில் உள்ள குறியீட்டை அடூர் தன் நேர்காணல் ஒன்றில் விளக்கியுள்ளார்(நன்றி விக்கி).ராஜம்மாவின் நீல நிற ஆடைகள் அவளின் தனிமையை,உன்னதத் தன்மையை விளக்குவதாக சொல்லியுள்ளார்,Blue Is The Warmest Color அல்லவா <br />
<br />
கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் அடூரின் திரைப்படங்கள் தரும் நிறைவு அலாதியானது.தொடர்ந்து அவர் திரைப்படங்களை தேடிப் பார்க்க காரணமும் அதுவே.</div>
<!-- Blogger automated replacement: "https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-lvIk2wTETvQ%2FUvtLoJjG0oI%2FAAAAAAAAB1I%2F2bsFMODpD3U%2Fs1600%2FYelipathayam.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*" with "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFlvAZQdIkC60TLOqdgaJxKkO5qrYymDdRIA9Ejk0Y49ZX8we7bKwk0HlkYX1pNL5wZvprYLDmN2SeHFANKbm_f0soBG0l8A15P6xOsJGXlF_kEC3q2zl29Ox9lTsx4ekTS3L330OO7e8/s1600/Yelipathayam.jpg" -->லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-15445317787285712702013-11-19T07:42:00.000-08:002014-11-14T19:32:41.871-08:00கல்பட்டா நாராயணனின் சுமித்ரா (மலையாள நாவல்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்த படைப்பிது.நாவலின் மனிதர்கள் நமக்கு பரிட்சயமான நபர்களை ஒத்திருந்தால் வரும் மனநிறைவு.நான் அறிந்து வைத்திருக்கும் எத்தனையோ பெண்களின் வாசம் சுமித்ராவிடம்.வயநாட்டின் ஈரத்தை தன்னிடத்தே கொண்ட பெண்ணவள்.<br />
<br />
வயநாட்டில் கல்பட்டாவில் தன் கணவன்,மகளோடு வசிக்கும் சுமித்ராவின் உலகம் அவளை சுற்றி உள்ளவர்களால் நமக்கு அறிமுகம் ஆகிறது.கருப்பி, புருஷோத்தமன், தாசன்,அப்பு,கௌடர் என அனைவரும் சுமித்ராவின் அன்பை ருசித்தவர்கள்.கீதாவும்,சுபைதாவும் சுமித்ராவின் இள வயது தோழிகள்.அவர்களின் ரகசியத்தை அவர்களோடு சேர்ந்து கட்டிக் காத்தவள் சுமித்ரா.வயநாட்டின் தன் இருப்பை கடிதத்தின் வழி தூரத்தில் இருக்கும் அவர்களோடு உற்சாகமாய் பகிர்ந்து கொள்கிறாள்.<br />
<div>
<br />
சுமித்ராவிற்கு மிகப் பிடித்த இடமென அவள் கொள்வது அவ்வீட்டின் பழங்கலம் (நெற் குதிர்கள்,உரல் வைத்திருக்கும் இடம்).தனது பெரும்பாலான நேரத்தை பழங்கலத்தில் கழிப்பதையே சுமித்ரா விரும்புகிறாள். புத்தகங்கள் படிப்பதற்கும்,கருப்பியுடன் ஆற அமர உட்கார்ந்து பேசுவதற்கும் அவள் தேர்ந்தெடுக்கும் இடம் பழங்கலமே.அவ்விடம் அவளுக்கு பிடித்து போனதிற்கான காரணங்கள் அவள் மட்டுமே அறிந்தது.சுமித்ரா தினமும் நான்கைந்து முறை குளிப்பவள்."த்ரா..உன் உடம்புல என்ன சேறு சொரக்குதா.." என அப்பு அவளை செய்கிறான்.பெண்களுக்கும் தண்ணீருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு இல்லியா.பெண்ணைப் போலவே தண்ணீர் இல்லாது போனால் ஜீவிதம் இல்லை.தண்ணீர்ப் பெண்ணவள்.</div>
<div>
