Tuesday, February 16, 2010

சு.வேணுகோபாலின் "கூந்தப்பனை"

"என் தோட்ட தொரவுகளோடு கிடந்து,அத்தோடு எழுதி கொண்டிருக்க தான் ஆசை.கதை எழுதி வெற்றி பெறுவதை விட ஒரு பருத்தி வெள்ளாமை வெற்றியடைவதில் உள்ள சந்தோசத்திற்கு ஈடு இணை இல்லை."

--- சு.வேணுகோபால்


மண்ணின் மீது நீங்கா பிரியம் கொண்ட ஒரு விவசாயியின் வார்த்தைகளாக உள்ள வேணுகோபாலின் வரிகளின் வலி இந்த தொகுதி முழுதுமே காண கிடைக்கின்றது.குறுநாவல் தொகுப்பான இந்நூலின் கதைகள் யாவும் எதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியா சிக்கல்களை
பெரும் இறுக்கத்தோடு சொல்லுபவை.மேலும் மனித உறவுகளுக்குள்ளான வெகு நுட்பமான பிணைப்பை அலசுகின்றன.ஆண் பெண் உறவின் பெயரில் தொடர்ந்து நிகழ்த்தபட்டு வரும் நாடகத்தில்,முகமூடிகளை கிழித்தெறியவும் தவறவில்லை இக்கதைகள்.

"கண்ணிகள்",மாறிவரும் சமூக சூழலின்பிடியில் சிக்கி தனித்து விடப்படும் ஒரு விவசாயியின் வலியை சொல்லும் கதை.வெகு பொருத்தமான தலைப்பிது.லாபமோ,நஷ்டமோ மீண்டும் மீண்டும் பூமியின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கும் சம்சாரிகள் தொடர்ந்து ஏமாற்றம் கொள்வதும்,மழை ஒத்துழைக்காத சூழ்நிலையில் கடனாளி ஆவதும்,பெருமழையின் பிடியில் இருந்து தப்பிக்க சிறு பறவை ஒன்று எடுத்துகொள்ளும் பிரயத்தனங்களை போல..எல்லா வழிகளையும் தேடி இறுதியில் மத மாற்றம் விடிவு தரும் என்கிற நிலைக்கு தள்ளபடும் சம்சாரியின் கதை.



"வேதாளம் ஒளிந்திருக்கும்",இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை.இதுவரை வாசித்திடாத எதார்த்த நிகழ்விது.சண்டையிட்டு தாய் வீட்டில் இருக்கும் நண்பனின் மனைவியை சமாதானம் பேசி அழைத்து வர நண்பனோடு அவள் ஊருக்கு செல்லும் நாயகன்,அதன் ஊடான சம்பாஷனைகள்,பயணத்தின் பொழுது எதிர்படும் மனிதர்கள்,கணவன் - மனைவி உறவின் விசித்திரங்களை அறிய முயலும் தருணங்கள்...என இக்கதை அழகான ஒரு உலகத்தை விவரித்து கொண்டே செல்கின்றது.மதுரை நகர பேருந்து நிலையத்தின் பகல் நேர காட்சிகளை வெகு நேர்த்தியாய் விவரித்து இருப்பது அருமை.


"கூந்தப்பனை",
இலக்கற்ற நாயகனின் பயணதை சொல்லி தொடங்கும் கதை மெல்ல மெல்ல கடந்து போன அவனின் திருமண வாழ்வின் கசப்பான தருணங்களை,மன போராட்டங்களை கூறுகின்றது.தாம்பத்ய வாழ்வை தொடர்ந்திட முடியாத சதீஷ் தன் நண்பனுக்கே மனைவியை மணம் முடித்து,அதன் தொடர்ச்சியாய் கொள்ளும் மன அழுத்தம் தாளாது வீட்டை விட்டு வெளியேறி திசை தெரியாது அலைந்து இறுதியில் தனக்கென ஒரு உலகினை கண்டடைகிறான்.இவரின் எல்லா கதைகளிலும் பிரதான பாத்திரம் காணும் கனவுகள்,குழப்பம் நிறைந்த மனதின் பிரதிபலிப்பாய்,பயந்த மனநிலையின் வெளிப்பாடாய் உள்ளன..


"அபாய சங்கு",தோல்வியின் பிடியில் தொடர்ந்து உழலும் நாயகனின் குழப்ப நிறைந்த மனவோட்டங்களை நேர்த்தியாகவும் வெகு அழுத்தமாகவும் பகிர்கின்றது இக்கதை.காதல்,காமம்,வேலையில்லா தாழ்வுணர்ச்சி,ஏமாற்றங்கள் என மொத்தமாய் தலைமீதேரும் சங்கடங்கள் நெருக்கடியாய் மாறி விபரீத முடிவிற்கு நாயகனை தள்ளுகின்றன.வேலை தேடும் பொழுதுகளின் தனிமை துயரம் கொடூரமானது என்பதை உணர்த்தும் வண்ணதாசனின் "பறப்பதற்கு முன்பு கொஞ்சம் புழுக்களாக" என்னும் சிறுகதையை நினைவூட்டியது இக்கதை.துயரமும்,சங்கடங்களும் நிறைந்த எதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை துணிச்சலாய் தமது கதைகளில் எடுத்தாளுகின்றார் வேணுகோபால்.பெரும் இறுக்கம் விளைவிப்பதாய் இருப்பினும் தவிர்க்க முடியா வாசிப்பிது.


வெளியீடு - தமிழினி
விலை - 50 ரூபாய்

22 comments:

கார்க்கிபவா said...

ஓ.. தமிழினியில் தாஙக்ள் வாங்கிய புத்தகத்தில் ஒன்றா?

நானும் வாங்க வேண்டும்.. :)

//என் தோட்ட தொரவுகளோடு கிடந்து,அத்தோடு எழுதி கொண்டிருக்க தான் ஆசை.கதை எழுதி வெற்றி பெறுவதை விட ஒரு பருத்தி வெள்ளாமை வெற்றியடைவதில் உள்ள சந்தோசத்திற்கு ஈடு இணை இல்லை/

இந்த நாலு வரிகளே போதும். வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்ட.

KarthigaVasudevan said...

"கூந்தப்பனை " புத்தக தலைப்பே ரொம்ப ஈர்க்குதுங்க...நல்ல அறிமுகப் பகிர்வு .வாங்கிப் படிக்கணும்.

குப்பன்.யாஹூ said...

வழக்கம் போலவே அருமையான வாசிப்பு பகிர்தல். லேகா. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

சண்டையிட்டு தாய் வீட்டில் இருக்கும் நண்பனின் மனைவியை சமாதானம் பேசி அழைத்து வர நண்பனோடு அவள் ஊருக்கு செல்லும் நாயகன்

மிக வித்தியாசமான களமாக உள்ளது.

விஜய் மகேந்திரன் said...

சு.வேணுகோபால் மிக அற்புதமான படைப்பாளி ."கூந்தப்பனை அவரது சாதனை குறு நாவல் .சமிபத்தில் வந்துள்ள வெண்ணிலை தொகுப்பிலும் கணிசமான அளவில் நல்ல கதைகள் வந்துள்ளன.அவருக்கு முடிந்தால் இந்த பதிவு குறித்து தெரியபடுத்துங்கள் சந்தோசபடுவார் .அவர் எண் 9442884033 .

லேகா said...

நன்றி கார்க்கி.

இந்த ஆண்டு புத்தக சந்தையில் இந்நூலை வாங்கவில்லை.வீட்டில் இருந்து எடுத்து வந்தது..:-))

லேகா said...

வருகைக்கு நன்றி கார்த்திகா.

லேகா said...

நன்றி ராம்ஜி.

அந்த குறிப்பிட்ட கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.எல்ல குடும்பங்களிலும் நிகழும் சங்கடமே..ரொம்ப நேர்த்தியாய் விவரித்துள்ளார்.
மிகபிடித்த கதைகளின் வரிசையில் தாராளமாய் சேர்த்து கொள்ளலாம்.

