Thursday, July 9, 2009

சர்க்கஸ்

சர்க்கஸ் என்றதும் உங்களின் நினைவிற்கு சட்டென வந்து மறைவது எது? எனக்கு எப்பொழுதோ அப்பாவுடன் சென்று மரப்படிகள் போன்ற அமைப்பில் அமர்ந்து பார்த்த சர்க்கஸ் காட்சிகள் இன்றும் நினைவில் உள்ளது.சில விஷயங்கள் குழந்தை பருவத்திற்கே உரியது போல..சர்க்கஸ் காட்சிகளை ரசித்து விட்டு மறு நாள் பள்ளியில் கோமாளியின் சேட்டைகள் முதல் ஒவ்வொன்றாய் பேசி பேசி மாய்ந்த நாட்களின் ஞாபகங்கள் எளிதில் மறக்க இயலாதது.சர்க்கஸ் வருவதற்கு முன்னே அது குறித்த ஒலிபெருக்கி அறிவிப்புகளும்,சுவரொட்டிகளும் நகருக்கு வேறு தோற்றம் தருவித்துவிடுவதுண்டு.திருவிழா போல தான்,எங்கும் அது குறித்த பேச்சுக்கள்,விசாரிப்புகள் என...




மிக சமீபத்தில் ஓசூரில் சர்க்கஸ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..ஓசூர்,ஆசிர்வதிக்க பட்ட நகரம் என தோன்றும் எனக்கு.தலை தட்டும் மேகங்கள்,குளிர் காற்று,நகரின் அமைப்பு என...ம்ம்ம்...சென்னையில் இருப்பதால் மற்ற நகரங்கள் எனக்கு அழகாய் தெரிகின்றதோ என்னவோ!!அதிகரித்துள்ள நுழைவு சீட்டு விலை,அதிகப்படியான தின்பண்டங்கள் விற்பனை,விலங்குகள் இல்லா காட்சிகள் இவை தவிர்த்து எதுவும் பெரிதாய் மாற்றங்கள் இல்லை.அரங்கெங்கும் உற்சாகத்தோடு நிறைத்திருந்த குழந்தைகளின் ஆரவாரத்திற்கு இடையே ஒளி வெள்ளத்தில் தொடங்கிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை தன்வசம் ஆக்கி கொண்டன.


சர்க்கஸ் குறித்து எழுத துவங்கியதும் சோபியா லாரன் நடித்த திரைப்படம் ஒன்று குறித்தும் எழுத தோன்றுகின்றது.1960 களில் வெளிவந்த "Boccaccio '70" நான்கு கதைகளின் தொகுப்பாய் ஒவ்வொரு கதையும் ஒரு இயக்குனரால் இயக்கபட்டிருக்கும்.நவீன வாழ்வில் காதல் மனிதர்களை படுத்தும் பாட்டை ஒவ்வொரு கதையும் ஒரு விதமாய் எடுத்தாலும்.இதில் சோபியா லாரன் நடமாடும் சர்க்கஸ் வண்டியில் ஊர் ஊராய் சென்று வித்தை காட்டும் பெண்ணாய் நடித்திருப்பார்.சோபியாவின் அசர வைக்கும் அழகை குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அந்த சிறு கிராமத்து திடலில் சர்க்கஸ் கூடாரங்கள்,துப்பாக்கி சுடும் போட்டி அரங்கம்,ராட்டினங்கள்..என தத்ரூபமாய் செட்டில் கொண்டு வந்திருப்பர்.


அன்றைய பொழுதுகள் போல இந்த சமயம் சர்க்கஸை ரசித்து பார்க்க முடியவில்லை.ஒவ்வொரு பகுதியையும் ரசிப்பதற்கு பதிலாக அக்கலைஞர்கள் அதற்கு எடுத்து கொண்ட முயற்சிகளும்,வேதனைகளுமே கண் முன்னே வந்து போனது.சர்க்கஸ்,தற்சமயம் சத்தமின்றி அழிந்து வரும் கேளிக்கைகளில் ஒன்று.நம் முகத்தில் சிரிப்பும்,ஆச்சர்யத்தையும் தோற்றுவிக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு பின்னே உள்ள வலி வார்த்தைகளினால் சொல்லி விட முடியாது..நாம் தொடர்ந்து தரும் ஊக்கமும்,ஆதரவுமே இது போன்ற கலைஞர்களுக்கு உற்சாகத்தை தந்து தொடர்ந்து பணி செய்திட வழி செய்யும்!!