<br />
கல்பட்டாவிலும் சுமித்ராவிற்கொரு தோழி உண்டு.அவ்வூரில் உள்ள ஆண்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் மாதவியே அது.யாவரும் கண்டு ஒதுங்கும் அவளிடம் சுமித்ராவிற்கு தனித்த பிரியம்.அவளால் மட்டுமே மாதவியை கேலியும்,கிண்டலும் செய்து அரவணைத்துச் செல்ல முடிகின்றது.<br />
போலவே,தேசம் முழுவதும் சுற்றித் திரிந்து ,நிலையான வேலையேதும் இல்லாமல் இருக்கும் தாசனோடான அவளின் நட்பு.அவளிடம் இருந்து அவன் வெகு தூரம் வேறுபட்டு நிற்கிறான் பயணங்களால்,சந்திக்கும் மனிதர்களால், ரசனையால். "கையிலிருக்கும் உலோகம் சொர்ணமாக மாறும் பயணங்கள் தான் எல்லா பயணமும்.." என தாசன் சந்திக்கும் சன்யாசி சொல்கிறார்.வீட்டில் அடைந்து கிடக்கும் சுமித்ரா பயணங்கள் துணை இல்லாமலும் உலோகத்தை தங்கமாக்கும் வித்தை அறிந்தவள்.அதிகம் மனிதர்கள் உடன் ஒட்டுதல் இல்லாமல் தனித்து இருக்கும் எடக்குனி நரசிம்ம கௌடருக்கு சுமித்ராவின் மீது தனி பிரியம் உண்டு.அது அவள் அவருக்கென செய்து தரும் ப்ரத்யேக உப்புமாவின் ருசியால் இருக்கலாம். அவள் அன்பின் மிகுதியாய் அந்த ருசி என்பதை அவர் அறிந்திருந்தார்.</div>
<div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiACBUGtI0by-oAIHdMvwGgN4mH7B_Ji4-xFcOxDltV0PVQ8lEftyQaF7BTku42r1P8rMT-quoQdkEnH6FbuSydAY3eb5Pyo49NpAGTVRz8Esht90LHG3_r7k8r524JA8knj4G7bX0cQVA/s1600/sumitra+2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiACBUGtI0by-oAIHdMvwGgN4mH7B_Ji4-xFcOxDltV0PVQ8lEftyQaF7BTku42r1P8rMT-quoQdkEnH6FbuSydAY3eb5Pyo49NpAGTVRz8Esht90LHG3_r7k8r524JA8knj4G7bX0cQVA/s320/sumitra+2.JPG" height="320" width="213" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br />
கோழி,நாய் குட்டிகள்,அணில்,பூனைக் குட்டி,கன்றுக்குட்டி என அவள் முகம் அழுத்திக்முத்தமிடாத பிராணிகள் கொஞ்சமே.பூக்களும்,செடிகளும் அவள் விருப்பம்.வயநாட்டில் ஈரத்தில் அவை பூத்து குலுங்கும் நாட்களை திண்ணையில் அமர்ந்து ரசிக்கும் விருப்பமும் உண்டு அவளுக்கு.<br />
சுமித்ராவிற்கு வாழ்வின் மீது குற்றசாட்டுகள் ஏதுமில்லை இல்லை.தான் காணும் மனிதர்களில் தொடங்கும் அவள் உலகம் அவர்களிடமே முற்று பெறுகிறது. </div>
<div>
<br />
சராசரி குடும்பப் பெண்ணின் நாட்குறிப்புகள் சுமித்ராவினுடையது."சராசரி" என்பது பொதுப் பார்வையில். உண்மையில் அவள் கவிதையைப் போல வாழ்ந்தவள்.நாவல் தொடக்கமே சுமித்ராவின் மரணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அதை நான் பொருட்படுத்தவில்லை.அவள் வாழ்ந்த வாழ்கையின் விவரிப்புகள் தந்த நிறைவு அவள் விடை பெற்றதை மறக்கச் செய்துவிட்டது.</div>
<div>
<br />
சுமித்ரா,மழையைப் போல நதியைப் போல தான் சேரும் இடத்தை குளிர்வித்து விடை பெறுபவள்!</div>
<div>
<br />
மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவலில் வருவதான இவ்வரிகள் <br />
(முத்துலிங்கத்தின் வியத்தலும் இலமே தொகுதியில் வரும் அறிமுகம்) <br />
எனக்கு சுமித்ராவை வாசிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.</div>
<div>
<br />
<div>
<b>"நீ ஒரு தண்ணீர்ப் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்..."</b><br />
<br />
ஷைலஜாவின் மொழிப்பெயர்ப்பு குறித்து தனியே குறிப்பிட்டாக வேண்டும்.முன்னமே சூர்ப்பனகையும், பாலச்சந்திரன் சுள்ளிகாடின் சுய சரிதையும் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வாசித்துள்ளேன்.மொழி பெயர்ப்பு என்று புத்தக அட்டையில் கண்டால் அன்றி நம்ப முடியாது.பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளில் புரியாத வரிகளை இரண்டு,மூன்று முறை வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.அந்த சிக்கல் இங்கில்லை.நேர்த்தியோடு கூடி நெருக்கமாகவும் உணரச் செய்கிற மொழிபெயர்ப்பு.<br />
<br />
வெளியீடு - வம்சி</div>
</div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-89514362296428456402013-10-08T11:01:00.002-07:002014-08-16T02:12:22.488-07:00மாணிக்பந்த்யோபாத்யாயின் பொம்மலாட்டம் (வங்காள நாவல்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த 50 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த மொழி பெயர்ப்புகள் பட்டியலில் எஸ்.ரா இந்நாவலை குறிப்பிட்டு இருந்தார்.வங்காள இலக்கிய உலகிற்கு புது வேகம் பாய்ச்சிய தொடக்க கால எழுத்தாளர்களுள் மாணிக்பந்த் முக்கியமானவராக அறியப்படுகிறார்.சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள இந்நாவல் 1932ஆம் ஆண்டு எழுதப்பெற்றது.மலிவு விலை புத்தகங்களுக்கு மத்தியில் தள்ளுபடி விலையில் புத்தகச்சந்தையில் வாங்கினேன்.இந்த நாவாலானது அப்படி விற்கப்பட வேண்டிய ஒன்று அல்ல எனபது வாசித்ததும் விளங்கியது.<br />
<br />
கொல்கத்தாவில் மருத்துவத்திற்கு படித்து முடித்து தன் கிராமத்திற்கு திரும்பும் சசிபாபு என்னும் இளைஞனை சுற்றி சுழலும் கதை.சசிபாபுவின் தந்தை பெரும் பணக்காரர்,பணம் ஈட்டுவதில் மட்டுமே பிரியம் கொண்டவர்.சசிபாபுவோ அதற்கு நேர் எதிர்.அப்பாவின் செல்வாக்கினால் அன்றி அவன் படித்த படிப்பை அவன் அவர்களுக்காய் செலவிடும் மேலான குணதிற்காய் கிராமத்தில் சசிபாபுவிற்கு ஏக மரியாதை.அவனுக்கு இணக்கமான ஒரு குடும்பம் உண்டு.அவன் பிரியத்திற்குரிய குஸுமாவின் குடும்பமே அது.அவள் திருமணமானவள்.அவளது கணவன் பாரான்.பரானின் தங்கை மதி.மதி காதலித்து திருமணம் செய்யும் குமுதன்.சசியின் தங்கை பிந்து.அவளின் கணவன் நந்தலால். இவர்களுக்கிடையேயான உணர்வுகளில் மிக மெல்லிய நூல் கட்டி பொம்மலாட்டம் ஆட செய்திருக்கிறார் மாணிக்பந்த்.<br />
