Sunday, November 27, 2016

சாதத் ஹசன் மண்டோவின் இரண்டு சிறுகதைகள்

மண்டோவின் எழுத்து இதற்கு முன் அறிமுகமில்லை.உரையாடல்களில் நண்பர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு சிலாகிக்கும் பெயர். காலச்சுவடு வெளியீடான "மௌனப் பனி ரகசியப் பனி " மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுதியில் மண்டோவின் இரண்டு சிறுகதைகள் வாசிக்கக் கிடைத்தன. மண்டோவின் மீது பெருமதிப்பை ஏற்படுத்திய கதைகள் இவை. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக் கால நிகழ்வுகளை மையப்படுத்திய இவ்விரண்டு கதைகளும் நிகழும் சூழலும்,இடமும் ஒன்றே. சுற்றி வளைத்து கொண்டிருக்காமல், இப்படியான போராட்ட சூழ்நிலையில் அப்பாவி குடும்பங்கள் சிதைவுறுவது இவ்விதமே என மாண்டோ சொல்லியிருக்கும் விதம் நம்மை அதிர்விற்குள்ளாக்குகிறது.

"மீளல்",கண்ணெதிரே மனைவி கொல்லப்பட்டதை கண்டவன் மிஞ்சியிருக்கும் மகளை போராட்ட பூமியில் தொலைத்து பின் கண்டடையும் இக்கதை நம்பிக்கை துரோகத்தின் மோசமான முகத்தை குறித்தது. வன்புணர்வுக்கு ஆளாகும் அச்சிறு பெண் சந்தித்தவை எதுவும் நமக்கு நேரடியாய் சொல்லப்படவில்லை.இருப்பினும் அந்த அசாதாரண சூழ்நிலையின் பதற்றமும்,இருண்மையும் நம்மை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டு அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் வீரியத்தை உணரச்செய்கின்றன."உங்களின் மகளை எப்படியும் கண்டுபிடித்து தந்துவிடுவோம்.." என அந்த அப்பாவி தகப்பனுக்கு உறுதி அளித்த போராட்டகாரர்கள் அவனுக்கு இழைத்த துரோகம்,மலிந்த மனித மனங்களை அம்பலப்படுவதோடு பிரிவினையின் போது இத்தகைய கீழ் நிலைக்கு நம் மக்களை இட்டுச் சென்றது எதுவென்கிற கேள்வியையும் முன் வைக்கிறது.

"கடமை",ஹிந்து-இஸ்லாமியர் இடையேயான போராட்டம் அதன் உச்சத்தை எட்டி நகரே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில்,மரணத் தருவாயிலிருக்கும் வயதான நீதிபதி தன் பிள்ளைகளோடு,தான் முன்பு உதவிய ஒரு குடும்பத்தின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் கதை.மத பூசல்கள் ஏதுமற்ற பிரிவினைக்கு முந்தைய நாட்களின் இனிமை இதில் நம் கற்பனைக்கு விடப்படுகிறது.சகோதரத்துவம் கொண்டு பழகி வந்த அம்மனிதர்கள் மதவெறி என்னும் சுழலில் சிக்கி அழிவை நோக்கி நகர்வதை பேசும் இக்கதையும் நம்பிக்கை துரோகத்தை குறித்ததே.

மண்டோவின் கதைகள் பிரிவினை கால கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு காரணியாய் அமைந்தவற்றையும் ஆராய தூண்டுகின்றன.வன்முறை மிகுந்த இரக்கமற்ற இந்தியாவின் சரித்திர பக்கங்களை நேர்மையான முன்வைக்கும் அதே சமயம் நிலையற்ற மனித இயல்பின் மீதான நம் பார்வையை விரிவுபடுத்துபவை.கையறு நிலையின் காரணமாக சக மனிதர்களை அழிக்க துணிந்தவர்கள் குறித்த இக்கதைகளை எங்கோ எவருக்கோ நேர்த்தவை என ஒதுக்கிவிட முடியாது.இக்கதைகள் நமக்கானவை.நாம் யாரென்று நமக்கு எடுத்துரைப்பவை.


நூல் : மௌனப் பனி ரகசியப் பனி
தொகுப்பாசிரியர்: கண்ணன்
பதிப்பகம் : காலச்சுவடு

No comments: