Wednesday, October 20, 2010

La Strada..சபிக்கப்பட்ட காதலியின் கதை

ஜெல்சொமினா,அவள் ஒன்றும் வசீகரமானவள் இல்லை.குள்ளமான உருவம்,கோமாளியை நினைவூட்டும் நடை,ஆண்பிள்ளையை போன்ற தோற்றம்.....இருப்பினும் துடுக்குத்தனமான செய்கைகளும்,அந்த கண்களில் தேங்கி நிற்கும் காதலும்,ஏக்கமும் பார்வையாளனுக்கு அவள் மீது காதலை வரச்செய்துவிடும்.ஜெல்சொமினாவாக நடித்துள்ள கிலியட்டா மசினாவின் அற்புத நடிப்பால் இப்படம் காவியம் ஆகின்றது.இவர் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எனக்கு சாவித்திரியை ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தார்,அதிலும் நவராத்திரி திரைப்படத்தில் பைத்தியம் போல பாவனை செய்யும் சாவித்திரியை.

நாடோடி வித்தைக்காரனான ஜாம்பினோவிடம் சொற்ப பணத்திற்காக விற்கப்படுகிறாள் ஜெல்சொமினா.மார்பை சுற்றி இரும்பு சங்கிலி கட்டி அதை தன் பலம் கொண்டு அறுத்தெறியும் வித்தை செய்யும் ஜாம்பினோ முரடன்,குடிகாரன்,பெண் பித்தன்.ஜெல்சொமினாவிடம் எந்த ஒரு சந்தர்பத்திலும் அவன் பிரியத்தை காட்டியதில்லை.தொடக்கம் முதல் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் பாவத்திற்குரிய பெண்ணாக கிலியட்டா மசினாவின் நடிப்பு அட்டகாசம்.அவரின் தனித்துவ நடிப்பிற்கு உதாரணமென பல காட்சிகளை குறிப்பிடலாம்.வித்தையின் பொழுது மத்தளம் அடிக்க ஜெல்சொமினாவிற்கு ஜாம்பினோ கற்று கொடுக்கும் காட்சி சிறந்த உதாரணம்,சிறு குழந்தைக்கான உற்சாகத்தோடு அவள் அதை பழக முயல்வதும்,அவனோ அவளை குச்சியால் அடித்து சொல்லி தர,அதை எதிர்பாராத அவளின் முக பாவம்.




ஜாம்பினோ அவளை ஒரு உணவு விடுதிக்கு அழைத்து செல்லும் பொழுது அந்த முகத்தில் தோன்றும் ஆவலும் பெருமிதமும்..அவனோ அவளை பொருட்டென மதிக்காமல் அவளை தனியே விட்டுவிட்டு ஒரு வேசியோடு இரவை கழிக்க சென்றுவிடுகிறான்.இரவெலாம் உறங்காமல் அவனிற்காக காத்திருக்கும் ஜெல்சொமினா,காலையில் அவன் இருப்பிடம் அடைந்து, உறங்கி போயிருக்கும் அவன் அருகில்..தான் கண்டெடுத்த தக்காளி விதைகளை உற்சாகமாய் நட்டு கொண்டிருக்கின்றாள்.அற்புத நாடகம் ஒன்றின் உணர்வுபூர்வமான காட்சி போல..ஏமாற்றத்தை,கோபத்தை,வஞ்சிக்க பட்டதை மறக்க முயல்வதை அல்லது மறந்து விட்டதை உணர்த்துவதான காட்சி.

தொடர்ந்து ஜாம்பினோ தன்னை புறக்கணிப்பதை பொருத்து கொள்ள இயலாமல் ஜெல்சினோ ஓர் இரவு அவனை விடுத்து ஓடி வெகு தூரம் வந்து ஒரு நகரை அடைகிறாள்.அங்கு உயரமான கட்டடங்களுக்கிடையே கம்பியை கட்டி,அதில் நடக்கும் மட்டோவின் சாகச நிகழ்ச்சியை ஆச்சர்யத்தோடு காண்கிறாள்.அவளை தேடி வரும் ஜாம்பினோவிடம் தப்பிக்க முடியாமல் மீண்டும் அவனுடன் செல்கிறாள்.இம்முறை ஒரு சர்கஸ் கூட்டத்தோடு இணைந்து செயல் பட அவன் முடிவு செய்கின்றான்.அங்கு மட்டோவும் இருக்கின்றான்..அவளின் பிரியத்திற்குரிய ட்ரம்பட் கருவியை இசைக்க கற்று தருகின்றான் மட்டோ.கோமாளித்தனங்கள் மிஞ்சிய மட்டோ கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் ஜாம்பினோவை கிண்டல் செய்து கொண்டே இருக்கின்றான்.இவனின் சீண்டல் ஒரு நாள் கைகலப்பில் முடிய ஜாம்பினோ சிறை செல்கின்றான்.