<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghrf2mBlLRjQFyCXZhUqYzOVBoWA9_inFBieYEe_55JNoyhlnxFn_QjbOd6G3m3UqQSMcAoENQ6tYWSMxS7FK9qp-NjMvd7xR6gcDN0BWOYzKJDCmGFf4YjfEfdERF_Bzr-fOx_IocpUo/s1600/Bommalattam.JPG"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghrf2mBlLRjQFyCXZhUqYzOVBoWA9_inFBieYEe_55JNoyhlnxFn_QjbOd6G3m3UqQSMcAoENQ6tYWSMxS7FK9qp-NjMvd7xR6gcDN0BWOYzKJDCmGFf4YjfEfdERF_Bzr-fOx_IocpUo/s320/Bommalattam.JPG" /></a><br />
<br />
<br />
தொடக்கத்தில் சசிபாபு வெகு புத்திசாலி தோற்றத்தோடு வாசகனுக்கு அறிமுகம் ஆகின்றான்.கிராமத்தின் அநேக வீடுகளில் இவனிடம் யோசனை கேட்டே எதையும் செய்கின்றனர்.அவன் படிப்பின் மீதும்,உலக அறிவும் மீதும் அவர்களுக்கு தீராத பிரமிப்பு.அவனும் அவர்களில் ஒருவனாய் உருமாறி வீடு வீடாய் சென்று மருத்துவம் பார்த்து அறிவுரைகள் வழங்குகின்றான்.இருப்பினும் மதியும்,குஸுமாவும் அவனுக்கு தீராத புதிர்கள்.அந்த ஏழை பெண்கள் ஜாலங்கள் ஏதும் செய்யாது அவனின் பேரன்பை பெறுகிறார்கள்.<br />
<br />
<br />
மதியின் காதல்..சிறு பெண்ணான மதிக்கு அவளின் கிராமத்தை தாண்டி வேறு உலகம் தெரியாது.அவ்வூருக்கு வரும் நாடக(ஜாத்ரா) குழுவில் இளவரசன் வேடமேற்கும் குமுதனை கண்டதும் காதல் கொள்கிறாள்.குமுதன் சசியின் நண்பன்.ஜிப்சியை போன்றதொரு வாழ்கையை விரும்புபவன்.இவர்களின் காதல் சசிக்கு அத்தனை உவப்பாய் இல்லை.மதியின் பிடிவாதமே வெல்கிறது.குமுதனும்,மதியும் கொல்கத்தா நகரில் கழிக்கும் நாட்களை துல்லியமாய் விவரிக்கப்படுகின்றன.அந்த பேதை பெண்ணின் அகவுலகமானது வாழ்வின் திடீர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதன் போக்கில் சத்தமின்றி பயணிக்கின்றது.குமுதனும் மதியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதலின் பொருட்டு அத்தனை ஏழ்மையிலும் வாழ்தல் இனிதாகின்றது.<br />
<br />
<br />
குஸுமாவின் காதல்..சசிபாபுவின் மீது குஸுமா கொண்டிருக்கும் பிரியம் அவள் மட்டுமே அறிந்தது.துடுக்கான பெண்ணாய்,எப்போதும் சிறிது பேசும் குஸுமாவின் பால் ஈர்க்கப்பட்டே சசிபாபு அவள் குடும்பத்துடன் நெருக்கம் கொள்கிறான்.இவர்கள் காதல் சொல்லிகொண்ட நாளே முடிவிற்கும் வருகின்றது.குஸுமாவிடமும் சசி தோற்று போகிறான்.குஸுமாவின் கணவன் பாரானுக்கோ எல்லாமும் சசிபாபுவே.எதிலும் நாட்டம் இல்லாத விவசாயி.அவன் நிலமும்,அவன் வீட்டு பெண்களும் அவன் உலகம்.சசியோ,குஸுமாவோ அவனுக்கு துரோகம் செய்யவில்லை.அழகான தங்கள் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றனர்.1900களின் தொடக்கத்தில் இது போன்றதொரு காதலை நாவலின் வழி உரக்க சொல்லி இருக்க முடிந்திருக்கே என்பது ஆச்சர்யம்.காதலை வகைப்படுத்துதல் சரியல்ல இல்லியா..<br />
<br />
இவர்கள் தவிர்த்து சசிபாபுவை பெரும் பொறுப்புகளுக்கு ஆளாக்கும் யாதவ் என்னும் சாமியாரின் கதையும் உண்டு.<br />