லேகா said...

விஜய மகேந்திரன்,

தகவலுக்கு மிக்க நன்றி.:-)

வெண்ணிலை தொகுப்பு குறித்த அறிமுகத்திற்கு நன்றி.

நர்சிம் said...

நன்றி

நர்சிம் said...

//குப்பன்.யாஹூ said...
வழக்கம் போலவே அருமையான வாசிப்பு பகிர்தல். லேகா. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

சண்டையிட்டு தாய் வீட்டில் இருக்கும் நண்பனின் மனைவியை சமாதானம் பேசி அழைத்து வர நண்பனோடு அவள் ஊருக்கு செல்லும் நாயகன்

மிக வித்தியாசமான களமாக உள்ளது.
//

அருமையான பார்வை நண்பரே.

நிலாரசிகன் said...

நல்ல பகிர்வு லேகா. பூமிக்குள் ஓடுகிறது நதி சிறுகதை தொகுப்பும் மிக முக்கியமானது.தமிழினி வெளியீடு.

லேகா said...

நர்சிம் :-)))

லேகா said...

தகவலுக்கு நன்றி நிலாரசிகன்

கே.என்.சிவராமன் said...

தமிழ்ச் சூழலில் விவசாயிகளின் வாழ்க்கையை சு.வேணுகோபால் அளவுக்கு படைப்பில் அழுத்தமாக பதிவு செய்திருப்பவர்கள் குறைவு.

பசுமைப்புரட்சி, தாராளமயமாக்கல் ஆகியவை விவசாயிகளின் வாழ்க்கையை எந்தளவுக்கு அகம் சார்ந்தும், புறம் சார்ந்தும் மாற்றியிருக்கிறது என்பதைச் சுற்றியே இவரது பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டிருக்கிறது.

நேரடியான அரசியல் இல்லாமல், ஆனால், வாசிப்பின் வழியே அரசியல் உணர்வை ஏற்படுத்தும் எழுத்துக்கள்.

நிறைவான அறிமுக இடுகை. இவரது மாஸ்டர் பீஸாக கருதப்படும் 'வெண்ணிலை' சிறுகதை தொகுப்பையும் வாசித்துவிட்டு இடுகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லேகா said...

நன்றி சிவராமன்.

"வெண்ணிலை" தொகுப்பு குறித்த அறிமுகத்திற்கு நன்றி.அவசியம் படிக்க முயல்கின்றேன்!!

கமலேஷ் said...

அற்புதமான பகிர்வு....உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி,,,

வாழ்த்துக்கள்...

லேகா said...

நன்றி கமலேஷ்

Prasanna Rajan said...

வேனுகோபால் என்னுடைய சொந்த ஊரான சில்லமரத்துபட்டியை சேர்ந்தவர். ஒரு வருடம் முன்பு வரை எனக்கே அது தெரியாது. ஒரு முறை பாஸ்கர் சக்தியை சந்தித்து பேசிய போது தான் வேனுகோபாலைப் பற்றி அறிந்தேன். “வேதாளம் ஒளிந்திருக்கும்’ கதையை மட்டும் இதற்கு முன்பு வாசித்து உள்ளேன். முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும். அதை படிக்கத் தூண்டியதற்கு நன்றி லேகா...

லேகா said...

நன்றி பிரசன்னா :-)

வேதாளம் ஒளிந்திருக்கும் மிக அற்புதமான கதை.மனித உறவுகளின் நுட்பமான உணர்வுகளை எழுத்தில் அப்படியே கொண்டு வந்திருப்பார்.

Anonymous said...

Hi,

I would strongly recommend his collection 'Vennilai'. I see that quite a few have done the same. That's one of the best short story collections that has come out in recent years. It's a must read.

Ajay

லேகா said...

Yeah Sure Ajay..will read tat one.I have it..yet to read..

முபாரக் said...

நல்ல அறிமுகம்....
நிச்சயம் இந்த நூலை படிக்கவேண்டும்...