அன்றிரவு ஜெல்சொமினாவும் மட்டோவும் கொள்ளும் உரையாடல் முக்கியமானது.ஜாம்பினோவிற்கு அவள் மீது பிரியம் உண்டு என்பதை அவள் மனதில் அழுத்தமாக பதிய வைக்கின்றான்..வாழ்வதற்கு எல்லோருக்கும் ஒரு காரணம் உண்டு.கூழாங்கற்களுக்கு கூட என அவன் பேசி கொண்டே போக...ஜெல்சொமினா ஜாம்பினோவுடன் தொடர்ந்து இருக்க முடிவு செய்கின்றாள்.சிறை இருந்து திரும்பிய ஜாம்பினோ அவளை அழைத்து கொண்டு வேறு நகரத்திற்கு செல்கின்றான்..பயணத்தில் ஊடே அவர்கள் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் தங்க நேரிடுகிறது.அன்றிரவு அவனிடம் தன் காதலை சொல்லுகின்றாள்.அதற்கும் அவனிடம் கோபமும்,எரிச்சலுமே பதிலாய் இருக்கின்றது.அங்கிருக்கும் கன்னிகாஸ்திரிகள் முன்பு அற்புதமாய் ட்ரம்பட் வாசித்து காட்டும் ஜெல்சொமினாவை முதல் முறையாக ஜாம்பினோ ஆச்சர்யமாய் பார்க்கின்றான்.




தொடரும் அவர்கள் பயணத்தின் பொழுது மட்டோவை சந்திக்க நேரிடுகிறது.ஜாம்பினோ அவன் மீது கொண்ட கோபத்தில் ஓங்கி அடித்துவிட மட்டோ இறந்து விடுகிறான்.சற்றும் இதை எதிர்பாராத ஜாம்பினோ யாரும் அற்ற அந்த சாலையின் ஓரத்திலேயே அவன் உடலை அப்புறபடுத்தி விட்டு பயணத்தை தொடர்கிறான்.மிரண்ட விழிகள் கொண்டு நிற்கும் காட்சியில் கிலியட்டாவின் நடிப்பு நேர்த்தி.மிட்டாவின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து கொஞ்சமும் மீள முடியாமல் ஜெல்சொமினா தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.மிட்டா உடனான உரையாடலில் அவன் கூறியதையே திரும்ப திரும்ப கூறி பிதற்றும் அவளால் எங்கே தான் மாட்டி கொள்ள நேரிடுமோ என்று ஜாம்பினோவிற்கு பயம் வந்துவிடுகின்றது.

ஓய்வெடுக்க ஒதுங்கிய சாலையோரம், அவள் புலம்பி கொண்டே உறங்கி போக.ஜாம்பினோ அவளை தனியே விட்டு விட்டு செல்கின்றான்.சொல்லவியலா துக்கத்தை தாங்கியபடி உறங்கி போகும் ஜெல்சொமினாவை கடைசியாய் நாம் பார்ப்பதும் அப்பொழுது தான்.மனதை கிழிக்கும் சூனியமான நிசப்தத்தை போன்றதொரு காட்சி அது.சில வருடங்கள் கழித்து..கடற்கரை சாலை வழி நடந்து செல்லும் ஜாம்பினோ ஜெல்சொமின இசைக்கும் அதே பாடலை கேட்கின்றான்..அப்பாடலை பாடிய பெண்ணின் மூலம் ஜெல்சொமினா பைத்தியமாய் திரிந்து இறந்து போனதை அறிந்து கொள்கின்றான். குற்ற உணர்ச்சி பீடிக்க பெற்று..கடற்கரையில் அலையும் ஜாம்பினோ,சோகம் தாளாமல் பெருங்குரல் எடுத்து அழுவதோடு படம் முடிகின்றது.

கிலியட்ட மசினாவின் நடிப்பிற்கு அடுத்த படியாய் ஜாம்பினோவாக நடித்துள்ள அந்தோணி கொயினின் நடிப்பு குறிப்பிடும்படியானது.ஊருராய் சுற்றி அலையும் ஜிப்சியிடம் அதீத பிரியத்தையோ,காதலையோ எதிர் பார்க்க முடியாது.சலிப்பு தரும் தனது அன்றாடங்களில் இருந்து விடு பட அவன் உணர்ச்சியற்ற நிலையை தேர்ந்தெடுப்பதாய் தோன்றியது.கச்சிதமான நடிப்பு இவருடையது.காதலை யாசித்து நிற்கும் அபலை பெண் ஜெல்சொமினாவாய் கிலியட்டா மசினா,எந்த ஒரு காட்சியிலும் கவனம் இவரை விட்டு அகலவில்லை. பார்வையாளன் ஜெல்சொமின மீது கொள்ளும் காதலும்,பரிதாபமும் இவரின் தனித்துவமான நடிப்பால் மட்டுமே சாத்தியமாகின்றது.

6 comments:

எஸ்.கே said...

நல்ல படம் சிறப்பான விமர்சனம்! நன்றிகள்!

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing

லேகா said...

நன்றி எஸ்.கே

நன்றி ராம்ஜி

Unknown said...

விமர்சனம் அருமை

தமிழன்-கறுப்பி... said...

படம் பாதிதான் பார்த்திருந்தேன், பகிர்வுக்கு நன்றி.

லேகா said...

நன்றி காஞ்சனா

நன்றி மணிவண்ணன்

நன்றி தமிழன் கறுப்பி