<br />
சசிபாபுவை சுற்றி நகரும் கதையாகினும் அவனிடத்து பெண்களே பெரும் விருட்சமென நாவல் முழுவதும் வியாபித்து உள்ளனர்.கணவன் நந்தலாலின் ஒழுங்கற்ற வாழ்கையை பொறுத்துக் கொள்ள இயலாது போராடும் சசியின் தங்கை பிந்து,சந்தேக கணவனின் பிடியில் நோயுற்று கிடக்கும் சசியின் அன்பிற்குரிய ஸேன்திதி என அவன் கண்டு வியக்கும் பெண்கள் யாவும் அக்கிராமத்தை சேர்ந்தவர்களே.படிப்பறிவும்,உலக ஞானமும் வாழ்கையை கொண்டு செலுத்த போதாது அதற்கு மேலான மனதிடமும் வாழ்வின் மீதான பிடிப்பும் அவசியம் என்பதை இவர்கள் வாயிலாய் உணர்கிறான்.மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை தாண்டி நாவலின் புலப்படும் நிதர்சனம் நம்மை வசீகரித்து கொள்கிறது.<br />
<div>
<br />
75 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட நாவல் இது.நாவலின் சங்கதிகள் இன்றைக்கும் பொருந்திப் போவது தான் பெருவியப்பு.மேலான வாசிப்பனுபவம் தரும் படைப்பிது.கூடவே நிறைய புரிதல்களும்..!<br />
<br />
வெளியீடு - சாகித்ய அகாதமி <br />
தமிழாக்கம் - த.நா.குமாரசாமி <br />
விலை - 90/-<br />
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<div>
</div>
</div>
</div>
</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-14066753609824556952013-07-26T23:20:00.002-07:002014-08-16T02:36:12.286-07:00குட்டி இளவரசன் (Le Petit Prince)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பேசி பேசித் தீராத நினைவுகள் சிறுவயது புத்தகங்கள் குறித்தவை..சிறுவர் மலரில் தொடங்கி..அம்புலி மாமா,டிங்கிள், இரும்புக்கை மாயாவி,தெனாலி ராமன் கதைகள், சிந்துபாத்தின் சாகசங்கள்,அக்பர் - பீர்பால்,ஈசாப் நீதி கதைகள் என நீளும் பட்டியல் அது.அன்றைய பொழுதுகளின் உற்சாகமும், சுவாரஸ்யமும் சிறிதும் குறையவில்லை மீண்டும் சிறுவர் புத்தகங்களை தேடி வாசிக்கையில்.<br />
<br />
சிறுவர் இலக்கியம் விரும்புவோர் தவற விடக் கூடாத நாவல் குட்டி இளவரசன்.<br />
<br />
<br />
1943 ஆம் ஆண்டு பிரஞ்சு மொழியில் வெளியான இந்நாவல்(Le Petit Prince ) 200 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கதை நாயகனாக சிறுவன் ஒருவன் அறிமுகமாகி தன் ஓவியங்களை குறித்து நம்மிடம் சொல்லி கொண்டே தான் சந்தித்த குட்டி இளவரசனை அறிமுகம் செய்கின்றான்.கதை நாயகன் இனி நமது குட்டி இளவரசன்.எங்கள் உலகம் கேள்விகளால் மட்டுமே நிறைந்தது என்பதை நிறுவும் வண்ணம் அற்புதமான பாத்திரப்படைப்பு.பெரியவர்கள் குறித்த அவனுடைய கருத்துகள் "அவர்கள் விசித்திரமானவர்கள்..", "அவர்கள் அசாதாரணமானவர்கள்......." ,"எண்ணிகையில் நம்பிக்கை கொண்டவர்கள்.." மறுப்பதற்கில்லை!<br />
<br />