18 comments:

சகாதேவன் said...

சர்க்கஸ், லேகா என்று பார்த்ததும் எனக்கு ஞாபகம் வருவது சந்திரலேகாதான். 1948ல் வந்த ஜெமினியின் பிரம்மாண்டமான படம்.
கதையில் விக்கிரமனை(எம்.கே.ராதா) தம்பி சசாங்கன்(ரஞ்சன்) மலை குகையில் கட்டிப்போட்டு, வாசலை ஒரு பெரும் பாறை கொண்டு மூடிவிடுவார்.நாயகி சந்திரலேகா(டி.ஆர்.ராஜகுமாரி) சர்க்கஸ் கம்பெனி உதவியால் யானைகள் கொண்டு அந்தப் பாறையை இழுத்து விக்கிரமனை மீட்டு, தான் சர்க்கஸில் சேர்கிறார். அதுதான் நான் முதலில் பார்த்த சர்க்கஸ்.
கே டிவியில் இந்தப் படம் அடிக்கடி வரும். தவறாமல் பாருங்கள்.
சகாதேவன்

அ.மு.செய்யது said...

// ஓசூர்,ஆசிர்வதிக்க பட்ட நகரம் என தோன்றும் எனக்கு.தலை தட்டும் மேகங்கள்,குளிர் காற்று,நகரின் அமைப்பு என...ம்ம்ம்...சென்னையில் இருப்பதால் மற்ற நகரங்கள் எனக்கு அழகாய் தெரிகின்றதோ என்னவோ!!//

நான் ரசித்த பகுதி லேகா..நல்லா எழுதியிருக்கீங்க..

உயரமான மரப்படிகளுக்கு நடுவில் காலணியை தவற விட்டு, யானைகளுக்கு மத்தியில் பீதியுடன் ஓடிச்சென்று மீட்டு வந்த சர்க்கஸ் நினைவுகள்.

குப்பன்.யாஹூ said...

பதிவு அருமை லேகா. ஆனால் சர்க்கஸ் மெதுவாக அழிந்து வருகிறது என்பதே உண்மை.

நானும் சமீபமாய் போக வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் பொறுமை இல்லை.

எஸ் ராமகிருஷ்ணன் , தன வலைபதிவில் தேனீ பக்கம் தான் சென்று வந்த சர்க்கஸ் பற்றி மிக அழஅகாய் எழுதி இருக்கிறார். படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

இன்றைய வீடியோ கேம்ஸ், அனிமேஷன் சினிமாக்கள், நேஷனல் geography channel வந்த பிறகு சர்க்கஸ் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது

குப்பன்_யாஹூ

Krishnan said...

"சென்னையில் இருப்பதால் மற்ற நகரங்கள் எனக்கு அழகாய் தெரிகின்றதோ என்னவோ" உண்மை.

லேகா said...

@சகாதேவன்

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

உங்கள் விவரிப்பிற்கு பின் எனக்கு அப்பட காட்சிகள் நினைவிற்கு வந்தது!!தமிழ் சினிமாவில் சர்க்கஸ் குஇர்த்த காட்சி அமைப்புகள் ஏராளம்..

லேகா said...

செய்யது,

இவை உண்மையான வார்த்தைகள்!!

வருகைக்கு நன்றி :-)

லேகா said...

நன்றி ராம்ஜி.

எஸ்.ராவின் கட்டுரை இன்னும் படிக்கவில்லை.ம்ம்ம்...அறிமுகத்திற்கு நன்றி!!

லேகா said...

@கிருஷ்ணன்,

நன்றி :-)

சென்னையில் இருப்பவர்கள் எளிதில் உடன்படும் கருத்து அது :-))

selventhiran said...