குட்டி இளவரசனின் பிரியத்திற்குரிய மலர் குறித்த வர்ணனைகள் சிரிப்பை வரவைப்பவை..அன்பை பொழியும் குட்டி இளவரசனிடம் எதற்கெடுத்தாலும் இருமி தன் இருப்பை காட்டி கொள்ளும் அந்த சிறு மலரை,பெண்களின் குறியீடாக கொள்ளலாம்.<span style="background-color: white;"><span class="text_exposed_show" style="display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="background-color: white; color: black; margin-left: 1em; margin-right: 1em;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoAVXcN8COa5uNnIFchjTvEGsuYjGfZGCqfEgetVHLSllMlR3z_ymuehtGfzAv79BnmftYcTlBTPqcknsWs8vMdbnsoylD4EDm-iW5P2CRQalHZ_qroY73H2dMcPseotcUgkxCxht1Dv8/s1600/999007_10151261225303039_2065439584_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoAVXcN8COa5uNnIFchjTvEGsuYjGfZGCqfEgetVHLSllMlR3z_ymuehtGfzAv79BnmftYcTlBTPqcknsWs8vMdbnsoylD4EDm-iW5P2CRQalHZ_qroY73H2dMcPseotcUgkxCxht1Dv8/s320/999007_10151261225303039_2065439584_n.jpg" height="320" width="192" /></a></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
பல்வேறு கிரங்களுக்கு பயணம் செய்யும் குட்டி இளவரசன் சந்திக்கும் மனிதர்கள் அவன் கூற்றுபடியே விசித்திரமானவர்கள்.கட்டளை பிறப்பிப்பதையே தன் அடையாளமாக கொண்டிருக்கும் அரசன்,தற்பெருமைக்காரன், குடிகாரன்,நட்சத்திரங்களை எண்ணி வைத்து சொந்தமெனக் கொள்ளும் வியாபாரி,ஓய்வின்றி தெருவிளக்கு ஏற்றுவதை கடமையாக கொண்டவன் என ஒவ்வொருவரையும் தன் கேள்விகளால் சந்தித்து முடித்து பூமிக்கு வருகிறான்.<br />
<br />
பாம்பும்,நரியும் நண்பர்கள் ஆகின்றனர்.பூந்தோட்டம் அவனுக்கு ஆச்சர்யம் தருகின்றது.இங்கும் மனிதர்களே அவன் முன் விசித்திர தோற்றம் கொள்கின்றனர்.<br />
<i><br />"மனிதர்கள் நீர்ப் பிரவாகத்தில் சிக்கிக் கொள்வார்கள்.ஆனால் எதை தேடுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது.அவர்கள் அதற்காக அலை பாய்ந்து சுற்றிச் சுற்றி வருவார்கள்...."</i><br />
<br />
கதை சொல்லி சிறுவனும்,குட்டி இளவரசனும் பரிமாறிக் கொள்ளும் ஓவியங்கள் குறித்து கட்டாயம் சொல்லியாக வேண்டும்.யானை விழுங்கிய மலைப்பாம்பின் வரைபடத்தை கொண்டே கதை சொல்லி சிறுவன் அறிமுகமாகின்றான்..பின்பு குட்டி இளவரசன் கேட்பதற்கு இணங்க இவன் பிவோபாப் மரம்,ஆட்டுக்குட்டி என படங்கள் வரைவதும்,அவன் அதை பரிகசிப்பதும் என தொடர்கின்றது அவர்களின் விளையாட்டு.<br />
<br />
குட்டி இளவரசனின் எதார்த்த கேள்விகளுக்கு பதிலளிக்க நிதானம் அற்று பெரியவர்கள் தங்கள் வேலையில் மூழ்கி கிடக்க..அவர்களை வியந்தபடி தன் பயணத்தை தொடர்கின்றான்.<br />
<br />
தமிழில் குழந்தைகளுக்கான படைப்புகள் அதிகம் கவனம் பெறாமல் இருப்பது வருத்தமளிக்கும் விஷயம். குழந்தைகளுக்கு கதை சொல்லியாக இருப்பது எத்தனை சௌகர்யமான விஷயம்.நாம் கேட்ட,வாசித்த கதைகளை கற்பனையுடன் சேர்த்து சொல்லிடலாம். கேட்கப்படவிருக்கும் கேள்விகள் நம்மை ஆச்சர்யபடுத்தலாம்..சில சமயம் சிரிப்பில் ஆழ்த்தலாம்.அது வேறு உலகம், அவர்களுக்கேயானது.. கேள்விகளும்,கற்பனைகளும் நிறைந்தது.அதை அழகானதாகவும்,அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிட கதைகளால் மட்டுமே சாத்தியம்!<br />
<br />
வெளியீடு - கிரியா பதிப்பகம்</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-77598379220605664872013-03-01T02:21:00.000-08:002014-08-16T02:40:06.539-07:00The Children Are Watching Us (1944)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்லொழுக்கங்கள் ஆரம்ப நிலைய தொட்டுத் தொடங்குவதாகவும் இருக்க வேண்டிய அப்பருவம் சிறுவன் பிரிகோவிற்கோ வேறு மாதிரி அமைந்து விடுகின்றது.Bicycle Thieves திரைப்படத்தில் தகப்பனிற்கும் மகனிற்குமான நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் முன்னிறுத்திய விட்டோரியோ டி சிகாவின் இக்காவியம் தாயும்/தந்தையும் பிள்ளைக்கு அமைத்து தர வேண்டிய உலகம் குறித்து பேசுகிறது.அவ்வுலகம் ஆடம்பர பொருட்களாலும் பொம்மைகளாலும் அமைய வேண்டிய ஒன்று இல்லை என்பது இங்கு கவனிக்க பட வேண்டியது .....!<br />
<br />
<br />
ப்ரிகோவின் தாய் நீனா ராபர்டோ உடன் கொண்டிருக்கும் உறவு முதல் காட்சியிலேயே தெரிவிக்கப்படுகின்றது.பூங்காவில்,அவர்கள் இருவரின் உரையாடலை அமைதியாய் பார்கிறான் ப்ரிகோ..அன்றிரவே நீனா ராபர்டோ உடன் சென்று விட,இருளாய் விடிகிறது ப்ரிகோவின் அன்றைய தினம்.காலை தொடங்கி இரவு உறங்க போகும் வரை உடன் இருந்து கவனித்து கொண்ட தாயின் இடத்தை அவன் சித்தியோ,பாட்டியோ ஈடு செய்யவில்லை.மாறாக அவர்கள் இருப்பும் அவர்கள் சார்ந்த உலகமும் அவனிற்கு அச்சம் தருபவை. சித்தியின் அலங்கார உடைகள் தயாராகும் கடையில் அவன் செலவிடும் பொழுதுகள் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.அங்குள்ள பெண்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள் அவன் உலகிற்கு அப்பாற்பட்டவை..அகவுலகின் குழந்தை நிலை,குழப்பம் அடைய தொடங்கும் இடம் அது.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNuMJyLD_S26J2j9h-GjtyDxzByguslGr-Ds7NxEYJZHndWoKEsDokbtGgH75WNZSRjJGRfOf2K58Ha4tlqpVi-SAW9Nb4auYa4i3UmFN9Y68L6pbvFp1bNg0MjmhSA0zT-PQT3Ojzt3c/s1600/child.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNuMJyLD_S26J2j9h-GjtyDxzByguslGr-Ds7NxEYJZHndWoKEsDokbtGgH75WNZSRjJGRfOf2K58Ha4tlqpVi-SAW9Nb4auYa4i3UmFN9Y68L6pbvFp1bNg0MjmhSA0zT-PQT3Ojzt3c/s400/child.jpg" /></a><br />
<br />
<br />