மனிதர்களை விலங்குகள் போலவும், விலங்குகளை மனிதர்கள் போலவும் நடிக்கச் செய்யும் பரிதாபம் சர்க்கஸ் எனப் பொருள்படும்படி வைரமுத்து எழுதியது நினைவுக்கு வருகிறது.

இப்போது கூட கோவையில் ஒரு சர்க்கஸ் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகல் வேளையில் அந்த மைதானத்தை கடக்க நேர்கையில் அகதிகள் முகாம் போன்ற கூடாரமும், சர்க்கஸ் கலைஞர்களின் வறண்ட முகமும் சோகம் ததும்பும் ஓவியம் போல இருக்கிறது.

லேகா said...

@ செல்வேந்திரன்,

//மனிதர்களை விலங்குகள் போலவும், விலங்குகளை மனிதர்கள் போலவும் நடிக்கச் செய்யும் பரிதாபம் சர்க்கஸ்//

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!!

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

butterfly Surya said...

அழகான பதிவு.

அருமையான பின்னூட்டங்கள்.

சூப்பர்.

KARTHIK said...

// நம் முகத்தில் சிரிப்பும்,ஆச்சர்யத்தையும் தோற்றுவிக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு பின்னே உள்ள வலி வார்த்தைகளினால் சொல்லி விட முடியாது.//

ம்ம்ம் போனதட சர்க்கஸ் இங்க நடந்தப்ப பசங்களோட போனோம்.இந்ததடவ பயளுகளே வேண்டாம்னு சொல்லிட்டானுக.
குழந்தைகலையே ஈர்க்கமாட்டிங்குது அப்புறம் எப்படி

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிப்போரின் சர்க்கஸ் பற்றிய நினைவுகளை மீட்டெடுக்க செய்யும் பதிவு.

deesuresh said...

சிறுவயதில் பள்ளியில் இருந்து ஒரு குழுவாக அழைத்துச் சென்று ( என் பள்ளிக்கு எதிர் மைதானத்திலேயே சர்க்கஸ்) காண்பித்தார்கள். பஃபூன்களின் சேட்டைகள், பார் விளையாட்டு, பைக் மேலும் கீழும் வரும் மரணக்கூண்டு, யானைகள் விளையாடும் ஃபுட்பால், வேகமாக ஓடும் குதிரையில் குதித்து விளையாடும் மனிதன், மூன்று சிங்கங்களிடையே நின்று ஆட்டுவிக்கும் ரிங் மாஸ்டர் என பல நினைவுகள். பின்னர் சர்க்கஸ் பார்க்கும் அனுபவம் வெகு நாட்களாய் இல்லாமலே போயிற்று.

சில வருடங்களுக்கு முன் நாகர்கோயிலில் ஒரு சர்க்கஸ் கம்பெனிக்கு வேலை விஷயமாய்ச்( ஃபூரூட்டி ஆர்டர் எடுக்க) சென்ற போது பார்த்தேன். சிறு வயதில் அது ஈர்த்த அளவு ஈர்க்கவில்லை. அவர்களது கஷ்டங்களும், வேதனைகளும் அந்த ஒரு வாரப் பழக்கத்தில் தெரிய வந்ததால்.

லேகா said...

கார்த்திக்,

நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கே :-)

சர்க்கஸ் குழந்தைகளை ஈர்க்காமல் இல்லை.அவர்களுக்கு அது என்றுமே மகிழ்ச்சி தர கூடிய ஒன்றே.அதிலும் என் அருகில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த குட்டி பெண் ஆர்வ மிகுதியில் எழுந்து நின்று கொண்டு கை தட்டி கத்தி கொண்டே ரசித்து கொண்டிருந்தாள்.

லேகா said...

நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா :-)

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி சுரேஷ்.

உங்கள் பின்னூட்டங்களில் இருந்து அதிகமாய் வேலை நிமித்தமாய் பயணம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்ன நினைக்கின்றேன்.வெவ்வேறு ஊர்களுக்கு சென்று பல்வேறு தரப்பட்ட மக்களை சந்திப்பது அற்புதமான காரியம் அல்லவா??

லேகா said...

நன்றி வண்ணத்துபூச்சியார்