கடும் காய்ச்சலில் அவதிபடும் ப்ரிகோவை குறித்து கேள்விபட்டு நீனா சில தினங்களில் திரும்பி வருகிறாள்.நீனாவை ஏற்க மறுக்கும் ப்ரிகோவின் தந்தை அவளை விடாது,தேம்பி அழுகும் ப்ரிகோவிற்காய் அவளை அனுமதிக்கின்றார்.சின்ன சின்ன நிகழ்வுகளின் இனிமையால் மெல்ல அவர்களின் குடும்பம் பழைய சந்தோஷத்தை அடைகின்றது.இதன் இடையே ராபர்டோ மீண்டும் நீனாவை தேடி வீடு வருகின்றான்.அவர்களுக்கு இடையே நிகழும் வாக்குவாதம் ப்ரிகோவின் முன்னே நிகழ்கின்றது.இம்முறை நீனா அவனை கடுமையாக பேசி வெளியேற செய்கிறாள்.ராபர்டோவின் வருகையையும்,நீனாவோடு அவனுடைய வாக்குவாதத்தையும் ப்ரிகோ அவன் தந்தையிடம் சொல்லுவதில்லை.அத்தகைய சூழ்நிலைகளுக்கு அவனை பழக்கப்படுத்தி கொள்கின்றான்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!<br />
<br />
ப்ரிகோவின் தந்தை குறித்து எந்த எதிர்மறை கருத்துகளும் இல்லை. மனைவி மீதும் மகன் மீதும் பேரன்பு வைத்திருக்கும் சராசரி குடும்ப தலைவனாகவே இருக்கின்றார்.இனி குறை ஒன்றும் இல்லை என அவர்கள் குடும்பத்தோடு கடற்கரை நகரம் ஒன்றிற்கு சுற்றுலா செல்லுகின்றனர்.தாயுடனும் தந்தையுடனும் ப்ரிகோவின் பொழுதுகள் இனிதாய் கழிகின்றது.வேலை நிமித்தம் ப்ரிகோவின் தந்தை அவர்கள் இருவரையும் அங்கு விட்டுவிட்டு கிளம்புகிறார்.மீண்டும் அங்கு வரும் ராபர்டோவை நீனா இம்முறை எதிர்க்கவில்லை மாறாக அவனுடன் நெருக்கம் கொள்கிறாள்.இதை காணும் ப்ரிகோ பைத்திய நிலைக்கு செல்கிறான்.அவ்விடம் விட்டு தந்தையை அடைய அலைந்து திரியும் ப்ரிகோவை போலீசார் மீட்டு தந்தையிடம் கொண்டு சேர்கின்றனர்.நீனா மீண்டும் ராபர்டோவுடன் சென்று விடுகிறாள்...தந்தையிடம் நீனாவை குறித்து இப்பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசிட அக்குழந்தை துணியவில்லை அவரின் பெருங்கருணை உள்ளம் தாங்கி கொள்ளாது என எண்ணி இருக்கலாம்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!<br />
<br />
அதன் பின் நிகழ்வது யாவும் துயரம்...!அவமானம் தாளாத தந்தையின் தற்கொலை,அநாதை விடுதி வாசம் என ப்ரிகோவின் வாழ்க்கை தடம் புரள்கிறது.சிதைக்கபட்ட அவன் அகவுலகை நெஞ்சை உருக்கும் அந்த கடைசி காட்சியின் வழியே உணரலாம்.இத்திரைப்படத்தில் ஒரு காட்சி கூட தேவை அற்றது என ஒதுக்கி விட முடியாது.காட்சிகளில் அத்தனை நுணுக்கம்.நம் பேச்சும்,செயல்பாடுகளும்,பழக்க வழக்கங்களும் எல்லா விதங்களிலும் அவர்களில் பாதிப்பை உண்டாக்குகின்றது.அவர்களை சுற்றி உலவும் மனிதர்களில் இருந்தே அவர்கள் கற்றுகொள்கின்றார்கள்.ப்ரிகோவாக நடித்துள்ள சிறுவனின் நடிப்பு இங்கு சொல்லி ஆக வேண்டியது,ஐந்து வயது சிறுவனிடம் இத்தனை அபாரமான உணர்ச்சி வெளிப்பாடா என்றிருக்கிறது.படம் பார்த்து பல மணிநேரம் ப்ரிகோவின் முகம் நினைவில வருவதை தவிர்க்க இயலாது.அவர்கள் நம்மை கவனிக்கின்றார்கள் என்ற உணர்வு நம்மில் எப்பொழுதும் இருந்தாலே குழந்தைகள் குழந்தைகளாக தொடர்வார்கள்...1944 இல் வெளிவந்துள்ள படம் இது..இன்றைக்குமான நிதர்சனத்தின் பதிவு என்றே சொல்ல வேண்டும்.!</div>
லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com3